அண்ணனின் பேச்சை கேட்காததால் வெட்டிக்கொல்லப்பட்ட பெண்!!

தேனியில்..

தமிழக மாவட்டம் தேனியில் பெண்ணொருவர் தனது சகோதரனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனியின் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் விமல் (34).

இவரும், மனைவி செல்லப்பிரியாவும் (32) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விமல் தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய விமல், மனைவி செல்லப்பிரியாவின் சகோதரன் செல்லப்பாண்டியை (36) வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தன் தங்கியிடம் விமலுடன் சேர்ந்து வாழுமாறு செல்லப்பாண்டி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் செல்லப்பிரியா அவரது பேச்சை மதிக்காமல் எதிர்த்து பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தன் தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்லப்பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தப்பியோடிய விமல் மற்றும் செல்லப்பாண்டியை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மரக்கடத்தல் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு : சாரதி தப்பியோட்டம் : விஷேட அதிரடி படை வீரர் ஒருவர் காயம்!!

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பறயனாளங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் சட்டவிரோத மர கடத்தல் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக சென்ற போது சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்த போது குறித்த வாகனம் விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தை நிறுத்த வாகனத்தின் முன் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கப் ரக வாகனத்தில் இருந்த சந்தேக நபர் கப் ஓடிக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (33529) சந்திரதிலக என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகத்தரின் காயங்கள் பாரதூரமானதாக இல்லாததால் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் அதனுள் இருந்த சட்டவிரோதமாக ஏற்றி செல்லப்பட்ட ஏழு பெரிய முதிரை மரக்குற்றிகளையும் ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சந்தேக நபரிடம் பறயனாளங்குளம் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்.. சாதனைத் தமிழனின் கதை!!

தமிழகத்த்தில்..

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.mஉலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய பொதுவான பானமாகும்.

தமிழகத்தில் எத்தனையோ பேர் தேநீர் கடையை வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். ஒரு டீ கடையை எந்த மாதிரி நாம் அலங்கரித்து, காட்சிப்படுத்துகிறோமோ அதைப் பொருத்து தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இந்த அவசர உலகத்தில் மனிதர்கள் டீ குடிக்கும் சமயங்களில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். தேனை பருகுவதற்கு மலரில் வண்டுகள் அமர்வது போல, டீ குடிக்கும் தருணமும் மன அமைதியை அளிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது போல டீயின் சுவையும் தரமாக இருக்க வேண்டும்.

இப்படி எல்லா சாத்தியக்கூறுகளும் அடங்கிய பிளாக் பெக்கோ என்ற டீக்கடையை, தமிழக இளைஞர் ஜோசப் ராஜேஷ் நடத்தி இன்று கோடீஸ்வரனாகியுள்ளார். பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான ஜோசப் ராஜேஷ், தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்ச கொட்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

தேநீர் சங்கிலித்தொடர் நிறுவனத்தை தொடங்கி, வெற்றி பெற்ற பல இளைஞர்கள் வரிசையில் தற்போதும் அவரும் இணைந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை வேளைச்சேரியில் 100 சதுர அடி தேநீர் கடையை ரூ.50000 முதலீட்டில் துவங்கிய அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லி அன் ஃபுட்&பீவரேஜஸ் பிரைவட் லிமிடேட் என்ற பெயரில் 70 சங்கிலி தொடர் கடைகளை கட்டமைத்துள்ளார்.

என்னது டீக்கடையில் ஆண்டுக்கு ஏழு கோடி வருமானமா! அசத்தும் தமிழக இளைஞர்@weekendleader “2020-2021ல் எங்களது வருமானம் 7 கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது நிதி ஆண்டில் ரூ.10 கோடியை தாண்டுவோம் என நாங்கள் நம்புகிறோம். இந்த ஆண்டும் 60க்கும் மேற்பட்ட தேநீர் கடைகளை நாங்கள் திறந்துள்ளோம்’ என்கிறார் ஜோசப்.

பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்காக ரூ.6-7 லட்சம் ரூபாய் ஜோசப் வசூலிக்கிறார். அவருடைய நிறுவன உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து கொடுக்கிறது. மூலப் பொருட்களையும் விநியோகிக்கிறது. பிரான்ஞ்சைஸ்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடைகளை நடத்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.

