மரக்கிளை முறிந்து பெண் உயிரிழப்பு!!

கொழும்பில் மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆவார்.

குறித்த பெண் வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்துளார். இதனையடுத்து பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம் : மக்களே அவதானம்!!

பொது மக்களுக்கு , பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி, பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அவர்களின் வர்த்தகத்தில் தவறுகள் இருப்பதாக கூறி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பண்ம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கோரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் யுவதியின் மோசமான செயல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்து கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸார் யுவதியை சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.

விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு புதிய தேர்வு!!

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ‘TOEFL Essentials’ என்ற புதிய ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

‘IELTS’ அல்லது ‘CELPIP’ தவிர விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு’ தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா(IRCC) இந்தத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 1.5 மணிநேரம் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வு மிகவும் குறுகியதாக கருதப்படுகின்றது.

மக்கள் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைச் சரிபார்க்க இந்தத் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வில், கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன.

பணியிடப் பேச்சுக்கள் அல்லது அன்றாட உரையாடல்கள் போன்ற நிஜ வாழ்க்கை தகவல் தொடர்புகளில் கவனம் செலுத்தும் தேர்வாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது கனடாவில் வாழவும் வேலை செய்யவும் தயாராகும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு பயனுள்ள தேர்வாக அமைகின்றது. இந்தத் தேர்வு குறைந்த விலையில் உலகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தேர்வை எழுதி 6 நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ மதிப்பெண்கள் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண்களை பல்வேறு நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் அனுப்பலாம்.

ஒட்டுமொத்தமாக, இந்தப் புதிய தேர்வு, கனடாவுக்குச் செல்ல விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு குடியேற்றத்தை எளிதாக்குகிறது.

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் அடுத்த கணிப்பு!!

2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.

இவர் 1996ஆம் ஆண்டே மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்திருக்கிறார்.

அந்தவகையில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு, மிக மோசமான இயற்கைப் பேரிடர்கள் நிகழும் ஆண்டாக இருக்கும் என்றே பாபா வங்காவின் கணிப்புகள் சொல்கின்றன.

உலகம் முழுக்க ஏராளமான நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள், மிக மோசமான மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கைப் பேரிடர்கள் மனித உயிர்களையும் உட்கட்டமைப்புகளையும் சீர்குலைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் கணித்திருப்பது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் உண்மையாகி வரும் நிலையில், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. பல இடங்களில் நிலநடுக்கம் கூட அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய நாடுகளுக்கு இடையேயான போர்களும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், உலகின் மிக முக்கிய துறைகளை இயந்திரங்கள் நிர்வகிக்கத் தொடங்கும் இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகத்துடன் தொடர்பில்லாத வேற்றுக்கிரக விண்கலன்கள் பூமிக்கு வரும், ஏலியன்களை மனிதர்கள் சந்திப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் உறைகளுக்குப் புதிய வரி விதிப்பு : அரசாங்கம் தீவிர கவனம்!!

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட எந்தவொரு விற்பனை நிலையத்திலும் பொலித்தீன் உறைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக கட்டணமொன்று அறவிடப்படும் சூழ்நிலை உருவாகும்.

சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான வரி விதிப்பொன்றை மேற்கொள்வது குறித்து சுற்றாடல் அதிகார சபை, நிதியமைச்சுக்கு முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

தற்போதைக்கு குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் தீவிர கவனம் திரும்பியுள்ளது.

பொலித்தீன் உறைகளுக்கு வரி விதிப்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் அதற்கென புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் சுற்றாடல் அதிகார சபை முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

 

முச்சக்கர வண்டி – சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் பலி!!

காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட – மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் சைக்கிளின் செலுத்துனரும் காயமடைந்துள்ள நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ர் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். மேலும் விபத்து தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தமையுடன் இறுதி அறிவித்தலையும் விடுத்திருந்தனர்.

நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் தலைமையில் சென்றிருந்த குழுவினர் உணவகங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் போது அவற்றில் ஒர் உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி காணப்பட்டமை சுகாதார பரிசோதகரினால் உறுதி செய்யப்பட்டிருந்தமையுடன் அவ் உணவகத்திற்கு இறுதி அறிவித்தலும் வழங்கப்பட்டது.

மேலும் வர்த்தக நிலையங்களுக்கு சென்றிருந்த குழுவினர் வியாபார உரிமைப்பத்திரத்தினை சோதனைக்குட்படுத்தியமையுடன் உரிமைப்பத்திரம் இன்றி காணப்பட்ட வியாபார நிலையங்களை உடனடியாக அவற்றினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டது.

அத்துடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட இடத்திற்கு சென்ற குழுவினர் அங்கு கழிவு அகற்றுவதிலுள்ள சிக்கல் தொடர்பிலும் வீதியிலுள்ள பாகங்களை அகற்றுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மேலும் இவற்றினை மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்யாவிடில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திடீர் விஜயங்களின் போது சட்டங்களை மதிக்காமை மற்றும் பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைது!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.

அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 வயது சிறுமி மூளையை தின்னும் அமீபாவால் பலி : தொடரும் சோகம்!!

கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா எனக் கூறும் முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அவ்வப்போது இதன் பாதிப்பு இருந்துவரும் நிலையில், கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த குழந்தைக்கு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 40 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

ஏற்கனவே ஆகஸ்ட் 14 ம் தேதி தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தான் இந்த அமீபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடுகிறது. சில நீச்சல் குளங்களிலும் இருக்கலாம் எனத் தெரிகிறது.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழைந்து விடலாம். நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் வாழ்வதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

இந்தியாவில் 1971ல் முதல்முதலாக கண்டறியப்பட்ட நிலையில் க 2016ல் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது. 2016 முதல் 2023 வரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 36 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டை பொறுத்தவரை இத்துடன் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

திருமண வரவேற்பில் நடனமாடிய பெண் பரிதாபமாக மரணம்!!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம் அவர்களின் மனைவி ஜீவா மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென மராப்டைப்பு ஏற்பட்டு நடமாடிக்கொண்டே மயங்கி விழுந்தார்.

