மரண வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

விபத்துக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றிய 32 வயதான துமிது திலாஞ்சன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் வரக்காபொல பிரதேசத்தில் தனது மனைவியுடன் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, பள்ளம் ஒன்றில் மோட்டார் சைக்கிளுடன் வீழ்ந்து படுகாயம் அடைந்திருந்தார்.

படுகாயமடைந்த அவர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

வெலிவேரிய பிரதேச மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த துமிது, பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரின் மரணம் அந்தப் பகுதி மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெலிவேரிய முழுவதும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களால் பல்வேறு இரங்கல் பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கடமைக்கு வரத் தவறும் அதிகாரிகளிடம் இருந்து 1 இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும்.

சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும்.

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை, மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல.

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம்.

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் காணாமல்போன பாடசாலை மாணவி : தாய் விடுத்த கோரிக்கை!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 வயதான மனோகரன் யதுர்னா எனும் மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இதெவேளை, மாணவி கடந்த 10/08/2024 ம் திகதியில் இருந்து காணாமல்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லைனெ தாய் தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல்போயுள்ள மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கத்திறக்கு 0775994497 அறிவிக்குமாறு தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 18 பேர் மருத்துவமனையில்!!

இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவி மரணம் : தவிக்கும் குடும்பம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் பயின்று வந்தவராவார்.

கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி விளையாட்டிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்ட இம் மாணவி இவ் வருடம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அளவிலான கராத்தே போட்டியொன்றில் பதக்கம் வென்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்தவராவார்.

இந்நிலையில் மாணவின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது!!

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று (11.10.2024)தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.

முன்னதாக இரட்டை பெரியகுளம் பகுதியில்இருந்து வாகனங்களில் ஊர்வலமாக வருகைதந்த கட்சியின் ஆதரவாளர்கள் அதன் பின்னர் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியானது உபாலி சமரசிங்க, செல்வத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஷ்வரன், பாத்திமா அயிஸ்த்தா, பிரேமரத்தின, ஜோகராஜா சிவரூபன், அன்டன் கலை, அபுபாகீர் பிரைஸ்தீன், இராதாகிருஸ்ணன், ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் : சிவப்பு எச்சரிக்கை!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்ப நிலையின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமைகள் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வன்னியில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனு ஏற்பு : 6 பேரை தெரிவுசெய்ய 423பேர் களத்தில்!!

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தெர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்தவகையில் இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல்கட்சிகளும்27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தது. அவற்றில் இரண்டுஅரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைகுழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக எங்கள்மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசியகூட்டணி ஆகியகட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுளுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில்423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் மரணம்!!

முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பு மனுவினை தாக்கல் செய்தது!!

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று (11.10.2024) தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.

வன்னி மாவட்டத்தில் குறித்த கூட்டணியானது சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேடதேவையுடைய பெண் ஒருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.

வன்னியில் காதர் மஸ்தான் வேட்பு மனுத்தாக்கல்!!

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல்செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11.10.2024) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல் : வேட்புமனுத் தாக்கலின் பின் சிறிரெலோ ப.உதயராசா!!

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார்.

சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்றையதினம் (10.10.2024) தாக்கல் செய்திருந்து. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர்,

இம்முறை நாடு ஒரு மாற்றத்தினை கண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரண்டு கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்திருந்தது. இம்முறை மூன்றாவது கட்சி ஒன்று வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது.

அந்தவகையில் ஊழல் அற்ற ஒரு தேசத்தினை கட்டிஎழுப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்க்கின்றோம். அதேபோன்று கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கிறது. நானும் கடந்த தேர்தல்களில் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்திருக்கின்றேன். அதனால் இந்த முறை எமக்கான சந்தர்ப்பம் உள்ளதாக முழுமையாக நம்புகின்றோம்.

அநுர ஆட்சியானது அவர்கள் சொல்வதை போல நல்லதை செய்து, ஊழலற்ற ஆட்சியினை நடாத்தினால் அவர்களுடன் இணைந்து அவர்களுக்கான ஒத்துழைப்பினை வழங்குவோம். அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை தட்டிக்கேட்பதற்கும் தயங்கமாட்டோம் என்றார்.

வன்னியில் தமிழரசுக் கட்சி வைத்தியர் சத்தியலிங்கம் தலைமையில் வேட்புமனுத்தாக்கல்!!

வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்காக வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சி இன்று (10.10.2024) வேட்புமனுத் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வன்னிக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்தது.

வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா.திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோரும்,

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரும், மன்னார் மாவட்டம் சார்பாக சட்டத்தரணி செ.டினேசன், சட்டத்துறை மாணவி அ.கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வன்னியில் 4 கட்சிகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி வேட்பு மனுத்தாக்கல்!!

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை 4 கட்சிகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடு முழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.

வவுனியா ஓமந்தையில் காணிப் பிணக்கு காரணமாக நடந்த விபரீதம் : ஒருவர் மரணம், ஒருவர் படுகாயம்!!

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணிப் பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியல் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10.2024) நண்பகல் 12 மணியளவில் கட்டுப்பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.