“டீ பாய் கடைகள் சிறியவைதான் என்றாலும் பொதுவாக அவை 100-200 ச.அடிக்குள்தான் இருக்கின்றன. இந்த கடைகளில் இரண்டு முதல் மூன்று வகை தேநீர் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்,” என்றார் ஜோசப்.

பிளாக் பெக்கோ கடைகள் பெரியவை. ஒரு பெரிய கடையானது 1.500 ச.அடி கொண்டது. அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

ஒரே விமானத்தில் தாய், மகள் பணிப்பெண்கள்.. அன்னையர் தினத்தில் நடுவானில் தாயை நெகிழவைத்த மகள்!!

அன்னையர் தினத்தில்..

அன்னையர் தினத்தையொட்டி, ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக இருக்கும் தாய்-மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இன்று அன்னையர் தினம்.

இந்த சிறப்பு நாளில், சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த ஒரு காணொளி யாரையும் ஒரு நொடி நெகிழச்செய்யும்.

சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவின் ஆரம்பத்தில், indigo விமானப் பணிப்பெண் தன்னை நபிரா சம்ஷி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தொடங்குகிறார்.

பின்னர் தனது தாய இராம் சம்ஷியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி, அவரை அழைக்கிறார். அன்னையர் தினத்தில் உங்களை கண்ணீர் சிந்த வைத்ததற்கு செய்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.

தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதைப் பார்த்துவருவதாகவும், தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்ததாகவும், இப்போது அவருக்கு முன்னாள் தானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார்.

அவரது தாய் கண்ணீருடன் தனது மகளுக்கு முத்தம் கொடுத்தார். நபிரா தனது அறிவிப்பை முடித்ததும், பயணிகள் இருவருக்கும் கைதட்டினர். இண்டிகோ நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மீண்டும் கடுமையான வெப்பம்.. இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கடுமையான வெப்பம்…

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாளை (16.05.2023) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

மனித உடலால் உணரப்படும் வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குதிரை வேண்டும் என ஆசையாகக் கேட்ட மகன்.. மறுத்த தந்தை : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில்..

கோவையில் குதிரை வாங்குவதற்குத் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.

இவரது மகன் மோகன். இளைஞரான இவருக்குக் குதிரைகள்மீது அதிக பிரியம் இருந்துள்ளது. மேலும் இவர் horse riding பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குச் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கி அதில் horse riding செல்ல வேண்டும் என நினைத்துள்ளார்.

இதற்காக அவரது தந்தையிடம் குதிரை ஒன்று வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குட்டிக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குதித்து போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற மாணவிக்கு பெற்றோர் கண்முன்னே நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வரும் நிக்ஸன் (47) – கிருஷ்ணமாலா தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர்.

பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மகள், மகனுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு காரில் சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை சுற்றிபார்த்து இயற்கை அழகை கண்டுவியந்தனர்.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர். இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

வென்னியாறு பாலம் அருகே அவர்கள் நடந்துசென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.

இதனால் அவரது தலையில் பெரும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்தச்சம்பவம் மற்ற சுற்றுலா பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களின் கண் எதிரே மகளுக்கு நேர்ந்த இந்த கதியை பார்த்து, பெற்றோர்கள் இருவரும் கதறி துடித்தனர்.

22 கரட் தங்கப் பவுணின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில், தங்கத்தின் விலையில் இன்றும்(16.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இன்றைய தினம்(16.05.2023) தங்க அவுன்ஸின் விலை 631,773 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,290 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 178,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 163,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,530 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 156,050 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி : மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியாகிய தகவல்!!

நாவாந்துறையில்..

யாழ். நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர் ஒருவரை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (16.05.2023) பதிவாகியுள்ளது. மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரபல பாடசாலையின் 3ம் வகுப்பு மாணவியை அழைத்துச் சென்ற நபர் : தப்பி வந்த மாணவி!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை மர்ம நபரொருவர் அழைத்து சென்ற நிலையில், மாணவி தப்பி வந்த போது ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கள் கிழமை (15.05) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலையில் நேற்றைய தினம் பாடசாலை நிறைவடைந்ததும் பெற்றோர் அழைத்து செல்ல தாமதமாகியதால் முன்பகுதியில் உள்ள இருக்கையில் தரம் 3 இல் கற்கும் மாணவி இருந்துள்ளதாகவும் இவ்வேளையில் அங்கு வந்த ஒருவர் மாணவியை அழைத்து சென்றதாகவும் தெரியவருகின்றது.

