வவுனியாவில் தேன் என சீனிப் பாணி விற்பனை : பொலிசார் அதிரடி!!

சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா பொது சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தபடவுள்ளனர்.

இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து ஏ-9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம், மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

எனவே, பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்தது. டிசம்பர் 4 ஆம் திகதி இரவு ஐதராபாத்தில் திரையரங்கில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அந்த காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுனும் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் அவரைக் காண குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

லட்சக்கணக்கானோர் கூடியதால் பொலிஸால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதில் ரேவதி என்கிற அல்லு அர்ஜுனின் ரசிகையும் புஷ்பா 2 படம் பார்க்க தன் மகன் உடன் வந்திருந்தார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பின்றி படம் பார்க்க வந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் அல்லு அர்ஜுன்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்த சிக்காட்பள்ளி பொலிஸார் இன்று (13) அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், அல்லு அர்ஜுன் கதான சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார்.

நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற School Sport Australia கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கியானா ஜயவர்தனாவுக்கு கிடைத்தது.

அவர் Melbourne Cricket Coachingஇல் பயிற்சி பெற்ற வீராங்கனை ஆவார், மேலும் மெல்போர்ன் கிரிக்கெட் பயிற்சியின் மூன்று வீரர்கள் School Sport Australia போட்டியில் விக்டோரியா அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கியானா ஜயவர்தன பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சி பெற்று பொருத்தமான திறன்களை வளர்த்துக் கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனை என்று MCC தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா பெண்கள் அணிக்கு MCC வீராங்கனைகளான கியானா ஜெயவர்த்தனே மற்றும் என்னா ஷைன் ஆகியோர் தகுதி பெற்றனர்.

இதற்கிடையில், ஆரவ் வினோத்குமார் 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா சிறுவர்கள் அணிக்காக MCC யால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவார்.

அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இம்முறை விக்டோரியா சிறுவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் பிரமிட் வடிவிலான அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!

பசறையில் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது. உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கக்கல் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இதன் உரிமையாளர் சுமார் 20 ஆண்டுகளாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம்!!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணு ராஜ் (வயது 34 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க வியாழக்கிழமை (12) இரவு இருவர் சென்று மீன் பிடித்து விட்டு மீண்டும் இன்று (13) காலை 8 மணியளவில் முகத்துவாரம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் உயிர் பிழைத்த நிலையில் மற்றைய மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் நிகழவுள்ள அற்புதம் : இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்!!

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13.12.2024 ) மற்றும் நாளை (14) இரவு இலங்கையில் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும்.

இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.

 

யாழில் மிரட்டும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஐவர் பாதிப்பு : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எலிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாகியதால் , அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக அஞ்சப்படுவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் கோர விபத்தில் சிக்கி பலியான பிள்ளைகள் : பெற்றோர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது பெற்றோரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100 கிலோமீற்றர் தொலைவில், கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கி சென்ற காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை சுஜாதா மகளிர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே சதீஷா என்ற 12 வயது சிறுமி மற்றும் அதே பாடசாலையில் 05ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே செனுதி என்ற 10 வயது சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூத்த மகளுக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமிகளின் தந்தை வர்த்தகர் மற்றும் தாய் உதானி ராஜபக்ச மாத்தறை புனித தோமஸ் குமார வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியை ஆவார்.

சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்!!

இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12.12.2024) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்னை இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள் : கண்ணீர்விட்டு கதறி அழும் தமிழ் இளைஞன்!!

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுப்பவேண்டும் என இளைஞன் மன்றாடி கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு இக்கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், ‘இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர்.

அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஜாயை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார். தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர்.

எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன்.

இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இளைஞர் கண்ணீருடன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோரவிபத்தில் சிறுமி பலி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் இரு மகள்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 100 L மற்றும் 100.1 L இடையே கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்ததுடன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் ஒருவர் உயிரிழந்தார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 7 பேரின் உயிரைப் பறித்த காச்சல் : பரிசோதனையில் வெளியான தகவல்!!

வட மாகாணத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 07 பேரின் இரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீண்ட நாள் காய்ச்கல் , கண் சிவத்தல் , உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளில் பலவற்றில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனாவைத்தியசாலையில் குறித்த 7 பேரும் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததை அடுத்து , அவர்களின் இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டிருந்த்து.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடல் சீற்றத்தினால் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்!!

தமிழகத்தின் இராமேஸ்வரம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கடல் சீற்றத்தினால் 20 அடி நீளமுடைய பனை திமிங்கலமானது கரை ஒதுங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் கடல் பசு, டால்பின், ஆமை, கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், மீனவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவருகிறது.

நேற்று (டிசம்பர்.11)காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் 20 அடி நீளமுடைய பிரிதேஸ் திமிங்கலம் என்கிற பனை திமிங்கலமானது கரை ஒதுங்கி கிடந்தது.

இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் திமிங்கிலத்தை வனத்துறையினர் மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு கடற்கரை ஓரத்தில் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைக்கு வாழைப்பழம் கொடுத்த பெண் பரிதாபமாக பலி!!

புத்தல கதிர்காமம் வீதியில் கதிர்காமம் நோக்கி பயணித்த லொறி ஒன்று யானையால் கவிழ்ந்ததில், பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் முதுகண்டிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான கே.ஜி.கெரசுதி (66) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிராமத்தைச் சேர்ந்த குழுவினருடன் லொறியில் கதிர்காம யாத்திரைக்குச் கடந்த (12) சென்று கொண்டிருந்த போது வீதியை மறித்து கொண்டு காட்டு யானைக்கு நின்று கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் யானைக்கு வாழைப்பழம் சீப்பு கொடுத்ததை அடுத்து , காட்டு யானை, லொறியில் இன்னும் உணவுகளை தேடியது. உணவுகள் கிடைக்காமையால், தனது தும்பிக்கையால் லொறியை புரட்டியது.

இதன்போது முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் புத்தள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.

இலங்கையில் மீண்டும் மின்வெட்டா?

இலங்கையில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடலாம் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாகவும் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை முன்வைப்பதற்காக கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திரமாக, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்காததால், பல காலமாக இயங்கி வந்த மின்சார மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா முக்கிய காரணியாக மாறியுள்ளதாகத் தெரிவித்த நந்தன உதயகுமார, நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் இருக்கும்போது தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் என்றும் குறிப்பிட்டார்.

மின்சார சபை அதிகாரிகள் அவ்வாறு செயற்பட்டால் அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரம் வாங்குவதற்கு மின்சார சபையிடம் பணம் இருக்காது எனவும் அவர் கூறியுள்லார்.

அவ்வாறு ஒரு நிலையில் ஏற்பட்டால் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : துயரத்தில் குடும்பம்!!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் வயது 41 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.