வறுமையில் இருந்து செல்வந்தர் : கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவுத் தொழிலாளி!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் இலங்கையில் பிறந்த வினுல் கருணாரத்ன துப்புரவுத் தொழில் செய்து கோடீஸ்வரராகியுள்ளார்.

இதனை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ”இது ஒரு உண்மையான வறுமையில் இருந்து செல்வந்தரின் கதை” (“ராக்ஸ் டு ரிச்சஸ் ஸ்டோரி” (rags to riches story) என்று குறிப்பிட்டுள்ளது.

25 வயதான கருணாரத்ன தனது பகுதிநேர வேலையை முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டதாக செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் வினுல் கருணாரத்ன தனது கனவு கார் மற்றும் இலங்கையில் உள்ள தனது பெற்றோருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் அளவுக்கு சம்பாதித்துள்ளார்.

“நீங்கள் எவ்வளவு வேகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு வேலைகளைச் செய்து முடிக்க முடியும், மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்” என்று அவர் தமது நேர்காணல் செய்த தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இணைய மற்றும் கையடக்கபேசி சந்தையை வழங்கும் அவுஸ்திரேலிய நிறுவனமான Airtasker இன் தரப்பட்டியலின்படி, சிறந்த 10 வருமானம் ஈட்டுபவரில் கருணாரத்னவும் உள்ளடங்கியுள்ளார்

ஏர்டாஸ்கர் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஃபங் இது தொடர்பில் கூறும்போது, கடினமாக உழைப்பதன் மூலம் எவரும் தீவிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாமரை கோபுரத்திற்கு தனியாக சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் கைப்பை தாமரை கோபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியில் உள்ள கண்காணிப்பு அறையில் அவர் இருந்ததாகவும், 3ஆவது மாடியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மருதானை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர், கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் கொள்ளுப்பிட்டியை சேர்ந்த ராத்யா குணசேகர என்ற மாணவி எனவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் தோழி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இருவரின் மரணத்தினால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் மாணவின் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாணவி வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார். வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை – யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் கடை ஒன்று தீக்கிரை : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று (08.10.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றுமே தீயில் எரிந்துள்ளது.

 

இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலுக்காக 13 பேரை கொன்ற இளம் பெண் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் , சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தந் நிலையில் அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலன் யோசனைபடி அவர் அரங்கேற்றியுள்ளார். அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார்.

இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர். பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில் இச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாகன நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை : 240 பேர் மயக்கம் : 5 பேர் பலி!!

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது.

11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர்.

தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை வரையிலும் நெரிசல் உணரப்பட்டது. மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

நிகழ்வு முடிந்து நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர்.

அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்த நிலையில் பலர் மயங்கி விழுந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின.

காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் ஊசியால் 26 வயது இளம் பெண் உயிரிழப்பு : நடந்தது என்ன?

இரைப்பை அழற்சி (Gastric) நோயினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஊசி மூலம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

கடந்த வாரம் முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருபத்தி ஆறு வயதுடைய பெண்ணுக்கு பல ஊசிகள் போடப்பட்டதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் , அந்த ஊசி போட்டதன் காரணமாகவே அவரது மகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தரம் குறைந்த மருந்துகள் தொடர்பில் காலங்காலமாக சந்தேகங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ப துடன், நடவடிக்கை எடுக்காமல் ஆட்களை மட்டும் இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த மருந்துகளின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் முறையை மாற்ற வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.

வந்த ஒரே நாளில் கண்ணீரோடு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்!!

பிக்பாஸ் 8 தமிழ் சீன ஆரம்பித்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த 24 மணிநேரத்தில் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் தொடர்பில் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு பிரபலம். கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் இம்முறை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சியை விஜய் சேதுபதி, , எதார்த்தமாகவும் இடையிடையே நக்கலோடு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது, பல ரசிகர்களை கவர்ந்தது.

