யாழில் பிரபல விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

33 வயதான உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான விளையாட்டு வீரா் என தெரிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் இளைஞனின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் : நவீன வரலாற்றில் நடக்காத பெரிய நிகழ்வுகள்!!

உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு,

விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர்.

இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர்.

பாபா வங்கா ஒரு பல்கேரிய தீர்க்கத்தரிசி ஆவார், அவர் 1996 இல் இறந்தார். அவர் பல்கேரியாவின் நோஸ்திரதாம் என்றும் அழைக்கப்படுகிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதம் துல்லியமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

2004 இல் இந்தோனேசியா சுனாமி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற சில வரலாற்றுத் தருணங்களை அவர் முன்னறிவித்தார்.

அது தவிர, 2022 இல் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணித்தார். அந்த ஆண்டு ஜூலைக்கு முன்பு அவுஸ்திரேலியா மூன்று முறை வெள்ளத்தில் மூழ்கியது.

வடக்கு அரைக்கோளத்தில், முக்கிய நகரங்கள் கடுமையான வறட்சியை சந்திக்கும் என்றார்.

இது இங்கிலாந்து, இத்தாலி மற்றும் போர்ச்சுகலில் காணப்பட்டது. இந்த நிலையில், பாபா வாங்காவின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கிறது.

மனிதகுலத்தின் வீழ்ச்சி 2025 இல் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்கும் என்று அவர் கூறினார்.

போர் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், ரஷ்யா உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் கணித்தார். எனினும், 2023 இல் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அணு உயிரி ஆயுதங்களும் சூரிய புயலும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தது. 2025 இல் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு என்னவென்றால், பூமி வேற்று கிரக உயிரினங்களை சந்திக்கும்.

டெலிபதி உண்மையாக மாறக்கூடும். அது தவிர, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் மனித உறுப்பை வெற்றிகரமாக வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 2028 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகம் மீதான விண்வெளி ஆய்வு தொடங்கும், அதனால் உலகம் ஒரு புதிய வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தவிர பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், அமெரிக்க மேற்கு கடற்கரையில் நிலநடுக்கங்கள் மற்றும் செயலற்ற எரிமலைகள் வெடிப்பது உட்பட தொடர்ச்சியான பேரழிவு இயற்கை பேரழிவுகளையும் முன்னறிவிக்கிறது

450 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போதிலும், நோஸ்ட்ராடாமஸ் தொடர்ந்து தீர்க்கதரிசனமான விடயங்களை கூறியுள்ளார்.

1566 இல் அவர் இறப்பதற்கு முன், அவர் 94 கவிதை அறிக்கைகளின் தொகுப்பை எழுதினார் மற்றும் 1555 ஆம் ஆண்டு தனது புத்தகமான Les Prophéties ஐ வெளியிட்டார்.

அவர், தனது நண்பரும் முன்னாள் மன்னருமான இரண்டாம் ஹென்றி 40 வயதில் ‘இளம் சிங்கத்தின்’ கைகளில் இறந்துவிடுவார் என்று துல்லியமாக கணித்தார்.

அது மட்டுமல்லாமல், 1930 ஆம் ஆண்டு ஹிட்லரின் அதிகாரத்திற்கு எழுச்சி மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்படுவதையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டு கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்க கூடும் என்றும், பிரித்தானியா மோதலால் அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2025 இல் அவர் கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய கொள்ளைநோய் திரும்பும் என்றும் கணித்துள்ளார்.

ஸ்தாபிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு 2025 ஆம் ஆண்டு குறையும்’ என்றும், ‘புதிய உலக வல்லரசுகளின் எழுச்சியுடன்’ படைவீரர்கள் போர்க்களத்தால் ‘சோர்வடைந்து’ போவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள்!!

வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் கடந்த 01.01.2022 அன்று பிக்கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வராசா றஜீபன் (வயது 37) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரின் மூன்றாவது வருட நினைவு தினத்தினையடுத்து அவரின் நண்பர்கள் விபத்து இடம்பெற்ற தாண்டிக்குளம் பகுதியில் அன்னாரின் உருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியமையுடன் 50 பேருக்கு மதிய நேர உணவுப் பார்சலும் வழங்கி வைத்திருந்தனர்.