இந் நிலையில் சிறிது தூரம் சென்ற மாணவி மீண்டும் பாடசாலையை நோக்கி அழுது கொண்டு வந்தபோது அவ்வீதியால் வந்த ஒரு பெண் குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் குறித்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று (16.05) பாடசாலையில் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து பாடசாலை பிரதி அதிபர் உரையாடியதாக தெரியவந்த நிலையில் அவருடன் தொடர்புகொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டபோது, இச்சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

பெற்றோருடன் நீங்கள் அழைத்து கதைத்தீர்களா என கேட்டபோது, அவர்களுடன் கதைத்திருந்தோம். எனினும் அதனை நாம் சரியாக பார்க்கவில்லை. பிள்ளையின் பாதுகாப்புக்காக பெற்றோருடன் கதைத்தோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது இச்சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் குறித்த பாடசாலை நிர்வாகத்துடன் கதைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய வாகன ஊர்திப் பவனி இன்று (15.05.2023) மதியம் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகன ஊர்தியானது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக சென்று மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி மலர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு பவனி சென்றது.

வவுனியாவில் ஆலயமொன்றில் சிலை திருடிய இராணுவ வீரர் கைது!!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (14.05) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,

திருடப்பட்ட சிலையின் பெறுமதி சுமார் 50,000 ரூபா மற்றும் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் : புகையிரத வேலை இடைநிறுத்தம்!!

வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் புகையிரத பாதை அமைக்கும் செயற்பாடு இன்று (15.05.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் வீதியிலிருந்து இருந்து ஏ9 வீதிக்கு செல்வதற்காக ஆலடி பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை கடந்த பல வருடங்களாக சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வடக்கிற்கான புகையிரத பாதையினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த புகையிரத கடவை ஊடாக செல்வதற்கு தடையேற்படுத்தும் முகமாக புகையிரத பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இப் போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

48 வயது ஆசிரியையை காதலித்து திருமணம் முடித்த 22 வயது மாணவன்!!

மலேசியாவில்…

48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று மலேசியாவில் இடம்பெற்றுள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(வயது 22) என்ற மாணவருக்கும் , ஜமிலா என்ற ஆசிரியைக்குமே திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது. எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே அவருக்கு இருந்தது.

எனினும் பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக ஜமிலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மெல்ல மெல்ல இருவரும் பேசத் தொடங்கிய பின்னர், ஜமிலா மீது முகமது டேனியல் காதல் வயப்பட்டுள்ளார் .

ஆனாலும் வயதை காரணம் காட்டி ஜமிலா நிராகத்துள்ளார், தன்னை விட 26 வயது இளையவரை திருமணம் செய்து கொள்ள ஜமிலா ஒப்புக் கொள்ளவில்லை.

இருப்பினும் முகமது டேனியல் தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார் , வேறு வழியின்றி ஒருகட்டத்தில் அவரது காதலை ஜமிலா ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது டிரெண்டாகி வருகிறது.

சுவிஸ்லாந்தில் பதக்கம் வென்ற இலங்கைத் தமிழர்!!

சுவிட்சர்லாந்தில்…

இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன் 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல் பொன்னம்பலம் என்பவர் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார். இவர் கிளிநொச்சி பூநகரி பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

249 பேர் பங்குபற்றிய இந்த ஓட்டப்போட்டியில் முருகவேல் பொன்னம்பலம், 124 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 4.7 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்கள் 15 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.

இந்த வயதில் ஓட்டப்போட்டியில் உற்சாகமாக கலந்துக்கொண்டு பதக்கம் பெற்ற முருகவேல் பொன்னம்பலத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொலைபேசிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் : இலங்கை மக்களுக்கு அறிவிப்பு!!

தொலைபேசி..

தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வதுடன், இயங்கக்கூடிய ஓர் தொலைபேசி தொடர்பு இருந்தால் அனர்த்த நிலைமைகளின் போது உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஏழு மாவட்டங்களில் 19 பிரதேச செயலகங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது உடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இணைப்பு அவசியம் எனவும், அதனை சார்ஜ் செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.