தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் இரவு வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இரண்டு குடும்பங்களை சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/14 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும். அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/165 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த அரசாங்கங்களின் பெரும் திருடர்கள் பிடிபடுவார்கள் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் இதுவரை பெரும் திருடர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரிசி மாபியாவை ஜனாதிபதி தனது பேச்சின் மூலமும் செயற்பாடுகளாலும் நிரூபிக்க வேண்டும்.
இது தொடர்பில் இந்நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் – திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகிந்தலை – கம்மலக்குளம பிரதேசத்தில் வசித்து வந்த ஜே.மதுக சங்கீத் ஜயசுந்தர என்ற 27 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மிகிந்தலையில் இருந்து அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அநுராதபுரத்தில் இருந்து மிகிந்தலை நோக்கி சொகுசு ஜீப் ஒன்று பயணித்ததாகவும், பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞனை அந்த வாகனத்தில் ஏற்றி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் ஜீப் வண்டியுடன் மோதினாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிகிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி ரஞ்சித்தின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியில் கசிந்திருந்தன.
இதனையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் வழக்கினை ஒத்திவைத்துள்ளனர்.
அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.
நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் போடப்பட்டுள்ளதுடன் நாட்டில் நிலக்கரி அதிகம் உள்ள இந்நாட்களில் இலங்கை மின்சார சபை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்கவில்லை எனவும், மின் வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் எனவும் நந்தன உதயகுமார குறிப்பிட்டார்.
அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது.
அவ்வாறு ஏற்பட்டால் மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள்,
சுரங்கங்கள் மற்றும் நீர் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அவர் கூறினார்.
வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பகால சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம், இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம், மேலும் மரணம் கூட ஏற்படலாம்.
வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும்,
அதற்கமைய அவர்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் உரிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் மேலும் தெரிவித்தார்.
வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர் (Sagar Gangwar 14), ஞாயிற்றுக்கிழமை காலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly நகரில், சந்தேகத்துக்குரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டான்.
தனது மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி, சப்னா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
90 நிமிட போராட்டத்துக்குப் பின், சப்னாவை சந்தித்த பொலிசார், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார் சப்னா.
இந்நிலையில், இன்று சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். CCTV கமெரா காட்சிகளில் அவர்கள் இருவரும் சாகரின் உடலை இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
விசாரணையில், தாங்கள் மூன்றுபேரும் சேர்ந்து மதுபானம் மற்றும் போதைபொருட்கள் உட்கொண்டதாகவும், 14 வயதான சாகர் அளவுக்கதிகமாக மதுபானம் மற்றும் போதைபொருட்கள் உட்கொண்டதால் நிலைகுலைந்து சரிந்ததாகவும்,
பயந்துபோன அனுஜும் சன்னியும் சாகரின் உடலை இழுத்துச் சென்று ஒரு வயலில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டின் ஒரே அறையில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
மாணவிகளின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவினாசி, பழங்கரை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி. இவருடைய மகள் அவந்திகா(19).
அதே போன்று அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் மோனிகா(19). அவந்திகாவும், மோனிகாவும் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்கள்.
இருவரும் ஒரே பாடப்பிரிவில் படித்து வந்த நிலையில், கல்லூரி செலவுகளுக்காக அவந்திகாவும், மோனிகாவும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்த பின்னர், அருகிலேயே உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்கள்.
நேற்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் அவந்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவந்திகாவைப் பார்ப்பதற்காக மோனிகா அவந்திகாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை, அவந்திகாவின் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தோழிகள் இருவரும் தனித்தனியாக தூக்கில் சடலமாக தொங்கினார்கள்.
தோழிகள் இருவரும் ஒரே அறையில் இப்படி தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு,
வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே அறையில் தோழிகள் இருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
தங்களது கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகளின் தற்கொலை குறித்த தகவல் அவரது தோழிகளிடையேயும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டுப்புற பாடகி சயதா பைரோ-ஹோம், 20, அக்டோபர் மாதம் முதல் அடிக்கடி தோள்பட்டை வலியை அனுபவித்து வருகிறார். இதனால் அவ்வப்போது மசாஜ் செய்து வந்துள்ளார்.
அதன்படி, டிசம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை உடோன் தானியில் உள்ள பார்லரில் கழுத்து சுளுக்குக்கு மசாஜ் செய்துள்ளார். அவர் முதலில் அக்டோபர் தொடக்கத்தில் பார்லருக்குச் சென்றார், அங்கு ஒரு மசாஜ் செய்பவர் கழுத்தை முறுக்கும் நுட்பங்களைச் செய்தார்.
இது முதல் இரண்டு நாட்களில் அவரது கழுத்தின் பின்பகுதியில் வலியை ஏற்படுத்தியதாகவும், இரண்டாவது வருகையின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரது உடல் முழுவதும் கடுமையான வலி மற்றும் விறைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சயதாவின் தாயார், படுத்த படுக்கையாகி, அசைய முடியாமல் இருந்த மகளை நவம்பர் 6ஆம் தேதி மூன்றாவது முறையாக பார்லருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மற்றொரு மசாஜ் செய்பவர் இருந்தார். மசாஜின் அதிக அழுத்தம் காரணமாக, சயதா தனது விரல்களில் கடுமையான வீக்கம், சிராய்ப்பு மற்றும் தொடர்ந்து கூச்சத்தை அனுபவித்தார்.
