உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!!

உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பொலிஸ் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் , ‘நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் மனு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில் சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு , நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகையின் நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், இராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என சிட்டிமல்லு மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லை, நோயால் பாதிப்பு; மகன், மகளை கொன்று தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

வருமானம் இல்லாததால் விரக்தி அடைந்த தம்பதி, மகன், மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்தவர் சந்திரசேகர்(44).

இவர் தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்தார். சந்திரசேகர் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த 6 மாதமாக வேலையின்றி வீட்டில் இருந்தார். இதனால் வருமானமின்றி குடும்ப தேவைக்கு பணமின்றி தவித்து வந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரின் இந்த முடிவுக்கு கவிதாவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த மகள் தா(15), மகன் விஸ்வன்(10) ஆகியோர் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர்.

இதில் மயக்கமடைந்த இருவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். இதை உறுதி செய்துகொண்ட சந்திரசேகரும் கவிதாவும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது அவர்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சடலங்களை மீட்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரசேகர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், நான் நீரிழிவு நோய், நரம்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். எங்கள் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை எதிர்கொண்டோம்.

எங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை. எங்களுக்கு வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகை விற்ற பணத்தில் படகு வாங்கி, 45 நாட்களில் 30 கோடி சம்பாதித்த நபர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நபர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் திகதி நிறைவடைந்தது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் பலரது வாழ்க்கை நிலை மாறியுள்ளது. அப்படி ஒருவரின் கதையை தான் பார்க்க போகிறோம். அரைல் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து மஹ்ரா. இவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக படகு தொழில் செய்து வருகிறது.

இந்நிலையில் கும்பமேளாவுக்காக தனது படகின் எண்ணிக்கையை இருமடங்காக மாற்ற வேண்டும் என்று பிந்து மஹ்ரா எண்ணினார்.

இதற்காக நகைகளை விற்று படகு வாங்க வேண்டுமா என்று முதலில் யோசித்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வரும் இடத்திற்கு இது அவசியம் என்று படகு வாங்கினர்.

அப்போது அவருடைய படகில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இது தான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இதன் மூலம் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருமானம் ஈட்டினார்.

இதுகுறித்து பிந்து மஹ்ராவின் தாயார் சுக்லாவதி தேவி கூறுகையில், ” எனது கணவர் இறந்த பிறகு எனது குடும்பம் பொருளாதார சவால்களை சந்தித்தது. இப்போது நாங்கள் இந்த வெற்றியால் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறோம்” என்றார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் இது குறித்து பேசுகையில் பிந்துவின் கதை தேசிய அளவில் புகழ்பெற்றது.

யூடியூப் பார்த்து டயட் : 6 மாதங்களாக உணவை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த 6 மாதங்களாக Youtube வீடியோக்களை பார்த்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை(டயட்) பின்பற்றி வந்துள்ளார். உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு, நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

இதனால் அவர் உடல் எடை வெகுவாக குறைந்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முறையாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியதோடு, அவருக்கு மனநல ஆதரவு தேவை என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவரது பெற்றோர் உணவு வழங்கிய போது அதை ஏற்க மறுத்து வெந்நீரை மட்டும் அருந்தியுள்ளார். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 2 மாதத்திற்கு முன்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததால், தலசேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனைக்கு வந்த போது, அவர் 24 கிலோவிற்கு குறைவான உடல் எடையுடனே இருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த இளம்பெண், அனோரெக்ஸியா நெர்வோசா(anorexia nervosa) என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடை வழக்கமான அளவில் இருந்தால் கூட, அதிக உடல் எடையுடன் இருப்பதாக நினைத்து, அதை குறைக்க தீவிர முயற்சி செய்வார்கள்.

ஒரு கட்டத்தில், இவர்களுக்கு பசி என்ற இயற்கையான உணர்வே மறைந்து விடும். மேற்கத்திய நாடுகளில் இருந்த இந்த நோய், தற்போது இந்தியாவிலும் அரிதாக காணப்படுகிறது.

யாழ்பாணத்தைச் சேர்ந்த 74 வயது நபர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சைக்கிளோட்டி சாதனை!!

கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி யாழ்ப்பாணம் புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்தியசாலைக்கு (St.Luke’s Methodist Mission – hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை திரட்டுவதற்காக இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற செல்வத்தம்பி குலராசா பருத்தித்துறை – புலோலி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.

இவரது துவிச்சக்கரவண்டி சவாரியில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் உட்பட 70 துவிச்சக்கரவண்டி செலுத்துநர்கள் பங்குபற்றியிருந்தனர். மேலும் இந்த சாதனை மூலம் 1,30,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய் : மகன், மகள் மற்றும் மருமகள் கைது!!

மொனராகலையில் வீடொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை!!

தென்னிலங்கையில் மாணவர்களை தாக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவர்களை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டும் அவர் வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

யோஷித ஹெட்டியாராச்சி என்ற தனியார் வகுப்பு ஆசிரியர், வகுப்பின் போது மாணவர்களை தாக்கும் விதமும், மாணவி ஒருவரை வைத்து மற்றொரு மாணவரை தாக்கும் படி அறிவுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இது தொடர்பாக நேற்று (11.03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கணவனை விவாகரத்து செய்யும் ஹிருணிகா பிரேமசந்திர!!

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது ,

நீண்ட சிந்தனை மற்றும் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஹிரனும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் எடுக்கப்பட்டது.

