வவுனியா மாநகரசபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை : பா.உ செ.திலகநாதன்!!

வவுனியா மாநகரசபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை. புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார். ,

கடந்த சில நாட்களாக வவுனியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வாழுகின்ற மக்களினுடைய சோலைவரியானது கடந்த காலத்தில் அறவிடப்பட்ட தொகையை விட அண்ணளவாக 7 மடங்கு அதிகமாக மாநகரசபை உத்தியோகத்தர்களினால் சிட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நகரசபை செயலாளரிடம் கேட்ட போது, கடந்த 15 வருடமாக வவுனியா நகசபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து மதிப்பீடு இடம்பெறவில்லை எனவும் கடந்த வருட இறுதிப் பகுதியில் சொத்து மதிப்பீடு இடம்பெற்றதாகவும் அதனடிப்படையில் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். சொத்து மதிப்பின் 15 வீதத்தை வரியாக அறிவிடுவதாக தெரிவித்தார்.

ஆனால், யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வீதம் குறைவாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 5 வீதமாக காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கும் போது வவுனியா மாநகர சபையில் 15 வீதமான வரி அறவீடு என்பது மக்களின் தலையில் பாரிய சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது.

வவுனியா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தூர இடங்களில் இருந்து வேலை வாயப்புககளுக்கு வந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச வேலைவாய்புக்காக வந்தவர்கள் இங்கு வாடகைக்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்த வரி விதிப்பு காரணமாக வாடகையை உரிமையாளர்கள் உயர்த்தும் போது அதனை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

அதைவிட, மக்களின நிதிச் சுற்று குறைவடையும். இதனால் பொருட் கொள்வனவு குறைவடைந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி குறைவடையும். மக்களின் வாழ்க்கை தரமும் குறைவடையும். ஆகவே, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களது தலையில் வரிச் சுமையை ஏற்ற மாட்டாது.

இவ்வாறு வரி அறவீடு செய்வதன் மூலம் தொழிற்சாலை மற்றும் தொழில் முனைவோர் தமது தொழிற்சாலைகளை கைவிடும் நிலை ஏற்படும். இதனால் வேலைவாய்ப்பு, தொழிற் முயற்சியாண்மை பாதிக்கப்படும். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனருடன் தொலைபேசி மூலம் உரையாற்றிய போது, வருகின்ற மாநகர சபைத் தேர்தலின் பின் வருகின்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய வரி வீதம் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனவே, மே மாதம் 6 ஆம் திகதி வருகின்ற மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் நிலைப்பாட்டில் தான் வரி வீதம் அமையும். அதுவரை மக்கள் புதிய வரியை கட்டத் தேவையில்லை. புதிய உறுப்பினர்கள் வருகை தந்த பின் சபையால் அது தீர்மானிக்கப்படும். எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிக வரி விதிக்கப்படமாட்டது. ஏனைய மாவட்டங்களைப் போல் தான் வரி விதிப்பு இருக்கும்.

எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வவுனியா நகசபையில் நிலையான வைப்பில் 18 கோடி உள்ளது. அந்த நிதியை பாவித்து திருநாவற்குளம், தாண்டிக்குளம் உள்ளிட்ட ஏனைய 10 வாட்டாரங்களின் வீதிகளும் புனரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பு செய்வோம். எமது அரசாங்கம் ஒரு போதும் மக்களுடைய தலையில் வரியை ஏற்ற மாட்டோம் எனத் தெரிவித்தார்.

வெயில் காலத்தில் சின்ன வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள் : ஏன் தெரியுமா?

வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். வெயில்காலத்தில் சின்ன வெங்காயத்தை உணவில் பயன் படுத்துவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்குமாம்.

வெங்காயம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது.

வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும்.

குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலக்கி அல்லது நெய்யில் வறுத்து கொடுக்கலாம். வெங்காயத்தில் உள்ள சல்பர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, மாரடைப்பை தடுக்கிறது.

இதன் அண்டிமைக்ரோபியல் தன்மை செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது. பைட்டோகெமிக்கல்கள் அல்சரை தடுக்க, கரையும் நார் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ளதாகும்.

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!!

நாட்டின் சில பகுதிகளில் பாரிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

யாழில் இருந்து சென்ற வாகனம் விபத்து : சிரேஷ்ட விரிவுரையாளரின் மனைவியும் உயிரிழப்பு!!

