இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்!!

இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (08.09.2025) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன்,

பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05.09.2025) மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறு குழந்தை ஒன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் எரிபொருள் விநியோக நிலையத்திலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பாரவூர்தியில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!!

நுவரெலியா – வட்டவளை பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05.09.2025) இடம்பெற்றுள்ளது. கம்பளையிலிருந்மு ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தாய் , தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தவுடனே உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆண் குழந்தை : இந்தியாவில் அதிசயம்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு : இலங்கையருக்கு காத்திருக்கும் பெரும் அதிசயம்!!

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது.

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங் கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும்.

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,

கிரகணம் ஆரம்பம் – இரவு 8:58 (செப்டம்பர் 7)

பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9:57

முழுமையான கிரகணம் – இரவு 11:01

அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42

கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12:22 (செப்டம்பர் 8)

பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1:26

கிரகணம் முடிவு – அதிகாலை 2:25

தமிழக முகாமில் ஈழப் பெண்ணின் ஆசை : இயக்குநர் மிக்ஷ்கின் அறிவிப்பால் அதிர்ந்த அரங்கம்!!

தமிழக முகாமில் 30 வருடங்களாக வாழ்ந்து வரும் ஈழத்தை சேர்ந்த தம்பதிகளின் மகளின் கல்விச் செலவை இயக்குநர் மிக்ஷ்கின் ஏற்பதாக கூறியுள்ளமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி பாடல் போட்டியில் கலந்துகொண்ட ஈழததை பின் புலமாக கொண்ட மாணவிக்கே இயக்குநர் மிக்ஷ்கின் உதவ முன்வந்துள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற உளநாட்டு போரில் தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் 30 வருடங்களாக தமிழக அதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

தனது மகளுக்கு மருத்துவராக வரவேண்டும் என்பதே அவரின் ஆசை என கூறிய யுவதியின் தந்தை, தனது சூழ்நிலையால் மகளின் விருப்பத்தை நிறவேற்ற முடியாத சூழலில் உள்ளதாக கூறுகின்றார்.

இந்நிலையில் இசைப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் மிக்ஷ்கின் , யுவதியின் படிப்பு செலவை தானே ஏற்பதாக கூறியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் : பேருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையை உலுக்கிய பதுளை – எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்த சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் (04.09) கவிழ்ந்ததில் தங்காலை நகர சபை செயலாளர், 12 நகர சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித சட்டங்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

குறித்த வீதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் குழு ஒன்று விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்ய அந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளது.

மேலும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் (NTMI) மற்றும் போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்த அதிகாரிகள் குழு, இன்று (06) எல்ல பகுதிக்குச் சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்யவுள்ளதாக வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அதேவேளை பதுளை – பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் உடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் (05.09) இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார் .

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் விலைகள்!!

சில உணவு வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

நேற்று (05.09) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பிரைட் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த உணவு வகைகளின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் சப்பற திருவிழாவிற்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்!!

வவுனியாவில் சப்பற திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா இன்று (05.09) இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரும் ஆலயத்தில் நின்ற மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், பட்டா ரக வாகனத்தின் பின்பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து : நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05.09.2025) அதிகாலை ஏ-09 வீதியின் பனிக்கன் குளம் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த பாரஊர்தி மோதி விபத்து ஏற்பட்ட அதே நேரம் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் பாரஊர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்!!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் அரோனிக்கா ரேச்சல் என்ற மாணவி அகில இலங்கையில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி 189 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், வடமாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அந்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களில் 76 பேர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வவுனியா தெற்கு வலய மாணவி ஒருவர் இரண்டாம் இடம்பெற்றமை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கிய விபத்து : நடத்துனர் கூறும் தகவல்!!

டிப்பர் வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டதாக எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது, பேருந்து வேகமாக சென்றதா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அந்தளவு வேகமாக பேருந்து பயணிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு நடந்த அனைத்து விடயங்களும் நினைவில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து ஏற்பட்ட போது மயக்கமடைந்து வைத்தியசாலையிலேயே கண் விழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேருந்தின் பிரேக் செயலிழந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நேற்று(04.09.2025) நள்ளிரவு ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும் 18 பேர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்ல விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்!!

எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினத்தை முன்னிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரது முகத்தில் கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்த நபர் தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எல்ல பிரதேசத்தில் சுற்றுலா சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்ல விபத்தில் திருமணமாகி இரு மாதங்களேயான ஆண் ஒருவர் பலி!!

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார். எனது கணவர் அன்பானவர், அவர் என் உணர்வுகளைப் புண்படுத்தும் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை.

அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன். ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை. பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்” எனக் கூறியிருந்தார்.

எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள் : சோகத்தில் முடிந்த பயணம்!!

இலங்கையில் நேற்றிரவு நடந்த துயரமான பேருந்து விபத்துக்கு சற்று முன்பு எல்லவில் எடுக்கப்பட்ட தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களின் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. எல்லவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு சுமார் 30 பேர் கொண்ட குழு ஒன்றாக போஸ் கொடுப்பதை படங்கள் காட்டுகின்றன.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் பயணித்த தனியார் பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவர்களின் சுற்றுலா சோகத்தில் முடிந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்ல கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் தொடர்பான விபரங்கள்!!

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான நீதவான் விசாரணை இன்று பிற்பகல் நடத்தப்பட்டது.

அதற்கமைய, தியதலாவ மருத்துவமனையில் வைக்கப்பட்ட, 8 உடல்கள் விசாரணை உட்படுத்தப்பட்டன. பண்டாரவளை பதில் நீதவான் செனவிரத்ன வீரசிங்கவின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிரிழந்தவர்ள் 27 வயதான டி.எச். டிரான் திவங்க, 32 வயதுடைய கே.ஏ. தினுஷிகா லக்மினி, 54 வயதான நிஹால் ரஞ்சித் வீரசிங்க, 42 வயதான மதுஷா அனுராதினி, 39 வயதான நிலுஷா ஸ்ரீமாலி,

45 வயதான ஷானிகா அனுராதினி, 34 வயதுடைய ஜெயனி ஜீவந்திகா மற்றும் 45 வயதான ஷானிகா அனுராதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.