சுற்றுலா சென்று திரும்பிய புதுமண தம்பதி உட்பட 4 பேர் விபத்தில் பரிதாபமாக மரணம்!!

ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பிய புதுமண தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் புதுமண தம்பதியரைக் காரில் அழைத்துச் சென்ற இருவரும் சேர்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய்.

இவரது மகன் நிகில் எப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் மகள் அனுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணமானது. இதையடுத்து ஹனிமூனுக்காக நிகில், அனு தம்பதியர் மலேசியாவுக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை கேரளா திரும்பினர்.

தம்பதியரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அவர்களது தந்தையர் இருவரும் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இவர்கள் ஓட்டிச் சென்ற கார் முரிஞ்சக்கல் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் இவர்கள் இருவரின் தந்தையர் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

ஹனிமூனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் யானை மோதி விபத்து!!

செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் மோதுண்ட யானை ஒன்று காயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது , இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அவ் வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் உள்ள நீர் உள்ள குழி ஒன்றில் காயத்துடன் விழுந்து கிடந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்!!

காலி, கத்தளுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கோரவிபத்து : மூவர் காயம்!!

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் அதிவேகமாக அம்புலன்ஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் , நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு,

களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சலூன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் சேவையை பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் தலையில் இருந்து முடி உதிர்ந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, வெலிக்கடை பொலிஸார் முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அந்தப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முறைப்பாடு செய்த பெண், தான் முன்னர் வெலிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,

மீண்டுமொரு நாள் அங்கு சென்று தலையில் சிகிச்சை பெற்று தலைமுடி உதிர்தல் மற்றும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், முறைப்பாட்டாளரின் மருத்துவ அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், உரிய அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றத்தில் சமர்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காகச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (14) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பெற்று வரும் நிலையில் கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 10 வயது சிறுமி கொலை : தப்பியோடிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி!!

 

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற குறித்த நபர் நேற்று (15) திருகோணமலை,

குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் (16.12.2024) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் நேற்றைய தினம் காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!!

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (16.12.2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், பூர்வாங்க விசாரணைகள் குற்றத்தடுப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!

வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், அவருக்கு காய்ச்சல் குணமடையாததால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (16.12.2024) மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிகாய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸ், கொத்து உள்ளிட்ட பல உணவுகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை!!

அரசாங்கம், ரைஸ், கொத்து ,பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், குடிநீர் போத்தல்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பருப்பு, வெங்காயம்,

உருளைக்கிழங்கு போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உள்ளிட்ட பல உணவகப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விலைகள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் சடுதியாக அதிகரித்த புளியின் விலை!!

இலங்கையில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலர் வலயங்களில் புளி விளைச்சல் காணப்படும் நிலையிலும் புளியின் மொத்த விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மொத்த விலை அதிகரிப்பு காரணமாக 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் புளியின் சில்லறை விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நாட்டில் சந்தைக்கு போதியளவு புளி கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகி உள்ளதாக வர்த்தக மத்திய நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இபோச பேருந்தில் மோதி பெண் மரணம் : சாரதி மற்றும் நடத்தினர் நையப்புடைப்பு!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இபோச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு ஹட்டன் இபோச டிப்போவின் கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் கோரியுள்ளது.

பெண் ஒருவர் குறித்த பேருந்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் சாரதி மற்றும் நடத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு- ஹட்டன் தடவழி இபோச பேருந்து ஒன்று வெல்லம்பிட்டிய கொட்டிகாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே சறுக்கி விழுந்த போது அதில் பயணித்த பெண் மீது பேருந்து ஏறி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து , பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கோபமடைந்து அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும், மக்கள் அவரைத் தொடர்ந்து தாக்கியதனால், சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த பேருந்தின் சாரதி வெல்லம்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரிகள், சாரதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

விபத்து தொடர்பான சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவது பொலிஸாரின் பொறுப்பாகும் என டிப்போ கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறியுள்ளது.

அத்துடன், பொலிஸார் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய போதிலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சிலர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியுள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார்.

சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெல்லம்பிட்டி காவற்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இபோச டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகன பற்றரிகள் திருட்டு : இருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்ட என சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது. நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

சரிகமபவில் அசத்தும் கனடா வாழ் யாழ்ப்பாண சிறுமி!!

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் சரிகமப லிட்டில் சாம்பியனில் இம்முறை கனடாவாழ் யாழ்ப்பாணத்து சிறுமி கலந்துகொண்டுள்ளார் .

புலம்பெயர் கனடா வாழ் சிறும் யாதவி , யாழ்ப்பாணம் – குப்பிளான் கிராமத்தை பின்புலமாக கொண்டவராவார்.

அதேவேளை புலம்பெய்ந்து வாழும் நம் ஈழத்து சிறுவர்கள் பலரும், தங்கள் திறமைகளை பல்வேறு விடயங்களில் வெளிப்படுத்தி பிரபல்யமாகி உள்ளனர்.

அந்தவகையில் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறும் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை கடந்த வருடம் ஜீதமிழ் சரிகமப இசைப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்த கில்மிக்ஷா வெற்றிபெற்ற நிலையில், தற்போது சரிகமப லிட்டில் சாம்பியனில் கனடாவாழ் யாழ்ப்பாண சிறுமி யாதவி கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம் : தவிக்கும் யாழ் நபர்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (14) தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர் , தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு,

உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த , அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் , கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரிய நிலையில் அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.

அதன் பின்னர் , அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும் , அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய் , 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் , வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது , பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் , யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது, அதனை உங்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி பாதிக்கப்பட்டவரை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்ற போது, வங்கி மானிப்பாய் பகுதி என்பதால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது எனவே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்ற போது , முறைப்பாட்டை எழுத தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இல்லை என கூறி பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த பொலிஸ் நிலையமும் ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கவலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.