வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல், ஒக்டோபர் 14 -ம் திகதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கரூர் திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி,
திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தற்போது நிலவி வரும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் கடிதம் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண் பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறையில் அழைத்து விசாரிப்பது, முறையற்ற நடத்தைகள் என்பவற்றில் ஈடுபடுகின்றனர் என பெற்றோர் முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த முறைப்பாட்டு கடிதத்தில், குறித்த பிள்ளைகள் பாரிய மனஉளைச்சலை சந்திப்பதுடன் பாடசாலைக்கு செல்ல மறுக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளரிற்கு தெரியப்படுத்தி அவரையும் பாடசாலைக்கு அழைத்து சென்று அதிபரிற்கு தெரியப்படுத்தினோம்.
முன்னதாக ஆசிரியரொருவரினால் றீப்பை தடியினால் தமது பிள்ளைகள் தாக்கப்பட்டு அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அதிபரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிபரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவர்களை இடைநிறுத்தி விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனைகளை வழங்குவதுடன் இடமாற்றம்செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவற்றை தாங்கள் செய்வதன் மூலம் எமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் பொலிஸார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 280 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பாகற்காய் 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் , ஒரு கிலோ வெங்காயத்தாள் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 80 ரூபாவாகவும் ,ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ நோகோல் 100 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் ,
ஒரு கிலோ இஞ்சி 800 ரூபாவாகவும் , ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 150 ரூபாவாகவும் ,ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வளர்ந்து வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம் ஜிந்துசனின் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து, கிராம மட்ட அமைப்புக்கள் ஒதுக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
“முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வசித்து வருகின்றேன். ஆரம்பத்தில் முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து விளையாடிவந்தேன். அங்கு எனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர், முல்லைத்தீவு சென்யூட் கழகத்தினர் அதிக ஊதியத்துடன் கூடிய விளையாட்டு துறைக்கு என்னை அழைத்திருந்தார்கள்.
என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அவர்களது கழகத்திற்கு மாறி செல்கின்றமை தொடர்பாக எழுத்து மூலம் கடிதம் வழங்கியே விளையாட சென்றேன்.
அதன் பின்னர் நான் பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அதனையடுத்து, கிராம மட்ட அமைப்புக்கள் எம்மை எம் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளது. குறித்த ஊடகவியலாளர் பணி முடிந்து நேற்று மாலை அவர் வீடு திரும்பும் போது கஸ்தூரியார் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தலைக்கவசத்தினால் குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
திருகோணமலை – சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் இவர்கள் இருவரும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு, பால்ராஜ் கேக் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளான். உடனே சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுள்ளது. எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் சிறுவன் சாப்பிட்ட கேக் தான் எமனாக மாறியது தெரிந்தது. ஏற்கனவே கேக்கில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலப்பதாக கர்நாடக அரசு எச்சரித்து இருந்தது.
கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் வழுக்கி விழுந்து, மினி லாரி மோதி தலை சிதைந்து உயிரிழந்த இளம்பெண் நித்யா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைக்கு பதிலாக வெள்ளைப் பூசணி வைத்து அதன் மீது புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கதற செய்துள்ளது.
கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நித்யா (26). இவரது தோழி ஹரிணியுடன்(26) சோழிங்கநல்லுாரில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிணியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேளச்சேரி உள்வட்டச் சாலையில், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தின் அருகே இவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்துக் கொண்டிருந்த மினி லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நித்யா, ஹெல்மெட் அணிந்திருந்த போதும், லாரி சக்கரம் நித்யாவின் தலை மீது ஏறி இறங்கியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற ஹரிணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார்(21) என்பவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நித்தியாவின் உடல் கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உறவினர்கள் நித்யாவின் உடலை அடக்கம் செய்ய தயாரான நிலையில், தலை முழுவதுமாக சிதைந்து உயிரிழந்த காரணத்தினால், நித்யாவின் தலைக்குப் பதிலாக வெள்ளைப் பூசணியை தலைக்கு பதிலாக வைத்து, அதில் நித்யாவின் புகைப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்தது அஞ்சலி செலுத்தி வந்தவர்களைக் கதற செய்தது.
சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார் நதியா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மகன் நவீன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ள நவீன் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பலமுறை அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. நவீனை செல்போனில் வீடியோ கேம் விளையாடியதாக நதியா பலமுறை திட்டியுள்ளார். இந்நிலையில், நவீன் நேற்று செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக தாய், மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நவீன் வீடியோ கேம் விளையாடியதற்கு நதியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மகன் நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறக்கும் தேதி தெரிந்துவிட்டால் வாழ்க்கை அதன் பின்னர் நரகம் தான் என்பார்கள். ஆனால், உயிரிழக்கப் போவது தெரிந்த நிலையிலும், தன்னுடைய இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திதாள் விளம்பரம், போஸ்டர், ப்ளெக்ஸ்
பேனர்களில் வைக்கப்பட வேண்டிய வாசகங்கள், புகைப்படங்களை சந்தோஷமாக, குதூகலத்துடன் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேர்வு செய்து கொடுத்திருக்கிற சம்பவம் கண்களைக் குளமாக்குகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. எலும்பு புற்றுநோயினால் தாக்கப்பட்ட சினேகா, இரண்டு எலும்புமஜ்ஜை மாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட போதும், நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை.