களனிப் பல்கலைக்கழகத்தின் (University of Kelaniya) உளவியல் பிரிவின் தலைவரான, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கயந்த குணேந்திரவும் அவரது சகோதரரும் திடீர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராசிரியரின் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்று மூன்று குழந்தைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் விபத்திற்கு உள்ளானது.

நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் அவர்கள் பயணித்த வேன் லொறியின் பின்புறத்தில் மோதியதில் 46 வயதான விரிவுரையாளரும் அவரது சகோதரர் உயிரிழந்தனர்.

அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேனின் ஓட்டுநராக இருந்த கலாநிதி கயந்தாவின் மைத்துனரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்ததோடு, அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முன்று குழந்தைகள் உட்பட அவரது உறவினரும் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழர் கடையில் நூதன மோசடி : நபர் தொடர்பில் எச்சரிக்கை!!

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் (Bern) மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் புத்தி பேதலித்தவர் போல இருக்கின்ற போதிலும் அங்குள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் பொருட்களை திருடியதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் புத்தி பேதலித்தவர்போல காட்டிக்கொள்வதால் அவர் திருடியபோது பிடித்து அறிவுரை கூறி வர்த்தகர் அனுப்பி வைத்துள்ளார். எனினும் குறித்த நபர் மீண்டும் இலங்கைத் தமிழரின் கடையில் தொடர்ந்து திருடியதால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெர்ன் (Bern) வர்த்தக்ர்கள் குறித்த நபர் தொடர்பில் அவதானமாயிருக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

O/L பரீட்சையில் தமிழ்மொழி பரீட்சைக்கு தோற்றிய 88 வயது சிங்கள பாட்டி!!

இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாட்டி க.பொ.த சாதாரணதர இரண்டாம் மொழி தமிழ் பரீட்சை தோற்றியுள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

நடிகர் மனோஜின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி!!

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று(25) மாலை மாரடைப்பால் காலமானார்.

குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜுக்குச் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பல்லரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மனோஜின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளதுடன் இன்று மாலை தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 48 வயதான நடிகரும் இயக்குனருமான மனோஜ் மறைவு திரையுலகிலும், இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்!!

காலியில் சதுப்பு நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய, படபொல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கரந்தெனிய மண்டகந்த பகுதியை சேர்ந்த தனுஷ்க குணவர்தன என்ற 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படபொல, கொண்டகல பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

எனினும் தனது மகன் இன்று வரை வீடு திருப்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தாயார் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் குறித்து படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் : பொலிஸ் நிலையத்தில் கணவனை புரட்டி எடுத்த வீராங்கனை!!

இந்தியாவின் அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ,பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவனை புரட்டி எடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

இது குறித்த காணொளியும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரியானா மாநிலம், ஹிகார் குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா. இவரது கணவர் கபடி வீரரான தீபக் ஹூடா.

இந்நிலையில் தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி ஸ்வீட்டி பூரா நீதிமன்றில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஹிகார் பொலிஸ் நிலையத்தில் கணவர் மீது முறைப்பாடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்து கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபோதும் ஸ்வீட்டி , விடாமல் அவரை அடித்து உதைத்தார். இதனைக் கண்டு திகைத்துப் போன பொலிஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.

ஸ்வீட்டி தாக்கியதில் கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் மனைவி , கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

21 வயது பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு : வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் இந்த கடத்தலை செய்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை சந்தேக நபர்கள் பெண்ணை கடத்துவதற்கு முன்பு அவரது கணவரை துரத்திச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி!!

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை – பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது வீதியை கடந்துள்ளார். இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை 8.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய பெண்!!

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த பெண்ணை கம்பஹா சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

வெயங்கொட பகுதியை சேர்ந்த அவர், பல்வேறு நபர்களிடமிருந்து 3 மில்லியன், 4 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பான், நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு எதிராக இதுவரை 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து 24 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

மயானத்தில் 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு : 42 வயது நபர் கைது!!

14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருமணமான 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுளந்தாவ தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் புத்தம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், ஹுளந்தாவ தெற்கில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், சிறுவன் வயல்களுக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு மயானத்தில் வைத்து கடுமையாக பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய பெற்றோருக்கு அந்த சிறுவன் தெரிவித்ததை அடுத்து, திருமணமானவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த மொனராகலை பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

கண்டி – அக்குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்!!

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(25) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 894,962 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,570 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 252,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது28,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 231,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,630 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 221,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 237,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 219,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.