யாழ்ப்பாணம்-கச்சேரிக்கு முன்பாக காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (03.04) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். கடந்த மாதம் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தாக்குதலுக்குள்ளான 20 வயது நிலாக்சி ரகுதாஸ் (மார்க்ஹாம்) என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஏக்வோன் முர்ரே (28) மற்றும் ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சாட் (35) ஆகியோரை அந்நாட்டு பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இதற்கமைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலியா – மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது. Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும் அழகு நிலையமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது.
பணம் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பு பெயரில் உள்ள பல பொருட்களும் திருடப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளனர். அருகில் இருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸார் இது குறித்து உரிமையாளரிடம் தகவல் வழங்கியுள்ளார்.
கொள்ளையில் ஆண் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக மெல்போர்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மெல்போர்ன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
12% ஆக இருந்த வரி விகிதம் இப்போது 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மீது விதிக்கப்படும் வரி விகிதம் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்த சூழ்நிலை இலங்கையின் ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.
குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்காவில் அதிக கேள்வியை கொண்டுள்ளன.
இந்தக் புதிய வரி விதிப்பு இலங்கையின் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய வழிகள் உள்ளன. ஏற்றுமதி வருவாய் கணிசமாகக் குறையக்கூடும்.
மேலும், ஏற்றுமதிகள் இப்படி சரிந்தால், எதிர்காலத்தில் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரின் வேலைகள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03.04.2025) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறியரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி பின் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பத்தையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை லொறியின் முன் பகுதியும் மின்சார கம்பம் மற்றும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன், பின்னர் மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பகுதியில் அதிக வளைவுகள் வீதியில் அமைந்து உள்ளதால் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும்,
தற்போது அடிக்கடி ஓரளவு மழை பெய்து வருவதாலும் மிகவும் அவதானமாக வாகனங்களை ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விபத்து, நேற்றையதினம்(02.04.2025) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள் மீது நாளைய தினம் முதல் வரிகளை விதிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம் குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் அறிவித்தார். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்தது.
இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவது இலங்கைப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இலங்கையில் இருந்து அதிகளவான ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா, யாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது, நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த யுவதி துபாயில் உள்ள பொறளை மெகசின் வீதியை சேர்ந்த திலன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தனது வீட்டில் பொதி செய்து 07 வருடங்களாக விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதியின் பெற்றோர் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதியின் அலுமாரியில் இருந்து போதைப்பொருளை் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வலியுறுத்திய நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய நபரே இவ்வாறு ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான்,
சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக
இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.
இத்தகைய சூழலில் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இரண்டு பெண்களின் போலி ஆடையின்றிய படங்களை உருவாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அனுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள், இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டதால் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சந்தேகநபர் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (3) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 934,480 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 241,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 230,800 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 249,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 230,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருந்தது. அதன் பிறகு, அது தொடர்பான கணக்கெடுப்பு முறையாகச் செய்யப்படவில்லை.
ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வரும் போக்கு உள்ளதுடன், இலங்கையிலும் அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம்.
அதை மிக விரைவாக அடையாளம் காண்பது முக்கியமாகும். ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடிந்தால், 90% பேரை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சரிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (04.04) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விண்ணப்பதாரிகளிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் உறவினர்கள் அந்த பெண்ணை அடக்கம் செய்து விட்டனர்.
இந்நிலையில் வித்யா வெண்மணி என்ற இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் வித்யாவை பெண் கேட்டு சென்ற நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வித்தியாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இது குறித்து அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி தகராறு நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் காதலி பலியானதால் அவருடைய காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட வித்யாவின் அண்ணன் சரவணன் தான் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்படி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் கோபத்தில் தன்னுடைய தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.
பின்னர் தலையில் பீரோ விழுந்ததாக நாடகமாடி உடலை அவசரம் அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். போலீசார் சரவணனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டமையினால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான UL504 விமானமே இவ்வாறு ஓமனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.