துபாயில் உயிரிழந்த யாழ். இளைஞன்.. பல தகவல்களை வெளியிட்டுள்ள தாயாரின் உருக்கமான கோரிக்கை!!

துபாயில்..

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகனின் சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால் சடலத்தினை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்டோருக்கு கோரிக்கை விடுக்கும் முகமாக அவரது தாயார் நேற்று (14.04.2023) ஊடக சந்திப்பொன்றினை அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.

“படுகொலை செய்யப்பட்ட எனது மகன் கடந்த (19.04.2022) தினமன்று துபாய்க்கு வேலை வாய்ப்புக்காக ஃப்ரீ விசாவில் சென்று 6 மாதங்கள் விடுதி ஒன்றில் பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்கள் வேலை செய்தால் வர்க்கிங் விசா தருவதாக கூறினார்கள். அதனடிப்படையில் எனது மகன் 6 மாதங்கள் வேலை செய்ததையடுத்து வர்க்கிங் விசா 2 வருடங்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த வர்க்கிங் விசாவை வழங்கும் போது தங்குமிடம், சாப்பாடு என்பன இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்ட போதும் தங்குமிடம் வழங்கப்படவில்லை. அவர் வெளியிலேயே வாடகைக்கு தங்கினார். விசா வழங்கப்பட்டதும் அந்த நாட்டு நாணயத்தில் 3000 வழங்குவதாக கூறிவிட்டு 1800 தான் வழங்கப்பட்டது.

எனது இரண்டாவது மகன் துபாய்க்கு சென்று ஒரு வாரத்தின் பின்னரே எனது மூத்த மகன் நிலக்சன் சென்றவர். இருவரும் ஒரு ஹோட்டலில் தான் வேலை செய்தார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி எனது இரண்டாவது மகன் எனக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மூத்த மகனின் சடலத்தை காட்டி, ”அம்மா எனக்கு விடுதியின் காவலர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, அண்ணா கத்தி குத்துக்கு உள்ளாகி அறையில் விழுந்து கிடப்பதாக கூறினார், அதற்கு பின்னர் இந்திய பெண் ஒருவரும் எனக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை கூறினார்.

அதற்கு பின்னர் நான் அறைக்கு சென்று பார்த்தவேளை அறை பூட்டப்பட்டு இருந்தது. அங்கு யாரும் இல்லை. கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தவேளை மின்விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு பார்த்தவேளை அண்ணா நெஞ்சில் கத்தி குத்தி இருந்தபடியே கீழே இரத்த வெள்ளத்தில் இருந்தார்.

அவர் அருகில் இருந்த சோபா செட்டையும் என்னையும் மீள மீள பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். அவரால் பேச முடியவில்லை. நான் வாய் மூலமாக சுவாசம் கொடுத்தேன். அதையும் மீறி அவர் உயிர் பிரிந்தது. இந்நிலையில் ஏற்கனவே விடுதி பாதுகாவலர் பொலிஸிற்கு தகவல் வழங்கி இருந்ததால் பொலிஸாரும் அங்கு வந்து விட்டனர்” என்று மகன் கூறினார்.

பின்னர் பொலிஸார் பிரிவின் நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு சடலம் மீட்டு செல்லப்பட்டுள்ளதுடன், எனது மகனையும் அங்கிருந்தவர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனது கடைசி மகனுக்கும் எனக்குமான தொடர்பு 6 மணித்தியாலங்களுக்கு மேல் இல்லை. பிறகு எனக்கு மகனிடம் இருந்து அழைப்பு வந்தது. “அம்மா பொலிஸார் என்னை விசாரணையிலிருந்து விடுவித்த பிறகு அறைக்கு வந்து பார்த்தேன், ஆனால் அங்கு எந்த தடயங்களும் இருக்கவில்லை. அண்ணாவுடைய ஒரு ஐ போன், ஒரு சாதாரண போன், கடவுச்சீட்டு, வேலை அடையாள அட்டை, பர்ஸ் (பணப்பை) எல்லாமே களவாடப்பட்டிருந்தது.

