மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வெற்றியை கொண்டாடிய மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களை வெற்றிகொண்டது.

இதையடுத்து மக்கள் நேற்று இரவு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.

கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் தமிழரசுக்கட்சி சின்னம் கொண்ட கேக் வெட்டப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது!!

ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இன்று (07.05) தெரிவித்தார்.

இருப்பினும், NPP உடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீன குழுக்களை NPP பரிசீலிக்கும் என்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் கூறினார்.

தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற நிறுவனங்களில் தேசிய மக்கள் கட்சி சபைகளை நிறுவும் என்று அவர் கூறினார்.​​மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் சபைகளை அமைப்பது நெறிமுறைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.

மேலும் , பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற கட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி ஓரத்தில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பிபிசி ஆவணப்படத்தின் அடிப்படையில் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் குறித்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

ஹன்னா மற்றும் நியால் ஆகிய இரண்டு அதிகாரிகள், இந்த மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட போது ,அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள மாமாவின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மாமா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான நிதி உதவியை செய்ய யாரும் இல்லாத நிலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசிப்பதாக நதீர குறிப்பிட்டுள்ளார். எனினும் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சென்று வரும் போதும், தனக்காக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் தங்கியிருக்கும் வேளையில், அந்தப் பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிபிசி காணொளியை பார்வையிட்ட சிலரினால் நதீரவுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இலங்கை மாணவனுக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வேலையும் ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிர் மாய்த்துக் கொண்ட சிறுமி : மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, குறித்த தரப்பினர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர்.

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே தமது மகளின் மரணத்துக்கான பிரதான காரணம் என, மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தமது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்ற வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர் வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும், உயிரிழந்த மாணவியின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

‘இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்’ என கூறியமையினால் தமது மகள் மிகவும் உள ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.

இவரை தெரியுமா? பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் காயமடைந்ததையடுத்து, சீதுவை பொலிஸார் ஆரம்பித்த விசாரணைகளின்படி, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பெயர்: மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன் விலாசம் : ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்:

சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591637 சீதுவை பொலிஸ் நிலையம்: 0112 253 522

விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே இத் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தம்புத்தேகம, இகிலி வெவ பகுதியைச் சேர்ந்த ஹேவா எம்பிட்டகே சித்தேவ் தனுல்யா என்ற நான்கு வயது குழந்தை ஆவார். சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் தனது தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சகோதரனும் சகோதரியும் தங்கள் சிறு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க விடுதிக்கு வந்ததாகவும், தாங்கள் சிறிது தூரத்தில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது குழந்தைகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் மகிழ்விக்க விட்டுவிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

தகராறில் விபரீதம் : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு தந்தை கொலை!!

மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. மகுலுகஸ்வெவ, 04ஆவது மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுயைட தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 32 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகுலுகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நண்பர்களுடன் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாஸ்கரன் பரந்தாமன் என்ற இளைஞர், நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கம்பர்மலை பகுதியில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இறப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை இந்நிலையில் இளைஞனின் இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு வாளுடன் வந்த இளைஞர்கள்!!

கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், இன்று (06) சோதனையிட்ட போது வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டு, அவர்களது காரும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு!!

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் ஒரு பிள்ளையின் தாய் கடற்கரையில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தும்பளை கிழக்கை சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரின் சடலமே கடலில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!!

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் தற்போது இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மாணவியின் பெற்றொர் முதற்தடவையாக “லங்காசிறி“ ஊடகத்துக்கு முன் வந்து மாணவியின் மரணத்திற்கு காரணம் ,

பின்னனியில் நடந்த விடயங்களையும் தற்போது சமூக ஊடகங்களில் மாணவியின் மரணம் குறித்து பலவிதமாக பேசப்படும் விடயங்கள் தொடர்பாகவும் மனம்திறந்து பேசியுள்ளனர்.

நடந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு

பொறுப்புவாய்ந்த ஊடகமாக லங்காசிறி செய்தி குழுவினர் நாம் இந்த பெற்றோரிடம் உண்மைகளை கேட்டு அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்து அவர்களுடைய முழு அனுமதியுடன் ஒரு முழுக்காணொளியாக வெளியிடுகின்றோம். இந்த நேர்காணலை முழுமையாக கீழள்ள காணொளியில் காணலாம்…

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 980,475 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,590 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 276,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 253,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 242,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

 

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்!!

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், பி அறிக்கை மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர் உட்பட 7 பெண் விரிவுரையாளர்கள் மற்றும் 9 ஆண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறை அமைப்பில் மின்சார கட்டணங்களுடன் இணைக்கப்பட்டு முகம் கழுவும் தொட்டியின் கீழ் ரகசியமாக பொருத்தப்பட்ட ஒரு சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் விரிவுரையாளர் அதைக் கவனித்து நிர்வாக மேற்பார்வையாளருக்கு தகவல் அளித்த பின்னர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை வழக்குப் பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட கமரா சம்பவம் அம்பலமான நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி, சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் சார்பாக ஆதாரங்களை முன்வைத்த வழக்கறிஞர், இந்த விடுதி வளாகத்தில் தற்போது 9 விரிவுரையாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 7 பேர் பெண்கள் என்று சுட்டிக்காட்டினார்.

விரிவுரையாளர்களில் ஒருவர் முகம் கழுவிக் கொண்டிருந்த இடத்தில், தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைக் கவனித்ததை அடுத்து, சந்தேகமடைந்து சக விரிவுரையாளரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆய்வு செய்ததில், அது வைபை சின்னத்துடன் கூடிய மிகச் சிறிய, உயர் தொழில்நுட்ப கமரா என அடையாளம் காணப்பட்டது. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வேறு இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

குறித்த கழிப்பறையை அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த வீடியோக்கள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்துவிடும் அபாயம் உள்ளதென வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

07ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

புதிய இணைப்பு :  நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 07ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் வழக்கம் போல நடைபெறும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாம் இணைப்பு :  நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் பரபரப்பு வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் : வெளியான காணொளி!!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக கிளை வீதியொன்றில் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடிய இளைஞனை துரத்தி துரத்தி துப்பாகிதாரி சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

அதிகதூரம் ஓட முடியாது தடுமாறி விழுந்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் ஒரு இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த நபர் நகரசபையின் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர் என்றும், தெரிவிக்கப்படுகின்றது.