சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : மேலும் நான்கு மாணவர்கள் கைது!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.

புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த சரித் டில்ஷான் என்ற இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் மகன் Fail ஆனதை கொண்டாடிய பெற்றோர்!!

மகன். பரீட்சையில் Fail ஆனதை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சமீபத்தில், பத்தாம் தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. எல்லா பாடங்களிலும் சித்திபெறாமல் அபிஷேக் 600இற்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

இந்நிலையில் மாணவனின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக் வெட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், ‘நீ பரீட்சையில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது” என்று ஊக்கப்படுத்தினர்.

பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். ‘நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் பரீட்சை எழுதுவேன். நான் பரீட்சையில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன் என நம்ப்பிகைட்யுடன் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

ஐ.டி. ஊழியர்களான பெற்றோரின் மூட நம்பிக்கை : 3 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில் மூட நம்பிக்கைகியால் உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி குழந்தை பட்டினி போடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

எனினும், கடந்த மார்ச் மாதம் நிலைமை மோசமடைந்துள்ளது. மருத்துவ ரீதியிலான முயற்சி தோல்வி அடைந்ததால், ஆன்மிக தலைவரின் ஆலோசனையைக் கேட்டு சந்தாராவில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சமண மதத்தில் சந்தாரா அல்லது சல்லேகானா அல்லது சமாதி மாறன் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது உணவு மற்றும் தண்ணீரை படிப்படியாக கைவிடுவதன் மூலம் தாமாக முன்வந்து இறப்பதற்கான ஒரு மத சபதம் ஆகும்.

இது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு வழியாக கருதுகின்றனர். இந்த வழக்கம் ஒரு வகையான தற்கொலை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனாலும், இந்த வழக்கத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, வியானாவின் பெற்றோர் அல்லது ஆன்மிக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சிறீ சபாரத்தினம் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம்!!

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 39வது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியா பொதுவைத்தியசாலை இரத்த வங்கியில் இன்றைய தினம்(05) இரத்ததானம் இடம்பெற்றது.

உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சிறீ தமிழ் ஈழ விடுதலை (சிறீ ரெலோ) இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 15க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் : மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்!!

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (05.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர். இதற்காக 1731 பேர் போட்டியிடவுள்ளனர்.

ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 154 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுளனர். 1307 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள், மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டது.

பொலிசாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எங்காவது மாடு ஸ்கூட்டி ஓட்டி பார்த்திருக்கிறீர்களா?

மாடு வீதியில் செல்லும்போது பல்லரும் அஞ்சி ஒதுங்கி போவார்கள் காரணம் மாடும் தம்மை முட்டிவிடும் என்கிற அச்சத்தினால் தான். அப்பாடியான சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் மாடு வண்டி ஓட்டி சென்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,

இந்தியாவின் உத்தரகாண்டில் இருக்கும் ரிஷிக்கேஷில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாடு ஒன்று ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஒரு ஓரத்தில் சென்று கொண்டே இருந்த அந்த மாடு, ஒரு கட்டத்தில் வெள்ளை நிறத்தில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை பார்க்கிறது.

அதை கடந்து போக நினைத்து மீண்டும் அதனை பார்த்து மீண்டும் அதனருகில் செல்கிறது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு பாேய்விட்டது.

பின்னர், சிறிது தூர இடைவேளைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்துவிட்டு, அது ஒரு பக்கமாக நடந்து செல்கிறது. ஸ்கூட்டி எங்கே என தேடியவர்கள் சிசிடிவி கேமராவை பார்க்கையில் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதில், ஒரு மாடு சிவனேன்னு ரோட்டில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, அதனை தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வண்டியையும் மாடு யார் மீதும் மோதவில்லை, யாரும் வந்து அந்த மாட்டின் மீது மோதவில்லை. மாடு, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்!!