அங்கு உள்ளவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தும் கண் முழிக்காததால், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதியிலே மரணம் அடைந்ததால், திருமண நிகழ்ச்சியில் சோகதத்தை ஏற்படுத்தியது.

நடமாடிக்கொண்டே இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிது நொடிகள் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா அடுத்த சில நொடிகளில், தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பாடகர் வேல்முருகன் அங்கிருந்து அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார்.

இதுகுறித்து மருத்துவர்கள் நடனம் போன்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடும்போது, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தேவை ஆகியவை அதிகமாகிறது.

உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் இதயத்தை கடுமையாக பாதித்து, திடீரென மயக்கமடையச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

இதனால் நடனம் ஆடுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழலாம் என தெரிவிக்கின்றனர்.

ஹைபர்ட்ரோபிக் கார்டியோமயோபதி என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு இதயத்தின் ரத்தப் பம்பிங் திறன் குறைந்து, திடீரென மயக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

நான் ஒரு முட்டாள்… வீடியோ வெளியிட்டு இரு குழந்தைகளுடன் தந்தை விபரீத முடிவு!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார்.

12 வயது குமரகுரு என்ற மகனும், 7 வயது தன்யாஶ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று ராஜா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். பிற்பகல் 2 மணிக்கு ராஜா தனது மனைவி சுகன்யா மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமான ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில் அவர் நான் படித்த முட்டாள். நான் உங்களிடம் இருந்து பிரிகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், பைத்தியக்காரத்தனமான ஒரு முடிவை எடுக்கிறேன்.

நான் யாருக்கும் கஷ்டத்தையும், பாரத்தையும் கொடுக்க விரும்பவில்லை, நான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து 2 குழந்தைகளும், நீங்களும் எங்களை மன்னிச்சுக்குங்க, நாங்களும் எங்க அப்பாவோட சாமிகிட்ட செல்கிறோம் எனக் கூறி இருந்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பதறி அடித்துக்கொண்டு உடனடியாக ராஜாவின் வீ்ட்டுக்கு ஓடிச்சென்று பார்த்தனர். மனைவி சுகன்யாவும் அங்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் ஒரே சேலையில் அவரது 2 குழந்தைகளும்,

சுடிதார் துப்பாட்டாவில் ராஜாவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை பார்த்து உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.

கணவர் மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து சுகன்யாவும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ராஜா தனது 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் கடித்ததில் 4 மாதங்களாக போராடிவந்த 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு.

இவர் ஏப்ரல் 24ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூரு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 4 மாதங்களாக உயிருக்கு போராடிய நிலையில் இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதமமாக உயிரிழந்தார்.

சமீபத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோய் காரணமாக இறப்பு அதிகரித்து வருவதால், அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் எனறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி, மற்றும் கண்காணிப்பு கட்டாயம் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மகளின் திருமணம் நடந்த நாளில் தாய் மயங்கி சரிந்து விழுந்து பலி!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

மகள் தன்னை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கல்யாணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நட த்தி வருகிறார்.

ஓடும் புகையிரதத்தில் நடுவழியில் இளம் பெண் நீதிபதி மாயம் : தேடும் பணிகள் தீவிரம்!!

ரயில் ஓடிக் கொண்டிருக்கையில், திடீரென இளம் பெண் நீதிபதி தேர்வர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து நர்மதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவில் நீதிபதி அர்ச்சனா புறப்பட்டு சென்றுள்ளார். 29 வயதாகும் இவர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வருவதோடு, சிவில் நீதிபதி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தார்.

அந்தப் பயணத்திற்காக B3 – இடம் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரது பையில் ரக்‌ஷா ஷாபந்தனுக்கான ராக்கி, பரிசுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பரிசு பொருட்கள் இருந்தன.

அதே நாள் இரவு 10:16 மணிக்கு தனது அத்தைக்கு தொலைபேசியில் “போபாலுக்கு வந்து விட்டேன்” எனக் கூறினார். அதன் பிறகு அவரை காணவில்லை.

மறுநாள் காலை ரயில் கட்னி தெற்கு நிலையத்தில் காத்திருந்த போது அர்ச்சனா ரயிலில் இருந்து வெளியில் வரவே இல்லை.

அவரது பை மட்டும் பயணம் செய்த இருக்கையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கடைசி டிஜிட்டல் தடம் நர்மதா ரயில்வே பாலத்திற்கு அருகே செல்போன் பிங் மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து கட்னி, இடார்சி பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. GRP காவல் கண்காணிப்பாளர் “அந்த நாளில் மத விழா நடைபெற்றது. அவளைக் கடத்தியிருப்பது கடினம்.

அதே நேரத்தில், தானாகவே அவர் இறங்கி மற்றொரு இடத்திற்கு சென்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அரச்சனாவின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணையை நாடியுள்ளனர்.

போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அர்ச்சனா குறித்த தகவலை அளிப்பவர்களுக்கு ₹51,000 சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழர் பகுதியில் தலைமறைவான மூவரை தேடி பொலிஸார் வலைவீச்சு!!

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இருப்பதும் தெரியவந்தது.

அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, அதற்குள் சந்தேக நபர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591966 அல்லது 071-8596150 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.