இந்நிலையில், தனது இறப்பை அறிவிக்கும் ஃப்ளெக்ஸ் போர்டுக்கு புகைப்படங்களையும் தேர்வு செய்தாள் என்று உயிரிழந்த சினேகா அன்னா ஜோஸ் குறித்து அவரது பெரியம்மா உருக்கமான பதிவு ஒன்றை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
தனது சகோதரியின் மகள் சிநேகாவின் கடைசி ஆசை குறித்து அவர் எழுதியிருக்கும் முகநூல் குறிப்பு படிப்பவர்களின் நெஞ்சை பதறச் செய்கிறது.
26 வயதான சினேகா அன்னா ஜோஸ் தனது மரணத்தை முன்னரே அறிந்திருந்தார். அவரது மரணச் செய்தியை அறிவிக்கும் செய்தித்தாள்கள் மற்றும் ஃப்ளெக்ஸ் போர்டுகளில் வெளியிட புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தார்.
புதிய ஆடைகள் மற்றும் கலசத்தை அலங்கரிக்கும் ரோஜாப் பூச்செண்டுகளுடன் தன்னை அடக்கம் செய்யுமாறு அவள் தனது பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இரண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும், சினேகா கொடிய நோயின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்தார்.
இது குறித்து சினேகாவின் பெரியம்மா தனது முகநூல் பதிவில், “அவளுடைய பெயர் குறிப்பிடுவது போல, அவள் அன்பாகவும், ஒழுக்கமாகவும், அடக்கமாகவும் வாழ்ந்தாள். அவள் 10ம் வகுப்பு வரை படிப்பில் மெதுவாக முன்னேறினாள்.
இருப்பினும் 11 மற்றும் 12ம் வகுப்பில் விஷயங்கள் தலைகீழாக மாறியது. அவள் அதிக மதிப்பெண்களைப் பெற்றதால், பெரிய கனவு காணத் தொடங்கினாள். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொறியியலில் 90% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதித்தாள்
நோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து கூகுள் செய்து பார்ப்பார். மேலும் அவர்களின் சொத்துக்களை விற்று சிகிச்சைக்காக கடன் வாங்குவது பற்றி அடிக்கடி தனது தந்தையிடம் விளையாட்டுத்தனமான முறையில் கேட்பார்.
இவ்வுலகில் அவளுக்கு இருந்த கொஞ்ச நேரமே தெரிந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு அழகான புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சினேகா விரைவில் வேலைக்குச் சேர்ந்தார்.
அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நோய் மீண்டும் அவளைத் தாக்கிய போது குடும்பத்திற்குள் விஷயங்கள் மீண்டும் தலைகீழாக மாற துவங்கியது.
எலும்பு மஜ்ஜை இரண்டாவது முறையாக மாற்றப்பட்டது மற்றும் சாத்தியமான அனைத்து சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், அவளை மீண்டும் உயிர்ப்பிக்க அது போதுமானதாக இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
கொழும்பு – ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அரச இலச்சினையுடன் அரச வாகனமொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிணவறைக்கு அருகிலேயே வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் அரச இலச்சினையுடன் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள பிணவறைக்கு அருகில் நிறுத்திவிட்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிணவறைக்கு அருகே பல நாட்களாக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், உரிமையாளர் இல்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து வெளிநபர் மூலம் வாகனத்தினை வைத்தியசாலை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையினர் தலையிட்டு, இது குறித்து நிர்வாகத்துக்குத் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் வாகனத்தின் புகைப்படங்களுடன் சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரை மாய்க்க முயன்ற இள வயது தாய் மற்றும் பிள்ளையை ரயில் சாரதி காப்பாற்றியுள்ளார். களனிவெலி ரயில் வீதியின் அவிசாவளை ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப நிலையங்களுக்கு இடையில் இளம் தாயும் அவரது மூன்று வயது மகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரயில் சாரதியின் அவதானம் காரணமாக நேற்று காலை குறித்த இருவரையும் காப்பாற்ற முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாயும் மகளும் ரயிலில் மோதுண்ட போதிலும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
இருவரும் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்தது. குறித்த ரயில் ஹிங்குரல உப நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட வேண்டும் என்பதனால் ரயில் வேகக் கட்டுப்பாட்டில் இயங்கியுள்ளது.
இதன் காரணமாக இருவரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல், மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.