சீசன் 8 இல் ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்ட நிலையில், இவரைத் தொடர்ந்து சாஞ்சனா நேமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், அர்னவ், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தார்ஷிகா, விஜே விஷால், முத்து குமரன், சௌந்தர்யா நஞ்சுட்டன், ஜாக்குலின், என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூல்சும் புதுசாகவே உள்ளது. பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் ஒரு வாரம், அல்லது இரண்டு வாரத்திற்கு பின்னரே நாமினேட் செய்து எலிமினேட் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே மற்ற போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்து அதிலிருந்து ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்தில் வெளியே அனுப்ப்ப்பட்டுள்ளார்.

‘மகாராஜா’ பட நடிகை சாச்சனா தான் , முதல் நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாச்சனா விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர். எனவே இவருக்கு மட்டும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு என சிறப்பு சலுகை கொடுத்தார்.

இந்நிலையில் வந்த 24 மணி நேரத்தில் அவர் வெளியேறி உள்ளமை பிக்பாஸ், ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று.

கொழும்பில் வேட்பாளராக களமிறங்கும் ஊடகவியலாளர் லோஷன்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஊடகவியலாளர் லோஷன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் இன்று (07.10.2024) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் நடைபெற்ற அரகலய போராட்டத்தில் தமிழ் மக்களின் சார்பில் லோஷன் பங்களித்ததாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!!

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த ஜூட் வசீகரன் டிவோன்சி என்ற மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியை சேர்ந்த குறித்த மாணவி, 18 வயதுக்குட்பட்ட 60-65Kg எடைப்பிரிவில் தங்க பதக்கத்தினை வென்றுள்ளார்.

குறித்த மாணவி கடந்த மாதம் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் வெண்கல பதக்கத்தினையும் பெற்றிருந்தார்.

முல்லைத்தீவு மாணவர்கள்

அத்துடன், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் ஒருவர் 20 வயதுக்குட்பட்ட 70-75Kg எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார்.

குறித்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர் தேசிந்தனின் பயற்றுவிப்பில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்து : ஒருவர் ஸ்தலத்தில் பலி!!

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று முன்தினம் (05.10) மாலை இடம்பெற்றுளள்து.

குறித்த விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை சேர்ந்த 64 வயதுடைய நபர், ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்து நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில் இடம்பெற்றுள்ளதுடன், உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்க சென்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

லபுகம, தும்மோதற பிரதேசத்தில் , காதல் ஜோடியொன்று பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, பமுனுவ பன்சலை வீதியை சேர்ந்த , பசிந்து லக்ஷான் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பெண் அம்பலாங்கொட கெனேன் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் குளிப்பதற்கு சென்று களு அக்கல பகுதியிலிருந்து லபுகம நோக்கி அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பெல்போல பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பற்ற கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

இதனையடுத்து அப் பகுதி மக்களால் அவர்கள் மீட்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி காதலன் பலி : அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி!!

கொழும்பு – லபுகம, தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் யுவதியொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இநத விபத்தில் சிக்கிய இருவரும் காதலர்கள் எனவும், கடற்கரைக்கு செல்வதற்காக நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பிலியந்தலை, பமுன்வ வீதியில் வசித்து வந்த பசிது லக்ஷான் என்ற 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த அம்பலாங்கொடை, கானாங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லபுகம நோக்கி அதிவேகமாக பயணித்த வேளையில் பல்பொல பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு!!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதையின் திருத்த பணிகள் மேலும் தாமதமாகும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனை தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சமிஞ்சை கட்டமைப்பு நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என்பதால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த தொடருந்து மார்க்க பகுதியில், வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்திருந்தது.

அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்கு காரணம் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த தொடருந்து பாதையின் திருத்த பணிகள் மேலும் தாமதமாகும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருத்த பணிகள் காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

பாடசாலை மதிய உணவு திட்டம் : கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி அலுவலகங்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக மதிய உணவு வழங்குவதை விநியோகஸ்தர்கள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பணம் கிடைக்கும் வரை உணவு வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் நோக்கில் இம்முறை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வலயக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அரசியல் தொடர்பினை கொண்டுள்ள சில அதிகாரிகள், பணம் இருந்தும் வழங்காது விநியோகஸ்தர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.

இரண்டு மரக்கறிகளின் வரியை அதிகரித்த நிதி அமைச்சு!!

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், 1 கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.