வவுனியாவில் வீடொன்றிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு, 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்பு!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.

வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழி ஒன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08.06.2025) காலை வீட்டின் உரிமையாளர் தோண்டியுள்ளார்.

இதன் போது அக் குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸார் ஆகியோர் வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் குழியினுள் ஒர் பையில் போடப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை மீட்டெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் தடவியல் பிரிவு பொலிஸார் பாகுப்பாய்வுகளை மேற்கொண்டிருந்தமையுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் 20வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டமையுடன் அவை ரி-56 ரகத்தினை சேர்ந்த இரு துப்பாக்கிகளும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் என தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் எடுத்து சென்றமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.

நள்ளிரவில் நேர்ந்த கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான இளைஞன்!!

மொரட்டுவ பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எகொடஉயன பகுதியில் இன்று (08.06) அதிகாலை 1.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து, அருகில் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியில் மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறு காயங்களுடன் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் லொறியின் சாரதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர்!!

சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாந்து வந்த ஐ.டி., நிறுவன பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

திருச்சியைச் சேர்ந்த 26 வயதான நித்யா அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியில் இரு மாதங்களாக தங்கியிருந்தார்.

இவரும், கொடுங்கையூர், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த 28 வயதான பாலமுருகன் என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனர். பாலமுருகன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலையின்றி இருந்த நிலையில் நித்யா, அவருடன் லிவிங் டூ கெதர்’ முறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், தன்னை பார்க்க பெற்றோர் வருவதாக கூறி, பாலமுருகனை வெளியிடத்தில் தங்க சொல்லியுள்ளார். அன்றிரவு, தன் வீட்டில் தங்கிய பாலமுருகன், நேற்று காலை நித்யா வீட்டிற்கு சென்றார்.

கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கை அறையில், மயங்கிய நிலையில் நித்யா கிடந்துள்ளார். படுக்கை அறையில் துாக்க மாத்திரைகள் கிடந்தன. இதுகுறித்து பாலமுருகன் பொலிசாருக்கு தகவல் அவ்ழங்கிய நிலையில், கொடுங்கையூர் போலீசார் சென்றனர்.

போலீசார் பரிசோதித்தபோது, நித்யா ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பாலமுருகனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிப்., 26ம் தேதி, அம்பத்துாரில் நித்யா தங்கியிருக்கும்போது, வீட்டில் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (06.06) பிற்பகல் நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இதில் ஒரு சிறுவர் ஒரு பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் அடங்குவதாக விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!!

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (06.06.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மன்னாரில் உணவக முகாமையாளர், ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை!!

 

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83000 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது தலையுறை பயன்படுத்தாமை,

மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.

அத்துடன்,மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பகுதியொன்றில் நள்ளிரவில் நடந்த விபத்தில் பறிக்கப்பட்ட இளைஞனின் உயிர்!!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு குறித்த விபத்துச் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞன் காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்றும் மோட்டார்சைக்கிளும் மட்டக்களப்பு,

ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன் அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து : பல உயிர்களை காப்பாற்றிய சாரதி!!

இலங்கையில் மற்றுமொரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் 20இற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பலாங்கொட – இரத்தினபுரி வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மீது மரக்கிளை விழுந்தபோது, ​​ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தியமையால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பலாங்கொட போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ,பலாங்கொடை – இரத்தினபுரி வீதியில் தேவலகந்த நோக்கிச் நேற்று சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதியான சரத் சந்திரவன்சவின் திறமையால் பேருந்து மற்றும் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலாங்கொட போக்குவரத்து சபையின் மேலாளர் தர்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

பலத்த காற்று காரணமாக பேருந்தின் முன் இருந்த ஒரு மரத்தின் கிளை பேருந்தின் மீது விழவிருந்த நிலையில் ஓட்டுநர் பேருந்தை வீதியின் ஓரத்திற்கு திருப்பி விபத்தைத் தவிர்த்துள்ளார்.

பேருந்து முன்னோக்கிச் சென்றிருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. பேருந்து சாரதி தனது திறமையால் அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த 20 உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை, பாணந்துறையில் நேற்று காலை ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்தை தனிநபர் ஒருவர் தவிர்த்துள்ளார்.

தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட பிரதேசவாசி ஒருவர், தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி ரயில் ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதுகாப்பாக ரயில் நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம்!!

யாழில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காளிகாம்பாள் சமேத உக்கிர வீரபத்திரர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

குறித்த ஏலத்தின் போது, யாழ்ப்பாணம் நாவற்குழியை சேர்ந்த செல்லத்துரை நாகேஸ்வரி என்பவர் இந்த மாம்பழத்தை வாங்கியு்ள்ளார். 315,000 ரூபாவுக்கு இந்த மாம்பழத்தை அந்த பெண் வாங்கியுள்ளார்.

 

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி!!

இரத்தினபுரி, கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு,நீதிமன்றம், 500,000 ருபாய் அபராதம் விதித்துள்ளது.

70 ரூபாய் விலையை கொண்ட, 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80க்கு விற்றதற்காக, கலவானை நீதிவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு, நுகர்வோர் விவகார ஆணையகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

தலைமறைவான சந்தேக நபரை தேடும் பொலிஸார் : மக்களிடம் உதவி கோரல்!!

கொழும்பு குற்றப்பிரிவு நடத்தும் விசாரணையில் தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் – 071-8591807, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி – 0718591735, பிரிவு 04 கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி – 0718596506 ஆகிய இலக்கங்களில் தொடர்புக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் திடீர் மின் தடை!!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று காலை திடீர் மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை 7.40 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பு செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனினும் சில பகுதிகளில் காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களுக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டன.

ஏனைய பகுதிகளில் சில மணி நேரங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திடீர் மின் தடை குறித்து மின்சார சபை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

You Tube நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு : iPhone பாவனையாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில வகை அலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐபோன் iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

ஐபோன்களில் இனி பார்வையிட முடியாது

YouTube தனது புதிய அப்டேட்டில், YouTube இப்போது iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் அலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் ஐபோன்களில் இனி YouTube பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

• iPhone 6s

• iPhone 6s Plus

• iPhone 7

• iPhone 7 Plus

• முதலாம் தலைமுறை iPhone SE

• iPod Touch 7

• iPad Air 2

• iPad mini 4

இவை iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் YouTube பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. YouTube செயலியின் புதிய பதிப்பு 20.22.1, ஜூன் 2-ஆம் திகதி வெளியிடப்பட்டது.

 

கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று மாலை புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்ததுடன், கோளாறை சரிசெய்ய நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அதுவரை பயணிகளை ஹோட்டல் அறைகளில் வைத்திருக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்காதபோது கடுமையான நெருக்கடி மற்றும் குழப்ப நிலை ஏற்பட்டது. மேலும் அந்த நாட்டிற்கான இலங்கை தூதர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தலையிட்டுள்ளார்.

இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட இலங்கை விமானத்தை ஆய்வு செய்வதற்காக இன்று காலை ஜகார்த்தாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் இலங்கை தொழில்நுட்பக் குழு பயணித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகளை திருப்பி அனுப்ப இன்று மதியம் 1.45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் உலகின் உயரமான ரயில்வே பாலம் திறப்பு!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயால் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கத்ராவில் இந்திய ரூபாய் 46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதேவேளை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்!!

குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று(6) இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.