கொழும்பில் சிக்கிய பெண் – விசாரணையில் அம்பலமான மோசடி!!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடையைச் சேர்ந்த 65 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு : தடுமாறும் தங்கத்தின் விலை : இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.

மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000 லிருந்து சுமார் ரூ. 345,000 ஆகவும், ஒரு பவுண் எடையுள்ள திருமண தங்க நெக்லஸின் விலை ரூ. 380,000 லிருந்து சுமார் ரூ. 400,000 ஆகவும், ஒரு மோதிரத்தின் விலை ரூ. 360,000 லிருந்து சுமார் ரூ. 380,000 ஆகவும் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு பவுண் எடையுள்ள சராசரி மோதிரத்தின் விலை சுமார் ரூ. 340,000 லிருந்து சுமார் ரூ. 360,000 ஆகவும், திருமண மோதிரத்தின் விலை சுமார் ரூ. 100,000 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

24 கரட் பவுண் ஒன்றின் விலை தற்போது ரூ. 354,000 ஆகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை ரூ. 327,500 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே போர் வெடிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

போர் வெடித்து பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் உலக சந்தையில் தங்க இருப்பு குவிவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞன் பரிதாபமாக மரணம்!!

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது தனது சகோதருடன் இணைந்து கொத்து ரொட்டி சாட்பிட்டதாகவும், இரவு 10.30 மணியளவில், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக கல்பத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிப்படை சிகிச்சையின் பின்னர் அவர் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்து ரொட்டியை சாப்பிட்ட சகோதரருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான பிரேத பரிசோதனையை ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன நடத்த உள்ளார்.

அதன் பின்னரே அவரது மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி டினோஜாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும் பெண்ணினுடைய மரணம் தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன்.

இதனையடுத்து, அந்தபெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன்.

இந்த நிலையில், சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதேவேளை, குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.

மேலும், குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவேன்.

குறிப்பாக இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் மனுவினைக் கையளிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன் போது பதிலளிக்கையில், “வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால்தான் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரிய தரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் தொம்மைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோரும் இந்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணையினைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பலியான தாய் : குழந்தை நினைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!!

கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து நிழற்குடை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறப்பு விழா நிகழ்வு நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் (25.12.2024) அன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப்பணிமனை அருகில் A9 வீதியில் இந்த விபத்து சம்பவத்திருந்தது.

கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மது போதையில் தவறாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து, மற்றைய மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாயாரும் உயிரிழந்திருந்தார்.

இந்த விபத்து சம்பவத்தினை நினைவு கூறுவதாக குறித்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. விபத்தின் போது உயிர் தப்பிய மற்றைய சிறுமியினால் பேருந்து நிழற்குடை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாரிய சுனாமி அலை : செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்!!

வரலாற்றில் முதன்முறையாக,சுனாமி அலை உருவாகும் தருணத்திலிருந்து அவை கடலில் எவ்வாறு பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகக் அவதானிக்க முடிந்துள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் கடலில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சுனாமி அலை விண்வெளியில் இருந்து நேரடியாக நாசாவால் அவதானிக்கப்பட்டுள்ளது.

120 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சுனாமி அலை, நாசாவின் SWOT (Surface Water and Ocean Topography) செயற்கைக்கோளால் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 29, 2025 அன்று ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையில் உள்ள குரில்-கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சுனாமி அலைகளை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடிந்தது.

‘நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 70 நிமிடங்களுக்குப் பிறகு சுனாமி அலைகள் எழுந்தன.நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக கடற்பரப்பின் சில பகுதிகள் 13 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு மண்டலம் 402 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்புகள் நவம்பர் 2025 இல் சீஸ்மிக் ரெக்கார்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு – இலங்கையில் பதிவாகப்போகும் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக குறித்த அதிகாரசபையின் துணைப் பணிப்பாளர் இந்திக பண்டார கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தற்போது 357,000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. இருப்பினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

நேற்று (25.12.2025) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,479 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸுக்குப் பிறகு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞன் : மூவர் கைது!!

வவுனியா – வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யோ.அபிசாந் என்ற இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த செட்டிகுளம் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

தொலைபேசி கலந்துரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் : தூக்கி வீசப்பட்ட இளைஞன்!!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஷெஹான் விதானபதிரண என்ற இயற்பியல் ஆசிரியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞனின் கடைக்கு முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞனின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷெஹானுக்கு சொந்தமான வெள்ளை நிற ஹோண்டா வெசல் கலல்கொட, பன்னிபிட்டி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.

கடை உரிமையாளர் அதை அகற்றுமாறு கேட்டதில் கோபமடைந்த காரின் உரிமையாளரான ஆசிரியர் ஒரு இளைஞரை தூக்கி தரையில் வீசியதை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்குள்ளானவர் பிரபல திருமண திட்டமிடுபவரான லசந்தா என்ற இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கூரையை பிய்த்து கொட்டிய அதிஸ்டம் : ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர் தலை சுற்ற வைக்கும் தொகை!!

