கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஒரு பிரதான பெண்கள் பாடசாலைக்கு முன்னால் 8 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவ வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி குருந்துவத்தை, மல்பர பகுதியில் ஒரு காரில் அத்துமீறி நுழைந்து ஒரு சிறுமியைக் கடத்த முயன்றதாக தெரிவிப்படுகிறது.
இது தொடர்பாக கிடைத்த முறைபாட்டின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால தேர்தல்களின் போது பாடசாலை ஊழியர்கள் மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும்போது மிகவும் அவதானம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு திணைக்களத்திற்கு, அதிபர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் முடிந்த மறுநாளே வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிற ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு ஏப்ரல் 25 ஆம் திகதி எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தேர்தல் நாளில் இரவு 11.00 மணிக்கு இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்கள் வருத்தமளிப்பதாக அதிபர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இரவு நேரங்களில் விடுமுறை அறிவிப்புகள் வெளியிடுவது பாடசாலை மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய முடிவை அவர்கள் புறக்கணித்ததாக குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகளில் இருந்து பாடசாலைக்கு வெளியே உள்ள மையங்களுக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மேசைகள்,
நாற்காலிகள் போன்றவற்றை சில இடங்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டதால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான சாலையில் இன்று காலை பயணித்த வேன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன், லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேனில் பயணித்தவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அம்புலன்ஸ்கள் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளூர்வாசிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,023,227 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 36,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 288,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 33,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 31,590 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 252,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 269,000 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 248,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, ஆசிரியரை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாலிவுட் துறையில் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளுக்குக் கூட இல்லாத ஒரு இடத்தை ஜாக்குலின் சொந்தமாக வைத்திருக்கிறார். அதாவது இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.
நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த தீவை வாங்கி அதில் வில்லா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் இந்த தீவை ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்துகிறாரா அல்லது வணிக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடுகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான அலாடின் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
அதேவேளை சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் ஒரே பாலிவுட் நடிகை என்றால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2012 ஆம் ஆண்டில், இந்த தீவை வாங்க சுமார் ரூ.3 கோடி செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம் (8) உயிரிழந்துள்ளார்.
சம்பவ்த்தில் ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை – அம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (08) காலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புதன்கிழமை (07.05) இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார்.
இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணையை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் பொலிசார் ஒரு பெரல் கசிப்புடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாலிக்குளம் குளப்பகுதியில் வைத்து குறித்தநபர் நேற்று.(07.05.2025) கைதுசெய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 90லீற்றர் அளவுகொண்ட ஒரு பெரல் கசிப்பு மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்றப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் விபரீத முடிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவனல்லை – ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, உழவு இயந்திரத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்திசையில் பயணித்த வாகனங்களின் ஒளி காரணமாக, டிப்பர் வாகனத்தின் சாரதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை சரியாக கவனிக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (06.05) உத்தரவிட்டுள்ளது.
பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான இளைஞன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது வேட்பாளரின் வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரமே இருந்துள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர். எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்கு அருகில் இருந்த பெறுமதியான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று மீண்டும் மாத்தறையை நோக்கி திரும்பும் போது பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை(04.05.2025) லங்காசிறி ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர்.
இதனையடுத்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜூக்கு எமது ஊடகத்திலிருந்து மாணவி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரும் அதற்கு உரிய நடவடிக்கையை கல்வி அமைச்சின் மூலம் எடுப்போம் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னணி வணிக பண்டக்குறி நிறுவனங்களை விளம்பரம் செய்வது போன்ற போலி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை ஆதரிப்பது போல் காட்டும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியெனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ/Samsung போன்ற எந்த நிறுவனத்துடனும் இணைந்திருக்கவில்லை. என்னைப் போல காட்டப்படும் அனைத்து விளம்பரங்களும் AI தொழில்நுட்பத்தின் டீப் பேக் (Deep Fake) அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலிகள். தயவுசெய்து அவற்றை நம்ப வேண்டாம்,” என அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி முயற்சிகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் deepfake வீடியோக்கள் மற்றும் படங்களை பயன்படுத்தி பிரபலங்களை போல காட்டி விளம்பரங்கள் அல்லது முதலீட்டு திட்டங்களை பொய்யாகப் பரப்புகின்றன.
இதன்மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மோசடிக்குப் பயன்படுத்து சமூக ஊடகங்களில் பரவுகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கான சில முக்கிய ஆலோசனைகள்:
விளம்பரங்கள் உண்மையானதா என்பதை அதிகாரப்பூர்வமான ப்ராண்ட் பக்கங்கள் அல்லது உறுதியான சமூக ஊடக கணக்குகள் மூலம் சரிபாருங்கள்.
மிகவும் ஈர்க்கக்கூடிய அல்லது நம்பமுடியாத அளவிற்கு நல்ல சலுகைகள் என்றால் அதைப் பற்றிக் கவனமாக இருங்கள், குறிப்பாக பணம் தொடர்பான விவரங்கள் தேவைப்படும்போது.
சந்தேகத்துக்கிடமான விளம்பரங்கள் அல்லது உள்ளடக்கங்களை உடனடியாக அதற்கான சமூக ஊடக நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யவும்
அரசியலியர்களோ, பிரபலங்களோ சார்ந்த போல் தோன்றும் எந்தவொரு விளம்பரத்தையும் நம்புவதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்தக் குற்றச் செயலில் DARAZ நிறுவனம் தொடர்பில்லையென்றும், அந்த விளம்பரங்களில் அவர்கள் பங்கு இல்லையென்றும் அந்த நிறுவனம் தங்கள் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படமும் இதே போன்றதொரு விளம்பரத்தில் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.