தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி : கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!!

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 15 வயதான பாடசாலை மாணவி, தாமரை கோபுரத்தின் 29ஆவது தளத்திலிருந்து வீழ்ந்து உயிரை மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெருவிலுள்ள கட்டடம் ஒன்றில் இருந்து பாய்ந்து இரண்டு மாணவர்கள் உயிரை மாய்த்திருந்தனர்.

இதன் காரணமாக அவர்களின் நெருங்கிய நண்பியான 15 வயதான குறித்த மாணவி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!!

காணாமல் போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க மத்தேகொட பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மத்தேகொட பிஅரதேசத்தை சேர்ந்த 59 வயதான விக்கிரமசிங்க ஆராச்சிகே துலானி என்பவரே காணாமல்போயுள்ளார்.

பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மத்தேகொட பொலிஸ் நிலையத்தின் 071 859 2207 அல்லது 011 278 3776 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! பெரும் சோக சம்பவம்!!

புத்தளம் – தங்கொட்டுவ, யோகியான வேகொட பகுதியில் பாலர் சிறுமி ஒருவர் நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தங்கொட்டுவ, யோகியான வேகொட பகுதியில் இன்றையதினம் (08-10-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 4 வயதான அனன்யா பரமி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி பாலர் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனது பாட்டியுடன் வீட்டுக்கு திரும்பியதாகவும், வீட்டுக்கு வந்த சிறுமியை குளிப்பாட்டுவதற்காக பாட்டி சுடுநீர் தயார் செய்ய சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டி அடுப்பில் சுடுநீர் வைப்பதற்காக சென்ற சமயம் குறித்த சிறுமி யோகட் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், வெளியே சென்ற சிறுமி தனது வீட்டுக்கு பின்பக்கமாக உள்ள பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு : பாதுகாவலர் ஸ்தலத்தில் பலி!!

பொலன்னறுவை வெலிகந்த நகர் அரச வங்கி ஒன்றில் வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்து ஸ்தலத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (08) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் , இலக்கம் 113, சுசிரிகம, வெலிகந்த என்ற முகவரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அவர்கள் அனுர விஜேசிங்க என என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கடமையை முடிக்க, ரிப்பீட்டர் ரக துப்பாக்கியில் சிக்கியிருந்த தோட்டாவை அகற்றுவதற்காக முயற்சித்த போது , துப்பாக்கி வெடித்து, காவலாளியின் மார்பில் பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வெலிகந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம் : ஆசிரியர் கைது!!

11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதன்போது, தனது பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய மாணவியின் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதில், பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (8) பிற்பகல் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பாடசாலை சீருடையில் சென்ற குறித்த மாணவி, சிறிது நேரத்திலேயே பலமுறை தற்கொலைக்கு முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் குதிக்க முயற்சித்தமை அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு, கொம்பனி வீதி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் நெருங்கிய தோழி இந்த சிறுமி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை தனது நண்பர்களின் மரணத்தினால் கடந்த சில மாதங்களாக தனது மகள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதேவேளை பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு, தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் , கடந்த 7 ஆம் திகதி கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எமது இரக்கங்களைத் தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இன்றையதினம் (09.10) நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல உத்தரவிட்டது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தொடரப்பட்டிருந்தது.

அது தொடர்பில் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வன்னியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத்தாக்கல்!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்றையதினம் (09.10.2024)தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இதனையடுத்து இன்று மதியம் வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ்தூபி்க்கு சென்ற வேட்பாளர்கள் அங்கு அஞ்சலியில் ஈபட்டிருந்தனர். அதன்பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் சுப
நேரத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

இதன்போது வன்னிமாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன்,மற்றும் ஏனைய வேட்பாளர்கள், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

முள்ளியவளையில் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

முல்லைத்தீவு, முள்ளியவளை நகர் பகுதி வீதியில் மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு வகுப்பிற்காக உயர்தர மாணவி ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த மாணவி வகுப்பினை முடித்து விட்டு பேருந்து நிலையம் நாேக்கி நடந்து சென்ற போது முள்ளியவளை பிராந்திய சுகாகார சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி!!

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் குடும்ப தகராறு இடம்பெறுவதாக நொச்சியாகம பொலிஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிஸார் வீட்டுக்குள் ஒருவர் மயங்கிக் கிடந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர், வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதுடைய இந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், அவ்வாறான நேரங்களில் அயலவர்களையும் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

கணவனை கத்துவதனை தடுக்க அவரது வாயை துணியை திணித்ததால் அவர் மயக்கமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவரது 42 வயது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதாக உப்புல் தரங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உப்புல் தரங்க தற்பொழுது இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  உப்புல் தரங்கவை விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டி பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த லெஜன்ட்ரோபி ரி20 கிரிக்கெட் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்வதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக உப்புல் தரங்க முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளில் உப்புல் தரங்க இன்று சாட்சியமளிக்க தவறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டி தொடரில் உப்புல் தராங்க கண்டி ஆர்மி அணிக்காக விளையாடியிருந்ததுடன் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜையான யோகி பட்டேல் என்பவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு உப்புல் தரங்கவை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த அழுத்தம் தொடர்பில் உப்பு தரங்க முறைப்பாடு செய்திருந்தார். இன்றைய தினம் உப்புல் தரங்கவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட இருந்தது.

இந்த நிலையில் உப்புல் தரங்க நீதிமன்றிற்கு அறிவிக்காது அமெரிக்க நேஷனல் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். எனவே அவருக்கு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் மதிய உணவு நிறுத்தப்பட்டதா?

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த தகவல் அனைத்தும் பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் பயணித்த பாம்பால் பதறிப்போன பயணிகள்!!

குருநாகலில் இருந்து நேற்று காலை (7) மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்ற , சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்த நிலையில் , இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

பயணிகள் போட்ட சத்தத்தில் பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதை அடுத்து பயணிகள் அலறியடித்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும், பாம்பின் பயத்தால் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்து அதே பஸ்ஸில் பயணம் செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.

துடிதுடித்து உயிரிழந்த தாய், மகன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் மின் கட்டணம் கட்டி விட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32).

இவர்களது மகன் ஆலன் (15). அரசு பள்ளி ஒன்றில் ஆலன் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் நூலகம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் சென்றுள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்தி விட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஜி.எஸ்.டி., சாலையில் ஒரகடம் சந்திப்பின் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்த யுவராஜ் (54) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தொடர்ந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து மோதியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுநீர் கழிப்பதில் தகராறு : உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்!!

டெல்லியில் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட தகராறில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய்யுள்ளது.

காணொளியில், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் நபர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் போர்வையை விலக்கி கட்டையால் தாக்க தொடங்குகிறார்.

பின்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் அங்கிருந்து தப்பித்து செல்கிறார். சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், ஆர்யன் என்பவரை கைது செய்தனர்.

ஆர்யன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் வேலை பார்த்து வந்த ராம்பால் அதை தடுத்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியமை விசாரணையில் தெரிய வந்தது.