நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.

வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள் : இலங்கையில் பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

புத்தளம் – மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வார காலப்பகுதியில் மூன்று சகோதரிகளும் திடீரென உயிரிழந்ததையடுத்து பிள்ளைகளும், உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான லூசி பீர்ஸ் மற்றும் 67 வயதான அன்னி பீர்ஸ் ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் திருமணமான பெண்கள் என்பதுடன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கந்ததொடுவாவ கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

உறவினர்கள் வெளியிட்ட காரணம்
கடந்த வாரம் இந்த சகோதரிகளின் தங்கையான 67 வயதான அனி பீர்ஸ் திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி வயலெட் பெசிர்ஸினும் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு சகோதரிகளின் மரணத்தால் மிகவும் வேதனையடைந்த மற்றுமொரு சகோதரியான 70 வயதான லூசி பீர்ஸ் மூன்று நாட்களுக்கு பின்னர் திடீரென உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மூன்று சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே அற்புதமான சகோதர பந்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதல் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இவர்களின் திடீர் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை அதிகாரி!!

இலங்கையின் முன்னாள் அமைச்சின் செயலாளரான நீல் ஹபுஹின்ன, அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் சம்பவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பதவி உட்பட பல அரசாங்கங்களில் முக்கிய பதவிகளை நீல் ஹபுஹின்ன வகித்துள்ளார். இறக்கும் போது அவரின் 61 ஆகும்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் , குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் தனது மூத்த மகளின் திருமணத்தை கொண்டாடுவதற்காக அவர் கடைசியாக இலங்கைக்கு வந்தார்.

இரண்டு மகள்களின் தந்தையான இவரது மனைவி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் மரணம்!!

மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க. திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).

சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தீபக்குமார் தனது வீட்டில் தனது சட்டையை எலக்ட்ரிக் அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் உதவியுடன் அவரை விடியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக பந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனைப் பரிசோதித்த டாக்டர்களும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து

, மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார அயன் பெட்டியை வைத்து துணியில் தேய்க்கும் முன் ஒயரை முழுமையாகச் சோதித்து அயன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

2 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி மம்தா (30). இந்த தம்பதிக்கு அதீரா (5) மற்றும் அனன்யா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் இவர்கள் 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். கடன் தொல்லை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி.. கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த கார்!!

கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா இருவரும் பயத்தில் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தம்பதியரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் புதுமணத்தம்பதி இருவரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்தியா- இலங்கை இடையே ரயில் சேவை : 5 பில்லியன் டொலர் ஒதுக்கீடு என அறிவிப்பு!!

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்று இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான புதுடில்லியின் முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை தேசத்தால் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும்.

இந்தியா இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது மற்றும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) பங்களிப்பாளர்களில் ஒன்றாகும். 2021 இல் இலங்கையில் இந்திய முதலீடு சுமார் 142 மில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்நிலையில், “கடந்த மாதம் நான் இந்தியாவுடன் புதுதில்லியில் ஒரு சந்திப்பில் பங்கேற்றேன், மேலும் இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பை ஏற்படுத்த உள்ளோம்” என்று பி.கே.பிரபாத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“இரு நாடுகளிலும் உள்ள தொழிலதிபர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும், சாலை மற்றும் இரயில் இணைப்புடன், இரு தரப்பினரும் உதவி பெறலாம் என்பதால் இது திட்டமிடப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகத்திற்கு உதவும். இந்திய வர்த்தகர்களும் இலங்கையிடமிருந்து சில நன்மைகளைப் பெற முடியும்” என்று சந்திரகீர்த்தி மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னார் கிராமத்திற்கும் இடையில் தரைப்பாலத்தை இலங்கை அரசாங்கம் 2002 இல் முன்மொழிந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தின்படி, பாக் ஜலசந்தியின் இருபுறமும் பொருளாதார நன்மைகளை வழங்கும் வகையில், சாலை மற்றும் ரயில் பால இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வீதி அல்லது புகையிரதத்தின் ஊடாக எந்தவொரு நிலத் தொடர்பும் இல்லை.

இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்திய நகரமான தனுஷ்கோடியில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. ஆனால் அது 1964 இல் ஏற்பட்ட சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டது.

1966 வரை ஒரு குறுகிய படகு சவாரி இலங்கையில் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஷ்கோடி ரயில் நிலையங்களை இணைத்தது.

மேலும் “திட்டத்திற்கான செலவு இன்னும் முடிவாகவில்லை. நாம் அதைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும், ஆனால் அது கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வகையில் பாலங்கள் மற்றும் நீருக்கடியில் சுரங்கப்பாதைகளை அமைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தாயின் 5 பவுன் தங்கசங்கிலியை திருடிய மகன்!!

தனது தாயின், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிய மகனை ஹட்டன் பொலிஸார் நேற்று(14) கைது செய்துள்ளனர்.

ஹட்டன் செனன் தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் அலமாரியில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்கொண்ட விசாரணையின் போது பெண்ணின் மகன், தங்க நகையை ஹட்டன் நகரில் உள்ள தனியார் அடகுக் கடையொன்றில் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அடகுவைத்த காசில் ஒன்பது லட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாவை அவரது நண்பருக்கு வழங்கியுள்ளதாகவும் மீதி பணத்தை சந்தேகநபர் முழுமையாக செலவழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தாய் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வருவதுடன் அவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்த பொலிஸார் மகன் மதுவுக்கு அடிமையானவர் எனவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (15) அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விசமிகள்!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டு , வானின் கண்ணாடிகள் தாக்கப்பட்ட நிலையில் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த தீவைப்பு சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகாத தொடர்பு : வீடொன்றில் மீட்கப்பட்ட ஜோடிகளின் சடலம்!!

பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபத்து!!

 

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி, பாலத்தோப்பூர் பகுதியில் மற்றுமொரு வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்டபோது, இவ்விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

எனினும், இந்த விபத்தில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிய வருகின்றது.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையால் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்ற

பதாகைகளை பார்த்து கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல்!!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனன.

அதற்கமைய சிவில் போக்குவரத்து விதிகளின்படி விசாணைகள் இடம்பெறுவதுடன் பிரதான விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் இணைப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு சென்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானிகளுக்கு இடையில் முறுகல்

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ளெியாகி உள்ளன.

இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

பிரதமரை காண காத்தான்குடியில் இருந்து சைக்கிளில் வந்த மாணவி!!

மட்டக்களப்பு – காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)காலை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரியே மாணவி மகஜரை பிரதமரிடம் கையளித்துள்ளார்.

 

தனது 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!!

புத்தளம் பகுதியில் தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ, ஊரிய – அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவருக்கே மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு தனது 15 வயது மகளை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரை குற்றவாளியாகக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தாவிடின் சந்தேகநபருக்கு 6 மாத கடூழிய கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இலங்கைக்கே ஒரு பாடம் : அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!!

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள 2 மாடி வீட்டின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.

ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டது.

உடனடியாக குளியலறையிலிருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்திலிருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பின்னர், ஹன்சனியை உடனடியாக 1990 நோயாளர் காவு வண்டியை கொண்டு வந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இதேவேளை யுவதியின் துரதிர்ஷ்டவசமான மரணம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.

அவளது தங்குமிடத்தில் உள்ள ஆபத்தான இடத்தைச் சரிசெய்திருந்தால், இந்த பெண் உயிரிழந்திருக்க மாட்டார், ஹன்சினியின் மரணம் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்நாட்டிற்கும் ஒரு சிறந்த பாடமாகுமென சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மீண்டும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி!!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 217.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.