மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 53 ஆவது மைல்கல் அருகில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் (SwRI) தலைமையிலான குழு, யுரேனஸைச் சுற்றி வரும் முன்னர் அறியப்படாத ஒரு சந்திரனைக் கண்டறிந்துள்ளது,
ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இந்தநிலையில் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று ரூ.70 விலை குறித்த தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) ரூ.500,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள், கடந்த 16 ஆம் திகதி துறைமுக நகரத்தில் உள்ள கடைகளை பரிசோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட கடையில் ரூ.70 விலை குறித்த 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை
2025.04.01 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண்.2430/15 மற்றும் எண்.93 இன் 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) இன் கீழ் அதிக விலைக்கு விற்பனை செய்தமை குற்றமாகும்.
தனது நண்பியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரபோவதாக மிரட்டிய குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த இளைஞனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
அந்த இளம் பெண், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் வட்ஸ்அப் மூலம் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி தன்னை மிரட்டியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் இரு தரப்பு சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குருநாகல் நகரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் கொத்து ரொட்டிக்குள் இருந்து இறந்து கிடந்த புழுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் கொழும்பு வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 18ம் திகதி கொத்து ரொட்டியொன்றை உட்கொள்ளச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
கொத்து ரொட்டியை உட்கொள்ளும் போது அதற்குள் இருந்து இரண்டு அங்குலம் நீளமான புழுவொன்று இறந்த நிலையில் கிடப்பது அவரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வினவியபோது அவர்கள் மௌனம் காத்துள்ளனர்.
இந்நிலையில் குருநாகல் நகரின் உணவகங்கள் தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாகவே இவ்வாறான அசுத்தமான உணவு வகைகள் அங்கு பரிமாறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக புகழ் பெற்ற திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. உலகம் முழுதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் காணிக்கையாக உண்டியலில் பணமும், ஏழுமலையானுக்கு தங்க நகைகளையும் பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், ஏழுமலையானை நம்பி தொழில் துவங்கினார். அவர் நிறுவனத்தின் பங்குகள் 60 சதவீதம் விற்கப்பட்டதை அடுத்து, 7,000 கோடி ரூபாய் அவர் வருமானம் பெற்றுள்ளார்.
ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 121 கிலோ தங்கம் அளித்துள்ளார். அவர், தன் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.
நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன்நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அந்தபகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். நேற்றுமுன்தினம் இரவு அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் என்ற 45 வயதான குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைத்து அவர் உயிரிழந்தார்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி செயற்பட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நேற்று காலை 9.00 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.
தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்க குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21.08.2025) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.
வழமையாக பாடசாலை விடுமுறை நாட்களில் தேர்த்திருவிழா இடம்பெறும் எனவும், எவ்வாறாயினும் இம்முறை பாடசாலை நாளொன்றில் திருவிழா இடம்பெறுகின்றது.
இதன் காரணமாக யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை இன்று (20) சந்தித்து நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதனை ஏற்ற பிரதமர் நாளையதினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும், விடுமுறை வேண்டும் என அதிபர்கள் கோரும் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறையை வழங்க வடக்கு கல்வித் திணைக்களங்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும்,
எவ்வாறாயினும் இது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் ஒரு முறை கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடயத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எமது செய்திப் பிரிவுக்கு அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மகனுக்காக 100 வருடங்கள் பழமையான Royal Enfield மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளார். இது பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் எதிர்காலத்தில் தனது மகனின் பயன்பாட்டிற்காக அந்த மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அதிகளவு பணம் செலவிட்டதாகவும் பல முறை தோல்வி கண்ட பின்னே மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளதாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களை குறிவைத்து இலங்கையில் நடக்கும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள், தாய்மார்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை இலக்கு வைத்து ஒரு குழுவினர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு வேலை தேடுவோருக்கு கவர்ச்சிகரமான சம்பளத் தொகையுடன், வேலை காத்திருப்பதாகவும், இரண்டு – மூன்று மணித்தியாலங்கள் உழைத்தாலே பல்லாயிரக் கணக்கான ரூபாவினை ஈட்டிக் கொள்ள முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது.
குறித்த விளம்பரங்களுக்கு, இலங்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, பிரபல நிறுவனங்களின் பெயர்களையும், கவர்ச்சிகரமான சம்பள விபரங்களையும் பார்த்தும் ஏமாற்றம் அடையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.
அந்த வேலைக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால், அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கோரப்படலாம். குறித்த வேலையைப் பெற பணத்தொகையை வைப்பிலிடுமாறும் கோரப்படலாம்.
எனவே இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்பி உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ முதலீடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.
அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.
சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது. அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (19 )காலை மாம்பழ திருவிழாவிற்கு முருகன் வேடமணித்து தண்டபாணி தெய்வமாக வந்த சிறுவன் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
நல்லூர் கந்தனின் அருளை பெற நாட்டில் பல பிரதேசங்களில் இருந்தும் மட்டுமன்றி பெரும் பெயர் தேசங்களில் இருந்தும் நல்லூரானை காண பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் குவிந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி வெளிநாட்டவர்கள் பலரும் நாலூராஇ தரிசிக்க புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இறு காலை இடம்பெற்ற தண்டாயுதபாணி திருவிழாவிற்கு வந்த சிறுவன் ஒருவர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
இன்று காலை மாம்பழ திருவிழா இடம்பெற்ற நிலையில் மாலை நல்லூர் கந்த சுவாமியார் ஒரு முகமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கவுள்ளார்.
கொழும்பில் அவசர தேவைக்காக தனது நண்பியிடம் சுமார் 50 பவுண் தங்க நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து 1.9 மில்லியன் ரூபாவுடன் காணாமல் போன பெண்ணைக் கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஹுனுபிட்டியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரை கைது செய்வதற்காக, சந்தேக நபரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு பதிவுகளைப் பெறுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 பெண்களுக்கும் இடையிலான நட்பை பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபர், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றைத் திருப்பித் தந்து நம்பிக்கையை வளர்த்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக பெற்ற தங்க நகைகளை அடகு வைத்த பிறகு, அவர் தனது நண்பியை தவிர்த்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேக நபர் வத்தளையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.