ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் நிதியை தவறான பயன்படுத்தியமையினால் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த மனு விசாரணை நிறைவடையும் வரை ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதனை தடுப்பதற்கு உத்தரவு விடுக்குமாறு கோரிக்கை விடுப்பற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமகாலத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய மனு இரண்டின் மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதனை ஏற்றுக் கொள்வதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொதுஜன பெரமுன வெலிகம ஆசனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகபெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு 113 ஆனசங்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 101 பேர் மாத்திரமே உள்ளனர்.
மஹிந்தவு ராஜபக்சவுக்கு 113 பேர் இல்லை என சபாநாயகர் கூறுகின்றார். எங்களுக்கு 113 இல்லை என ஏற்றுக்கொள்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
எனினும் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் 6பேரும் இணைந்துள்ளனர். ரணிலுக்கு 101 பேர் மாத்திரமே உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தோல்வியை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மன நிலையை பரிசோதனை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு தக்ஷிலா லக்மாலி என்ற பெண்ணால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியமைப்பிற்கு அமைய இந்த மனு தாக்கல் செய்ய முடியும் என சட்டத்தரணி சிசிரகுமார சிறிவர்தன தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பிற்கு அமைய ஒரு இடத்தில் பணி செய்யும் ஒருவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அவரை பணியில் இருந்து நீக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டு மக்களின் பெரும்பான்மையோருக்கு மைத்திரி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என விடயம் தற்போதைய பிரச்சினைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இதனால் தற்போதுள்ள விடயங்களுக்கமைய ஜனாதிபதி மன ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயற்படுகின்றார்.
அதற்கு 3 காரணங்கள் உள்ளது. ஒரு கிராம பகுதியில் இருந்து ஜனாதிபதி என்ற பதவி கிடைத்ததனை அவரால் நினைத்து பார்க்க முடியாமை, அடுத்து அவருக்கு நாள்பட்ட ஒரு வகையான மனநோய் உள்ளதாக அவரது மகள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றையது அவருக்கு மிக அருகில் இருந்த அதிகாரி கப்பமாக 20 மில்லியன் ரூபா பெற்று கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியாக இருந்திக்கலாம்.
இவ்வாறான தொடர் சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதிக்கு மனரீதியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு மனநோய் தொடர்பான சோதனை நடத்தி அறிக்கை வழங்குமாறு அவரது மனுவில் கோரியுள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்தில் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (27). அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (28).
இவரும் ராஜபாண்டியும் சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
நேற்று 2 பேரும் பைக்கில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஊர் திரும்பிய போது பைக்கானது நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் எதிர் திசையில் வந்த காரின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் ராஜபாண்டியும், தினேஷும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் (63) அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் சோகத்தில் இருந்த அவருக்கு நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நபர்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தாமதமாகியுள்ளது.
இதுதொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல் மற்றும் குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட திருத்தங்கள் பற்றி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்க இடமளிக்கக்கூடாது என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கு முடியாத வகையில் அந்த சட்டங்களை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்ட வரைவுகள், மது வரி கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது உறுப்புரைகள் திருத்தம், நச்சு போதைப் பொருள் கட்டளைச் சட்ட திருத்தம், சிறைச்சாலைகள் பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப் படையின் உதவியை பெற்றுக்கொள்ளல், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதற்கு வடமாகாண ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்ட போதும் தனியார் பேருந்துச் சேவைகள் மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றன.
இதனால் பலரின் முயற்சியினால் பழைய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகின்றதுடன் பல காரணங்களையும் தெரிவித்து வருகின்றதால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வருடமாக பழைய பேருந்து நிலையம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு ஆதரவான பல போராட்டங்கள் பணிப்புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு பயணிகளுக்கும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.
தற்போது பலரின் முயற்சிகளுக்கு பின்னர் கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகளும் தரித்துச் செல்வதற்கு கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்கள் வரையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தமது பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இ.போ.ச பேருந்துகள் தமது சேவையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தனியார் பேருந்துகள் சேவைகள் மேற்கொள்ள பின்னடித்துள்ளனர்.
இவ்விடம் குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் இ.இராஸேஸ்வரனிடம் தொடர்புகொண்டு வினவியபோது,
இது குறித்து நீங்கள் அதிகார சபையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் நாங்கள் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று வருவதற்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.
வழித்தட அனுமதி வழங்கும் வீதிப் பணிகள் போக்குவரத்து அதிகார சபையினருடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு வழிப்பயணத்திலிருந்து வேறு ஒரு வழிப்பயணம் மேற்கொள்வதற்கே வழித்தட அனுமதி பெறப்படவேண்டியது அவசியம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதற்கு வீதிப் போக்குவரத்து அதிகாரசபையினரிடம் அனுமதி பெறத்தேவை ஏற்படாது என்று சாரதிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் இவ்விடயத்தை ஏன் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்ற கேள்வியையும் எம்மத்தியில் எழுப்பியுள்ளது. அன்றைய தினம் அங்கு மௌனம் காத்துவிட்டு தற்போது காரணம் கூறுவது நியாயமற்றது.
யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல கிளிநொச்சியின் நகர் பகுதிகளில் வீதியோரங்களில் சிங்கள வாசகங்கள் பொறிக்கப்பட்ட இராணுவத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் கிளிநொச்சி நகர் பகுதியில் A9 பிரதான வீதியின் இரு பக்கமும் கிளை வீதிகளுக்கு இருவர் வீதம் பல நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமிலும் பல நூறு இராணுவத்தினர் அணிவகுத்து நிற்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வடபகுதில் திடீரென இவ்வாறு பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இத்தாலியில் வசித்து வந்த 12 வயதான ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியே நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வரும் ஷெஹாரா, அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவர் இலங்கையில் வென்னப்புவ, பொரலெஸ்ஸே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வசித்து வந்த வீட்டின் குளியலறைக்கு வெளியே ஆடை காய வைப்பதற்காக சென்ற போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த உபகரணம் உடைந்து விழுந்த போது சிறுமியும் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இத்தாலிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்துள்ளார். இந்நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றுள்ளார்.
ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்வதற்காக இலங்கைக்கு திரும்பி வரவிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் பிரியதர்சினி (வயது 31) வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட , மாகாணமட்ட தேர்வில் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
பம்மைமடு விவசாய திணைக்களத்திற்குட்பட்ட பிரிவில் கடந்த 05.09.2018ம் திகதி இடம்பெற்ற தெரிவில் முதலாவது இடத்தினையும் 10.10.2018ம் திகதி இடம்பெற்ற மாவட்டமட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் 12.11.2018ம் திகதி இடம்பெற்ற மாகாணமட்ட தெரிவில் முதலாவது இடத்தினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் தெரிவுக்கு சென்றுள்ளனர்.
கோழி வளர்ப்பு, தாரா வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நெற்பயிர்ச்செய்கை, மண்புழு திரவம் உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, சேதனப் பசளை தயாரித்தல், ஐடோ தாவர வளர்ப்பு, சொட்டு நீர்ப்பாசனத்தில் பயிர்ச்செய்கை, இயற்கை பூச்சி தடுப்புமுறை,
தோட்டத்திற்கு பயன்படுத்தும் பசளை(இயற்கை), கோழி எரு, மீன் தண்ணீர், ஆட்டு உரம், மாட்டெரு, மண்புழு உரம், சேதனப் பசளை, தோட்டத்திற்குப் பயன்படுத்தும் கிருமி கொள்ளி (நாசினி இயற்கை) , உள்ளிக் கரைசல், சாம்பல், மஞ்சள், வேப்பஞ்சாறு, சவர்க்காரக் கரைசல் போன்றன காணப்படுகின்றன.
தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக பழனியப்பன் பிரியதர்சினி கருத்து தெரிவிக்கையில்,
விவசாய திணைக்கள ஊழியர் ஒருவர் எனக்கு வழங்கிய உற்சாகத்தினால் தான் நான் வீட்டுத்தோட்டத்தினை கடந்த ஒரு வருடகாலமாகவே மேற்கொண்டு இந்தளவு சிறப்பான முறையில் மேற்கொண்டுவருகின்றேன்.
எங்களது வீட்டுத்தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயக்கையானது எந்தவொரு செயற்கையான மருத்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை எனவும் அகில இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
கிராம அலுவர், சமூர்த்தி உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர், விவசாய திணைக்கள ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் சௌரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மகள்களான ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகியோரை கடந்த 6 ஆம் திகதி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
சம்பவத்தை அடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் பொலிசார் 3 தனிப் படைகள் அமைத்து பத்பநாபனைத் தேடி வந்தனர். இந்நிலையில் குடிபோதையில் பீளமேடு பகுதியில் சுற்றித் திரிந்த பத்மநாபனை, தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவி செல்வராணி உடல்நலம் பாதிக்கப்பட்டவர். நான் குடி பழக்கத்துக்கு ஆளானேன். அதை செல்வராணி கண்டித்ததால், இருவருக்குமிடையே கடந்த 2 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
விரக்தியடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தேன். 6 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையே சண்டை நடந்து முடிந்து, செல்வராணி தாய் வீட்டுக்குச் சென்றதும், குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
பின்னர் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால், செல்போனை அணைத்து வைத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டேன் என பத்பநாபன் வாக்குமூலம் அளித்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக 5 வயது சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு நிலப்பிரச்சனை தொடர்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், லட்சுமி பழிக்குப்பழியாக விஜயராகவனின் 5 மகனின் நாக்கை அறுத்துள்ளார். 5 வயது மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காதலன் தூங்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தனியாக சென்று வாழ்வோம் என முடிவு செய்து இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, கோபியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
கவிதாவும், கோபியின் உறவினர்களும் வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், தனிமையில் இருந்த கோபி, ‘பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையே. அவர்களை ஒதுக்கிவிட்டு எப்படி வாழ்வது என்று கவலைப்பட்டு தூக்கில் தொங்கினார் கோபி.
