ஜூஸ் கடைக்காரருக்கு 7.79 கோடிக்கு வருமான வரி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீஸ்(35). இவர் அலிகார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

யூஸ் கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.500 – 600 வரை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 18 ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

அந்த நோடீஸில், ரூ.7.79 கோடி வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். இதுகுறித்து ரஹீஸ் கூறுகையில்,

இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. வயதான பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் , ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி விதித்த சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியன்மாரை உலுக்கிய பாரிய பூகம்பம் : ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள் கண்முன்னால் இடிந்துவிழுந்தது என அதனை நேரில் பார்த்தவர்கள் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை சேர்ந்த ஒருவர் ஐந்துமாடிக்கட்டிடம் எனது கண்முன்னால் இடிந்து விழுந்ததை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்தும் குலுங்கதொடங்கியதும் நாங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடினோம் என தெரிவித்துள்ள அவர், எனது நகரில் அனைவரும் வீதியில் நிற்கின்றனர் வீடுகளிற்குள் செல்வதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு நபர் கூறுகையில், மண்டலாயி;ல் தேநீர் கடையொன்று இடிந்து விழுந்தது,உள்ளே பலர் சிக்குண்டுள்ளனர் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை,நிலைமை மிக மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுவரை மியன்மார் அதிகாரிகள் உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து எந்த விபரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உணவகங்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் முதலாம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல்,

நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பேருந்து கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலி!!

பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.

தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில் திருவிழாவிற்காக காரில் பயணித்தார்.

காரில் ரவீந்தர், அவரது மனைவி ரேணுகா, மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா (6) ஆகியோர் ஒன்று சேர்ந்து பயணித்தனர்.

இந்நிலையில் இவர்களது கார் பிபி குடேம் அருகே சூர்யாபேட்டை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து இவர்களது கார் மீது நேருக்கு நேராக மோதி கோர விபத்திற்குள்ளானது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயற்சித்தனர்.

ஆனால், ரவீந்தர், ரேணுகா மற்றும் ரிஷிதா ஆகிய மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு,

மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமும் ’எனர்ஜி ட்ரிங்க்’ குடித்த இளம்பெண் பரிதாபமாக பலி!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய தாய் லோரி , “தனது மகள் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர், ஆர்கானிக் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்.

தினமும் 3 எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கத்தில் இருந்ததாகவும் கூறினார். எனவே அந்த எனர்ஜி ட்ரிங்க்ஸ் தான் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.

கேட்டிக்கு அடிக்கடி கடும் பதட்டம் இருந்த நிலையில் அவர் பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வந்ததாகவும் அவருடைய தாய் கூறினார்.

அதோடு கேட்டியின் நண்பர்கள் அவர் தினமும் 2 முறை உடற்பயிற்சி செய்யும் நோக்கில் கூடுதலாக சக்தி வழங்கும் சப் பிளிமெண்ட்களையும் எடுத்து வந்ததாகக் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவரது இறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் எனர்ஜி ட்ரிங்கில் அதிக அளவு கப்ரின், சர்க்கரை, ஜின்சென்ட் போன்ற தூண்டல் சேர்க்கைகள் அடங்கியிருப்பதால் ரத்த அழுத்தம்,

மாரடைப்பு, இதயத்துடிப்பு குறைபாடுகள் போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே அடிக்கடி அல்லது அதிகமாக குடிப்பவர்கள் இது போன்ற கடுமையான பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டை விற்று பாய்மர படகில் வாழும் இந்திய குடும்பம் : அவர்கள் கூறும் காரணம்!!

வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.

கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

கேப்டன் கௌரவ் கௌதம் (ஓய்வு) மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி, அவரது மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள பாய்மரப் படகில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

தி ரீவா ப்ராஜெக்ட் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில், இந்த குடும்பத்தினர் தங்கள் பயணத்தை அடிக்கடி வீடியோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

மிதக்கும் படகு தான் இவர்களது வீடாக மாறியுள்ளது. இதில் தான் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மேலும், படகில் பயணிப்பதற்காக தங்களது உடமைகளை விற்றுள்ளனர்.

அதாவது, படகில் பயணிக்க உடமைகளை 6000 கிலோவிலிருந்து வெறும் 120 கிலோவாக குறைத்துள்ளனர்.

வைதேகிக்கு மட்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் இருந்தும் தங்களது வாழ்க்கைக்காக அதனை அவர் தவிர்த்துள்ளார். மேலும், படகில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டுமோ அதனை மட்டும் பயன்படுத்துகின்றனர்.

கொரோனா காலத்தில் படகின் விலை குறைவாக இருந்ததால் இவர்களின் கனவு நனவாகியுள்ளது. மேலும், இவர்களின் மகள் கயா பள்ளிக்கு சென்று படிக்காமல், வீட்டில் இருந்தே அவரின் கல்வியை தொடர்கிறார்.

இவர்கள் படகில் பயணிப்பது சவாலானது என்றும், புயல் நிறைந்த கடல்களில் பயணிப்பது சவால் நிறைந்ததும் என்றும் கூறுகின்றனர்.

