முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (01.08.2023) பதிவாகியுள்ளது.
உழவு இயந்திரத்தின் திருத்தப்பணியை முடித்துவிட்டு திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.இதேவேளை 42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலிக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு சட்டவிரோதமாக அவர்கள் செல்லமுயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் வெளிநாட்டு மோகத்தால் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அதில் உள்ள ஆபத்தினை பலரும் உணர்வதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்று கனடாவுக்கு செல்ல முயன்றவர்கள் தொடர்பில் பல வேதனையான விடயங்கள் வெளியாகி இருந்ததுடன் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தனி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, ஏறக்குறைய 1000 கிலோமீற்றர் தூரமுடைய இந்த நடை பயணத்தை இன்று(01.08.2023) ஆரம்பித்துள்ளார்.
நீல் பாரா என்ற இலங்கையரே இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.அவர் Ballarat என்ற இடத்திலிருந்து சிட்னியில் உள்ள பிரதமர் தேர்தல் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.இதேவேளை அவர் 8 வருடங்களாக விசா ஏதும் இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணித்து எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பிரதமரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்திருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார அமைச்சும் வைத்தியசாலையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.சம்பவம் குறித்து பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிறுவனுக்கு சத்திர சிகிற்சை செய்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்ந்லையில் இது குறித்து வைத்த்யசலை பணிப்பாள்ர் கூறுகையில்,இந்த சம்பவம் நடைபெற முன்னரே வைத்தியர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததால், சிறுவன் உயிரிழப்பின் விசாரணைகள் முடிவடையும் வரை எந்த முடிவிற்கும் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று (02) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 154,500 ஆக குறைந்துள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை 169,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க பவுணின் விலை இன்று 167,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாகை மாவட்டம் திருக்குவளை அய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி. இவர் ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி .
ஷாலினி அதே பகுதியில் வசித்து வரும் சின்னதுரையும் காதலித்துவந்தனர். இது குறித்து ஷாலினியின் அக்கா நந்தினி ஷாலினி மற்றும் சின்னதுரையை கண்டித்துள்ளார். தங்கையுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் சின்னதுரைக்கும், நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சின்னதுரை நந்தினியை தகாத வார்த்தையால் திட்டினார். உறவினரோடு சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நந்தினி திருக்குவளை காவல்நிலையத்தில் ஜூலை 22ம் தேதிபுகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி முதல் ஷாலினியை காணவில்லை .
இதனையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். நள்ளிரவு வீரையன் வீட்டிற்கு பின்புறம் சிறுநீர்கழிக்க சென்றபோது ஷாலினி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த வீரையன் ஷாலினியின் உடலை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
ஷாலினியின் அக்கா நந்தினி அளித்த புகாரின்பேரில் காதலன் சின்னதுரை, சகோதரர் கண்ணன், தந்தை ராஜேந்திரன், தாய் பாப்பாய் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபார் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இவர்களின் கார் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோமுகி ஆற்றங்கரையில் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
கோமுகி ஆற்றின் தடுப்பு சுவரில் மோதி அதன் பின்னர் கார் பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, அஜித், மதுமிதா, அவரது மாமியார் தமிழ்ச்செல்வி 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலம் தெலங்கானாவில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டதால் தங்கையை அவரது அண்ணன் உலக்கையால் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மிரா சிந்து (21). இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஆனால் இது அவரது 22 வயது சகோதரர் (அண்ணன்) ஹரிலால் கண்டித்தார். சிலமுறை தங்கையிடம் இதுபோன்று வீடியோக்களை பதிவிட வேண்டாம் என அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
எனினும் அஜ்மிரா அவரது பேச்சை கேட்காமல் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிலால் உலக்கையால் தங்கையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்து அஜ்மிரா மயக்கமடைந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த அஜ்மிராவின் தாய், மகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் ஹரிலாலை கைது செய்துள்ளனர்.
இந்திய மாணவன் ஒருவர் 50 இலட்சம் இந்திய ரூபா (இலங்கை ரூபாவில் சுமார் 2 கோடி ரூபா) சம்பளத்திற்குக் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்று, வளர்ந்துவரும் மாணவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம்-புனே பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி மாணவனுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
புனே பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர், அதே நகரத்தில் உள்ள எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் (MIT World Peace University) எம்.எஸ்.சி. பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார்.படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தெரிவாகியுள்ளார்.
இதையடுத்து, 1.5 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் இவரது திறமையும், தொழில்நுட்பம் மீதான அவரது ஆர்வமும் அவருக்குக் கூகுள் நிறுவனத்துடைய நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
அதன்பின் படிப்பை முடித்த அவருக்கு எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் கூகுள் நிறுவனம் நடத்திய பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் ஹர்ஷல் ஜூய்கர் கூறியுள்ளதாவது, அது, எனக்குக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவு அளித்த எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்துக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இவர்களின் உதவி இல்லாமல், இந்த குறிப்பிடத்தக்கச் சாதனை சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் படித்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், “ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவத்தின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். அதே நேரத்தில், படித்து வரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், புதுமையான கலாச்சாரத்தில் நுழைவதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.ஹர்ஷல் ஜூய்கருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இலங்கையர்கள் தங்களின் கண்களை 117 நாடுகளில் உள்ள பார்வையற்றோருக்கா தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் உள்ளவர்களுக்கே கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர்.
மேலும், இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 22 இலட்சம் இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ் உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (31.07.2023) தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் (31.07.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை-மஹியங்கனை பகுதியில் கால்வாயிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மஹியங்கனை, பதியத்தலாவை 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாார்.
குறித்த இளைஞர் தனது காதலியை பார்வையிட, தல்தென பகுதிக்கு நேற்று வருகை தந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதலியின் வீட்டிலிருந்து,
சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயிலேயே அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக அழைத்து செல்லப்படவிருந்த 43 இலங்கை பிரஜைகளை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு குறித்த இலங்கை பிரஜைகளை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் முறியடித்துள்ளனர்.
இதேவேளை ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் ஜோர்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர்.
இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவு பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று (31.07.2023) கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும் , தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒர் கோடாரி அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாகவும்,
கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்கள் வவுனியா, தவுசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசாவின் இல்லத்தில் பொலிஸார் இன்று (01.08.2023) மாலை ஆஜர்படுத்தியமையுடன் சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர். இதன் போது 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டமையுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். அவர் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்தது. சம்பவ இடத்திலேயே கணவரான 34 வயதான ஆசிரி விஜேசுந்தர உயிரிழந்துள்ளதாகவும் கிரியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கணவர் தேசிய தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு காரிலும் மோதுண்டமையினால் அதில் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்த நிலையில், கணவரின் சடலம் கிரியெல்ல நெடுன் விஹாரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது அதிவேகமாக செலுத்தி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்பை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சுமார் 18 பயணிகள் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் ஆபத்தான நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மற்றையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். எதிர்திசையில் பயணித்த பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 100 பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தின் சாரதி வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.