இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(23) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 771,253 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,210ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 217,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 24,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 199,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 23,810 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 193,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் கரையொதுங்கிய மர்மப்படகு!!

யாழ் வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் மர்மபடகு ஒன்று இன்று(23) காலை கரையொதுங்கியுள்ளது.  OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

படகு தொடர்பில் அதிகரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிசார் படகை பார்வையிட்டதுடன் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து கரையொதுங்கிய இலங்கை படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளயிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

செல்ஃபி மோகத்தால் தாயும் மகளும் உயிரிழப்பு : மோதித்தள்ளிய யாழ் புகையிரதம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற புகையிரத்தில் மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளுமே இவ்வாறு யாழில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர்.

செல்ஃபி எடுக்கும்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்த போதும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழர் விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறவுகள்!!

பிரான்ஸில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் -லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர், குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (20) குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரது விபரீத முடிவுக்கான காரணம் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகள் அவதி!!

வவுனியாவில் இன்றையதினம் கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவுவவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்றைய தினம்(23.10) சற்று அதிக பனி மூட்டமாகக் காணப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் முன் விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணித்துள்ளன.

 

கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதனை வரவேற்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகள் அலங்கார விளக்குகளால் வர்ணமயமாகியுள்ளன.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவா, ஹலவத்தை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்கள் அழகிய ஒளி வடிவங்களாலும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 25 மற்றும் 26

அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 09 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், , தாமரை கோபுரம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 ஆகிய இரு தினங்களிலும் காலை 09 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 01 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல தயாரான மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!!

குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

தனது மனைவி வெளிநாட்டிற்கு செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மாய்த்துள்ளார். உயிரிழந்தவருக்கு 7 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளை உள்ள நிலையில், மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராகியுள்ளது.

இதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இது தொடர்பில் தம்பகல்ல பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து 25 மீற்றர் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் இளைய சகோதரன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக அவரது மூத்த சகோதரர் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் விசாரணையில், உயிரிழந்த இடத்தில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் பூச்சிக்கொல்லி மருந்து போத்தலை பொலிஸார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கைகுழந்தைகளை பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம் : மௌனம் காக்கும் அதிகாரிகள்!!

வவுனியா நகரில் வெளிநாட்டவர்களையும் பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும், ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டு தொடர்ந்து காணப்படுகின்றது.

குறித்த பெண்கள் ஒரு குழுவாகவே வெளியிடங்களில் இருந்து வருகைதந்து கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றனர். அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும் பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர். இதில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊதுபத்தி விற்பனை செய்யும் போது ஊதுபத்தியினை பார்த்துவிட்டு வாங்குவதற்கு தவரும் பட்சத்தில் பொது மக்களையும் வெளிநாட்டவர்களையும் தகாத வார்த்தைகளால் அவதுாறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நகரசபை மற்றும் பொலிஸார், சிறுவர் பாதுகாப்புப் பிரிவு, மாவட்ட செயலகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும் தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இனி வரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா ஒமந்தையில் விசேட நடவடிக்கை : ஒரு பெண் உட்பட ஐவர் கைது!!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திறந்த பிடியானையின் கீழ் ஒருவரையும் திகதியிடப்பட்ட பிடியானையின் கீழ் நால்வர் என ஜவரை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன்,

அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!

வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வவுனியா – சூடுவெந்தபுலவு பகுதியை சேர்ந்த , 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (21.12.2024) இடம்பெற்றுள்ளது. மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம், சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற பெண் ஒருவர் அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப் பகுதியில் இறங்கிய போதே,

முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!!

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 – 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அவர்கள் சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நாடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்திருந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 15000 மில்லி லீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ரூபா ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை பல இளைஞர்கள் குறித்த பகுதியில் கசிப்பை அருந்திவிட்டு அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் அப்பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களிற்கு நீராடச் சென்று உயிரிழந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் என்ற சிறுமி.

விசாரணையின் போது சித்தி அனீஷா குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி தான் அனீஷா.

படுக்கையில் அசையாமல் படுத்திருந்ததை பார்த்த அவரது தந்தை, சந்தேகித்துள்ளார். அதன்பின்னரே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகின்றனர்.

உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஐஸ்கட்டி அருகே புகைப்படம் எடுத்த இளைஞன் பரிதாபமாக மரணம்!!

ஐஸ்கட்டி அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த நபர் ஆற்றில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான், பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (28). இவர் ஜவுளிக்கடை அதிபராக உள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.

அப்போது அங்குள்ள பனிமலையின் மீது ஏறி சாகசம் மேற்கொண்டுள்ளார். ஐஸ்கட்டியாக உறைந்து காணப்பட்ட சந்திரா ஆற்றங்கரையில் நின்று நிகில் குமார் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், நிகில் குமாரின் எடையை தாங்க முடியாமல் அவர் நின்று கொண்டிருந்த ஐஸ்கட்டி நொறுங்கி விழுந்தது. பின்னர் அவர் நண்பர்களின் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நிகில் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கடுமையான குளிர் காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர், சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நிகில் குமார் தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் : கடவுளுக்கே சொந்தம் என கொடுக்க மறுப்பு!!

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர், சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதற்கு, கோயில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று, கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதனால், செல்போனை பெறுவதற்கு தினேஷ் வந்துள்ளார். ஆனால் அவர்கள், கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று கூறி ஐபோனை தர மறுத்துவிட்டனர்.

செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

பின்னர், ஏழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டு செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு தினேஷ் வந்துள்ளார். இதையடுத்து, கோயிலின் பாதுகாப்பு அறையில் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை!!

வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று முன்தினம் (19) இவ்வாறு நாயை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

வைத்தியசாலையின் பிரேத அறையருக்கில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் காயமடைந்த நாய் இரத்தம் சிந்த இழுபட்டு சென்று வேலி ஓரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் நேற்று (20.12) முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்த விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.