எரிபொருள் நெருக்கடி : அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை : விடுக்கப்பட்டது எச்சரிக்கை!!

எரிபொருள் நெருக்கடியால் நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பு அடுத்த ஒரு வாரத்திற்குள் முடங்கும் அல்லது பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார சேவை பணியாளர்கள் கடமைக்குத் திரும்புவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பில், ஏனைய அரச துறை ஊழியர்களைப் போலன்றி, வைத்தியர்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. இதனால், அவசர அழைப்புகள் மற்றும் மேலதிக நேரக் கடமைகளுக்காகத் தங்களது சொந்தச் செலவிலேயே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் பங்கீடு, கடமைக்குச் செல்வதற்கு போதுமானதாக இல்லை. எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதால் நோயாளர் பராமரிப்புக்கான பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்னரே இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும், அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் சுகாதாரத் துறைக்கு இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை.

எரிபொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் நடைமுறைச் சாத்தியமான தீர்வை வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைச் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், சுகாதார சேவைகளின் தொடர்ச்சி குறித்த மேலதிக முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

சட்டவிரோதமாக 55 லீட்டர் பெற்றோல் வைத்திருந்த இளைஞன் கைது!!

சட்டவிரோதமான முறையில் 55 லீட்டர் பெற்றோலைத் தனது வசம் வைத்திருந்த 39 வயதுடைய நபர் ஒருவர் புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை நேற்று(20.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கேகாலை, பொஸ்ஸல்ல – தம்பேல்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் கேகாலை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் புலத்கொஹுபிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று புதுப்பிக்கப்படும் எரிபொருள் QR குறியீடு : நாளை அதிகரிக்கும் விலை!!

எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு நடைமுறை இன்று நள்ளிரவின் பின்னர் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட QR குறியீட்டின் கீழ், நுகர்வோர் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருளைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்று வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கத்தில் ஒற்றை எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்கள் மூலம் எரிபொருள் வழங்கப்படும்.

இந்தநிலையில் இன்று எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் எரிபொருள் நிலையத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டால், அந்த விண்ணப்பத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக, கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

இன்று அல்லது நாளை அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்த வந்த கட்டளை : ஒரே இரவில் 15 பேர் அதிரடியாக கைது!!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில், நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் விசேட அதிரடிச் சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், கல்கிஸை குற்ற விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று (21.03.2026) சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்த விசேட சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள அரலிய வீடமைப்புத் தொகுதியிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கூர்மையான ஆயுதங்கள், சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘எல்லாவல தர்மசிறி பெரேரா’ (அல்டோ தர்மே) மற்றும் ‘சந்தோ’ (கவிந்து தனஞ்சய) ஆகியோரின் கீழ் இயங்கும் தாக்குதல் குழுவைச் சேர்ந்த 11 பேரும், ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவரும் மற்றும் பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண மாற்றம் குறித்து அமைச்சர் நளிந்த வெளியிட்டுள்ள தகவல்!!

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (20.03.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எவ்வித தடையுமின்றி மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். இதற்கான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் அரசு தற்போது முன்னெடுத்து வருகின்றது.

மின்சார நுகர்வு என்பது மாதத்திற்கு மாதம் மாறுபடக்கூடியது; சில காலங்களில் அதன் தேவை கணிசமாக அதிகரிக்கின்றது.

உலக சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன. சாதாரண காலங்களில் கோரப்படும் ‘டெண்டர்’ விலைகளை விடவும் தற்போது அதிக விலைகளே காணப்படுகின்றன.

இவ்வாறான சவாலான உலகளாவிய பொருளாதாரச் சூழலிலேயே நாம் எதிர்காலத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகிய அனைத்தும் உலகச் சந்தையில் நிலக்கரி மற்றும் மசகு எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

தடையின்றி மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்!!

நாட்டிற்குத் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களின் விலை உயர்வு, நாட்டின் எரிசக்தித் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண காலங்களை விட செலவுகள் அதிகரித்துள்ளதால், எதிர்கால மின்சாரக் கட்டணங்கள் மற்றும் மசகு எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் போது, ​​அரசாங்கம் இந்தச் சந்தை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

மேலும், நிலக்கரியின் தரம் குறித்த தற்போதைய அறிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம், திறமையான எரிசக்தி மேலாண்மையைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, பொதுமக்களுக்குத் தடையின்றி சேவைகளை வழங்குவதற்குத் தேவையான முடிவுகளை எடுக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

மேலும் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதே எங்களது பிரதான குறிக்கோள். அதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் மின்சாரப் பயன்பாட்டில் மாறுபாடுகள் உள்ளன. சில மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது.

நிலக்கரியின் தரம் குறித்த சில அறிக்கைகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் ஆராய்வோம். இருப்பினும், தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதே எங்களது நம்பிக்கையாகும்.

உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மறுபுறம், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் சாதாரண காலங்களில் வரும் விலைகளை, அதாவது எண்ணெய் விலை அல்லது மின்சாரக் கட்டணத்தைக் கருத்தில் கொள்ளாமல், இதையே கருத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், இன்று (21.03.2026) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீடச் சபை சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நேற்று (20.03.2026) நடைபெற்றது.