மேலும் இது ஒரு திட்டமிட்ட சதி அம்மா என்றார். தற்போது எனக்கு தெரிந்த வரையில் இவர் முதல் கடையில் வேலை செய்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்தியா – சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்கு செல்கின்றவராம்.

அவர் அங்கு சென்று இவருடன் பழகி தொலைபேசி மூலம் பேசும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக எனது மகனை அழைத்து தனது விடுதியில் தங்க வைத்துள்ளார்.

பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து இவரை வைத்து 20 இலட்சம் கடன் பெற்றுள்ளார்கள். பின்னர் இவரது சம்பள பணத்தையும் பெற்றுள்ளனர். எனக்கு திடீரென ஒருநாள் எனது மகன் அழைப்பு மேற்கொண்டு, அந்த பெண்ணுக்கு நிறையபேருடன் தொடர்பு உள்ளது. என்னை ஏமாற்றி விட்டாள் என அழுதார். இது எல்லாம் வேண்டாம் தம்பி, வேலையை செய்து விட்டு வா என நான் கூறினேன்.

மகன் உயிரிழக்கும் போது அந்த பெண்ணும், பக்கத்து அறை ஆணும் தான் இவருக்கு பக்கத்தில் இருந்தார்களாம். நிறைய நேரம் எனது மகனுடன் சண்டையிட்டார்களாம். கடன் எடுத்த பின்னர் எனது மகனின் தொலைபேசியில் எனது தொலைபேசி இலக்கத்தை அந்த பெண் தடுத்து (block) பண்ணி விட்டார்.

கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இடையே தொடர்பு இல்லை. அன்று காலை எனது இளைய மகனுடன் சேர்ந்து படங்கள் எடுத்து விட்டு, இதை அம்மாக்கு அனுப்பு என்று கூறிவிட்டு சென்றாராம். இச் சம்பவம் நடப்பதற்கு முன்னர், வேலை முடிந்து அறைக்கு போகும் போது எனது இளைய மகன் கண்டாராம்.

அந்த பெண்ணை பொலிஸ் விசாரித்த வேளை தன்னைத்தானே அவர் குத்திக்கொண்டு தன்னை நோக்கி நடந்து வந்து விட்டு விழுந்து விட்டாராம் என்று கூறியதுடன் அவரது கடவுச்சீட்டு, தொலைபேசி, வேலை அடையாள அட்டை, பர்ஸ் என்பன அனைத்தும் எங்கே என்று தெரியாது என கூறினாராம்.

எனது மகனின் தொலைபேசியில் தடுக்கப்பட்டிருந்த (block) எனது இலக்கம் சம்பவம் நடந்த பின்னர் தடுப்பு எடுக்கப்பட்டது. பல தடவைகள் அழைத்தும் பதில் இல்லை. அதற்கு பின்னர் ஒரு தடவை எனது மகனின் தொலைபேசியில் அந்த பெண் பேசினார். அந்த பதிவும் என்னிடம் உள்ளது.

அந்த பெண் திட்டமிட்டு எனது மூத்த மகனின் தொலைபேசிகள், வேலை அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பர்ஸ் என்பவற்றை திருடிவிட்டு, எனது மற்றைய மகன் தான் திருடினார் என பொலிஸில் கூறினார்.

ஆகையால் எனது மகனுக்கு பின் பக்கமாக கையை வைத்து கைவிலங்கு போட்டுவிட்டு நெற்றியில் துப்பாக்கியை வைத்து அண்ணாவை நீயா கொலை செய்தாயா? அவரது ஆவணங்கள் எங்கே என மிரட்டினர். அதற்கு எனது மகன் “அண்ணாவை இழந்த சோகத்தில் நானே இருக்கிறேன். நான் அண்ணாவை கொலை செய்ததாக கூறுகின்றீர்கள். வேண்டுமானால் என்னையும் சுட்டுக் கொல்லுங்கள்” என்று கதறியுள்ளார்.

