ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த விமானம் : அச்சத்தில் அலறிய பயணிகள்!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று (21) மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.

ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

கடும் மழை மற்றும் புழுதிப்புயலால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளும், தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது.

இதனால் பயணிகள் அச்சமடைந்த நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா : சுகாதார அமைச்சு விளக்கம்!!

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வாரங்களில், பல ஆசிய நாடுகளில் புதிய கோவிட் – 19 திரிபு பரவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் பொது சுகாதாரத்தைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வக ஆய்வு முறையும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உட்பட அடிப்படை சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் : யாழ்சிறைக்கு மாற்றம்!!

இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21.05.2025) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதிவரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் 25 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் மரணம் : ஒன்றாக அடக்கம்!!

கம்பஹா, பஸ்யால பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்து ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்யால பகுதியைச் சேர்ந்த 58 வயதான நாமல் குமார மற்றும் அவரது மனைவி 60 வயதான துலானி சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதயத்தில் ஓட்டையுடன் பிறந்த துலானி, வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனேயே வாழ்ந்துள்ளார்.

துலானிக்கு இதய நோய் இருப்பதை அறிந்திருந்தும் அவரைக் காதலித்த நாமல், அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமான துணையாக இருந்துள்ளார்.

துலானியும் நாமலும் இரு வீட்டாரினின் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்தனர். திருமணமானதிலிருந்து, இருவரும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாமல் தனது குடும்பத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு பிரம்பு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். துலானியிடமிருந்து நிறைய ஆதரவைப் பெற்றார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் துலானி திடீரென நோய்வாய்ப்பட்டு, வரக்காபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு வாரத்தில் அவர் உயிரிழந்து விடுவார் என அறிவித்துள்ளனர்.

தனது மனைவியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்த நாமல், மிகவும் வேதனையுடன் காணப்பட்டுள்ளார்.

துலானி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, ​​நாமலுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்த போதிலும், மாரடைப்பால் நாமல் உயிரிழந்துள்ளார்.

மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த நாமலின் மனைவி, தனது துயரத்தை அடக்கிக்கொண்டு, நாமலின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைத்து நண்பர்களையும் கவனித்துள்ளார்.

இதன் போதே, நாமலின் மனைவி மீண்டும் நோய்வாய்ப்பட்டார். அவர் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்பதியினரின் உடல்களை ஒரே கட்டிடத்தில் ஒன்றாக வைத்து ஒரே நாளில் அடக்கம் செய்துள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி ஆர்த்தி : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். ஆனால் இதை தான் எதிர்பார்க்கவில்லை என ஆர்த்தி கூறினார்.

அதன்பின்னர் இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விவாகரத்திற்கு இருவரும் விண்ணப்பித்த நிலையில், கெனிஷாவுடன் ரவி மோகன் பொது இடங்களில் சுற்றி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்து மனு மீதான விசாரணை இன்று(21) நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விவாகரத்திற்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் விவாகரத்திற்கு பிறகான ஜீவனாம்சமாக மாதம் ரூ.40 லட்சம் ரவி மோகன் வழங்க வேண்டும் என ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஜூன் 12க்குள் ரவி மோகன் பதிலளிக்க குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய இலங்கைப் பெண் மாயம் : தவிப்பில் குடும்பம்!!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மூன்று குழந்தைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிவிடுவதாக தனது கணவரிடம் கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் வருகை தராததால் அ கணவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ​​ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா இரண்டு பயணப் பைகளுடன் வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.

காணொளியில் அடிப்படையில் , விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, சாரதியை விசாரணைக்காக அழைத்தனர்.

விசாரணையின் போது, ​​சாரங்கா உதேஷிகா தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றதாக தெரிவித்தார்.

இருப்பினும், தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் சாரங்காவின் கணவர் சென்று நடத்திய சோதனையின் போது எந்வொரு பெண்ணும் இங்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட வீட்டு குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அவரது கணவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாடு திரும்பிய பெண் மாயமானமை குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கஹதுட்டுவ பொலிஸா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுவீதியில் நடந்த கத்திக்குத்து.. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!!

வீதியில் தனது மூத்த சகோதரனை கத்தியால் வெட்டிய சம்பவத்தில், படுகாயமடைந்த 48 வயது நபர் பதுளை பொது மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதுளை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரோயல் சாலைக்கு அருகிலுள்ள நடைபாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரு சகோதர்களுக்கு இடையில் நடந்த மோதல் காரணமாக ஒருவர் மற்றைய நபரை நடைபாதையில் வைத்து கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதன்போது, அருகில் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட் நிலந்தா என்பவர், தனது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில், இருவரில் முதலில் மூத்த சகோதரன் மற்றைய நபரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் பழிவாங்கும் விதமாக அதே ஆயுதத்தை கொண்டு முதல் தாக்கப்பட்டவர் அவரை தாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் இருவரும் காயமடைந்துள்ள நிலையில், பொலிஸ் கண்காணிப்பின் கீழ் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் பதுளை பகுதியில் உள்ள அமுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்த 26 வயது புதுமாப்பிள்ளை!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதுமாப்பிள்ளை தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் கும்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும் 23 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது.

