லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவருக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் கணவன் தாக்கியதால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!

யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது, கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார்.

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

நள்ளிரவில் நடந்த பயங்கரம் : சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்!!

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் நேற்று இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மீல்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள், நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வேனில் வந்த ஆயுததாரிகள் விபத்தை ஏற்படுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு பக்க வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வேனை தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதீஷான் மற்றும் பசிந்து தாருக என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு!!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்துள்ளனர். குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (22.03) கைச்சாத்திட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்து உள்ளுராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் குறித்த தரப்பினர் களமிறங்கவுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு : துயரத்தில் குடும்பம்!!

யாழ். சேந்தாங்குளம் கடலில் (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் காங்கேசன்துறை வீதி, இணுவில் பிரதேசத்தை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மாலை (21) இளவாலை சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர்.

கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அதேவேளை குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளதாகவும், உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறும் அங்கு செல்லும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவியை வெட்டிகொன்ற கணவன் : அதிர்ச்சியின் உறவினர்கள்!!

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், கைது செய்யப்பட்டுளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் வீசப்பட்ட சடலத்தால் அதிர்ச்சி : சிசிடிவி கமராவில் பதிவான காட்சி!!

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருகில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் அந்த நபர் அதிகமாக மது அருந்தி மயக்கமடைந்ததாக தெரிவித்தனர்.

இருப்பினும், அவர் அந்த நேரத்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஒருவர் மூன்று சக்கர வண்டியை ஓட்டவும், மற்றவர் உடலை சாலையில் இழுத்துச் செல்லவும் செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பாளர்கள் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் பாரா மெடிக்கல் ஊழியர்கள் அந்த நபர் இறந்துவிட்டதாக உறுதி செய்த பிறகு உடலை எடுக்காமல் சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர் கடவதையைச் சேர்ந்த 56 வயது நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலை வீசியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் மூன்று சக்கர வண்டி மற்றும் அதன் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க வெள்ளம்பிட்டிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான நிலைமை நிலவக்கூடும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே நேற்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சமாந்த விஐயசேகர தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று 161வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஐயமுனி, வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குமார மற்றும், வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி,

உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியாவில் வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் – களத்தில் இறங்கிய அதிகாரிகள்!!

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 50 கட்டாக்காலி மாடுகள் நேற்று முன்தினம் இரவு பிடிக்கப்பட்டன. வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி (கட்டாக்காலி மாடு பிடித்தல் கட்டண விபரம் வருமாறு, பிடி கூலி 1000, தண்டப்பணம் 3000, நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் 1000) அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி ஆய்வு கூடம் பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைப்பு!!

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளார் பாடசாலைக்கு சென்று நிலமையை பார்வையிட்டிருந்த போதும் மாணவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுகப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைப்பு!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் நேற்று (21.03) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம். கல்வி அமைச்சினால் கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : இளைஞர் கைது!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 1231 வேட்பாளர்கள் களத்தில்!!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

இன்று மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வவுனியா மாநகரசபை

இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகரசபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி 11 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

அவற்றில் ஜனநாயக தேசியக் கூட்டணி, ஐக்கியதேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை

வெண்கல செட்டிகுளம் பிரதேசசபைக்கு 18 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்னர். அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தநிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச சபை

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக
09 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

அவற்றில், இரண்டு சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 9 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச சபை

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 07அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1231 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்ததன. அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை கையளித்திருக்கவில்லை.
இத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 129293 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். என்றார்.

இலங்கையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

எல்ல பகுதியில் அமைந்துள்ள லிட்டில் அடம்ஸ் ஸ்பீ்க்கை (Little Adam’s Peak) தரிசிக்கச் சென்ற 64 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) மாலை செங்குத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பணியாளர்கள் டிரோன் கமெராக்களின் உதவியுடன் உயிர்காக்கும் படையினர் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பெண் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.