துபாய் பொலிஸார், இது தற்கொலை என முதல் கூறியுள்ளார்கள், பின்னர் இது ஒரு கொலை என கூறுகின்றனர். வைத்தியர்களுடைய அறிக்கை வந்த பின்னர் தான் எதுவும் கூறலாம் என கூறுகின்றனர். அந்த பெண் எனது இறந்த மகனின் தொலைபேசியில் எங்களுடன் பேசியதை பதிவு செய்து துபாயில் உள்ள எனது மற்றைய மகனுக்கு அனுப்பினேன்.

அவர் அதை துபாய் பொலிஸாருக்கு காட்டுவதற்கு சென்றவேளை அவர்கள் அவரை அதை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி அடித்துள்ளனர். காணாமல் போயுள்ளதாக கூறப்படும் எனது மகனின் தொலைபேசி அந்த பெண்ணிடம் இருப்பதால் அவர் அதில் உள்ள ஆதாரங்களை அழிக்கக் கூடும். அந்த கைப்பேசிக்கு நாங்கள் வாட்ஸ்அப் தகவல் போடும் போது அதனை அந்த பெண் பார்க்கிறார். ஆனால் பதில் எதுவும் போடுவதில்லை.

தற்போது அங்கிருக்கும் எனது மற்றைய மகனுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். நான் இங்கு உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சில இடங்களுக்கு சென்று கடிதங்களை வழங்கி விட்டேன். ஆனால் பதில் எதுவுமில்லை.

எனவே உரிய தரப்பினர் எனது மகனின் சடலத்தை இங்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். அத்தோடு என்னுடைய மற்றைய மகனையும் பாதுகாப்பாகவும் நாட்டுக்கு அழைத்து வர வழி செய்ய வேண்டும்“ என கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் சிறுமி கடத்தல் : வெளியாகிய முக்கிய தகவல்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் கைதான இளைஞர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் நேற்றுமுன்தினம் (13.05.2023), பெண்மணி ஒருவர் தனது 10 வயதுச் சிறுமியை தனியார் கல்வி நிறுவனத்தில் இறக்கியுள்ளார்.

அதேநேரம் மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை பொதுமக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதான இளைஞரிடம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிறுமியை அழைத்துச் செல்லவே முற்பட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையைப் பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு, சிறுமியின் தந்தை தன்னிடம் உதவி கோரியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தையும், கைதான இளைஞரும் நண்பர்கள். தனியார் வகுப்புக்கு வரும் போது, சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால், சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும், சிறுமிக்குத் தன்னைத் தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞர் விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில்…

நாட்டில் எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தடை ஏற்படுமென கடந்த காலங்களில் இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்த நிலையில் அவ்வாறான எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளதாக

குறித்து கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது முகாமைத்துவப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 30வது சரக்கு நிலக்கரி நுரைச்சோலையில் இறக்கப்படும் நிலையில், இப் பருவத்திற்கான மின்சார சபையின் முழு நிலக்கரித் தேவையும் பூர்த்தியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சடலம் மீட்பு!!

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று (15.05.2023) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தினர்.

மேலும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

வவுனியாவில் கிராம சேவையாளரால் குழப்பம் : போதையில் வந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் அலுவலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொதுமக்களுக்கான இலவச அரிசி வழங்கும் செயற்பாடு இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இன்று மதியம் குறித்த மண்டபத்திற்கு சென்ற அந்த பிரிவிற்குரிய கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்துடன். மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதற்கமைய பிரதேசசெயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் குறித்த கிராமசேவகரை அனுப்பிவைத்திருந்தார்.

எனினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர்.

தலைக்கனத்தில் ஆடிய சிவகார்த்திகேயன்.. சூப்பர் ஸ்டாரை வைத்து சைலெண்ட்டாக ஆப்பு வைத்த சன் பிக்சர்ஸ்!!

சிவகார்த்திகேயன்..

