வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் இருந்து வந்த பார்சலில் போதைப் பொருள் டின்கள் மீட்பு!!

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்த கஞ்சா கையிருப்பு வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு வந்த பார்சல் ஒன்றில் 08 டின் கஞ்சா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பொதியின் எடை 5,324 கிராமாகும்.

வவுனியாவில் உள்ளவருக்கு வந்த பார்சலின் எடை 1755 கிராம் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் சந்தை மதிப்பு தனித்தனியாக 31,994,000 மற்றும் 10,530,000 ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கொடூரம் : மைத்துனரை கொலை செய்த நபர்!!

மட்டக்களப்பில் குடும்பத் தகராற்றில் சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கி கொலை செய்ய சம்பமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தவர் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில் அது தகராறாக மாறி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் கணவன் – மனைவி இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தடவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேரூந்து சக்கரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு!!

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று 12.12.2024) இரவு எல்பிட்டிய – பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலகஸ்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் ஆவார்.

எல்பிட்டியவில் இருந்து பிடிகல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கி விட்டு வலது பக்கமாக திரும்ப முயன்ற போது, வீதியில் பயணித் பெண் பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியால் குழப்பம் : அரச அதிகாரிகள் ஆத்திரம்!!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விதண்டாவாதமாக கேள்வி கேட்டதால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அருச்சுனா எம்பியை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்டதை அடுத்து நிலைமை சுமூகமானதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற பெண்!!

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3).

கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை திருமலை பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள கிணற்றுக்குச் சென்ற அவர் 2 குழந்தைகளையும் தள்ளிவிட்டார். ஆனால் பயத்தில் அவர் கிணற்றில் குதிக்கவில்லை.

பின்னர் திருமலை பகுதியில் மனக்குழப்பத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று காலை அவரிடம் அப்பகுதியினர் விசாரித்தபோது, தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த மதகுபட்டி போலீஸார் கிணற்றில் கிடந்த இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரஞ்சிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

1996 உலகக்கிண்ண வெற்றியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை முதலீடு!!

1996 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்திய முதலீட்டில் கட்டப்படவுள்ள 42 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்றையதினம்(12) அடிக்கல் நாட்டப்பட்டது.

பெலவத்தையில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள காணியில், 240 வீட்டுத் தொகுதிகள் இடம்பெறும், ஒவ்வொரு தளத்திற்கும், இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க(Arjuna Ranatunga) இந்த கட்டடத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளார்.

1996ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, உலகக்கிண்ண அணியில் பங்கேற்ற 14 பேருக்கும் தலா பத்து பேர்ச்சஸ் காணியை வழங்கினார்.

இந்தநிலையில், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இடத்தில் 42 மாடி அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க ஒரு இந்திய முதலீட்டாளரை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் 30 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வரமுடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1996 உலகக்கிண்ண அணி உறுப்பினர்களான அரவிந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, ரொமேஸ் களுவிதாரண மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

கைவிடப்பட்ட நிலையில் சொகுசுக் கார் மீட்பு!!

கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று நேற்று வி (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, தங்காலை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு அருகில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

வீரகெட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சொகுசு கார் கடவத்தை, விஜயபா மாவத்தை பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தேன் என சீனிப் பாணி விற்பனை : பொலிசார் அதிரடி!!

சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா பொது சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தபடவுள்ளனர்.

இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து ஏ-9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம், மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

எனவே, பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்தது. டிசம்பர் 4 ஆம் திகதி இரவு ஐதராபாத்தில் திரையரங்கில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அந்த காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுனும் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் அவரைக் காண குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

லட்சக்கணக்கானோர் கூடியதால் பொலிஸால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதில் ரேவதி என்கிற அல்லு அர்ஜுனின் ரசிகையும் புஷ்பா 2 படம் பார்க்க தன் மகன் உடன் வந்திருந்தார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பின்றி படம் பார்க்க வந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் அல்லு அர்ஜுன்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்த சிக்காட்பள்ளி பொலிஸார் இன்று (13) அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், அல்லு அர்ஜுன் கதான சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார்.

நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற School Sport Australia கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கியானா ஜயவர்தனாவுக்கு கிடைத்தது.

அவர் Melbourne Cricket Coachingஇல் பயிற்சி பெற்ற வீராங்கனை ஆவார், மேலும் மெல்போர்ன் கிரிக்கெட் பயிற்சியின் மூன்று வீரர்கள் School Sport Australia போட்டியில் விக்டோரியா அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கியானா ஜயவர்தன பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சி பெற்று பொருத்தமான திறன்களை வளர்த்துக் கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனை என்று MCC தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா பெண்கள் அணிக்கு MCC வீராங்கனைகளான கியானா ஜெயவர்த்தனே மற்றும் என்னா ஷைன் ஆகியோர் தகுதி பெற்றனர்.

இதற்கிடையில், ஆரவ் வினோத்குமார் 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா சிறுவர்கள் அணிக்காக MCC யால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவார்.

அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இம்முறை விக்டோரியா சிறுவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் பிரமிட் வடிவிலான அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!

பசறையில் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது. உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கக்கல் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இதன் உரிமையாளர் சுமார் 20 ஆண்டுகளாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம்!!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணு ராஜ் (வயது 34 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க வியாழக்கிழமை (12) இரவு இருவர் சென்று மீன் பிடித்து விட்டு மீண்டும் இன்று (13) காலை 8 மணியளவில் முகத்துவாரம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் உயிர் பிழைத்த நிலையில் மற்றைய மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் நிகழவுள்ள அற்புதம் : இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்!!

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13.12.2024 ) மற்றும் நாளை (14) இரவு இலங்கையில் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும்.

இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.

 

யாழில் மிரட்டும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஐவர் பாதிப்பு : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எலிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாகியதால் , அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக அஞ்சப்படுவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் கோர விபத்தில் சிக்கி பலியான பிள்ளைகள் : பெற்றோர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது பெற்றோரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100 கிலோமீற்றர் தொலைவில், கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கி சென்ற காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை சுஜாதா மகளிர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே சதீஷா என்ற 12 வயது சிறுமி மற்றும் அதே பாடசாலையில் 05ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே செனுதி என்ற 10 வயது சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூத்த மகளுக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமிகளின் தந்தை வர்த்தகர் மற்றும் தாய் உதானி ராஜபக்ச மாத்தறை புனித தோமஸ் குமார வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியை ஆவார்.

சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்!!

இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12.12.2024) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.