நேற்றைய தெரிவின் போது, கலைப் பீடச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நீர்யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், நீர்யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பயிற்சி கால்நடை மருத்துவரான சமீக்‌ஷா ரெட்டி (27), கர்நாடகா மாநிலத்திலுள்ள Tyavarekoppa Tiger and Lion Safari என்னும் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு பயிற்சிக்காக சென்றுள்ளார்.

அந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் நீர்யானை ஒன்று கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீரென உணவருந்த மறுத்துள்ளது.

ஆகவே, அந்த நீர்யானையை தெர்மல் கமெரா உதவியுடன் பரிசோதிப்பதற்காக அதன் கூண்டுக்குள் சென்ற மருத்துவர் சமீக்‌ஷா, ஏணி ஒன்றில் நின்றபடி அதை பரிசோதித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென தவறி விழுந்துள்ளார். அவர் விழுந்ததும் ஆக்ரோஷமான அந்த நீர்யானை அவரைத் தாக்கியுள்ளது.

உடனடியாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் சமீக்‌ஷாவை வெளியே இழுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்|றுள்ளனர். ஆனால், படுகாயமடைந்த சமீக்‌ஷா, நேற்று அதிகாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சமீக்‌ஷாவின் மரணம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், கர்நாடகா வனத்துறை அமைச்சர், சமீக்‌ஷாவின் மரணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன் : பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு!!

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், தனது மருமகனால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரது சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளி பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாக வாக்குமூலம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரியளவு சரிவு : எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று 10,000 ரூபாவால் குறைந்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

யாழில் கோர விபத்தில் தாயும் மகளும் பலி : எமனாகும் டிப்பர்கள்!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21.03.2026) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை கடந்தவாரம் யாழில் டிப்பர் மோதி இடம்பெற்ற விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் : உதவிகோரும் பொலிசார்!!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப் பகுதியில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும், நீண்ட நாட்களாகியும் அவர் குறித்த எவ்வித அடையாளங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த நபர் சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது புகைப்பட அடையாளங்கள் தெரிந்திருப்பின், உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு ஈரப்பெரியகுளம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591344

பொலிஸ் நிலைய அவசர அழைப்பு: 024-2223532

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீதி விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்!!

பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இபோச பேருந்து தடம் மாறிச் சென்று எதிர் திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பேருந்தில் தவறுதலாக மாறிய பை : கட்டுக்கட்டாக கிடந்த பணம் : மாணவன் செய்த செயல்!!

பேருந்தில் பயணம் செய்த போது தவறுதலாக மாறி வந்த பையிலிருந்த 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

11ஆம் தர மாணவன் ஒருவனே இவ்வாறு பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளான்.

தெல்கொட பகுதியிலிருந்து மாலம்பே மாதிரி ஆண்கள் பாடசாலைக்கு பேருந்தில் பயணித்த அகில தேசப்பிரிய என்ற மாணவனின் பாடசாலைப் பை, மற்றுமொரு பயணியின் பையுடன் தவறுதலாக மாறிப்போயுள்ளது.

பாடசாலைக்குச் சென்று தனது பையைத் திறந்து பார்த்த மாணவன், அதற்குள் 5000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு, உடனடியாக பாடசாலை அதிபர் சிசிர குணரத்னவிடம் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அதிஅர் ஊடாக, குறித்த பையிலிருந்த வங்கிப் புத்தகம் ஒன்றின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வங்கியினைத் தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளர் யார் என்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே அந்தப் பணத்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. தனது வீட்டை நிர்மாணிப்பதற்காக வங்கியில் இருந்து இந்தப் பணத்தை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து மாலம்பே காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாயும் உரிய ஆசிரியையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் வறுமை மற்றும் தேவைகள் நிறைந்த சூழலிலும், பேராசை கொள்ளாமல் நேர்மையாகச் செயற்பட்ட மாணவன் அகில தேசப்பிரியவை பொலிஸார் மற்றும் பாசடாலை அதிபர் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.

 

உலகமுடிவில் உயிரை பணயம் வைத்து மாணவியை காப்பாற்றிய சாரதி : குவியும் பாராட்டுக்கள்!!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த பகுதிக்கு சென்றிருந்தது. அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்துள்ளார்.

அந்த வேளையில், மாணவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என அறியப்படும் அவர், தன்னுடைய உயிரையே பணயம் வைத்து உடனடியாக பள்ளத்தாக்கிற்குள் இறங்கியுள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக, கீழே விழுந்திருந்த மாணவியை தாங்கிப் பிடித்தபடி, இராணுவத்தினர் வரும்வரை அவர் துணிச்சலுடன் காத்திருந்தார். பின்னர் மீட்பு குழுவினரின் உதவியுடன் மாணவி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டார்.

இந்த தைரியமான மற்றும் பொறுப்பான செயல் காரணமாக, வாகன சாரதி பிரான்சிஸுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

9 வயது சிறுமியை இழுத்துச் சென்ற முதலை : துயரத்தில் உறவுகள்!!

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார். அவர் தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.

எனினும், குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.