குறுகிய காலக்கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அயலான், மாவீரன் படங்கள் ரிலீஸ்க்கு வைட்டிங்கில் இருக்கும் நிலையில் கமல் ஹாசன் தயாரிப்பில் எஸ் கே 21 படத்தின் பூஜை ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே பிரின்ஸ் படத்தின் நெகட்டிங் மாவீரன் படத்தில் டிலே என்று பல விதத்தில் அடிவாங்கியிருக்கிறார்.

இப்படியொரு சமயத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய ஒரு ஆப்பினை சூப்பர் ஸ்டார் மூலம் கொடுத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்க புக் செய்திருந்தது.

அப்போது முத்தையாவின் சம்பளம் 2 கோடியாக இருக்கையில் தற்போது அவரின் சம்பளம் 6 கோடியாக மாறியிருக்கிறது. ஆனால் இதுவரை சிவாகர்த்திகேயன் முத்தையாவிடம் கதையை கேட்காமல் ஆட்டம் போட்டிருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் கூறியும் அதை செய்யாமல் இருந்து வந்துள்ளதை கடும் கோபத்தில் இருந்துள்ளனர் சன் பிக்சர்ஸ். மாவீரன் படம் ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ல் வெளியிடவுள்ளதாக உறுதிப்படுத்தினர்.

சிவகார்த்திகேயனுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு ஜூலை 14 ஆம் தேதியே படத்தினை திரையிட முடிவெடுத்துள்ளார்களாம்.

சவுதியில் கைதான கணவர்… மீட்கக் கோரி கதறும் இளம்பெண்!!

சவுதி அரேபியாவில்..

“சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காகச் சென்ற என்னுடைய கணவரை, போதைப்பொருள் கடத்திவந்திருப்பதாக விமான நிலையத்தில்வைத்து சவுதி அரேபியா போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

அவரை வெளிநாட்டுக்குப் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பிய ஏஜென்ட்டுகள் திட்டமிட்டு கருவாடு பார்சல் எனக் கூறி, அவரிடம் கொடுத்தனுப்பிய பார்சலில்தான் அந்த போதைப்பொருள் இருந்திருக்கிறது.

அதற்கும் என் கணவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரை மீட்க உதவி செய்யுங்கள்” என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சரத்குமார் என்பவரின் மனைவி கிரிஜா கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர்மல்க மனு அளித்தார்.

இது குறித்து கிரிஜாவிடம் நாம் பேசினோம். “2021-ம் ஆண்டுதான் எங்களுக்குத் திருமணம் முடிந்தது. என் கணவர் விவசாயம் செய்துவந்தார். தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் செய்ய முடியாமல் வருமானமின்றித் தவித்தோம்.

அவர் ஏற்கெனவே வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்க, மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக முயன்றார்.

அப்போது ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்ட்டான கேரளா மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த ரஷித் என்பவரிடம் என் கணவரை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.

அவர் ரூ.90,000 வாங்கிக்கொண்டு சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கான விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை ஏற்பாடு செய்து, கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 22-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

முன்னதாக பெங்களூரு விமான நிலையத்துக்கு என் கணவரை வழியனுப்பச் சென்ற அப்துல் ரகுமான், ஏஜென்ட் ரஷித் ஆகியோர் ஒரு பார்சலை என் கணவரிடம் கொடுத்திருக்கின்றனர்.

அதில் ராமநாதபுரம் கருவாடு இருப்பதாகவும், அந்த பார்சலை சவுதி அரேபியா விமான நிலையத்துக்குச் சென்றவுடன் தங்களுக்கு வேண்டியவர்கள் வந்து பெற்றுக்கொள்வார்கள் எனவும் கொடுத்தனுப்பியிருக்கின்றனர்.

அந்த பார்சலில் கருவாடு வாசனை வந்ததால் கருவாடு இருப்பதாக நம்பி அவரும் வாங்கிச் சென்றிருக்கிறார். சவுதி அரேபியா விமான நிலையத்துக்குச் சென்றவுடன், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் என் கணவரின் கைப்பைகளை சோதனை செய்திருக்கின்றனர்.

