கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வாகனங்களுக்கு தீ வைத்த மனைவியும் மகளும் கைது!!

கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படும் மனைவியும் மகளும் பலாங்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மனைவியும் மகளும் இரத்தினபுரி பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் உள்ள தனது கணவரின் வீட்டிற்குச் சென்று கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனத்தின் மீது தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கணவன், பிரதேசவாசிகளின் உதவியுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ள நிலையில் கெப் வாகனத்திற்கு சிறிய சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணவனும் மனைவியும் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்கேத நபர்களான 43 வயதுடைய மனைவியும் 23 வயதுடைய மகளும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுப் பராமரிப்பாளர் கொடூரமாக கொலை : சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி?

புத்தளம் – வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வென்னப்புவை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 25 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொலைசெய்யப்பட்டவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் இத்தாலியில் வசிப்பதால் கொலைசெய்யப்பட்ட நபர், நீண்ட காலமாக வீட்டை பராமரித்து வந்துள்ளார்.

இத்தாலியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (13) இந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது பராமரிப்பாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையாளிகள், வீட்டில் இருந்த பல கோடி ரூபா மதிப்புள்ள வேனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட வேன் கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத இருவர், இந்த வேனை கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சிகள் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா – சீதுவை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக வேனை கொள்ளையிட முயன்ற போது வீட்டுப் பராமரிப்பாளரை கொலை செய்ததாக சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றிய அநுர கட்சி!!

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று (16) நடைபெற்று வருகிறது.

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் : காதலனின் திருமணமான நண்பன் கைது!!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுளந்தாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான நபர் ஒருவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் காதலனின் நண்பரான ,சிரிகல பொத்துவில்106 பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 8 ஆம் திகதியன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளதுடன் அவர் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் சிறுமி 10 ஆம் திகதி வீட்டிற்கு வந்ததையடுத்து அவரது தாயார் அவளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது, குறித்த சிறுமி அவரது காதலனின் நண்பர்கள் இருவரை சந்திக்க தனது மூன்று தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் சிறுமியின் காதலனின் நண்பர்கள் இருவர், காதலன் அனுப்பிய பணத்துடன் வந்துள்ளனர்.

சிறுமியின் தோழிகள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதுடன் சந்தேக நபருடன் வந்தவரும் சென்றுள்ளார்.

சந்தேக நபர் இரவு வரை பேருந்து நிறுத்தத்தில் சிறுமியுடன் இருந்துள்ளதுடன் பின்னர் அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சிரிகல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்த நபருடன் தொடர்பு கொண்டதையடுத்து அவர் இருவரையும் பின் கதவு வழியாக வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

குறித்த சிறுமி குறித்த வீட்டில் சந்தேக நபருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதுடன் இதன் போது பல தடவைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றுமொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்……!!

ஹொங்கொங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான AI315, இன்று(16) காலை ஹொங்கொங்கிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், நிலையான பாதுகாப்பு நெறிமுறையின்படி, விமானம் புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பயணிகளை அவர்களின் இலக்கான டெல்லிக்கு விரைவில் கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், தொழில்நுட்பக் கோளாறின் தன்மை அல்லது விமானத்தின் கால அட்டவணையை மாற்றியமைத்தல் குறித்து ஏர் இந்தியா இன்னும் பொது அறிக்கையை வெளியிடவில்லை.

முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானமொன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட தீப்பொறி : பதறிய பயணிகள்!!

சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ(Luckmow) வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் குறித்த இடம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

சவூதியிலிருந்து 250 ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட SV 3112 விமானம், நேற்றையதினம்(15) இரவு 10:45 மணியளவில் புறப்பட்டு, இன்று காலை 6:30 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகரும் நேரத்தில், இடது பக்க சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான நிலைய பணியாளர்கள் கவனித்தனர்.