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதுடன், வீதியில் உந்துருளியில் நின்று கொண்டிருந்வர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது உந்துருளியில் நின்ற நபரும் காயமடைந்ததுடன், அவரது உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்கைப் தளத்துக்கு குட் பை சொன்ன மைக்ரோசொப்ட்!!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ‘ஸ்கைப்’ தளம் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்கைப்’ தளத்தை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் 21 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த ‘ஸ்கைப்’, தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.

எஸ்டோனியாவை சேர்ந்த 4 மென்பொருள் பொறியாளர்களால் கடந்த 2003-ம் ஆண்டு ‘ஸ்கைப்’ தளம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’, கடந்த 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது.

ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. அதற்கு முன் பயன்பாட்டில் இருந்த ‘விண்டோஸ் லைவ் மெசென்ஜர்’ தளத்திற்கு மாற்றாக ‘ஸ்கைப்’ கொண்டு வரப்பட்டது.

இதற்கு பயனாளர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் 2023 பிப்ரவரி நிலவரப்படி, தினந்தோறும் 30 கோடியே 60 லட்சம் பேர் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்கைப் தளத்தின் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு, அதன் பயனாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ்(Microsoft Teams) தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தங்கள் சேவையை மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு வலயம் உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம்!!

வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

அந்தவகையில், 74.7 சதவீதமானவர்கள் சித்தி பெற்று வடக்கில் முதலாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அத்துடன், 73.5 சதவீத சித்தியைப் பெற்று தென்மராட்சி வலயம் இரண்டாம் இடத்தையும், 70.5 சதவீத சித்தியைப் பெற்று மன்னார் வலயம் மூன்றாம் இடத்தையும், 70.1 சதவீத சித்தியைப் பெற்று யாழ்ப்பாண வலயம் நான்காம் இடத்தையும்,

69.8 சதவீத சித்தியைப் பெற்று மடு வலயம் ஐந்தாம் இடத்தையும், 69.4 சதவீத சித்தியைப் பெற்று தீவக வலயம் ஆறாம் இடத்தையும், 68.1 சதவீத சித்தியைப் பெற்று வலிகாமம் வலயம் ஏழாம் இடத்தையும்,

67.8 வீத சித்தியைப் பெற்று வவுனியா தெற்கு வலயம் எட்டாம் இடத்தையும், 65.2 சதவீத சித்தியைப் பெற்று வடமராட்சி வலயம் ஒன்பதாம் இடத்தையும், 62.3 சதவீத சித்தியைப் பெற்று துணுக்காய் கல்வி வலயம் பத்தாம் இடத்தையும்,

60.6 சதவீத சித்தியைப் பெற்று கிளிநொச்சி தெற்கு வலயம் பதினொராவது இடத்தையும், 55.4 சதவீத சித்தியைப் பெற்று கடைசி இடத்தை கிளிநொச்சி வடக்கு வலயமும் பெற்றுக் கொண்டுள்ளது.

தாயாருக்குப் பதில் எட்டு வயதுக்குழந்தையை கைது செய்த பொலிஸார்!!

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது, அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து தடுத்து வைத்துள்ளனர்.

அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த காரணத்தினால் அதன் பாதுகாப்புக்காகவே பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : களமிறங்கிய சட்டத்தரணிகள்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்துக் கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இந்தநிலையில், குறித்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ரச்சிக பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இளைஞரொருவரை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!

கல்கிஸ்சை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி இரவு கல்கிஸ்சை, ஹுளுதாகொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த இளைஞன் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சுவின் சகா என்றும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கல்கிஸ்சை, புனித ரீட்டா வீதியில் வசித்த ஐம்பது வயதான நபரொருவர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தரை கொலை செய்த நபர்!!

சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஒருவரை மற்றொரு நபர் தாக்கி கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹென்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிம்பிஸ்ஸா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை!!

இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“நாட்டின் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படும்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மாணவன் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த 29 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு வந்த மாணவர்கள் சிலர் தலைக்கவசங்களினால் எனது தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலமாக தாக்கினர்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இதனால்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் என்னை இவ்வாறு தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எனக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.