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 2 டொலருக்கு வாங்கிய ‘பவர்போல்’ லொத்தரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்துள்ளது.

கிருஸ்துமஸ் நாளில் குறித்த நபருக்கு (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 55,728 கோடி ரூபாய்) அதிஸ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல ‘பவர்போல்’ லொத்தரின் நேற்றைய (டிசம்பர் 25) குலுக்கலில், ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

வெறும் 2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில், 4, 25, 31, 52, 59 ஆகிய எண்களும், சிவப்பு நிறத்தில் 19 என்ற எண்ணும் என மொத்தம் 6 எண்களும் சரியாகப் பொருந்தியுள்ளன.

அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவாகும். 2022 ஆம் ஆண்டு வெல்லப்பட்ட 2.04 பில்லியன் டொலர் பரிசே இதுவரை உலக சாதனையுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற நபர் தனது 1.8 பில்லியன் டொலர் பரிசைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

பெரும்பாலான வெற்றியாளர்கள் இந்த முறையையே தேர்வு செய்கின்றனர் (வரி பிடித்தங்கள் போக ஒரு குறிப்பிட்ட தொகை உடனடியாக வழங்கப்படும்).

அடுத்த 29 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையாக பிரித்துப் பெற்றுக் கொள்ளலாம். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பவர்போல் லொத்தர் குலுக்கல் முறை, தற்போது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் 45 மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு சிறுமி மரணம் : விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை!!

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அடங்கலாக 06 பேர் கொண்ட குழு, இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம்.உமாசங்கர் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.

விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவு ஒவ்வாமைக் காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

உரிய முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமையாலேயே சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ள துடன், சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைய, விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர் மாயம்!!

நாட்டைத் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி முதல் அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:

தொலைபேசி எண்கள்

074 068 4243
070 380 8757

பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன் : இந்தோனேசியாவில் ஆச்சரியம்!!

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது.

அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர். உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா முராங் என்ற நபர் 12 வயது வரை சாதாரணமாக இருந்த நிலையில், அதன் பிறகு இந்த முகம் மாறும் விசித்திர மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் சாதாரணமாகவும், இரவில் கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறத் தொடங்கி விடுகிறது. காலை முழுவதும் சாதாரண மனிதரை போல இருக்கும் இவர் , இரவில் மட்டும் பல்லியின் முகத்தை கொண்டவர் போல் மாறிவிடுகிறார்.

இந்த விசித்திரமான மாற்றம் அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குழந்தைக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

87 வயதில் தந்தையான நபர் : மனைவிக்கு வயது 37 : வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!

சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியரான ஃபேன் செங், தனது 87வது வயதில் தந்தையாகியுள்ளார். பாரம்பரிய சீன ஓவியங்களுக்கு புகழ்பெற்ற கலைஞர் ஃபேன் செங் (Fan Zeng).

இவருடைய ஓவியங்கள் 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 பில்லியனுக்கும் அதிகமான யுவானுக்கு ஏலம் போயின.

இந்த தொகையானது இந்திய மதிப்பில் சுமார் 5,000 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக, இவர் 1991யில் வரை ஒரு ஓவியம் 18.4 மில்லியன் யுவானுக்கு (2011யில்) விற்கப்பட்டது.

87 வயதான ஃபேன் செங் 37 வயது பெண்ணான சூ மெங்குடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 11ஆம் திகதி குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஃபேன் செங் அறிவித்தார்.

ஆனால், தனது ஒரே மகன் என்று அவர் கூறியது சர்ச்சையானது. ஏனெனில், ஃபேன் செங்கிற்கு ஏற்கனவே சியாவோஹுய் என்ற மகளும், ஃபேன் சோங்டா என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.

என்றாலும், அவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், அவர்களின் குடும்பங்களுடனான உறவுகளை முழுமையாகத் துண்டிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபமாக பறிபோன 26 வயதுப் பெண்ணின் உயிர்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா (27). இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லசந்திராவில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவரது வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் சந்தேகம் என்ற கொடூரன் புகுந்தான். அதாவது லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யாவை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் மல்லசந்திராவுக்கு வந்து லிகித் சிம்ஹாவிடம் அட்வைஸ் செய்து வைத்து இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பின்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன ஐஸ்வர்யா கணவர் வெளியில் சென்றதும் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டு அழுது கதறினார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு தெரிவித்ததை அடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தனது மகள் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 10 நாளில் மனைவியை தலையணையையால் கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை தளபதி தெருவில், புதிதாக திருமணம் செய்த தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணினி மென்பொறியாளரான விஜய் (25), தனது அலுவலக சக ஊழியரான யுவஸ்ரீ (21)யை கடந்த டிசம்பர் 13-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

செவ்வாய்க்கிழமை யுவஸ்ரீயின் தங்கை வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டியிருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் வந்த குன்றத்தூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, யுவஸ்ரீ உயிரிழந்த நிலையில் கிடந்தார். விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக யுவஸ்ரீயை தலையணையால் மூச்சுத் திணறடித்து கொன்றுவிட்டு, விஜய் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.