 

கார் – லொறி மோதி விபத்து : மூவர் காயம்!!

புத்தளம், மதுரங்குளி – சிலாபம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் சாரதியின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!!

கேகாலை, ரன்வல கொனமடஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி க.பொ.த சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

ரன்வல கொனமடஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை (25) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில்,

தனது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் போட்டுக்கொண்டே தொலைபேசி அழைப்பில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த மாணவன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கேகாலை வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை (26) பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மின் கம்பத்தில் மோதி வேன் விபத்து : இருவர் படுகாயம்!!

அநுராதபுரம், பதவிய வீதியில் ரம்பகெப்புவெவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

வானியலில் நிகழவுள்ள அறிய மாற்றம் இன்று இரட்டை சூரிய உதயம்!!

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தோன்றவள்ளது.

இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய சூரிய கிரகணத்தின் போது ஒரு அரிய வான நிகழ்வை காணலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 8, 2024 அன்று ஏற்பட்டதை போல முழு சூரிய கிரகணம் இல்லாவிட்டாலும், இந்த பகுதி சூரிய கிரகணம் சூரியன் உதிக்கும் போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகணத்தின் போது, ​​சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் சீரமைப்பு சற்று மையத்திலிருந்து விலகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிக ஆழமான கிரகணம் ஏற்படுகிறது.

மிகப்பெரிய கிரகணத்தின் புள்ளி கனடாவின் கியூபெக்கின் நுனாவிக் பகுதியில் நிகழும் என்றும், அங்கு 94% சூரிய உதயத்தின் போது சந்திரனை கிரகணம் மறைப்பதை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் இந்த நிகழ்வு சூரிய உதயத்தின் போது நிகழும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நுனாவிக் முதல் கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் மைனே வரையிலான டெர்மினேட்டரில் உள்ள சில இடங்களில் இது உதிக்கும் என்று தெரிகிறது.

இதன்படி , இது ஒரு “இரட்டை சூரிய உதயம்” போல் தோன்றும் என்று கூறப்படுகிறது. இதனால், சில இடங்களில் “சூரிய கொம்புகள்” (Solar Horns) என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும்.

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்களில், குறிப்பாக மைனே, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மாசசூசெட்ஸ் மற்றும் கிழக்கு கனடாவில், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கில் மிக எளிதாக அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு சிறிய கிரகண சூரிய உதயத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை மாணவியை அடித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (26) பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, குறித்த மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு , பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறிய நிலையில் அந்த மாணவியும் அதனை செய்துள்ளார்.

இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து கடுமையாக எச்சரித்து மாணவிகளை தடியால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார்.

அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது,

மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் (27) மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (27)இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் ,

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு கூறியதை அடுத்து அவர்களை கலைந்து சென்றதாக தெரியவருகின்றது.

மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் : முன்வைத்த இறுதி கோரிக்கை!!

தனது மனைவியை அவருடைய காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சாண்ட் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும், ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பப்லு தனது தனது குடும்பத்தைக் காப்பாற்ற அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சம்பாதித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ஜோதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் பப்லுவின் குடும்பத்தினருக்கு தெரியவர, இது குறித்து உடனடியாக பப்லுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த பப்லு, இந்த பிரச்சனையை சரிசெய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால், அனைத்து தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தனது மனைவியை அவருடைய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்திற்குச் சென்று தனது மனைவிக்கு அவரது காதலனோடு திருமணம் செய்து வைத்ததுடன் பின்னர், அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இறுதியாக, தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்துக் கொள்ள விரும்புவதாக பப்லு ஜோதியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. காதலனை மணந்த பிறகு ஜோதியும், பப்லுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

யாழில் புகையிலை செடிகளுக்குள் கஞ்சா வளர்த்த நபர் : பொலிஸார் அதிரடி!!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் – தைலங்கடவை பகுதியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 4 அடி 10 அங்குலம் கொண்ட கஞ்சா செடியும் மீட்கப்பட்டதுடன்சந்தேகநபர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைதானவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சென்ற கணவனை காணவில்லை : மனைவி பொலிஸில் முறைப்பாடு!!

மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கணவர் காணாமல் போனமை தொடர்பில் மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280, 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அருந்ததி தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த பேச்சுவார்த்தை நேற்று (26.03) இடம்பெற்றது.

இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, இந்திய மீனவ பிரதிநிதிகளை இலங்கை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுக்கு நினைவு பரிசில்களை வழங்கி பேச்சுவார்தையை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்த்துதல், இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை, இரு நாட்டு மீனவ உறவு தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில், இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழுவினரும், இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னராசா (யாழ்ப்பாணம்), வர்ண குலசிங்கம் (யாழ்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட மீனவர்களுக்கு இடையேயான மீனவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர்.

வவுனியாவிறகு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப் படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின்,

தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் நேற்று (26.03) பிற்பகல் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களது தற்போதைய நிலமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.

வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர்.