நாங்கள் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். நாங்கள் ஒன்றாக எங்கள் கனவுகளின் வாழ்க்கையை உருவாக்கினோம். கூட்டாளர்களாக நாங்கள் அனுபவித்த அன்பிற்காக உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

நாங்கள் திருமணம் செய்தபோது என்றென்றும் ஒன்றாக இருப்போம் என உறுதியளிக்கவில்லை, ஏனெனில் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை எடுக்க முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் எங்கள் சிறந்ததை வழங்க உறுதியளித்தோம், பல மகிழ்ச்சியான வருடங்களாக நாங்கள் அதைத்தான் செய்தோம் என்றும் ஹிருணிகா பிரேமசந்திரா பதிவிட்டுள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்துள்ள இளம் குடும்பஸ்தர்!!

யாழில்(Jaffna) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் திகதி கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று, அந்த வீட்டில் உள்ள ஆட்டு கொட்டகையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலத்தை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கொண்டு சென்றனர்.

இன்றையதினம் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரவில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாள்வெட்டு : விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள்!!

யாழ். கொக்குவில் ஞானபண்டிதார் பாடசாலைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூவரை கைதுசெய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் ஹரோயின் போதைபொருள் கைபெற்றபட்டுள்ளது.

மேலும் இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள் மீட்க்கப்பட்டதுடன் மேலதீக விசாரனையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12.03.2025) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம், அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று காலை கல்நேவ பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கைப் பெண் : வெளியான பிண்ணனி!!

புதிய இணைப்பு

கனடாவில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

குறித்த இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 வயது இலங்கைப் பெண் ஒருவரும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் 26 வயது ஆண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

கனேடிய செய்திகளின்படி, கனடாவின் மார்க்காமில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரட்டை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 20 வயதான நிலாக்ஷி ரகுதாஸ் என்ற இலங்கையை சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, அவர் சிகிச்சையளிக்க கொண்டு செல்லப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார்.

பலமுறை துப்பாக்கிச்சூடு

இத்தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள், கருப்பு, நான்கு கதவுகள் கொண்ட வாகனத்தில் வீட்டை விட்டு வேகமாக ஓடி வருவதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், “இது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடா என்று விசாரிக்கப்படுகிறது. மேலும் இந்த வீடு கடந்த காலங்களில் பலமுறை குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று சம்பவ இடத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை பொலிஸார் அந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மூன்று முறை அழைப்புக்கள் வந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த சம்பவங்களில் பல சந்தேக நபர்கள் தூரத்திலிருந்து வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டு பெப்ரவரியில் அந்த வீட்டில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதத்திலும் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு சிறிது நேரத்திலேயே, பொலிஸார் குடியிருப்பாளர்களுடன் கூட்டத்தை நடத்தி எச்சரித்துள்ள அதேவேளை, அந்த சம்பவங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கனேடிய கொலை விவகார பிரிவு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 20 வயதான பெண் ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன், வீட்டில் வளர்க்கப்பட்ட நாயொன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த 26 வயதான ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் சுட்டுக்கொலை

குழுவொன்றினால் திட்டமிட்ட வகையில் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் மீது பாலியல் அத்துமீறல் : வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்ற நிலையில், அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடதக்கது. சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று (11) கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

முகநூல் ஊடாக 450 லட்சம் ரூபாய் மோசடி : பெண் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!!

சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் மூலம் கவர்ச்சிகரமான வட்டி தருவதாக விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி,

சுமார் 450 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை கைது செய்து சந்தேக நபர் , ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்திய பின்னர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பதுளை கண்தேகெதர பகுதியைச் சேர்ந்த திலினி ஷாமீன் சோக்மன் (31) என்ற மூன்று குழந்தைகளின் தாயாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல் 5 லட்சம் ரூபாய் பெற்று, அந்த பணத்திற்கு வட்டியோ அல்லது வாங்கிய பணத்தையோ திருப்பித் தராதது தொடர்பாக , பணம் கொடுத்த பெண் ஹட்டன் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், பெண்ணை ஹட்டன் காவல் துறையினர் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆனால், அவர் கையெழுத்திடாமல் ஐந்து மாதங்களாக ஏமாற்றியதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர், தனது தோழியைச் சந்திக்க ரயில் மூலம் , 09ம் திகதி மாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹட்டன், கம்பொல, வெலிகட, வெல்லவாய, தம்புள்ளை, கண்டி, புத்தல உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இதேபோல் ஏமாற்றி பணம் பெற்றதாகவும், பணம் கொடுத்தவர்கள் தொலைபேசி மூலம் ஹட்டன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற பணத்திற்கு நம்பிக்கையை உறுதி செய்வதற்காக சில மாதங்கள் உறுதியளித்த வட்டியையும் செலுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாறு மோசடி செய்த பணத்தை வைத்து நகை வியாபாரம் செய்வதற்காக சந்தேக நபர் இந்தியா சென்றதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா துப்பாக்கி சூட்டில் யாழ் யுவதி உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

கடந்த 7 ஆம் திகதி கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமயனுக்கு வைத்த இலக்கிலேயே தங்கை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொலை சம்பவத்திற்கான காரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சோலஸ் ரோட் பகுதியின் கேஸ்டில்மோர் அவென்யூ மற்றும் ஸ்வான் பார்க் ரோட் அருகே இந்த வீடு அமைந்துள்ளது.

பொலிஸார் சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் , சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயையும் கண்டுள்ளனர்.

இதனையடுத்து உடனே இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் 20 வயதான மார்க்கம் பகுதியைச் சேர்ந்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸார் கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தாலும், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இந்த வீடு பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றவாளிகள் திட்டமிட்டு இந்த வீட்டிற்கு வந்து இந்த கொடூரச் செயல்களைச் செய்துள்ளனர். இதுவே ஒரு இலக்கு தாக்குதல் என்பதற்கு இது சான்றாகும், என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் ஆனது கனடாவாழ் தமிழர்களிடையே பேரதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.