சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்குமார் (17) மற்றும் சாந்திபாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இதில் ரவிக்குமாருக்கு வேலை இல்லாததால் தம்பதியினர் இந்தியா வர முடிவு செய்தனர். இதற்காக இருவரும் விசா கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், விசா மறுக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ராஜஸ்தானுக்குள் வந்தனர்.
அப்போது, ஜெய்சால்மர் பகுதியிலுள்ள தார் பாலைவனத்தின் வழியாக பயணம் செய்த போது தம்பதியினர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் உடலில் நீர் சத்து குறைந்து உயிரிழந்துள்ளனர்.
அதாவது, அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இவர்களது சடலமானது கடந்த 28-ம் திகதி கிடைத்துள்ளது.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், “தார் பாலைவனத்திலுள்ள பிபியான் பகுதியில் இவர்களது உடல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் பெரிய அளவிலான குடிநீர் கேனை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், குடிநீர் தீர்ந்து விட்டதால் அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துவிட்டனர். தம்பதியினரின் உடல் அருகே காலியான குடிநீர் கேன் இருந்தது” என்றார்.
யாழில் பாடசாலை மாணவன் ஒருவர் செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான இலத்திரனியல் கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம்- சுழிபுரம் விக்டோரியா கல்லுரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் ஜஸ்மினன் என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தாக்க போட்டியில் சமர்ப்பிப்பதற்கான மாணவன் இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.
அத்தோடு, செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கு இந்த கருவி பயன்படும் முறையில் அமைப்பதற்கு உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த இலத்திரனியல் சாதனத்தை சரியாக செய்து முடித்து தமது பாவனைக்கு கையளிக்குமாறும் அதற்கான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும் விழிப்புணர்வற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.
“ஜஸ்டிஸ் போர் அஜித்குமார்” (#JusticeForAjithkumar) என்ற வாசகம் சமூக ஊடகங்களில், குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் ஆகும்.
இந்த ஹேஷ்டேக்கானது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் தற்காலிக பாதுகாவலராகப் பணியாற்றிய 28 வயது அஜித்குமார் என்ற இளைஞரின் பொலிஸ் தடுப்பு மரணத்துடன் தொடர்புடையதாகும். இது தொடர்பில் தெரியவருகையில்,
அஜித்குமார் என்ற இளைஞன் கோயிலுக்கு வந்த ஒரு பக்தரின் காரில் இருந்த 9.5 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஜூன் 28, 2025 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதின் பின்னர் இடம்பெற்ற விசாரணையின்போது அவர் மரணமடைந்துள்ளார். இதன்படி குறித்த இளைஞன் பொலிஸாரால் தாக்கப்படும் காணொளியொன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மரணம் பொலிஸ் வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(AIADMK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(cpi) மற்றும், பாரதிய ஜனதா கட்சி(BJP) உள்ளிட்ட கட்சிகள் இந்த மரணத்தைக் கண்டித்து, நீதி விசாரணை, இழப்பீடு, மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
“ஜஸ்டிஸ் பார் அஜித்குமார்” என்ற ஹேஷ்டேக், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், பொலிஸ் முறைகேடுகள் மற்றும் தமிழ்நாட்டில் பொலிஸ் தடுப்பு மரணங்களுக்கு எதிராகவும் ஒரு டிஜிட்டல் பிரச்சாரமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், , அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் அஜித்குமார் தீவிரவாதியா என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும் விசாரணையை முன்னெடுத்த இந்திய உயர்நீதிமன்றின் மதுரை கிளை, தமிழ்நாட்டில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்தது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு சட்டத்தரணிகள் அருண், சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
இதன்போது ஆளும் கட்சியினர் தலையீட்டால், பெற்றோரின் சம்மதமின்றி பொலிஸாரே அஜித்தின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்த அஜித்தை, கடுமையாக தாக்கிய பொலிஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் விசாரித்த நீதிபதிகள், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா என்றும், அவரை ஏன் அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தியது ஏன் என்றும் வினவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுடுள்ளதோடு ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வழக்கு தமிழ்நாட்டு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போலி தகவல்களை நாடாளுமன்றில் வெளியிடுவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அமர்வில், அர்ச்சுனா தவறான தகவலை வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் தனது உரையில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக, ஒரு தாயும், மூன்று மாதக் குழந்தையும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குழந்தையை தாய் தனது கைகளில் பற்றிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு நடவடிக்ககைகளின் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதில், ஒரு தாய் தனது குழந்தையை கட்டிக் கொண்டு இருந்தது போன்ற எலும்புக்கூடுகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பதிலாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உருவப்படத்தின் அடிப்படையிலேயே அர்ச்சுனா இராமநாதன் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனாவின் இந்தக் கருத்துக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர், லெப்டொப், கைத் தொலைபேசி, தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
அதில் தொலைபேசி, லெப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் இருந்த போது அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களும் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, 32,28,21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித் திட்டத்தின் (EMPP) அடிப்படையிலான, புதிய குடியிருப்பு அனுமதி வழிமுறை ஒன்றை கனடா அறிமுகம் செய்யவுள்ளது.
கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த திட்டத்தை அறிமுகம் செய்கின்றது.
இடம்பெயர்ந்த தனிநபர்கள் மற்றும் திறமையான அகதிகள் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் ஒரு நிலையான பாதையை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த அறிவிப்பு, 2025–2026க்கான கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும் இத்திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, EMPP திட்டம் காலாவதியாகும் முன் இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மஹியங்கனை , மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் T-56 துப்பாக்கியொன்று இன்று (01) சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்துள்ள வீடே இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் தங்கத்தில் ஒளிர்கின்றதாம். 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரபல யூ டியூபர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இங்கு மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
யூ டியூபர் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது. அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறமை இணைய வாசிகளை திகைக்க வைத்துள்ளதுது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் கூறும்போது,
“எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டிடங்களை கட்டி கொடுத்தோம்.
தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலை கட்டி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜூன் 27 ஆம் திகதி பெண்னுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்தபோது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் மீண்டுமொரு தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொலன்னறுவையில் ஜயந்திபுர மற்றும் ஜயவிக்ரம சந்திக்கு இடையில் உள்ள நாக பொக்குன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (30.06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குருணாகலில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் இருந்து தீயில் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று முன்தினம் (29.06.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் தொரட்டியாவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று, வர்த்தகர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் காரை வழிமறித்து வர்த்தகரை காரில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம்,
கையடக்கத் தொலைபேசி மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பம்மைமடு சந்தியில் இன்று (01.07.2025) காலை நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
வவுனியா மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பம்பைமடு இரானுவ முகாமை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் வாகனத்திலிருந்த நெல் மூடைகள் சிதறியதுடன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உலகின் மிகவும் வறட்சியான பாலைவனமான அட்டகமா பாலைவனம், பனியால் சூழப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம் இந்த தகவலை தனது X பக்கத்தில் காணொளியுடன் பதிவேற்றியுள்ளது.
வடக்கு சிலியில் அமைந்துள்ள குறித்த பாலைவனம் பல தசாப்தங்களாக அதிநவீன தொலைநோக்கிகளின் தாயகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அட்டகமாவில் உள்ள ALMA ஆய்வகத்தின் முக்கிய பிரிவு,10 ஆண்டுகளாக அந்த பாலைவனத்தில் பனி பொழியவில்லை என்று தெரிவித்துள்ளது.
செண்டியாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரவுல் கோர்டெரோ, இந்த பனிப்பொழிவை காலநிலை மாற்றத்தில் ஒன்று என நிர்ணயிப்பது அவ்வளவு எளிதானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான அதிசய நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்ற வகையிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சங்களில் ஒன்றான கிளவுட் பிராசஸிங் (Cloud Processing) தொழில்நுட்பம், பயனர்களின் தரவுகளை மெகா-தரவகங்களில் பகுப்பாய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள், படங்கள், காணொளிகள் உள்ளிட்டவை மெட்டாவின் AI மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
அண்மையில், சில தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள், இந்த தொழில்நுட்பம் பயனர்களின் அனுமதியின்றி தகவல்களை சேகரிக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தனியுரிமை மீறலாகவும், கண்காணிப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.
மெட்டா நிறுவனம், இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல்முறை பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.
அது மாத்திரமன்றி, ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் உள்ள புகைப்படங்களை அணுக மெட்டா ஏஐ-க்கு அனுமதி அளித்தால், அந்தப் படங்களை ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமித்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பயனர்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை என்பனவற்றை பெரிதும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.
மெட்டா நிறுவனம், தனது ஏஐ மொடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக பயனர்களின் தரவைப் பயன்படுத்துகிறது என முன்பிலிரந்தே குற்றம் சுமத்தப்பட்டு வருவதுடன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தரவுகள் ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இந்த புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்களின் தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் தானாகவே, குறிப்பிட்ட இடைவெளியில், மெட்டாவின் கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றப்படும்.
பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கான ஏஐ அடிப்படையிலான ஃபில்டர்கள், போட்டோ கோப்புக்கள் போன்ற உருவாக்க திட்டங்களை (Creative ideas) மெட்டாஏஐ இதன்மூலம் வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பாதுகாப்பானது என்று பயனர்களிடம் கூறப்பட்டாலும், பயனர்கள் பதிவேற்றாத புகைப்படங்களையும் மெட்டா ஏஐ அணுகும் என்பது குறிப்பிடத்தக்க தனியுரிமைச் சிக்கல் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த பயனர்கள விருப்பம் தெரிவிப்பதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம் என்றும் மெட்டா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து பல சந்தர்ப்பங்களில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வித் திட்டங்களின் போது இது குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பாடசாலை நேர நீட்டிப்பு தொடர்பாக இதுவரை கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் இரண்டாம் தவணையின் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்காக 6-11 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரத்தை பிற்பகல் 3:30 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்படும் என வடமேற்கு மாகாண வலயக் கல்வி இயக்குநர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணை பாடத்திட்டத்தை உள்ளடக்கி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் பாடசாலையின் தினசரி கால அட்டவணையில் ஒவ்வொரு பாடத்திற்கு தலா 55 நிமிடங்கள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.