வெகு சீக்கிரத்தில் சிந்தித்து நடவடிக்கை எடுத்த விமானி, விமானத்தை நிறுத்தியுள்ளார். விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு அணி (ARFF) உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று 20 நிமிடங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 250 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விமானத்தில் பயணித்தவர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் நிலவியுள்ளது. இந்த சம்பவம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த துயரமான நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியான இந்த விமான சம்பவங்கள், விமானப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ்.யுவதி தேசிய ரீதியாக சாதனை!!

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த யுவதி கருத்து தெரிவிக்கையில்,”நான் இந்த ஆண்டு Union National Meet இல் 10 ஆயிரம் மீட்டர்கள் வேகநடை போட்டியில் மூன்றாமிடம் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளேன்.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பாடசாலை மட்ட ரீதியாக 5 ஆயிரம் மீட்டர்கள் வேகநடைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். அதைவிட மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டேன்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் முப்படை வீரர்களுடன் போட்டியிட்டே இந்த மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன்.

எனது ஆரம்பகால பயிற்றுனராக சுபாஸ் ஆசிரியர் மற்றும் நிசாந்தன் அண்ணா, பிரதீஸ் அண்ணா ஆகியோர் காணப்படுகின்றனர். தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட விளையாட்டுத்துறை பொறுப்பாளர் விஜிதரன் ஆசிரியர் எனது பயிற்றுவிப்பாளராக காணப்படுகின்றார்.

நான் முன்னர் போட்டிகளில் வெற்றுக் கால்கள் மூலமாகவே போட்டியிட்டேன். பின்னர் நிதி அனுசரணையாளர்கள் மூலம் எனக்கு இந்த போட்டிக்கு தேவையான சப்பாத்து வாங்கி தரப்பட்டது.

விக்டோரியா கழகம், குணா அண்ணா, மதி அண்ணா ஆகியோரே எனக்கு நிதி உதவிகளை வழங்குகின்றனர்.

கடந்த வருடம் நான் ஆசிய தெரிவுப் போட்டிக்கு சென்று முப்படையினருடன் போட்டியிட்டு 10 பேருக்குள் வந்தேன். அதில் பழிவாங்கும் முகமாக என்னை மைதானத்துக்குள் இறங்குவதற்கு விடாமல் செய்தார்கள்.

பின்னர் பயிற்றுவிப்பாளர் விஜிதரன் ஆசிரியரே கதைத்து என்னை போட்டியிட அனுமதி பெற்றுத் தந்தார். இருப்பினும் திட்டமிட்ட சதி போல போட்டியிலிருந்து இடைநிறுத்திவிட்டார்கள்.

தமிழர் – சிங்களவர் என்ற பாகுபாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்வதாக நான் நினைக்கிறேன். இம்முறை பொட்டு எதுவும் நெற்றியில் வைக்காமல் ஒரு சிங்கள யுவதி போலவே சென்றேன். இந்தமுறை போட்டியிலிருந்து இடைநிறுத்தவில்லை.”என கூறியுள்ளார்.

கழிப்பறைக்கு அருகில் மயங்கி கிடந்த மாணவி : தீவிர விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்!!

பண்டாரவளையில் பாடசாலை மாணவி ஒருவர், கழிவறைக்கு அருகில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி, கடந்த 12 ஆம் திகதி பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பவில்லை, என அவரது தாயார் ஒரு ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இது குறித்து விசாரித்ததன் பின் ஆசிரியர்,

மாணவர்கள் மற்றும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து, பாடசாலை வளாகத்தில் தேடிய போது, அந்த மாணவி கழிப்பறைக்கு அருகில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

ஆசிரியரும் மாணவர்களும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மயக்கமடைந்த மாணவி, தனது பாடசாலை தோழியுடன் பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் கழிப்பறைக்குச் சென்றபோது, முகத்தை முழுமையாக மூடியிருந்த பாடசாலை சீருடையும் அணிந்திருந்த ஒருவனும்,

மற்றுமொருவர் தனது முகத்தை மறைத்ததாகவும், பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த தடயவியல் மருத்துவர், அவர் எந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாநகரசபையை ஒருவாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியது சங்கு கூட்டணி!!

வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு, வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (16.06.2025) காலை நடைபெற்றது.

இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசியமக்கள்சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது.

பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் மீண்டும் இளம் தலைமுறையினர் கைகளில்!!

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று (15.06.2025) இடம்பெற்றுள்ளதுடன் மீண்டும் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் நேற்று காலை 10 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) கிருஸ்ணமூர்த்தி, (செயலாளர்) மயூரதன், (பொருளாளர்) தியாகர் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்தாவாறே மீண்டும் இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன், பதில் முதல்வராக கார்த்தீபன் : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்!!

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பதில் முதல்வர் தெரிவுகள் இன்றயதினம் இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவை. அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்கட்சிகளினால் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும், தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள்,ஜக்கியமக்கள் சக்தியின் இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும்,ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத்தேவையான 11ஆசனங்கள் உறுதியாகியுள்ள நிலையில் இன்று எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகின்றது.

வவுனியாவில் நான்கு சபைகளையும் ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு – கட்சி தலைமைகள் பங்கேற்பு!!

வவுனியாவிலுள்ள ஐந்து சபைகளில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தவிர்ந்த ஏனைய நான்கு சபைகளான வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளையும் ஆட்சியமைக்கும் கட்சி தலைமைகளிலான விசேட கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (15.06.2025) காலை 11 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் பிரநிதிகளிற்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், அடுத்த இரு வருடங்களுக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக்கட்சிக்கும் உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியகூட்டணிக்கும் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சிக்கு தவிசாளர் பதவியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தவிசாளர் பதவியும் தமிழரசுக்கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், றிசாட் பதியூதீன். முத்து முகமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சீரற்ற காலநிலை : அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (16.06.2025) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இந்த பகுதிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அமைய கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் சென்ற இளைஞன் மாயம் : காயத்துடன் திரும்பிய இளைஞனின் தகவலால் குழப்பம்!!

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி, இரு இளைஞர்கள் காட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் 11 ஆம் திகதி அன்று மாலை வீடு திரும்பிய நிலையில், அவரது உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பி வந்த இளைஞரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, அவர் வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன மற்றொரு இளைஞனை தேட, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து 11, 12, 13 ஆகிய தினங்களில் அதிகாலை முதல் மாலை வரை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தும், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல், காணாமல்போன இளைஞனை தேடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்புக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் தாயின் வீட்டில் மர்மான முறையில் மரணம்!!

பதுளையில் காணாமல் போன வங்கி அதிகாரியின் சடலம் அவரது தாயாரின் கைவிடப்பட்ட வீட்டில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிபில்ல, யல்கும்புர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமானவராகும். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

உயிரிழந்தவர் விடுமுறையில் தனமல்வில பகுதியில் வங்கி அதிகாரியாக செயற்படும் தனது மனைவியை பார்க்கச் சென்றிருந்தார். பின்னர், பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கும் சென்று அங்கு தங்கியிருந்தார்.

அதன் பிறகு, வேலைக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புக்கு செல்வதாக கூறிய போதிலும், அவர் கொழும்பை சென்றடையவில்லை.

கையடக்க தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், குடும்ப உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி, ராகம மற்றும் பதுளை பொலிஸிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவரது சொந்த ஊரான பிபில்ல பகுதியிலும் அவர் தேடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவரது சொந்த ஊரைச் சேர்ந்த மக்களும் அவரை அந்தப் பகுதி முழுவதும் தேடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவரது சொந்த ஊரில் கைவிடப்பட்ட வீட்டில் நாய் குரைப்பதைக் கண்ட ஒருவர், ஜன்னலைத் திறந்து பார்த்த போது, வீட்டியில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காணாமல் போன இளைஞனின் சடலம் என கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பேருந்து!!

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.