காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (09ஆம் திகதி) நண்பகல் 12.12 அளவில் உயங்கல்ல, அரங்கல, கோங்கஹவெல, மொரகஹகந்த மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
மேலும் சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அஜ்மான்(Ajman) மாநிலத்தில் கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் வயிற்றில் இருந்த கத்தியை அகற்றி அவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்ததாகவும் அவரது வழங்கறிஞர் சகாப்தீன் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கண்டியை சேர்ந்த தெய்வேந்திரன் நிக்லஸ் என்ற இளைஞனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் எட்டு வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது என்றும், அஜ்மான் பணத்தில் இரண்டு இலட்சம் டிர்ஹாம் (Dirham) பணம் செலுத்தினால் மாத்திரமே மரண தண்டனையில் இருந்து குறித்த இளைஞனைக் காப்பாற்ற முடியும் என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் இருந்த மூன்று சிங்கள இளைஞர்கள் சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களில் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் என்றும், அவர்கள் கொலை நடந்தமை தொடர்பான பிரதான சாட்சியாளர்கள் எனவும் விபரித்த சட்டத்தரணி சகாப்தீன், இந்த இளைஞன்,
கொலை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமையினால் அஜ்மான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாகவும் விளக்கமளித்தார்.
அதாவது, கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக இருந்தவரை காப்பாற்றும் நோக்கில் கத்தியை வயிற்றில் இருந்து அகற்றிவிட்டு இரத்தம் வழிந்தோடாமல், துணிகளால் கட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் நடந்த உண்மையை தமிழ் இளைஞன் வைத்தியர்களுக்கும் பொலிஸாருக்கும் விளக்கியிருக்கிறார்.
ஆனால், கத்தியில் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தை ஆதாரமாக எடுத்து அஜ்மான் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறிய சட்டத்தரணி, குறித்த சம்பவ இடத்தில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அந்த பாகிஸ்தானியர் தான் கொலை செய்தவர் என்றும், இருந்தாலும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியிலும் கொல்லப்பட்டவரின் உடலிலும் தமிழ் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தால், அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக சட்டத்தரணி கூறினார்.
எட்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்று குறித்த பாகிஸ்தானியர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆனாலும், கொலையை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாகவும் சட்டத்தரணி கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த சட்டத்தரணி சகாப்தீன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞன் 2018ஆம் ஆண்டு அஜ்மான் மாநிலத்துக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார்.
மரண தண்டனைக்கு உள்ளான இளைஞன் தங்கியிருந்த இடத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவரும் நான்கு சிங்கள இளைஞர்களும் மற்றும் சில பாகிஸ்தானியர்களும் தங்கியிருக்கின்றனர்.
கொலையுண்ட மாத்தளையைச் சேர்ந்த அந்த முஸ்லிம் இளைஞனை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியரே கத்தியால் குத்தியிருக்கிறார். அவர்களுக்கிடையில் தகராறுகள் இருந்திருக்கின்றன.
ஆனால், கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட தெய்வேந்திரன் நிக்லஸ், அந்த முஸ்லிம் இளைஞனின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியை ஒரு கையால் அகற்றி மறு கையால் துணியைப் பிடித்துச் சுற்றிப் பின்னர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
சம்பவத்தை அறிந்து கொண்ட அங்கு தங்கியிருந்த மூன்று சிங்கள இளைஞர்களும் கொலை நடைபெற்று நான்கு நாட்களில் தங்கள் விசாக்களை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால், இவர்கள் சாட்சியமளிப்பார்கள் என்ற அச்சத்தினால் குறித்த மூன்று இளைஞர்களுக்கும் பெருமளவு பணத்தைக் கொடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர் முன்கூட்டியே அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவரின் முகநூலைக் கண்டு பிடித்து அதில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அந்த முகநூல் முடக்கப்பட்டு தொலைபேசியும் செயலிழக்கப்பட்டிருந்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் ஓமானில் பணிபுரிகிறார். அவருடைய சகோதரி தனது சகோதரனை பார்வையிட தற்போது அஜ்மான் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தான் உழைத்த இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை தருவதாக தாயார் கூறியுள்ளார். ஆனால், அவ்வளவு பெரும் பணத்தை அவரால் செலுத்த முடியாது என்று சட்டத்தரணி விபரித்தார்.
அதேநேரம், சுற்றுலா விசாவில் எவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டாம் எனவும் அவர் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார்.
இந்த நாடுகளின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்றும் உரிய ஆதாரங்கள் இல்லையானால் நிரபராதியாக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
எனவே, இயலுமானவர்கள் இந்த இளைஞனை விடுவிக்க உரிய பணத்தை வழங்கி உதவுமாறு சட்டத்தரணி சகாப்தீன் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை செலுத்த நீதிமன்றத்தில் நான்கு மாத கால அவகாசம் கேட்டதாகவும், ஆனாலும் மூன்று மாதங்கள் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி,
மூன்று மாதங்களில் குறித்த நிதியை வழங்கத் தவறினால் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றும் கவலையுடன் தெரிவித்தார்.
கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் தாய் வெளிநாடு சென்ற நிலையில், தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்துள்ளார்.