நினைவஞ்சலி நிகழ்வில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய் என்ற கவிதையுடன் நண்பர்களின் உணர்வு அவரின் பிரிவினை உணர்த்தி நின்றமை வீதியில் சென்றவர்களின் மனதை நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி!!

நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இலங்கைப் பிரஜைகள் இருவர் கைதாகியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றைய தினம்(31) குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.

குறித்த நபர்களில் ஒருவர் மட்டக்களப்பை (Batticaloa) வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதுடையவர் .

நேபாளத்தின் காத்மாண்டுக்கு செல்லவிருந்த இந்தியன் எயார்லைன்ஸின் AI-282 விமானத்தில் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் அனைத்து விமான அனுமதிகளையும் முடித்துவிட்டு, குடியேற்ற விஷயங்களுக்காக குடிவரவு அதிகாரிகளிடம் வந்தபோது, ​​​ அவரது சந்தேகத்திற்குரிய நடத்தையை கவனித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பின்னர், அவரது பயணப்பொதிகளை ஆய்வு செய்த போது, ​​அவரது சுயவிபரங்கள் உள்ளிட்ட புகைப்படத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலங்கைக் கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிட நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று தயாரிக்கப்பட்ட போலி இலங்கை கடவுச்சீட்டை தன்னுடன் வைத்திருந்த நபர் ஒருவர் அனைத்து விமான நிலைய அனுமதிகளையும் முடித்துவிட்டு இந்திய விமானத்தில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்!!

நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2025) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல் வவுனியா வாழ்மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

வழிபாடுகளில் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையில் சீனர்கள் நிதி மோசடி : வெளிநாட்டவர்களுக்கே அதிக பாதிப்பு!!

இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலக்குவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என்பதுதெரியவந்துள்ளது. இந்த மோசடியில் இலங்கை பிரஜைகள் குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

2024 ஒக்டோபர் முதல் இணையவழி நிதிமோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 200க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது பெருமளவு கையடக்க தொலைபேசிகள்மடிக்கணிணிகள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசா முடிவடைந்ததும் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையிலிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உன்னிப்பாக அவதானித்துவருவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதரகம் கைதுசெய்யப்பட்ட தனது பிரஜைகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

தொலைதொடர்பு உட்கட்டமைப்பில் இலங்கையில் காணப்படும் சாதகதன்மை, புவியியல் ரீதியிலான நெருக்கம் இணையவழி மோசடி

தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மை போன்றவற்றின் காரணமாக சில இலத்திரனியல் குற்றக்கும்பல்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளன என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சீனாவை சேர்ந்தவ இவர்கள் இலங்கையிலிருந்தபடி சீனாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்கள் நாட்டவர்களை இலக்குவைக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்தகாலன்களிலும் சீனர்கள் பலர் இணையமோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் பல்ர் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் இம்முறை இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த மாணவி நேற்றுமுன்தினம் (30.12.2024) பரீட்சைக்கு தோற்றி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று இடம்பெற்ற பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் எனவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டடுள்ளர்.  இதனைடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உறுதியுரையுடன் ஆரம்பம்!!

தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திடம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தலைவர்களும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரை அரச உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கில் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகுகள்!!

மியன்மார் நாட்டு அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் இரண்டு படகுகள் இலங்கையின் இரு வேறு பகுதிகளில் நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளன.முல்லைத்தீவில் அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது.

அந்தப் படகுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள் சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டன என்று உயிர் தப்பிய மியன்மார் அகதிகள் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட இரண்டு படகுகள் எனக் கருதப்படும் படகுகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆட்கள் எவரும் இன்றி கரை ஒதுங்கியுள்ளன.

இந்நிலையில், கரை ஒதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் இரண்டு படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள் தானா அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

 

வவுனியாவில் பேருந்து மோதி 7 வயதுச் சிறுவன் மரணம்!!

வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது,நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம், படிவம் 2 பகுதியில் பேருந்து சாரதி பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.

