4ஆவது முறையாக ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் Microsoft!!

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட், இந்த ஆண்டில் 4ஆவது முறையாக மீண்டும் ஊழியர்களை பணிநீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க அறிவிப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. எத்தனைபேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.

 

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : கனகசபை தங்கம்மா!!

கனகசபை தங்கம்மா
பிறந்த இடம் – மாமடு
வாழ்ந்த இடம் – மாமடு சந்தி வவுனியா

 

அன்று எங்கள் அழுகை சத்தம் கேட்டு
சிரித்தவளே
இன்று அழகின்றோம் சிரிப்பதற்கு நீ
இல்லையென்று..
நீ இல்லாத உலகில் மட்டும்
தவிக்க விட்டு சென்றாயே அம்மா
நீ மீண்டும் கிடைக்காத
பொக்கிஷம் அம்மா..
உயிருக்குள் அடைகாத்து
உதிரத்தை பாலாக்கி
பட்டினியுடன் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே மட்டும்
வாழ்ந்து முடித்த அம்மாவே..
பேசியும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் வாழ்ந்து
முடித்த அம்மாவே..
அம்மா உன்னை இழந்து
ஆண்டு ஒன்று முடிந்தது
உங்கள் இழப்பை மறக்க முடியாத
பிள்ளைகளாக பேரப்பிள்ளைகளாக
எங்கள் இதயத்தில் உங்களை
சுமந்து திரிகிறோம்..
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் கூட
அனாதையாய் உணர்கிறோம்
அம்மா நீ இல்லாததால்
உங்கள் இழப்பால் தவிக்கும்

பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்.

வவுனியா ஓமந்தையில் பொலிசாரால் காணி அபகரிப்பு முயற்சி : பா.உ சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து நிறுத்தம்!!

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஓமந்தையில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில், நேற்றைய தினம் (02.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பொலிசார் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இது அமைந்துள்ளது. குறித்த காணியை நேற்று முன்தினம் (30.06) துப்புரவு செய்துள்ளனர்.

குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிசார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.

அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும். அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காணியில் இருந்து பொலிசார் இதுவரை வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசாருடன் இடம்பெற்ற நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!!

வவுனியா சமயபுரம் பகுதியில் தனதுமனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (02.07.2025) மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு எரித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிசாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் வசந்தி (வயது 30), அவரது தாயாரான இந்திரா (வயது 69), என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் விவசாயத்தை மேம்படுத்தல் தொடர்பில் பிரதி அமைச்சர்கள் தலைமையில் விசேட கூட்டம்!!

வவுனியா மாவட்டத்தின் விவசாய மேம்படுத்தல் தொடர்பிலான விசேட கூட்டம் காணி மற்றும் நீர்ப்பாசன வளங்கள் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (01.07.2025) காலை 9.30 மணி தொடக்கம் 12.30மணி வரை இடம்பெற்றது.

காணி மற்றும் விவசாயம் மேம்படுத்தல், புதிய திட்டங்களை அமுல்படுத்தல், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குளத்தின் கீழுள்ள வனத்துறையினரின் கட்டுப்பாட்டினுள் உள்ள காணிகளை விடுவித்தல், நவீன தொழிநுட்பம், உரம் தொடர்பான பிரச்சனை என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி : 07 பேர் காயம்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமநைட்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4வது நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்!!

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளம்பெண்ணொருவர் திருமணமான நான்காவது நாளிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). இவருக்கும் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

பன்னீர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். லோகேஸ்வரி பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார்.

இந்த நிலையில் 30ஆம் திகதி தாய் வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரி, தனது பெற்றோரிடம் கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து திங்கட்கிழமை இரவு லோகேஸ்வரி வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், வழக்குப்பதிவு செய்து பன்னீர் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பன்னீர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது 5 சவரன் நகை கொடுப்பதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்ட நிலையில், 4 சவரன் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் சீர்வரிசை பொருட்களுடன் இருசக்கர வாகனம் ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி தருமாறு கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நான்காவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி!!

