வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட பெண் : விசாரணையில் அம்பலமான தகவல்!!

வெள்ளவத்தையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதிக்கு முன்பாக பெண் ஒருவர் கடத்தப்பட்டதைக் காட்டும் காணொளி காணொளி தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில், அந்தப் பெண் பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

கடத்தல் தொடர்பான ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடத்தல்காரர்கள் குறித்த பெண்ணிடம் பணம் உள்ளிட்ட பொருட்களை பெற்று, பின்னர் வெலிக்கடை பகுதியில் விட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் வாடகைக்கு எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. குற்றச் செயலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாய்க்காலுக்குள் பாய்ந்து கெப் வாகனம் விபத்து!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம்(பச்சநூர்) பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் (22.01) காலை இடம் பெற்றுள்ளது.இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தோர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்ணனை கொன்று தலைமறைவான தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்து தலைமறைவாகியுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தலைமறைவான சகோதரனை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதின்ம வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் தோட்ட பிரவுன்ஸ்வீக் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக திருமணமான 32 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்த நிலையில் , குடும்பஸ்தரின் வீட்டுக்கு, அவ்வப்போது சென்று வந்த நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

கிடைக்கபெற்ற தகவலையடுத்து குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம் : 20 பேரை தேடும் பொலிஸார்!!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து யாழ், நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் வரையில் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும்,

அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு அருச்சுனா எம்பி நாடாளுமன்றத்திற்கு பெரும் தலைவலி!!

இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும்.

ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாள்ர் கூறினார்.

இன்றைய அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நேற்று இரவு, போக்குவரத்து விதிகளை மீறி, வண்ணமயமான விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்ற ராமநாதன் அர்ச்சுனாவை, சோதனை செய்வதற்காக தடுத்து நிறுத்தியபோது, ​​போக்குவரத்து பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ராமநாதன் அர்ச்சுனா தகராறு செய்துள்ளார்.

போலீசார் கேட்டபோது , அவரது ஓட்டுநர் உரிமத்தை வழங்க மறுத்த அர்ச்சுனா,அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் தொலைபேசியில் அவை பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய அனுராதபுரம் காவல்துறை, தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 183 மற்றும் 344 மீறல் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தற்போதுள்ள சட்ட விதிகளின்படி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சந்தேக நபரைக் கைது செய்ய மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும். நாடாளுமன்றத்தில் அவரது நடத்தை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. எம்.பி. அர்ஜுனனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளும் உள்ளன. இது தொடர்பாக இன்று ஒரு நாடாளுமன்றக் குழு கூடியது.

அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை அமைக்கலாம். சிறப்புரிமைக் குழுக்களை அமைக்கலாம்.

ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

யாழில் கரை ஒதுங்கிய மற்றுமொறு மிதவை!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று (22.01.2025) காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட பகுதி கடற்பரப்பில் அண்மைக் காலமாக பல்வேறு மிதவைகளும் சிலைகளும் படகுகளும் கப்பல்கள் என பலவும் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, இன்று (22.01) வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் வீடு ஒன்றில் ஒளிந்திருந்த 30 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. 30 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் வீடு ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த தம்பதியினர் ருமேனியாவில் வேலைக்காக அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

சந்தேக நபரான தம்பதியினருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றத்தில் 30 பிடியாணைகளும், கணவருக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக 14 பிடியாணைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 55 வயதுடையவர் எனவும் அவரது மனைவி 48 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த பொலிஸாரிடம் சிக்கிய மோசடியாளர்!!

இலங்கையில் பேஸ்புக் கணக்கிற்கு மோசடியான முறையில் உள்நுழைந்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று நாட்டிற்கு வந்தபோது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தனது உறவினர் போல் காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து, மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து 700,000 ரூபாவை, தனது கணக்கிற்கு மாற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைத்தது.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை சோதனையிட்ட போது சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய, அவர் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டு, நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் மூன்றாம் பாலினத்திற்கு தடைபோட்ட டிரம்ப்!!

அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாகவும் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு (20) பதவியேற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார்.

இந் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நெதர்லாந்து காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் முடிந்த 5 ஆண்டுக் காதல்!!

தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது.

கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார்.

அப்போது ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்ற இளைஞரின் அறிமுக பிரேமலதாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாக பழகியுள்ளனர்.

பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறி 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரேமலதாவும், ரமோனும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.

அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த ஜோடியின் திருமணம் தமிழர் முறைப்படி நடந்தது.

மணமகனின் சார்பில் நெதர்லாந்தில் இருந்து பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் தமிழரின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து பங்கேற்றனர்.

தற்போது பிரேமலதா-ரமோன் தம்பதியின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போதையை கண்டித்ததால் விபரீதம் : பெற்ற தாயை குத்திக் கொலை செய்த மகன்!!

கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார்.

ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அடிக்கடி சுபைதாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக் சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் ஆஷிக்கின் போதை பழக்கம் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த ஆஷிக்கையும் சுபைதாவையும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் பிறகு ஆஷிக் முழுநேர போதைப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதனால், சுபைதா அவரை போதை தடுப்பு மையத்தில் இருமுறை சேர்த்தும் இருக்கிறார்.

ஆனால் ஒவ்வொருமுறையும் போதை தடுப்பு மையத்திலிருந்து வெளியே வந்த ஆஷிக் மீண்டும் போதை குழுவினருடன் இணைந்து போதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

அவரால் போதையை விடமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆஷிக் அவர் மீதே வெறுப்புக்கொள்ள ஆரம்பித்தார்.

தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கு காரணம் சுபைதா, என நினைத்த ஆஷிக் தாயின் மீது வெறுப்புற்று அவரை இருமுறை கொலை செய்யவும் முயற்சித்தார்.

இந்நிலையில் சுபைதாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே அவர் தனது சகோதரியான ஷகிலா வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார்.

இச்சம்பவம் நடந்த நாளில் ஆஷிக் போதையில் தன் தாயை கொலைசெய்ய நினைத்து பக்கத்து வீட்டில் தேங்காய் உரிக்க கத்தி வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டு, தனது சித்திவீட்டில் தங்கியிருந்த தாயை சரமாரியாக கழுத்தில் வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபைதா உயிரிழந்தார். சாவகாசமாய், ரத்தம் தோய்ந்த கத்தியையும் கைகளையும் வீட்டின் முற்றத்தில் உள்ள குழாயில் கழுவுகையில், அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் தப்பி ஓடப்பார்த்த ஆஷிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தென்னிலங்கையில் மகனின் வாயை கிழித்த தந்தை!!

நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால் தனது மகனின் வாயில் தாக்கியுள்ளார்.

அந்தக் கம்பி வாய்ப் பகுதியில் ஆழமாக ஊடுருவியதால் பாதிக்கப்பட்டவர், அதை அகற்ற முடியாமல், வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19) மாலை நடந்தது. அடியாவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சஜித் ரமேஷ் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய தந்தை, தாக்கப்பட்ட மகன், அவரது மனைவி மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

சம்பவம் நடந்த நாளில், மகன் வீட்டிற்கு வர தாமதமாகிவிட்டது என தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்தது, கோபமடைந்த தந்தை திடீரென தனது மகனின் வாயில் வீட்டில் இருந்த மீன்களை குத்தும் ஆயுதத்தால் தாக்கினார்.

இந்த வன்முறைத் தாக்குதலின் விளைவாக, திருசூலம் போன்ற வடிவிலான பல கூர்மையான கூர்முனைகள் அவரது வாயில் ஊடுருவின. வாயில் அந்த முனைகள் துளைத்த நிலையில், அதை அகற்ற முடியாமல், அப்படியே தங்கொட்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மாரவில அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த நேரத்தில், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர், அவரது நிலை மோசமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், தந்தை காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தங்கொட்டுவ காவல்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி இரவு உணவை சீக்கிரம் எடுத்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இங்கு பார்ப்போம்.

உங்கள் இரவு உணவை சீக்கிரம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இது இரவு முழுவதும் நிலையான குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.

இரவில் தாமதமாக சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளைத் தடுக்கிறது. முன்னதாக இரவு உணவை எடுத்து கொள்வதன் மூலம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். இது பயனுள்ள உடல் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு அவசியம்.

இரவில் தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக அதிக உணவை உட்கொள்வது பெரும்பாலும் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மறுபுறம், உடல் எடையை குறைக்க விரும்புவோர் முன்னதாகவே இரவு உணவை உட்கொள்வது நல்லது.

இரவு உணவை சீக்கிரம் எடுத்து கொள்வது செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இது மலச்சிக்கல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு குறைவதற்கு வழிவகுக்கும், இது மிகவும் வசதியான இரவு ஓய்வை ஊக்குவிக்கும்

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு!!

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.