அப்போது, சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

இதில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதன்படி, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

85 வயது மூதாட்டியிடம் கொள்ளையிட்டவரை விரட்டிப் பிடித்த பொலிஸ் அதிகாரி!!

எண்பத்து ஐந்து வயதான பாட்டியொருவரிடம் கொள்ளையிட்டவரை பொலிஸ் அதிகாரியொருவர் துரத்திப் பிடித்த சம்பவமொன்று பாணந்துறையில்(Panadura) நடைபெற்றுள்ளது.

பாணந்துறை அருகே எகொட உயன பிரதேசத்தைச் சேர்ந்த எண்பத்தி ஐந்து வயதான பாட்டியொருவர் பாணந்துறை நகரின் நடைபாதையில் வர்த்தகம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் அவரது கையில் இருந்த பணப்பையை நேற்றைய தினம் திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அதனைக் கண்ட பாணந்துறை பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர், மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று திருடனை பிடித்து கட்டி இழுத்து வந்துள்ளார்.

அத்துடன் பாட்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட பணப்பையையும் மீட்டுக் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட திருட்டுப் பேர்வழி புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் என்றும் அவர் வாகன திருத்துனராக தொழில் புரிவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வருட இறுதியில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31.12) சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனடிப்படையில், இன்று (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாகவும் அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ATM அட்டையுடன் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தனியார் வகுப்புக்கு வந்த மாணவனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டு, 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு தனியார் வகுப்புக்கு வந்த மாணவனிடம் இருந்தே, கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனியார் வகுப்புகள் முடிந்ததும் அநுராதபுரம் புதிய நகரில் பஸ்ஸூக்காக காத்திருந்த 18 வயதுடைய மாணவன் அருகில் காரில் வந்த நின்றுள்ளது.

அதில் இருந்த நான்கு பேர் கத்தியைக் காட்டி மாணவனை, காருக்குள் பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த 2000 ரூபாய் பணத்தை அபகரித்ததுடன், வங்கி அட்டையையும் கைப்பற்றினர்.

அதன்பின்னர், வங்கி தன்னியக்க இயந்திரம் இருக்கும் இடத்துக்கு சென்றவர்கள், அந்த மாணவனை அச்சுறுத்தி,

இரகசிய இலக்கத்தை கேட்டு, வங்கி அட்டையில் இருந்து 65000 ரூபாவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு, மாணவனை சிறிது தூரத்தில் இறக்கிவிட்டுவிட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விஜய புர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், ஹிடோகம பஹல் தருவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் படகு!!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு ப்டகே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரை தட்டியதை அடுத்து அதனை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அது தொடர்பிலான விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் உள்ள கணவனை காண சென்று மாயமான மனைவி – குழந்தை : பொலிஸார் தீவிர விசாரணை!!

கொழும்பில் வேலை செய்யும் தனது கணவனை காண சென்று காணாமல் போன மனைவி மற்றும் குழந்தை இன்றுவரை கிடைக்கவில்லை என குறித்த கணவன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27ஆம் திகதி கொழும்பில் தொழில் செய்யும் தன் கணவனை சந்திப்பதற்காக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தன் குழந்தையுடன் பேருந்தில் அதிகவேக சாலை ஊடாக கடவத்தை வரை வந்துள்ளார்.

அதுவரை தன் கணவரோடு தொடர்பில் இருந்த மனைவியின் தொலைபேசி கடவத்தை வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தி கணவன் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறியதோடு தொடர்புகள் நிறுத்தப்படுகிறது.

இதனையடுத்து, குழந்தையும், தாயும் 28ஆம் திகதி வரை கணவன் தங்கியிருந்த இடத்திற்கு வருகை தராததையடுத்து தொடர்ந்து அவர்களை தேடத் தொடங்கிய நிலையில் இன்று வரை (30-12-2024) குழந்தையோ, தாயோ கிடைக்கப்பெறவில்லை என இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கணவன் வெளிநாட்டிலிருக்கும்போது குறித்த பெண்ணுக்கு பிற நபரொருவருடன் ஏற்பட்ட தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறும் வருகின்றன.