கடும் கோடையிலும் ஏசியுடன் உலாவர குளிர்வூட்டும் சட்டை..!

388

acjacketகடும் கோடையிலும், வியர்வை வெளியேறாமல் இருக்கவும் குளுமையை உணரும் வகையிலும் ஏசி ஜாக்கெட் எனப்படும் குளிர்வூட்டும் சட்டையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் வடிவமைத்துள்ளார்.

கோடை காலங்களில் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் வெளியில் செல்ல தயங்குகின்றனர். மீறிச் செல்பவர்கள், வியர்வையில் நனைந்து அவதிக்குள்ளாகின்றனர். வெப்பம் தாங்காமல் அலுவலகம் அல்லது வீட்டிலேயே பெரும்பாலும் முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவுகிறது.

இதற்கு தீர்வு காண எண்ணிய, அவுஸ்திரேலிய ஆய்வாளர், வில்லியம் ஸ்ட்ரோக், தன் நீண்ட நாள் ஆய்விற்குப் பின், “ஏசி´ உடையை வடிவமைத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட், 200 கிராம் எடை கொண்டது. மிகவும் குறைந்த எடை உடையதாக இருப்பதால், இதை அணிவது சுமையாக இருக்காது. குண்டு துளைக்காது, மிக மெல்லிய இழைகளால், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட், காற்றை மறு சுழற்சி செய்து, உடலில் வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கிறது.

வெப்பநிலையை குறைத்து, அதை நிலைநாட்டுகிறது. இதனுடன், கைக்கடிகாரம் போன்ற, சிறிய அளவிலான கருவி ஒன்றும் தரப்படும். இது, ஜாக்கெட்டின் செயல்பாட்டை, கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது.

மெல்லியதாக இருந்தாலும், குண்டு பாயாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெயில் நேரங்களில் தெருக்களிலும், எல்லைப் பகுதியில் காவல் புரியும், பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களும் இந்த உடையை அணியலாம். இதன் மூலம், அவர்கள் விரைவில் சோர்வடைவது தவிர்க்கப்படும்.

சுறுசுறுப்புடன் நீண்ட நேரம் பணி புரியவும் இந்த உடைகள் உதவி புரியும். இந்த “ஏசி´ சட்டைக்கு, “க்ளிமா ஜாக்´ என, பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ஜாக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ள கைக்கடிகாரம் போன்ற கருவி, இதை அணிபவரின், இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் உடல் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றையும் கண்காணிக்கிறது. இவ்வாறு, வில்லியம் கூறினார்.