பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

இலங்கை காவல்துறை வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சாதனங்களில் இரட்டை கமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் உள்ளன.

அவை சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கின்றன. வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை மேம்பட்ட வேக கமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் கூட 1.2 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிய முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் செயல்படும்.

இதனால் பொலிசார் போக்குவரத்து மீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும். நாடு முழுவதும் இந்த சாதனங்களில் 30 ஐ பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொன்றும் ரூ. 3.3 மில்லியன் பெறுமதியானவை. கூடுதலாக 15 அலகுகள் உத்தரவிடப்பட்டுள்ளன. இது 45 பொலிஸ் பிரிவுகளுக்குள் பயன்படுத்தப்படவுள்ளன.

குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!!

குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இரட்டை வண்டி எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ,பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி,இரண்டு பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 37 மற்றும் 43 வயதுடைய கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாடகை வண்டி சாரதி விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிமேஷின் மரணத்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்!!

கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்திகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அந்த செய்தியில், நிமேஷின் மரணத்தைத் தொடர்ந்து பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கான நடவடிக்கைள் தொடர்பில் குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனவரி 2020 முதல் ஒகஸ்ட் 2023 வரை மொத்தம் 24 பொலிஸ் மரணங்களும், பொலிஸ் துப்பாக்கிசூடுகளின் போது 13 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பெயர் குறிப்பிடமுடியாத அதிகாரி ஒருவரின் கருத்துக்களை அந்த ஊடகம் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளது. “பொலிஸாரின் சில மிருகத்தனமான செயற்பாடுகளுடன் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறோம்.

இலங்கையில் பொலிஸ் வன்முறை குறித்த விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை, பொலிஸில் உள்ளவர்களை சித்திரவதை செய்வதில் அதிகாரிகள் வழக்கமாக ஈடுபட்டதாகக் கூறியது.

2023 ஆம் ஆண்டில், இலங்கையின் வடக்கில் உள்ள வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், சித்தன்கேணியைச் சேர்ந்த 25 வயது நாகராசா அலெக்ஸ் என்ற நபர், தனது கண்கள் கட்டப்பட்டு, அடித்து, பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு, உணவு மறுக்கப்பட்டதாகக் கூறும் காணொளிகள் பரப்பப்பட்டன.

பின்னர் அவர் காயங்களால் இறந்தார் என கூறப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமாசூரியா குறித்த ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் பொலிஸ் மிருகத்தனம் “பல தசாப்தங்களாக” ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் உதவுவதற்காக சங்கம் எமது தரப்பு பொலிஸாரை அணுகியுள்ளது.

இது நீண்ட காலமாக நடப்பதை நாம் பார்த்து வருகிறோம், மேலும் இந்த பொலிஸ் மரணங்கள் முடிவுக்கு வருவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

 

இரவில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு!!

புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது.

அதன்படி, அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் யானையுடன் ஆரம்பமானது.

இதன்போது, இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான 153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமையின் தலையில் எண்ணெய் பூசப்பட்டது.

அத்துடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையால் பெறப்பட்ட பழுப்பு நிற கரடியின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், துணை இயக்குநர் உள்ளிட்ட மிருகக்காட்சிசாலையின் நிர்வாகத்தினரால் இது ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

20 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் 20இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தவிர்க்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுப்பதோடு, அதிளவு நீரைப் பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி!!

பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒரு குழுவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை நடந்த நிலையில் இன்றைய தினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 23 வயதுடையவர்கள் என்பதோடு, பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, ஹிக்கடுவ கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.

47 வயதான கணவர் மற்றும் 46 வயதுடைய மனைவியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய நாட்டு தம்பதி என தெரியவந்துள்ளது.

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

மாலைத்தீவில் ஓட்டுநராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இலங்கையரின் உடலை இன்று காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொடங்கஸ்லந்த – உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

கடலில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், அங்கேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.