தாய் இல்லாதது குறித்த தனது கவலையைப் போக்க பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த நிலையில் பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவருடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அறிமுகம் காதலாக மாறியது, ஒரு மாதத்திற்குள், இளைஞன் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரை தகாத உறவுக்கு உட்படுத்திய நிலையில் நகைகளை எடுத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்ததும், தந்தையும் பாட்டியும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞனின் இருப்பிடம் தெரியாமையால், பேஸ்புக் காதலரை மீண்டும் அழைத்து வர பொலிஸார் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அந்த மாணவி அவரை அழைத்து, மீதமுள்ள நகைகளை நான் கொண்டு வருகிறேன்… எங்காவது சென்றுவிடலாம் என இளைஞனிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு சம்மதித்து கம்பளை நகரத்திற்கு இளைஞன் வந்த போது மறைந்திருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்த இளைஞன், திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக பொலிஸாரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
அத்துடன் மாணவியிடம் பெற்ற நகைகளையும் மீளவும் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் ஏகல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழ்ந்தவர் சந்தேக நபருடன் சுமார் 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், வாக்குவாதம் அதிகரித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்களும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(09.04.2025) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை, பெண் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யும் முறை, பட்டியல் ஆசனம் வழங்கப்படும் முறை மற்றும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில் வழங்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.அரவிந்தன், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற காதர் மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதன் ஊடாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி மற்றும் வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் முயற்சியினால் முதற்கட்ட பேச்சுக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, பல்கலைக் கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதிப் பலத்தினை பெற்று கொள்வது தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பட்டதுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அற்புதராஜா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர்,
பல்கலைக்கழகத்தின் துறை சார் தலைவர்கள், வைத்தியர்கள், வவுனியா பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் 20மாடுகளையும் மீட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்று (09.04.2025) அதிகாலை 4.30மணியளவில் பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் லொறி ஒன்றை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது. குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைதுசெய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
குறித்த மாடுகள் மல்லாவி பகுதியில் இருந்து குருநாகல் பகுதிக்குகொண்டுசெல்லப்படவிருந்ததாக தெரிவித்த பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியையே, மாணவியின் கன்னத்தில் பஸ்ஸில் வைத்து திங்கட்கிழமை (07) மாலை, டிக்கோயா பகுதியில் வைத்து அறைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா ஊடாக போடைஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் என பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாணவியின் கால், ஆசிரியை ஒருவரின் சாரியில் மிதி பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, பஸ்ஸில் வைத்தே, அந்த மாணவியின் கன்னத்தில்அறைந்துள்ளார். அத்துடன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
ஆசிரியைக்கு எதிராக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மாணவி, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதி ஒன்று காயமடைந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வசிக்கும் வயோதிப தம்பதி ஒன்றே காயமடைந்துள்ளனர்.
பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதே இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப தம்பதி ஒன்று காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து நேற்று இரவு (07) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, நகரசபை ஊழியர்கள் இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தமையால், மேலும் அழிவுத் தடுக்கபட்டுள்ளது.
வெடிப்பு நிகழ்ந்த சுமார் 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகே, தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப வாகனம் ஒன்று வந்தபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று – ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணியின் போது வெடிப்பு ஏற்பட்டு அந்த பகுதியே தீப்பிடித்து எரிந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி எரிவாயு பரிமாற்ற நடைமுறையை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எரிபொருள் நிலைய மேலாளர் மற்றும் பல தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் எரிபொருள் நிரப்பும் செயல்முறையை நிர்வகிக்க முயன்றபோது, தொட்டி வெடித்ததால் அவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
குருநாகல் நகர சபை, குருநாகல் பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவத்தின் அவசரக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் சில பகுதிகளில் சூரியனின் இயக்கம் காரணமாக ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க இன்று (08ஆம் திகதி) நண்பகல் 12:12 மணியளவில் நயினமடம, சந்தலங்காவ, குண்டசாலே, மஹியங்கனை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
சூரியனின் இயக்கம்
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இதேவேளை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி
சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையில் பணியாற்றும் வரக்காபொல பகுதியை சேர்ந்த 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான சோமிகானி நிலுஷா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் ஒரு பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது.
கணவன் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் நிலையில் கடன் நெருக்கடி காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கவுள்ளதுடன் தானும் உயிரை மாய்க்கவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தந்தை தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் மீண்டும் வீட்டுக்கு வந்த போது மனைவி மரத்தில் தூக்கிட்டு தொங்குவதையும் குழந்தை அவரது உடலில் தொங்குவதையும் கண்டவுடன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக தாயையும் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதும், தாய் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதும் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை – எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலின் குளியலறையில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை இரகசியமாக எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தபோது, யாரோ ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டினை அடுத்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய, பசறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தனியுரிமையை மீறுவது மட்டுமல்லாமல், இலங்கையின் சுற்றுலாத் துறையையும் பாதிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெறுபேறுகள் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதியிருந்த நிலையல், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தங்கியிருந்த திருமணமாகாத தம்பதியை தாக்கியுள்ளனர்.
அத்துடன் அவர்களை கடத்தி, அவர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் 15 வயதுடைய மாணவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் 33, 52, 54 மற்றும் 25 வயதுடைய பெண்கள் என்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் விடுதியில் தங்கியிருந்த ஆணின் குடும்பத்தின் உறவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட மேலதிக தகவலுக்கமைய, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ள தம்பதி விடுதியில் தங்கியிருப்பதை அறிந்த பெண்கள், விடுதிக்குச் சென்று, அவர்களை தாக்கியுள்னளர்.
அத்துடன் அவர்களை கடத்திச் சென்று அவர்களிடம் கொள்ளையடித்த பின்னர் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான தம்பதி செய்த முறைப்பாட்டிற்கமைய, 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை கடலோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை நேற்றையதினம் (07.04) திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அந்தப் பெண் குழந்தை எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து குழந்தை பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி லக்மாலி. அத்திமலையின் பதில் பொலிஸ் மா அதிபர் எல்.ஏ. ஜினதாச விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.