வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது!!

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேணி, ஒமந்தை, கனகராயன்குளம் என வவுனியா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் கத்திமுனைகளில் வீடுகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடுவது என 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையில்,

வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபர் வீட்டில் தங்குவது இல்லை என்பதுடன் வனப்பகுதிகளிலேயே தங்குவது வழமையாக கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரின் விசேட நடவடிக்கையில் கீழ் 43வயதுடைய குறித்த நபரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் கைது செய்துள்ளமையுடன் அவருக்கு உதவியாக செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான நபருக்கு எதிராக நீதிமன்றில் நான்கு திறந்த பிடியாணை மற்றும் ஆறு திகதியிடப்பட்ட பிடியாணை என்பன இருப்பதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்படுகின்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!!

திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும்,

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காலை 10 மணிக்கு மேல் சட்டை அணியாமலும், பச்சை நிற வேட்டி அணிந்தும் அண்ணாமலை வந்தார்.

அப்போது, தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த பாஜக நிர்வாகிகள் வெற்றி வேல், வீர வேல் என்று முழக்கமிட்டனர்.

மேலும், பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்து அண்ணாமலையை கட்டியணைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்ணின் உடலில் ஊசியை செலுத்தி நடத்தப்பட்ட கொலை : சந்தேகநபர் கைது!!

70 வயதுடைய பெண் ஒருவரை விச ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அடையாளம் தெரியாத ஒருவர், குறித்த பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து சந்தித்ததுடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஊசியை பெண்ணின் உடலில் செலுத்தியுள்ளார். இதன்பின்னர் அவர் பகுதியை விட்டு உந்துருளியில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது அண்டை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்து, மாத்தறையில் உள்ள பதீகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,

பின்னர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து குறித்த கொலை தொடர்பாக திக்வெல்ல பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதேநேரம் இது தற்போது நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் காணிப்பிரச்சினையுடன் தொடர்புடைய கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸார், அடையாளம் தெரியாத ஆணின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அந்தப் பெண்ணைச் சுற்றி இடம்பெற்ற சம்பவங்களை கண்டறிந்துள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம் குறித்து வெளியான தகவல்!!

புதிய இணைப்பு : வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார்.

இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆளில்லா விமானம் இலங்கையின் முப்படைகளிற்கு சொந்தமானதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஆளில்லா விமானம் பயிற்சியின் போது தவறுதலாக இலங்கையின் கடற்பரப்பில் தரையிறங்கியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானத்தில் வெடிபொருட்கள் இருக்கவில்லை, இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022இல் இவ்வாறான ஆளில்லா விமானமொன்று ஓடிசாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த ஆளில்லா விமானமொன்று சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்றிரவு கடலுக்குச் சென்றிருந்த நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்றைக் கண்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த ட்ரோன் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ட்ரோன் ரக விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளன.

யாழ் மக்களை அச்சுறுத்தும் எலிக்காச்சல்!!

யாழ்ப்பாணத்தை பாதித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக வடக்கில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே நாளில் மீண்டும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சலை ஒழிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும் , எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அதேவேளை , வடக்கு பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலால் ஒன்பது நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், 234 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு வருகை தந்துள்ள இரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகள்!!

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை(Sri lanka) வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தம்பதியொன்றே சுற்றுலாப் பயணிகளின் இரண்டு மில்லியன் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரியில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இந்த ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்த்தெடுப்பதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பலனாக தற்போதைக்கு குறித்த எண்ணிக்கையை இலங்கை எட்டியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டின் பின்னர் வீழ்ச்சியுற்ற சுற்றுலாத்துறையானது கடந்த ஆண்டில் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கி, இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது.

அதன் பிரகாரம் இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மாத்திரம் 161,383 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 35,131 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 12,822 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,998 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடலில் நீராடச் சென்ற தந்தை – மகன் சடலமாக மீட்பு!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன் கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் சடலங்களாக ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் சங்கமன்;கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன் மற்றும் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் சம்பவ தினமான புதன்கிழமை (25) மாலையில் நத்தார் பண்டிகையையிட்டு கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடலில் நீராடிய இருவர், கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை உறவினர்கள், கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் நேற்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வடிவில் அரிய இயற்கை நீலக்கல்!!

இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை , இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

இந்த நீல மாணிக்கத்தை மாணிக்கக் கற்கள் சேகரிப்பவர் ஒருவரிடமிருந்து வாங்கியதாகத் அவர் தெரிவித்தார்.

