வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் நேற்று (18.09.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்விப் பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் நேற்று(18.09.2025) காலை அனுஸ்டிக்கபட்டது. இதன்போது தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்ப்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
சரியாக படிக்கவில்லை என்று கூறி மகனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தியதால். தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என கருதிய தாய், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறி, பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி நிர்வாகம் பாதியிலேயே மகனை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என தீபா விரக்தியடைந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.
மகனும் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தீபா, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டின் அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தார். கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து திறந்து பார்த்தார்.
அப்போது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,
தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரத்தினபுரி, அயகம, பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் அயகம பொலிஸாரால் நேற்று (17.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அயகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அயகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
15 வயதுடைய பாடசாலை மாணவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசையில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக பாடசாலை மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தகாத படங்கள் இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக தினமும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளம் பெண்களுக்கு அவற்றைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
சிறு குழந்தையை சுமந்த நிலையில் தனது கணவருடன் வந்த ஒரு இளம் தாய், தனது முன்னாள் காதலன் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக முறைப்பாடு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்ணின் கணவர் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதுகாக்கப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இப்போதெல்லாம், உலகில் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கமராக்கள் உள்ளன. எனவே, குறிப்பாக இளம் பெண்கள், தங்கள் காதலர்களுடன் ஒரு இடத்திற்குச் செல்லும்போது, சுற்றிப் பாருங்கள்.
நீங்கள் பார்க்க முடியாத வகையில் ஒரு சிறிய கமரா பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும், நீங்கள் ஒரு அறைக்குச் சென்றால் குறிப்பாக கவனமாக இருங்கள். இந்த கமராவை குளியலறையில் சுவரில் ஒரு ஆணியில் தொங்கவிடலாம்.
சுவரில் உள்ள மின் பிளக்கில், படுக்கை கட்டத்தில் நிறுவலாம். அதுமட்டுமின்றி, அறையில் உள்ள ஒரு மின் விளக்கில் கூட நிறுவலாம். மேலும், வெளியிட தங்குமிட மையங்களில் ஆடை மாற்றும் போது கவனமாக இருங்கள்.
இந்த கமராக்கள் துணிக்கடைகளின் உடை மாற்றும் அறைகளிலும் நிறுவப்படலாம். நீங்கள் உங்கள் காதலனை நம்பலாம். ஆனால் அவர் உங்கள் அந்தரங்க புகைப்படங்களை கேட்கும்போது கொடுக்க வேண்டாம்.
ஒரு சிறிய கருத்து வேறுபாடு அல்லது கோபம் இருந்தால், அதையெல்லாம் இணையத்தில் வெளியிட கூடும். குறிப்பாக இளம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராம பகுதியில் தனது நண்பரை போத்தலால் அடித்துக் கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராகும்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தின் சந்துங்கம பிரதேசத்தில் கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராகும். சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விரிவுரை வழங்குவதற்காக இலங்கை வந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்தபோது, சட்டவிரோதமாக 17 தோட்டக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரியை, 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று உத்தரவிட்டார்.
அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் கைரேகைகளை எடுத்து அறிக்கை கோருமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
சந்தேக நபர் பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்ததாகவும், தற்செயலாக தோட்டக்களை வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நடந்த தவறு தொடர்பாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அந்த உண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து கவனம் செலுத்திய நீதவான், பிணை உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபர் விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவையும் நீதவான் பிறப்பித்தார்.
தொடருந்து துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்,
தொடருந்து சேவைகளின் சரியான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறுபவர்கள் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, தொடருந்து பெட்டிகளின் மோசமான நிலையை விமர்சித்துள்ளார்.
குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய அலுவலக தொடருந்துகளில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஒரு சிறுவன் தனது முதல் தொடருந்து பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடருந்துகள் உழைக்கும் மக்களுக்கானவை. இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.
அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்பாடு மண்டபத்திற்கு பார்வையாளர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்குமாறும் மற்றும் அதற்கேற்ப வருகையைத் திட்டமிடுமாறும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
புறப்படும் மண்டபத்திற்கு உச்ச நேரங்களில் பார்வையாளர்கள் நுழைதற்கான கட்டுப்பாடு, சீரானமுறையில் முன்னெடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை புறப்படும் பகுதிக்கு பயணிகள் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது அனைத்து பயணிகள் மற்றும் விமான நிலைய வருகையாளர் அனைவருக்கும் எளிதான மற்றும் தடையற்ற சேவையை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார்.
அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் , பலவேரு நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
வழமையாக நாட்டின் முன்னைய ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தால் பெரும் அமர்களப்படுத்தி வருவார்கள்.
அவர்கள் அமர குசன் கதிரைகள் , பாதுகாப்பு என அல்லோலகல்லோலப்படும் . மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்.
ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுர குமார திசாநாயக்க நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவரது எளிமை இலங்கை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் யாழில் தங்கியிருக்கையில் , மிகவும் எளிமையாக அமர்ந்து ஜனாதிபதி அனுர உணவு உண்னும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அண்மையில் நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது, காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட செந்தில் தொண்டமான் அவர்களின் குறித்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தீ விபத்தின் போது பல உயிர்களைக் காப்பாற்றிய அவருக்கு பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு , செந்தில் தொண்டமான் நரகத்தில் சிக்கிய பல குடும்பங்களைக் காப்பாற்ற அவர் விரைவாகத் தலையிட்டு, உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களுடன் உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக வரலாற்று சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
மந்திரிமனை கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்ததுடன் , மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையிலையே இன்றைய தினம் (17) கடும் மழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றிலும் மந்திரி மனைக்கு தனிச்சிறப்புண்டு
யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது மந்திரி மனை.
இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது.
மந்திரி மனை கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவை.
யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும்,
அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வரலாற்று பிரசித்தி பெற்றவை என்பதுடன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலும் மந்திரி மனைக்கு தனிச்சிறப்புண்டு .
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் வரலாற்று ப்க்கிசங்களில் ஒன்றாக திகழ்ந்த மந்திரிமனை இடிந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய நிலையில், 96ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்திற்கு வந்தது. இது 2024 ஆம் ஆண்டு 96வது இடத்திலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்பில், நாடு 97ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதன் 2024 நிலையை விட ஒரு இடம் குறைவாக காணப்பட்டுள்ளது.
உலகளாவிய சூழலில், அமெரிக்க கடவுச்சீட்டு ஜூலை தரவரிசையில் இருந்து இரண்டு இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது,
இது குறியீட்டின் 20 ஆண்டுகால வரலாற்றில் மிகக் குறைந்த நிலையைக் குறிக்கிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன. மறுமுனையில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னணி பயண வலைத்தளமான Kayakஇன் பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் 2025 கோடையில் Kayak இன் முதல் 10 விமான பயண தேடல்களில் கொழும்பு நகரமும் இடம்பிடித்தது.
பட்டியலில் தென் கொரியா நான்காவது இடத்தையும், அர்ஜென்டினா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. மொராக்கோ ஆறாவது இடத்தையும், நோர்வே ஏழாவது இடத்தையும் வென்றுள்ளது.
பட்டியலில் மால்டோவா எட்டாவது இடத்திலும் ஹொங்கொங் ஒன்பதாவது இடத்திலும் டென்மார்க் பத்தாவது இடத்திலும் உள்ளன.