அதிலிருந்த பார்சல் குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு, ஏஜென்ட்டுகள் கொடுத்தனுப்பிய கருவாடு எனக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்திருக்கின்றன.

`அது என்னுடையது அல்ல’ என என்னுடைய கணவர் எவ்வளவோ கதறியும் கேட்காமல், அவரை சவுதி அரேபியா போலீஸாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்திருக்கின்றனர்.

அதேபோல் அந்த பார்சலை வாங்க விமான நிலையத்தில் காத்திருந்த கேரளாவைச் சேர்ந்த இரு நபர்களையும் கைதுசெய்திருக்கின்றனர். போலீஸாரிடம் சிக்கியவுடனே என் கணவர் என்னைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி, ஏஜென்ட்டுகள் தன்னை ஏமாற்றி போலீஸில் மாட்டிவிட்டிருப்பதாகவும், செய்யாத குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இது குறித்து ஏர்வாடியிலுள்ள அப்துல் ரகுமானிடம் சென்று கேட்டபோது, `கேரளாவைச் சேர்ந்த ஏஜென்ட் ரஷீத்தான் பார்சலைக் கொடுத்தார். அதில் என்ன இருந்தது என எனக்குத் தெரியாது’ என நழுவினார்.

கேரளாவிலுள்ள ஏஜென்ட் ரஷீத் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. என் கணவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. குடும்ப வறுமையால்தான் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கே வந்தார்.

அவர் வெளிநாடு சென்றபோது நான் நான்கு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக, என் கணவரை மீட்பதற்காகப் போராடி வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதன் காரணமாக, என்னால் வெளியில் அலைய முடியவில்லை. எனவே, இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு வெளிநாடுவாழ் மக்கள் நலத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தேன்.

அதன்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டு ஏர்வாடி போலீஸார் அப்துல் ரகுமானை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் தனக்கும் அந்த போதைப்பொருள் பார்சலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என போலீஸாரிடம் கூறினார்.

போலீஸார் கேட்ட பல கேள்விகளுக்கு அப்துல் ரகுமானால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்ட புகாரை ஏற்று, இன்று என்னை அலுவலகத்துக்கு நேரில் அழைத்ததன்பேரில் வந்து, ஆட்சியரைச் சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறினேன்.

ஆட்சியரும் என் கணவரை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்திருக்கிறார். என் கணவரை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள், எனக்கு அது போதும்” எனக் கைகூப்பி கண்ணில் நீர் ததும்பக் கூறினார். அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாளை முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!!

அரச ஊழியர்கள்..

அரச ஊழியர்கள் நாளைய தினம் முதல் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பில் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 17 லட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 1.4 ட்ரிலியன் ரூபா செலவிடப்படுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் தாயுடன் சென்ற 10 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தீவிர தேடுதலில் பொலிஸார்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் 10 வயது சிறுமியை கடத்த முயன்றதாக கூறப்படும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தை தனது தாயுடன் கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​சிலர் கடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சந்தேக நபர்களில் ஒருவரால் சிறுமியின் முகத்தில் தீங்கு விளைவிக்கும் திரவம் வீசப்பட்டதாகவும், அதன் பிறகு குழந்தை தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் உடனடியாக குழுவிலிருந்த ஒருவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முல்லைத்தீவைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேக நபர் இன்று (மே 14) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுமியின் தந்தை தாயைப் பிரிந்து திருகோணமலையில் வசிப்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, தற்போது முல்லைத்தீவு மாஞ்சோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுவதியின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

இலங்கையில்..

நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் ஜஸ் போதைபொருள்களின் பாவனை காரணமாக அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் கண்டி மாவட்டம் – கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 07-05-2023 ஆம் திகதி பாத்திமா முனவ்ரா என்ற யுவதியை கொலை செய்த இளைஞன் பல அதிர்ச்சி தரும் விடங்களை வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அதுதொடர்பான ஓடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. குறித்த ஓடியோவில், கஞ்சா பாவனை காரணமாகவே பெண்ணை கொலை செய்ததாகவும் தன்னுடைய வாழ்கை இன்று சீரழிந்து போவிட்டதாகவும் குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று கஞ்சாவை பாவித்த பின்னர் ஆட்டிற்கு குழை வெட்டியதாகவும் பாத்திமா முனவ்ரா என்ற யுவதியிடம் பணம் கேட்பதற்கே இடைமறித்தாகவும் ஆனால் யுவதி கூக்குரல் இட்டதால் அவரின் கழுத்தை நெரித்தாகவும் இளைஞன் வாக்கு மூலத்தில் குறிப்பிடுகின்றார்.

கஞ்சா பாவித்திருந்தபோது தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் தற்போது போதை தெளிந்ததும் தனது தவறை உணர்ந்து கொள்வதாகவும் இளைஞன் குறிப்பிடுகின்றார். மேலும், தமது பிரதேசத்தில் 98 சதவீதமான இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், கஞ்சா விற்பனை செய்கின்ற அனைவரையும் மக்கள் அடையாளம் காண்டு அவர்களை கைது செய்யவேண்டும் என்றும் இளைஞன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, பலப்பிட்டி என்ற பிரதேசம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வர்களே அதிகமாகவுள்ளதாக கொலை செய்த இளைஞன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு டுபாயில் நேர்ந்த சோகம்!!

யாழ்ப்பாணத்தில்..

குடும்ப வறுமை நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றைய சகோதரனை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் மற்றும் அவருடைய சகோதரரான 22 வயதுடைய கமலதாஸ் டிலக்சன் ஆகியோர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துபாய்க்கு வேலைக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில், நிலக்சன் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் விடுதியொன்றில் பணியாற்றி வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபருடன் இரு மலையாள நபர்கள் காலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் மாலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த இளைஞன் துபாயிலுள்ள இந்திய பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவர் மூலமாக பல இலட்சம் ரூபாய்கள் கடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் படுகொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தையும் தனது இரண்டாவது மகனான டிலக்சனையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர்களது தாயார் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பனவும் திருடப்பட்டு சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காவல்துறையினரும் குறித்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியாதுள்ள நிலையில், தனக்கும் போதியளவு வசதியின்மையால் எதனையும் செய்ய முடியாதுள்ளதாகவும் தாயார் தெரிவிக்கின்றார். எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடிய தரப்பினர் உரிய உதவிகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யானைகளின் நடமாட்டம் இருப்பதாக சுற்றுலா வழிகாட்டி தன்னிடம் தெரிவிக்கவில்லை : படுகாயமடைந்த இளைஞன் புகார்!!

தியலுமவில்..

கொஸ்லந்த, தியலும பிரதேசத்தில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருந்த இடத்தில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக சுற்றுலா வழிகாட்டி தன்னிடம் தெரிவிக்கவில்லை என காட்டு யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற 22 வயதான தனுஷ்க மதுஷன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியவுடன் வழிகாட்டி ஒருவர் ஓடிவந்ததாகவும் அந்த இடத்தை தானே சுத்தம் செய்ததாகவும் அங்கே கூடாரத்தை அமைக்குமாறு தெரிவித்திருந்தாக படுகாயமடைந்த இளைஞன் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கே கூடாராம் அமைத்து நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் சிறிது நேரம் உறங்கியபோதே நாய் குரைக்கு சத்தம் கேட்டு அவதானித்த போது யானை அநசவை அவதானித்ததாகவும் சுமார் 4 மணித்தியாலங்களாக உயிருக்கு பொராடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யானை நடைபாதையின் குறுக்கே கூடாரம் அமைந்திருந்த நிலையில் அவ்வழியே சென்ற யானை இருவரையும் தாக்கியிருந்தது. இந்த தாக்குதலில் 23 வயதுடைய மாத்தறை கெகுநடுர பிரதேசத்தில் வசிக்கும் தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்தார்.உயிரிழந்த யுவதின் உடல் இன்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவியின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி குறித்து பரபரப்பு தகவல்.. அமைச்சர் அதிரடி!!