அதன்படி ஜமகண்டியில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்தது. மணமகளுக்கு பிரவீன் தாலி கட்டிய பின், இருவரும் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்குபெற்றனர்.

அப்போது பிரவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சுருண்டு கீழே விழ, அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரவீன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது இரு வீட்டாருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இச்சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தையும், மண்டபத்தில் கூடியிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்த 23 வயதான பெண் சிக்கிய பரிதாபம்!!

பணம் மற்றும் நகைக்காக பெண்கள் சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்யும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஈரோட்டை சேர்ந்த பெண், 50க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் நடைபெற்றது. இதே போல் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பெண், 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் வசித்து வந்துள்ளார்.

அங்கு, திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் மணப்பெண்களைக் காட்டி, அவர்களின் சேவைகளுக்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள்.

திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் வீட்டில் உள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அனுராதாவும் இதே போல், 25 பேரை திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர், கடந்த மே 3 ஆம் திகதி காவல்துறையில் அளித்த புகாரின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவர் அளித்த புகாரில், வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக அறிமுகம் செய்தனர்.

ஏப்ரல் 20 ஆம் திகதி உள்ளூர் நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். மே 2 ஆம் திகதி வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பி சென்று விட்டார்” என தெரிவித்துள்ளார்.

விஷ்ணு சர்மாவையடுத்து, போபாலை சேர்ந்த கப்பர் என்பவரை திருமணம் செய்து, அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்துள்ளார்.

இதனையடுத்து, காவலர் ஒருவர் மணமகன் போல் வரன் தேடுவதாக பேசி, அனுராதா மற்றும் மோசடி செய்த திருமண ஏஜெண்ட்களை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கர்ப்பிணி மனைவி இறந்த செய்தி கேட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது 4 மாத கர்ப்பிணி மனைவி, தாய் வீட்டில் சந்தோஷமாகவே இருந்து வந்த நிலையில்,

திடீரென தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து, அதிர்ச்சியிலும், விரக்தியிலும் கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யா (19). திவ்யாவுக்கு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்து பிரதாப் என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்த திவ்யா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியின் தற்கொலை குறித்த தகவல் பிரதாப்புக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதாப் மனைவி இறந்த சோகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக பிரதாப் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்று பிரதாப் உயிரிழந்து விட்டார்.

கர்ப்பிணியான திவ்யா தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், மனைவியின் இறப்பு செய்தியை கேட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டு உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னிலங்கையில் கடலுக்குள் இருந்து மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி!!

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில், உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடும் போராட்டத்தின் பின்னர் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கடலில் அடித்து செல்லப்பட்ட ஆண் 31 வயது பங்களாதேஷ் நாட்டவர் எனவும் காயமடைந்த பெண் 20 வயது சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட இரண்டு சுற்றுலா பயணிகளும் உடல் நலத்துடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 7 பேர் காயம்!!

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனிகொடவெல ரயில் கடவை வழியாக ரயில் ஒன்று பயணித்த நிலையில் ரயில் கடவை மூடப்பட்டுள்ளது.

இதன்போது , இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொள்கலன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.

பின்னர் அந்த வேன் முன்னாள் இருந்த எரிபொருள் பவுசர் மீது மோதியது. இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து : எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து!!

இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் அவர்கள் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்திருந்தனர்.

எனினும் பிரதேச சபையின் ஊழியர்களின் முயற்சியும் பொதுமக்களின் பங்களிப்புடனும் தீ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டது.

மின்னொழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீயில் எரிந்த சொத்து மதிப்பு 2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று (21.05) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் எட்டு வயதுடைய மாதீஸ்வரன் நர்மதா என்ற தரம் மூன்றில் கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு பாடசாலையில் பொலிஸ் யாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கர்நாட்டுக்கேணி மக்கள் விசனம் தெரித்துள்ளனர்.

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய சாரதியும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம் : மாநகர சபை விளக்கம்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும்.

ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அவ்வாறே குறித்த உணவகத்திற்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் அவர்கள் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் , அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார்கள். அவற்றினை ஆராய்ந்து அனுமதிகள் கொடுப்பதா இல்லையா எனும் முடிவு எடுக்கப்படும்.

அனுமதி கொடுக்க ஏதுவான காரணம் இல்லை எனில் , நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உணவகத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நல்லூர் ஆலய சூழலை புனித பிரதேசமாகவும் , ஆலய சூழலில் குறிப்பிட்ட சுற்று வட்ட பகுதிக்குள் அசைவ உணவகங்கள் ,

கோளிக்கை உள்ளிட்டவை அமைக்கப்பட கூடாது என சபையில் தீர்மானம் நிறைவேற்றி , உப விதிகளை உருவாக்கினாலே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ள்னர்.

எனவே புதிதாக சபையை அமைத்து ஆட்சி செய்யவுள்ள மாநகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பான தீர்மானத்தை சபையில் நிறைவேற்ற வேண்டும் என நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.