அவர் முன்பு மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : இரு பெண் உட்பட மூவர் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (15.04) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15.04.2025) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!!

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இதில் 2,53,390 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் இந்தத் பரீட்சை நடைபெற்றது.

8 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர்!!

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர் பாஸ்ட்புட் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் அனுஷா (27) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

எட்டு மாத கர்ப்பிணியான மனைவி அனுஷாவுக்கும், ஞானேஷ்வருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஞானேஷ்வர் காதல் மனைவி அனுஷாவின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில் அனுஷா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

“மனைவி தொல்லை தாங்க முடியல” கடிதம் எழுதி வைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

மனைவி தொல்லைத் தாங்கலை. நான் நிரந்தரமாக தூங்கப் போகிறேன் என்று தாயிடம் கூறி விட்டு, மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் வசித்து வந்தவர் ராஜ் ஆர்யா. 28 வயதான இவர் , “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதாவது ராஜ் மற்றும் அவரது மனைவி சிம்ரன் இடையேயான உறவு பல மாதங்களாகவே சண்டை சச்சரவுடன் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ராஜ் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவரை மனஉளைச்சலுக்கு ஆளானார். சிம்ரனின் சகோதரர் போலீசாக இருப்பதால் தன் சகோதரியின் கணவரை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன் ராஜ், தனது மனைவியை திருமண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக சஹாரன்பூரில் அவரது மாமனார் வீட்டிற்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சிம்ரனின் குடும்பம் அதை எதிர்த்து, ராஜையும் அவரது தந்தையையும் தாக்கியதாக ராஜின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார்.

ன்னர், சிம்ரனின் குடும்பம், ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இந்த புகாரின் பேரில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், “நான் இப்போது தூங்கப்போகிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என தாயிடம் கூறியுள்ளார். தாயார் அதை சாதாரண மன அழுத்தம் எனக்கூறினாலும் அவரை எழுப்ப சென்றபோது, ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

குடும்பத்தினர், இது ஒரு திட்டமிட்ட துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்த தற்கொலை எனக் கூறி, சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

காதலனுடன் சென்ற மகளை கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்த கொடூரம்!!

காதலனுடன் சென்ற மகளை, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தையே ஆணவக் கொலைச் செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன், தனது 25 வயதுடைய மகளை ஆணவக் கொலைச் செய்து விட்டி, வீட்டின் பாத்ரூமில் சடலத்தைப் பூட்டி மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முகேஷ் சிங்கின் மகள் தன்னுடன் கல்லூரியில் படித்த வேற்று சமூகத்து வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி முகேஷ் சிங்கின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் டெல்லிக்கு சென்று விட்டார்.

உடனே முகேஷ் தனது மகளை, பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும், காதலுக்கு சம்மதிப்பதாகவும், வீட்டிற்கு வருமாறும் கெஞ்சி அழைத்துள்ளார்.

இதனால் முகேஷ் சிங்கின் மகள் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது முகேஷ் சிங் தனது மகளை கொலைச் செய்து வீட்டு பாத்ரூமில் வைத்து பூட்டி விட்டார். வீட்டிற்கு வந்த மகள் எங்கே என மனைவி கேட்டபோது மீண்டும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக முகேஷ் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து முகேஷ் சிங்கின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

கடும் வெப்பம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பநிலை உயர்வாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

வீட்டின் அறையொன்றில் சிறைவைக்கப்பட்ட சிறுவன் : மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில்!!

கொழும்பு வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் கடந்த 13ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்ற இரண்டு சிறுவர்களுடன் ஒரு கடைக்குச் சென்றிருந்தான்.

இந்தநிலையில், அங்கு அந்தக் கடைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் வாயிலைத் தட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, அந்த வீட்டில் வசிக்கும் ஒரு நபர் சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் தூக்கிச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார்.

அங்கு பயந்துபோன சிறுவன் அந்த அறையின் ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இதற்கு உதவியாக இருந்த 59 வயதுடைய ஒரு நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.