தமிழ் இளைஞனை கரம்பிடித்த வியட்நாம் பெண் : தேசங்களை கடந்து இணைந்த காதல்!!

தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்பாக, வியட்நாம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றிய வியட்நாம் பெண் நுகின் லீ தய் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.

நாளடைவில் இவர்களது நட்பு காதலாகி மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில், தங்கள் காதல் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற மகேஷின் தங்கையின் திருமணத்திற்கு நுகின் லீ தய் வந்துள்ளார். தமிழ் பாரம்பரிய திருமண முறை அவருக்கு பிடித்துப்போக, ஒரே வாரத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.

இன்று திருநெல்வேலியில் இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி சிறப்பாக நடந்து முடிந்தது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணமகள் தரப்பில் அவரது தயார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மீது மோதிய பாரஊர்தி!!

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பிரதேசத்தில் பாரஊர்தி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பாரஊர்தியை செலுத்திச் சென்ற சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 6 முச்சக்கரவண்டிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி!!

மாத்தறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி ஒருவரை 3 (தொண்டர்) கெமுனு கண்காணிப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

படையினர் படகு ஒன்றை பயன்படுத்தி கைதியை மடக்கிப்பிடித்து மாத்தறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு!!

டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். ஏர் இந்தியா இதுகுறித்து புகாரளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனே விமான பணிப்பெண்ணிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விமான பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு மாற்று துணிகள் வழங்கியுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட நபரை வேறு ஒரு இருக்கையில் அமருமாறு கூறிய விமான பணியாளர்கள் விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தன் தவறுக்காக சிறுநீர் கழித்த நபர் அந்த பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் விமானம் தரையிறங்கிய பிறகு அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை.

புகார் இல்லாமலேயே, சிறுநீர் கழித்த நபருக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் 300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி!!

இன்று (10) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை 2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர், டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவைக் கடக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது ஆகும்.  அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 391.0050 ரூபா மற்றும் கொள்வனவு விலை 376.5390 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 334.6344 ரூபா எனவும் கொள்வனவு விலை 320.7875 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (10.4.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

கொலம்பியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி!!

கொலம்பியாவில் பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியின்(RSB) முன்னாள் விஞ்ஞானியான அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro Coatti) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கொலம்பியாவின் வடக்கு கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள சாண்டா மார்டா நகரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றில் அவரது உடல் பாகங்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அலெசாண்ட்ரோ கோட்டி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதோடு அவர் றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொலம்பிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை : சிதறிக் கிடந்த உடற்பாகங்களால் அதிர்ச்சி!!

தகாத உறவு காரணமாக 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.

குளிக்கடை – மெதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிஷான் புத்திக என்ற நபரின் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தக் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

புதர் ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் டயர்கள் வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள், அனுராதபுரத்தின் லோலுகஸ்வெவ பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது, ​​புத்தளம் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டதுடன் உடல் பாகங்கள் அந்த இடம் முழுவதும் சிதறிக்கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் : நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி!!

22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றையதினம் (10.04) மாத்திரம் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் 24 கரட் தங்கம் 253,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 232,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 190,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 31,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 23,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் 15 பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்!!

ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையும் புனித வெள்ளி வருவதால், குறிப்பிட்ட வாரத்தில் வேலை நாட்களாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.

எனவே அந்த திகதியில் விடுமுறை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ​மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளது.

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடல்சார் சமூகத்திடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (09.04) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழில் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்டம்!!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் , சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பனின் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பன் ஆலயத்தில் இன்று திருத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.

திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளை பெற்றனர்.

 

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் பொலிசார் விரட்டியதால் வீட்டின் மதிலை உடைத்து டிப்பர் வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வாகனம் நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து, வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாது சேர்ந்து வாழ்ந்த இளம் பெண் கொலை : கொழும்பில் பயங்கரம்!!

கொழும்பு – குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் புனித மெத்தீவ் மாவத்தை, ஏகலவில் வசித்த 33 வயதான பெண் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் சுமார் 4 மாதங்களாக ஒரு வீட்டில் சந்தேக நபருடன் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

35 வயதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.