மனைவியைக் கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி ஜெயந்தி (63) மீது கொடூரமாக தாக்குதல் செய்து, பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை பெறும் ஜெயந்தியை பாசுரன் ஆசாரி கவனித்திருந்தார். அவருடைய மனநிலையில் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் திருவனந்தபுரம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஜெயந்தி மின்வயரால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

விசாரணையில், பாசுரன் ஆசாரி முதலில் மனைவியை கொன்று, பின்னர் தற்கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. சம்பவத்துக்குப் பிறகு போலீசார் முறையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முடியுமானவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொலைபேசிகள், மின்சார சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்றும், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறைந்த வட்டியில் சலுகையுடன் கடன் வழங்கும் வங்கிகள்!!

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு இலகுவான முறையில் 1.5 மில்லியன் ரூபாய் வரை கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை 15 வங்கிகள் ஆரம்பித்துள்ளன.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் கடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனைத் திருப்பி செலுத்த 6 மாத சலுகை கால அவகாசத்துடன் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கிடைக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் மேம்பாட்டு நிதித் துறையின் இயக்குநர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8 சதவீதம் மட்டுமே என ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடன் வசதிகளை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, செலான் வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி,

DFCC, சனச அபிவிருத்தி வங்கி, பான் ஆசியா வங்கி, யூனியன் வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் மாநில அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி என்பன வழங்குகின்றன.

காணி மற்றும் பிற சொத்துக்களின் உறுதிகளை வழங்காமல் இந்த கடன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

மேலும், வங்கிக் கடன்களை பெற்று அவற்றை முறையாக செலுத்தி வரும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் 10 ஆண்டுகள் வரை 7 சதவீதம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறலாம், மேலும் அவர்கள் 25 லட்சம் வரை கடன் பெறலாம் என ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, கடன் திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

துபாயின் ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொட்டுன்ன பகுதியை சேர்ந்த 23 வயதுடைய திலக பெரேரா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு, ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் அருகே தரையில் விழுந்து காயங்களுடன் அவர் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கடுவெலவில் உள்ள போமிரியா கல்லூரியின் முன்னாள் மாணவரான திலக பெரேரா, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு சென்றிருந்தார்.

வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டபோது, ​​அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், இந்த விடயத்தில் தலையிட்டு நியாயமான விசாரணை நடத்துமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் : பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!!

கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவன் படித்த பாலர் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த மாணவன் உட்பட மேலும் சில மாணவர்கள் குழு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீந்திக் கொண்டிருந்த போது, ​​மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் களுபோவில மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் பிரதி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, மாணவனுக்கு பொறுப்பான 2 ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் 2 நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை : நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!!

பொலன்னறுவை , பக்கமுன, பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (08) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

காட்டு யானை ஒன்று பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரையம் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் இரவு மற்றும் மாலை நேரங்களில் கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது திடீர் மரணம் : உடலை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம் (09) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் தாயின் இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதிகரித்துள்ள தங்கத்தின் விலை : இன்றைய விலை 341000 ரூபாய்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(10) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 42,640 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 341,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 39,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 312,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 37,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 298,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று330,000 ரூபாவாகும்.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 305,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி நான்கு மாதம் : கட்டிலின் கீழ் பெண்ணின் சடலம் : நடந்தது என்ன?

இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.

ஆகாஷின் பெற்றோர் மும்பைக்கு சென்றதால், வீட்டில் தம்பதி மட்டுமே இருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், மனைவியுடன் ஆகாஷ் தகராறு செய்தார். அப்போது கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்தார்.

உடலை பெட்ஷீட்டில் சுற்றி, கட்டிலுக்கு கீழே தள்ளினார். எதுவுமே நடக்காதது போன்று இருந்தார். இதற்கிடையே மும்பையில் இருந்து, ஆகாஷின் தாய் நேற்று காலை ஊருக்கு திரும்பினார்.

தாய் வருவதை அறிந்த ஆகாஷ், வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். மாமியார் வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய கணவனையும் தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த இருவர் கைது!!

இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா காவல்துறையிடம் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது, அதன் பின்னர் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் தலா ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் 40 மற்றும் 48 வயதுடையவர்கள், இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் எஅனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மீது மாநகரசபை வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேயர் தலைமையில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (09.10.2025) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், வவுனியா மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் மாநகரசபையில் பிரச்சன்னமாகியிருந்தனர்.

இதன்போது மாநகர சபையால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்தும் நபர் அங்கு வருகை தந்து மாநகரசபை உறுப்பினர்கள் சிலருடன் தனது வியாபார நிலையம் தொடர்பில் பேசியுள்ளார்.

அப்போது அவ்விடத்தில் நின்ற வவுனியா மாநகரசபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸுடன், மாநகரசபையால் வழங்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தனது ஏசி பூட்டிய வர்த்தக நிலையத்தை ஏன் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கூறி முரண்பட்டுள்ளதுடன்,

தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி குறித்த மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏனைய சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களால் குறித்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் மாநகர மேயர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சபை உறுப்பினர்கள் சென்ற நிலையில் மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரும் தன் மீது மாநகரசபை உறுப்பினர் தாக்குதல் நடத்தியதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

சீன நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : பல மைல்களுக்கு சிக்கித் தவித்த கார்கள்!!

சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான பயணிகள் வீடு திரும்பியதால், அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்பொது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

36 பாதைகளைக் கொண்ட வுசுவாங் சுங்கச்சாவடி, சுங்கச்சாவடிகளைக் கடக்க முயற்சிக்கும் போது, ​​ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வரிசையில் நிற்பதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இதேபோன்ற பெரிய போக்குவரத்து நெரிசல்கள் இதற்கு முன்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு : மனைவி மருத்துவமனையில்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 05ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு சென்ற வேளை, கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானார்.

விபத்தில் கணவன் – மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் , கணவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையர் சாதனை!!

அமெரிக்காவில் நடைபெற்ற ( Olympia Amateur Las Vegas – 2025 ) உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர ( Olympia Amateur Las Vegas – 2025 ) போட்டியில் சீனியர் ஓபன் என்ற 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நெவாடா ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர குவைத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந் நிலையில், உடற்கட்டமைப்பு பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டிஜிட்டல் கண் திரிபு அதிகரிப்பு : நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைகள்!!

20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

COVID-19 தொற்றுநோய் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து ஒன்லைனில் படிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் இந்த நிலை கணிசமாக பரவியுள்ளது.

இதற்கு பிரதான காரணம் கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் சாதனங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவதே என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கோயா சத்திரசிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய கண் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். கண் அசௌகரியம், மங்கலான பார்வை, தலைவலி, சோர்வு மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை அறிகுறிகளாகும்.

மோசமான வெளிச்சம், டிஜிட்டல் திரைகளிலிருந்து வரும் கூச்சம் அல்லது சரிசெய்யப்படாத பார்வை பிரச்சினைகள் ஆகியவற்றாலும் இந்த நிலை மோசமடையக்கூடும்.

பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் பல சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையைத் தடுக்க வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கணிணி காட்சி திரையை (monitor) சரியாக வைப்பது, பிரகாசத்தைக் குறைப்பது, திரையின் பிரகாசத்தை சரிசெய்வது மற்றும் திரையை கண்களிலிருந்து கணிசமான தூரத்தில் வைத்திருப்பது ஆகியவற்றை அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்ப்பது, அடிக்கடி கண் சிமிட்டுவது, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான தோரணையைப் பராமரிப்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

கணினிகளுக்கான சிறப்பு கண்ணாடிகளை அணிவது மற்றும் வறட்சியைத் தடுக்க சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை கண் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள் : பயணிகள் அதிர்ச்சி!!

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இரு சில்லுகளே அச்சாணியை விட்டு விலகி வெளியே வந்துள்ளது.

அதனை அவதானித்து உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் சில்லுகள் இரண்டும் வெளியே வந்தமை, புசல்லாவை பகுதியில் வைத்து அவதானிக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்ட நிலையில் சம்பவத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.