இந்த நீல மாணிக்கத்தை நீங்கள் ஒரே நேரத்தில் பார்த்தால், இலங்கை மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டின் நிலப்பரப்பு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காணலாம். மன்னாரின் நிலையும் அவ்வாறே தோன்றுகிறது.

அதே போல் திருகோணமலை, இலங்கையின் நான்கு திசைகளும் அப்படித்தான் தோன்றும். இந்த இரத்தினக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, 2024-12-24 அன்று இரத்தினக்கல் அடையாள சோதனை அறிக்கை பெறப்பட்டது.

இந்த இரத்தினக்கல் இயற்கையான கொருண்டம் இனத்தைச் சேர்ந்தது. 5.37 கரட் எடையுள்ள நீலம். என தர்மசேகர மற்றும் ஜானக ஹேமச்சந்திர ஆகியோர் கையெழுத்திட்ட அடையாளச் சான்றிதழில் காணப்பட்டது

 

யாழில் காய்ச்சலால் குழந்தையும் குடும்பஸ்தரும் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மூன்று மாத குழந்தை ஒன்றும், குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று (26) உயிரிழந்துள்ளது.

பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது.

அதற்கு சிகிச்சை பெறுபவதற்காக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக குழந்தை 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது. இதேவேளை, நான்கு நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் யாழில் எலிக்காச்சல் தொற்று அதுகரித்துள்ள நிலையில், காச்சல் காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வந்த பிரபல தென்னிந்திய நடிகை நளினி!!

பிரபல தென்னிந்திய நடிகையான நளினி இலங்கை வந்துள்ளார். இவர் ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இலங்கை வந்துள்ளார்.

இதன்போது நடிகை நளினி ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இறால் பண்ணையில் குடும்பஸ்தர் கொலை : நடந்தது என்ன?

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி கிராம இறால் பண்ணையில் வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இறால் பண்ணையில் வேலை செய்து வந்த உயிரிழந்த நபர், மதுபோதையில் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கும், அங்கு தொழில் புரிந்துவந்த மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் இருந்த குடும்பஸ்தரை அங்கு இருந்த மண்வெட்டி ஒன்றினால் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், பல இடங்களில் வெட்டியும் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபர் யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 37 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான ராஜேந்திரன் ராஜசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பதில் நீதிவான் வஸீம் ராஜா, சம்பவ இடத்தில் நீதவான் விசாரணையை நடத்தியதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், இந்த கொலை சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும் , புத்தளம் பொலிஸ் தடவியல் பிரிவினரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இருந்து சென்ற பேருந்தில் கழன்று ஓடிய முன்சில்லு : தவிர்க்கப்பட்ட பேரனர்த்தம்!!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற பஸ்ஸே, இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.

இ.போ.ச பஸ்ஸின் சாரதி பக்க சில்லின் அச்சு உடைந்து, சில்லு தீப்பிடித்து சென்றதில், அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது பஸ்ஸின் சில்லு மோத, பட்டா சாரதி நிலைகுலைந்து, பட்டாவும் விபத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் இ.போ.ச பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டன.

யாழ் பிரபல ஆலயமொன்றில் நபரின் மோசமான செயல் : சமூக ஆர்வலர்கள் விசனம்!!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல முருகன் ஆலயம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததவரை ஈவிரக்கமின்றி நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பிரபல முருகன் கோவிலில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. ஆலய கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த மேசன் ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் அந்த தொலிலாளி மீது மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த தொழிலாளி தாக்கப்படுவதை அங்குள்ளவர்கள் வேடிக்கை பார்த்து காணொளி எடுத்துகொண்டிருந்தார்களே தவிர யாரும் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.

வவுனியாவில் 1387 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!!

வவுனியாவில் அண்மையில் ஏற்ப்பட்ட மழைவெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 3529.25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அழிவடைந்த நெற்காணிகள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள காப்புறுதிச்சபையின் உத்தியோகத்தர்களால் மதீப்பீடு செய்யும் பணிகள் அண்மையநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மதிப்பீட்டின் அடிப்படையில் 1387.5 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக விசேட வழிபாடும் அஞ்சலியும்!!

வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று (26.12.2024) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வரர் ஆலயதர்மகர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இறந்தவர்களிற்கு ஆத்ம சாந்தி வேண்டி நெய் தீபம் ஏற்றப்பட்டு மோட்ச வழிபாடும் இடம்பெற்றது.

இதில் அந்தணச் சிவாச்சாரியார்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர், ஆலய பகத்தர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மோட்ச வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2024) இடம்பெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து,கிறிஸ்தவ, பௌத்த மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் சுனாமி பேரவலம் தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் அரச அதிபரின் கருத்துரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.