களுத்துறையில்..

16 வயதுடைய பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டது என களுத்துறை நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, Prasanna Ranatunga அதிகார சபையின் அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முன்னதாக உடனடி விசாரணை அறிக்கை பெறப்பட்டு, அதன்படி, சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை மற்றும் தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நந்திக்கடல் தண்ணீரில் எரியும் விளக்கு.. சிங்கள மக்களும் வழிபடும் அம்மன் ஆலயம்!!

வற்றாப்பளை..

நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருவதுடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்கள் உடைக்கப்படுதல், வரலாற்று ஆலயங்கள் அமைந்துள்ள அமைவிடங்களில் விகாரைகளை கட்டுதல் என இலங்கை இராணுவத்தினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் என்பன அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு ஆரம்பிக்கும் பிரதேசமான பழைய செம்மலைப் பகுதியில், காலாகாலமாக இருந்துவரும் இந்துக்களின் ஆலயமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அங்கு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளைக் கடந்தும் வெடுக்குநாறி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய புராதன ஆலயத்தை கையகப்படுத்தும் கைங்கரியத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தொல்லியல் திணைக்களம், இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அதுமாத்திரமன்றி, முல்லைத்தீவு- குருந்தூர் மலை ஆதி ஐயனார் எனும் சிவ ஆலயத்தினை பௌத்த பிக்குகள் சிலர் மலையில் காணப்பட்ட இடிபாடுகளை பார்த்து, “இது எமது பௌத்த வழிபாட்டுக்குரிய இடம்” என கூறி அங்கு இராணுவத்தோடு இணைந்து தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சிப் பணி என்ற போர்வையில் அவ்விடத்தை பௌத்த மத அடையாளமாக மாற்றம் செய்வதற்காக முனைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

அத்தோடு உருத்திரபுரம் சிவன் கோவில் ஆக்கிரமிப்பு, மண்ணித்தலை சிவன் கோவில் சர்ச்சை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, திருக்கோணேஸ்வரர் ஆலய நில ஆக்கிரமிப்பு, கின்னியாய் வெந்நீரூற்று, கங்குவேலி பத்தினி அம்மன் ஆலய ஆக்கிரமிப்பு, மூதூர் மலையடிப் பிள்ளையார் ஆலயம், திரியாய் காணி அபகரிப்பு, கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியமை என இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க தமிழ் மக்களின் மதவழிபாடுகளை பேணும் பௌத்த மக்கள் எம்மத்தில் இருக்கவே செய்கின்றனர்.

தமிழ் மக்களின் சமய வழிப்பாட்டு நெறிமுறைகளையும், ஆன்மீக வழிபாடுகளையும் பின்பற்றும் சகோதர மொழி பேசும் மக்கள் தொன்றுதொட்டு எம்மத்தில் இருப்பதை காணலாம்.

இலங்கையில் பல சிவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற போதிலும், வற்றாப்பளை அம்மன் ஆலயம் தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் அமைகின்றது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்தில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி சகோதர மொழி பேசும் மக்களும் இந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதை காணலாம்.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்களில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர்.

பௌத்த ஆலயங்களில் பத்தினித் தெய்யோ என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று கதைகளை எடுத்து நோக்கும் போது, இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருவர் அங்கு வந்து தனக்குப் பசிக்கிறது என்று சொல்ல சிறுவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்துள்ளனர்.

பின்னர் மாலைஆகிவிட்டதால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறிய போது எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறியுள்ளனர். அதனை கேட்ட மூதாட்டி கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு கூறியுள்ளார்.. அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றியுள்ளனர். பின்னர் தனது தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்க சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட சிறுவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதன்போது திடீரென மூதாட்டி மறைந்த பிறகு வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்துள்ளது. இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவிக்க முதலில் அதனை நம்பாத நிலையில், மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டு அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர்.

வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசகராக இருந்தார்.

இப்படி பல வரலாற்று சிறப்புக்களை கொண்ட வற்றாப்பளை அம்மன் ஆலயம் தமிழ் மக்கள் மாத்திரமன்றி பௌத்த மக்கள் என அனைவரும் வழிபடும் தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

தமிழ் இநது ஆலயங்களை அக்கிரமிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் அரங்கேறினாலும், தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி சிங்கள மக்கள் மாத்திரமன்றி இராணுவத்தினரும் முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நம்பிக்கையோடு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசி திடீரென வெடித்து சிதறியதால் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்..

ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க மக்களே… சமயங்களில் ஆபத்து எந்த ரூபத்தில் வருகிறது என்றே புரியாமல் போய் விடுகிறது. பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் என்ன செய்வது என்றே தெரியாமல் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

இத்தனைக்கும் அந்த சமயத்தில் அவர் செல்போனைச் சார்ஜ் போடவில்லை.. எதுவும் செல்போன் விளையாட்டுக்களில் ஈடுபடவில்லை. யாருடனும் போனில் பேசவும் இல்லை. ச்ச்சும்மா பாக்கெட்டில் வெச்சிருந்த போன், அதுவாகவே வெடித்து சிதறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார்.

செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. உடனடியான பேண்ட்டில் பிடித்த தீயை சமயோசிதமாக ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். இந்த விபத்தில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹரிஷ் ரகுமான், இந்த செல்போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீக்காயமடைந்த நிலையில், ஹரிஷ் ரகுமான் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் 8 வயது சிறுமி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததில் சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் விபத்துக்குள்ளாவது, உயிரிழப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

செல்போன் பழுதடைந்தால் தரம் குறைந்த டூப்ளிகேட் பொருட்களைப் பயன்படுத்தி பழுதை சரி செய்ய கூடாது. சார்ஜரில் செல்போனைப் போட்டுக் கொண்டே பேச கூடாது.

வவுனியாவில் ஒருதலைக் காதல் விவகாரத்தால் பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்!!

வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் 26 வயதுடைய இளம் குடும்ப பெண் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான இளைஞன் ஒருவரும் இடியன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பறையனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (13.05) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நீலியாமோட்டையைச் சேர்ந்த தர்சினி என்ற பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத தர்சினி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளார்.

ஒரு மாதத்திளற்கு பின்னர் தனது குடும்பத்துடன் வீடு திரும்பிய தர்சினி, தனது தாயின் வீட்டில் இருந்துள்ளதுடன், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தனியாக ஒரு வீட்டில் தானும், தனது கணவரும், ஒன்றரை வயதுக் குழந்தையும், உறவினரான வயது முதிர்ந்த பெண் ஒருவரும் வசித்து வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, இரு தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரான இளைஞன் குறித்த வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று தர்சினியின் கணவன் குளத்தில் மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் அவர் தனது பிள்ளையுடன் உறங்கியுள்ளார். அப்போது சந்தேக நபரான இளைஞன் வீட்டில் நுழைந்து இடியன் துப்பக்கியால் தர்சினியின் தலைப் பகுதியில் சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகாலை ஒரு மணியளவில் கணவன் வீட்டிற்கு வந்த போது மனைவியும், மனைவிக்கு அருகில் பிள்ளையும் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு 119 பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பறையனாலங்குளம் பொலிசார், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரான இளைஞனை தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (13.05) காலை அப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் குறித்த இளைஞன் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இருவரது சடலங்களையும் மீட்ட பொலிசார், சடலங்களை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன், இளைஞனின் சடலத்தின் அருகில் இருந்து இடியன் துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் நீலியாமோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பிள்ளை ஒன்றின் தாயாரான நியூட்டன் தர்சினி (வயது 26), சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் பறையனாலங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இரு சடலங்களையும் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.