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30.06.2025) இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார்.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபருக்கு மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது நிலைமை தீவிரமாக மாற்றமடைந்ததால்,உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வினை வழங்குங்கள் : செம்மணி புதைகுழிக்கு நீதி கோரும் தென்னிலங்கை இளைஞன்!!

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம்.

யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது.

எனவே புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

வவுனியா இளைஞனை கடத்தி தாக்குதல் : யாழில் இருந்து வந்த மூவர் கைது!!

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா 18 வயது இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அத்துடன், குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விசாரணைகளையடுத்து, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 முதல் 21 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 24 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படும் : காணி பிரதி அமைச்சர் அறிவிப்பு!!

சுமந்திரனின் வழக்கால் காணி உரித்து தொடர்பிலான வர்த்தமானி நிறுத்தப்பட்டாலும் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாய காணி நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றது. ஒரு புறத்தில் மக்களுடைய காணிக்கான உரித்து இழக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காணிகளை பயன்படுத்த முடியாத நிலைமையில் மக்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் இராணுவத்தினராலும், பாதுகாப்பு தரப்பபாலும், வனவளத் திணைக்களத்தாலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் உள்ளன.

இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கலந்துரையாடி அந்த காணிகளை மக்களுக்கு மீள வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உள்ளோம்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி விவசாய காணிகளில் பெரும் பகுதியானவற்றை விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

ஏற்கனவே அவை வனவளத் திணைக்களத்திற்குரித்தானதாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் விவசாயிகளுக்காக அதனை மீள வழங்குவதற்கு வனவள திணைக்களம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் மீள பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் எம்மிடம் விவசாயம், கால்நடை, காணி விடயங்களை உள்ளடக்கி ஒன்றிணைந்த வேலைத்திட்டம் இருக்கவில்லை. தற்போது அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இனி வரும் காலங்களில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

வட மாகாணத்தில் உள்ள காணி உரித்து தொடர்பாக நாங்கள் ஒரு விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இருந்தோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வர்த்தமானி தற்போது கைவிடப்பட்டிருக்கிறது.

எனினும் நாங்கள் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியாகியுள்ளது.

அதாவது,உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய ‘நாகரிகமான பிரஜை – முன்னேற்றகரமான மனிதவளத்தை’ உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. க.பொ.த (உ/த) பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் (Z-Score) பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயரும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02.07.2025) சற்று உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,001,304 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,320 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 282,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 259,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,910 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 247,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

பேஸ்புக் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிஸ் திணைக்களம் தமது அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது கருத்து தெரிவிப்பவரின் குணத்தை மட்டுமே சேதப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் திணைக்களம், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை ஆரம்பம்!!

எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு இலங்கை முழுவதும் ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை எலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2024 இல் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.

இந்நிலையில், கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்னே, 10 சாதனங்களைப் பயன்படுத்தி ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.

ஸ்டார்லிங்க் பாரம்பரிய செயற்கைக்கோள் சேவைகளை விட வேகமான இணைய வேகத்தையும் குறைந்த தாமதத்தையும் வழங்குகிறது. அத்துடன், தரைவழி உட்கட்டமைப்பு குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளில் பயனர்களையும் இணைக்கும் திறனையும் வழங்குகிறது.

எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு அரசாங்கம் கூறும் காரணம்!!

எரிபொருள் விலையில் ஜுன் மாதம் தொடக்கத்திலும் ஜுன் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பே எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏதுவானது என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02.06.2025) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜுன் மாதத்தில் ஏற்பட்ட விலை தளம்பலுக்கேற்பவே ஜுன் 30 திகதி விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நடைமுறையே பின்னபற்றப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைவடைந்தால் அதன் பலனை மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறே விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அரசாங்கத்தில் இறக்குமதியின் போது ஏற்படுத்தப்பட்ட மோசடி இன்றும் எம்மை பின் தொடந்து வருகிறது.

அவர்கள் சென்றாலும் அவர்களால் எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை நாம் சரி செய்யும் போது இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.