இந்நிலையில், வெளியே சென்றிருந்த கவிதா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோபி பிணமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி இருக்கிறார். ‘நாம சேர்ந்து ஒண்ணா பல வருஷம் வாழ்வோம்ன்னு சொன்னியே. இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே’னு கதறி இருக்கிறார். உடனே, அவரும் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்திருக்கிறார்.
கோபியின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு உள்ளமையே சஜித் பிரேமதாச உடனடியாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், பிரதமர் பதவியை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு சஜித் விரும்பாமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கட்சியில் அதிக ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே தற்போது உள்ளமை, அதனைவிட நெருக்கடியான இந்த காலகட்டத்தில் பிரதமராகப் பதவியேற்பது தமக்கு பாதகமாக அமைந்துவிடும் என சஜித் கருதலாம்.
பிரதமாராகப் பதவியேற்று முக்கிய பிரச்சினைகளைத் தன்னால் சமாளிக்க முடியாமல் போனால் தனது எதிர்கால அரசியலை அது பாதிக்கும் எனவும் நீண்ட கால அடிப்படையில் அவர் சிந்திக்கின்றார் எனவும் சஜித் சிந்திக்கின்றார்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க எப்படியும் களமிறங்குவார், அப்போது பிரதமர் பதவிக்குத் தன்னுடைய பெயரே பரிந்துரைக்கப்படும் என்ற எண்ணத்தினாலும் சஜித் பிரதமர் பதவியை மறுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நிதி ரீதியான சலுகைகளை வழங்குவது குறித்து பேரம் பேசப்பட்டதாக ஜனாதிபதி அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு தாம் முக்கிய பங்காற்றியதாகவும், அவ்வாறு உதவியவர்களுக்கு எதிராகவே ஜனாதிபதி தற்பொழுது செயற்பட்டு வருவதாக ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே செயற்பட்டார் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19ஆம் அரசியலமைப்பின் மோசமான நிலைக்கு அவசரமாக அதனை சமர்ப்பித்த ரணில் மற்றும் அவரது ஆதரவாளர்களே பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நீதிமன்ற செயற்பாட்டினை ரணில் தரப்பினர் மேற்கொண்டிருக்கவில்லை என்றால், தற்போது ஏற்பட்டிருக்கும் அனைத்து நெருக்கடிகளும் தீர்க்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிடடுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்குகளும் நிறைவடையும். இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும். அப்படி தேர்தலுக்கு செல்ல முடியாதென தீர்ப்பு வழங்கப்பட்டால், பெரும்பான்மை அரசாங்கம் அதிகாரத்திற்கு நான் அனுமதி வழங்க வேண்டும்.
நான் விரும்பிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை நடத்தி செல்வேன். ரணிலை தவிர மேலும் 224 பேர் உள்ளனர். அப்படி என்றால் அரசியல் கட்சிகளில் பிரதமராகுவதற்கு ஒருவரேனும் இல்லையா?
கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்ல எனது ஜனாதிபதி அதிகாரத்தையும் ரணில் பயன்படுத்தினார்.
நன்றி கடனுக்காக நான் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன். சில நேரங்கள் அவர் என்னை பிரதேச சபை உறுப்பினராக கூட நினைக்கவில்லை. அவ்வாறே வேலை செய்தார் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நபர் மீது கடுமையாக தாக்கிய மர்ம கும்பல், மோட்டார் வாகனத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 1:30 அளவில் 11/133 ம் இலக்க மத்தியமுகாம் வீட்டிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து தாக்குதலுக்குள்ளான கந்தமுத்து நடராசா என்பவர் கூறுகையில்,
வீட்டின் வெளி மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி நடராசா கிருபாகரன் எனும் வெளிநாட்டில் வசித்து வரும் எனது மூன்றாவது மகன் எங்கே? வரச்சொல்லு என விசாரித்து கையை மடக்கி தாக்கி கீழே தள்ளிவிட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்த எனது மூத்த மகனின் மோட்டார் சைக்கிளை பற்ற வைத்து விட்டு அச்சுறுத்தல் காரர்கள் வந்த இரண்டு மோட்டார் வாகனத்திலும் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதமும் 2018-11-23 அன்று வந்த இக்கும்பல் இதுபோன்று விசாரித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியமுகாம் பொலிசாரும், அம்பாறை தடயவியல் பகுப்பாய்வு பொலிசாரும் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.