தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒரு இலட்சம் ரூபா அபராதம்!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் , தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பிக்காமை மற்றும் குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை என்பன தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஒரு காரணமல்ல என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.

அதேவேளை தேர்தல் பணிக்கு வருவதற்கான நியமனக் கடிதம் பெறும் அனைத்து அலுவலர்களும் உரிய தேர்தல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், தங்களது வழக்கமான பணியிடத்திற்குச் சென்று வருகைப் பதிவு சான்றிதழை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் அல்லது தவறியவர்கள் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடவுச்சீட்டுக்களில் வரும் மாற்றம்!!

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி சட்டமா அதிபர் மற்றும் பதில் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு, மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏழு இலட்சத்து 50,000 என்-சீரிஸ் கடவுச்சீட்டுகளை வழங்கும் 02 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததால், அந்த கடவுச்சீட்டை ஜீ-சீரிஸுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரியபடுத்தியுள்ளார்.

அதேவேளை அண்மையில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் (750,000) என்-சீரிஸ் கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லாஃபர், எனிக் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் அதன் நிறைவேற்றுத் தவிசாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து, அமைச்சரவை தீர்மானம் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறையை மீறும் ஊழல் கொடுக்கல் வாங்கல் என குறித்த தடை உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி!!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் மற்றும் பெறுமதி முறையே 297.62 ரூபாவாகவும், 288.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 218.52 ரூபாவாகவும், கொள்வனவு விலை 209.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.43 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மாணவரின் அரிய சாதனை : செவிப்புலன் அற்றவர்களுக்கு புதுவாழ்வு!!

இலங்கையின் முனைவர் (Phd) மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ், 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்புகள் தொடர்பான அவரது ஆராய்ச்சி, செவித்திறன் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவியளிப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், உலகின் முதல் ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்பை உருவாக்கியுள்ள அஜ்மல் அப்துல் அஜீஸ் தனது விருது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது உண்மையிலேயே தமக்கு சிறந்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அங்கீகாரம் கிடைத்தபோது, தம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்றரை வருட கற்கையின்போது, எதனை செய்துவிட்டோம் என்று கேட்பதை விட, இதனை செய்துவிட்டோம் என்ற உணர்வு தமக்கு திருப்தியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி கற்க இலங்கையிலிருந்து பயணம் செய்து பயோனிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த அஸீஸ், 1978 முதல் மாறாமல் இருந்த கோக்லியர் இம்ப்லான்ட்டை மாற்றியமைத்துள்ளார்.

கோக்லியர் உள்வைப்பு என்பது ஒரு சிறிய, சிக்கலான மின்னணு சாதனம் ஆகும். இது காது கேளாத அல்லது கடுமையாக இரைச்சல் உணர்வை கொண்ட ஒருவருக்கு சிறந்த ஒலி உணர்வை வழங்க உதவுகிறது. தற்போது செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், இது தொடர்பில் முன் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இதேவேளை, கோக்லியர் உள்வைப்புகள் மக்களுக்கு கேட்கும் திறனை தருகிறது எனினும் அது மின்சாரத்தில் இயங்குகிறது.

எனினும், அதனை ஒளியை பயன்படுத்தி இயங்கச் செய்வதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருவதாக அஜ்மல் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் செவிப்புலன் அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் மத்தியில் தமது ஆராய்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அஜ்மல் கூறியுள்ளார்.

சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்!!

சுனாமியில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார்.

அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அனர்த்தத்தின் போது இன்னுமொரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஹிருணியை கண்டுபிடிக்க முடிவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக குடும்பம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஹிருணியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அவரது தாயும் மூத்த சகோதரியும் அவரை கண்டுபிடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாடசாலை மாணவி மாயம் : தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தாய் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியொருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லைனெ தாய் தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல்போயுள்ள மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கத்திறக்கு 0775994497 அறிவிக்குமாறு தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் பலி!!

தென்னிலங்கையில் தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் 54 வயதான வஜிர பிரியன் என்ற குடுபஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக நேற்று பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

கொழும்பு சென்ற பேருந்து தீப்பற்றியதால் பரபரப்பு!!

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தீ விபத்தில் உயிரிழப்புக்களோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணி வேட்புமனுத்தாக்கல்!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம் (09.10.2024) தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் பலரையும் திரும்பி பார்க்கவைத்த இலங்கை இளைஞன்!!

கல்விக்காக சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல் கருணாரத்ன எனும் இலங்கை இளைஞர் குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தற்போது மெல்பேர்னில் வசித்து வரும் இலங்கை இளைஞர், கல்வி பயிலும் போது, ​​இரவு நேரத்தில் தற்காலிகமாக ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.

ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வருமானம் நன்றாக இருந்ததால், பின்னர் நாட்டில் உள்ள பிரபல இணையத்தளமான Airtaskerயில் சேர்ந்தார்.

தற்போது, ​​அந்த இணையத்தளத்துடன் தொடர்பு கொண்டு அதிகம் பணம் ஈட்டுபவர்களில் முதல் 10 இடங்களில் வினுலும் உள்ளார். அவரது தினசரி வருமானம் 1,000-1,400 அவுஸ்திரேலிய டொலர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் ஊடாக அவர் கனவு கண்டு வந்த காரை வாங்கியுள்ளதுடன், இலங்கையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டையும் நிர்மாணித்து கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வேலைக்காக முழு நேரமும் உழைத்து வரும் வினுல், அங்கு வீடு வாங்கி மற்ற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மரத்தில் மோதி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பண்டாரகம வேவிட்ட தெம்பிலிகொட்டுவ சந்திக்கு கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம, மேற்கு பகுதியைச் சேர்ந்த லஹிரு நிமந்த ஜயதிலக என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பண்டாரகம – களுத்துறை வீதியில் மொரந்துடுவ திசை நோக்கி பயணித்த போது, ​​தெம்பிலிகொட்டுவ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதியான 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பண்டாரகம ரொட்டரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (08) இரவு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் உடைந்ததுள்ளதுடன் மரமும் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் விலை மேலும் குறையும் : அநுர தரப்பு உறுதி!!

இலங்கையில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீள இயங்க இருப்பதால் எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையும் என பொறியியலாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை காலமும் இயங்காமல் இருந்தன. இதனால் வெளிநாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலை பெற்றுக்கொள்ள அதிகளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சுத்திகரிப்பு நிலையங்களை மீள இயங்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர், எரிபொருள் விலை கனிசமாக குறைவடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

 

22 கரட் தங்க பவுணின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்!!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் நேற்றையதினத்தை விட இன்றையதினம் (09.10.2024) சிறிதளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 207,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 191,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,621.96 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் (08.10.2024) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 200,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 191,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.

ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்தவர் கைது!!

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.

அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது. இதுகுறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.