அறிகுறிகள் தொடர்ந்து மோசமாகி, அவளது உடற்பகுதியில் பரவி, வலது கையில் உணர்வின்மையை ஏற்படுத்தியது. நவம்பர் நடுப்பகுதியில், சயாதா தனது உடலின் 50% க்கும் அதிகமான பகுதியை இழந்தார். நவம்பர் 18 ஆம் தேதி, அவளது உடல் நிலை மோசமடைந்து, அவள் படுத்த படுக்கையாக இருந்தாள் மற்றும் முற்றிலும் நகர முடியாமல் போனது.
துரதிர்ஷ்டவசமாக, இரத்த தொற்று மற்றும் மூளை வீக்கத்தின் சிக்கல்கள் காரணமாக அவர் டிசம்பர் 8 அன்று இறந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடோன் தானி மாகாண பொது சுகாதார அதிகாரிகள், மசாஜ் நிலையத்தை ஆய்வு செய்தபோது, பார்லரில் உள்ள ஏழு மசாஜ் தெரபிஸ்டுகளில், இருவர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர், மற்றவர்களுக்கு உரிமம் இல்லை.
ஆபத்தான கழுத்தை முறுக்கும் நுட்பங்களைத் தவிர்க்க உரிமம் பெற்ற மசாஜ் செய்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பார்லரின் மேலாளர் கூறினார்.
எனினும், சயதாவுக்கு இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை, மேலும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
கழுத்தை முறுக்குவது மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளை சேதப்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், இது தசை பலவீனம் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
பார்லர் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்குவதையும் அதன் ஊழியர்களின் தகுதிகளை சரிபார்ப்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கடை நடத்தி வரும் சிலம்பரசன், மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வராத நிலையில்,
அறையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மகள், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், தந்தை அருகில் தூக்கில் தொங்கியபடியும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரிக்கும், சிலம்பரசனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், சிலம்பரசனின் குடிப்பழக்கம் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உருளைக்கிழங்கை சேமித்தால் அது பச்சை நிறமாக மாறி, முளைவிட தொடங்கும். இந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
சிலர் முளைவிட்ட பகுதியை மட்டும் வெட்டிவிட்டு சமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கை கட்டாயம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக அளவு கிளைகோல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதனை அதிகமாக உண்ணும்போது நமக்கு உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
இதனால் வயிற்றுக் கோளாறு முதல் இதயம் மற்றும் நரம்பு மண்டலப் பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகள் ஏற்படலாம்.மேலும் சில, கடுமையான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்..
முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுஉணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சில நேரங்களில் இது மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதால் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர். உருளைக்கிழங்கு சோலனைன் மற்றும் சாகோனைனின் இயற்கையான மூலமாகும். சிறிய அளவில் உட்கொள்ளும் போது,
கிளைகோஅல்கலாய்டுகள் ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் இரத்த-சர்க்கரை- மற்றும் கொலஸ்ட்ரால்-குறைக்கும் விளைவுகளை உள்ளடக்கிய ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன.
இருப்பினும், அவை அதிகமாக உண்ணும் போது நச்சு மற்றும் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். பச்சை நிறம் குளோரோபில் இருந்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு உருளைக்கிழங்கு முளைவிட தொடங்கும் போது, அதன் கிளைகோல்கலாய்டு உள்ளடக்கம் உயரத் தொடங்குகிறது.
இதை சாப்பிடும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக அளவுகளில் நரம்பியல் அறிகுறிகளை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிற அறிகுறிகள் என்னென்ன?
குறைந்த இரத்த அழுத்தம்
விரைவான துடிப்பு
அதிக காய்ச்சல்
தலைவலி
குழப்பம்
மரணம்
முளைவிட்ட உருளைக்கிழங்கில் இருந்து நச்சுத்தன்மையைக் குறைப்பது எப்படி?
உருளைக்கிழங்கு நச்சுத்தன்மையைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் சிறந்த வழி, அவற்றைத் தூக்கி எறிவதே ஆகும்.
ஆனால் பச்சை மற்றும் துளிர் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே குவிந்திருந்தால், அவற்றை கூர்மையான கத்தியால் அகற்றி, மீதமுள்ள உருளைக்கிழங்குடன் சமைக்கலாம்.
இருப்பினும், சமைக்கப்படும் போது அதில் இருக்கும் நச்சுக்கள் அழியாது என்பதால், முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது தவிர்ப்பதே நல்லது.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் (11) ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஐந்து நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். காய்ச்சல் தொடர்ந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.
இதன்போது அவர் அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேற்படி பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.
எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக 23 வயதான யுவதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மோகனகாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(10) மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.
குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதால் அந்த வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.