வவுனியா காத்தார்சின்னக்குளம் 215பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 10 குடும்பங்கள் சுமார் 20 வருடமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வருகின்றனர். இதனால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் தமது தேவைகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை கோரி வருகின்றனர்.
இதனால் பல்வேறு அடிப்படைத்தேவைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது, எனவே நாங்கள் குடியிருக்கும் காணிக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதுடன் வீட்டுத்திட்டங்களையும் வழங்குமாறு கோரி இன்று நண்பகல் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரி சபையின் அலுவலகத்திற்கு குறித்த 10 குடும்பங்களும் சென்று தமது நிலைப்பாடுகள் தொடர்பாக வவுனியா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகரைச்சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வியடம் குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கும்போது, காத்தார்சின்னக்குளம், ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. பொதுத் தேவைக்கு ஒதுக்கப்படாத காணியில் கடந்த 20 வருடமாக குடியிருந்து வருகின்றோம்.
அந்த நேரத்தில் அக்காணியினை தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் கேள்விக் கோரல் மூலம் அறிவித்தல் கோரப்பட்டது. நாங்கள் வசித்து வரும் காணிக்கு கேள்விக் கோரல் போடப்பட்டுள்ளதால் எமது பகுதியை விடுத்து வேறு பகுதியிலிருந்து கேள்விக் கோரல் மூலம் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து நாங்கள் இவ்விடயம் குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சென்று கேட்டபோது குறித்த கேள்விக் கோரல் அறிவித்தல் அப்படியே கைவிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனினும் எமது காணி விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்று எமது காணியின் ஆவணப்பத்திரம் குறித்து கேட்டு வருகின்றோம்.
ஆளுநர், பிரதேச செயலாளர், கிராம அலுவலகர் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தோம். எவரும் பதில் அனுப்பவில்லை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு தலைமையகத்திலிருந்து எமக்கு இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இருபது வருடமாக எங்களுக்கு எவ்விதமான முடிவுகளையும் பெற்றுத்தரவில்லை. எமது தேவைகள் குறிப்பாக பாடசாலையில் மாணவர்களைச் சேர்ப்பது முதல் கிராம அலவலகரின் தேவைகளுக்குச் சென்றால் கூட காணி அனுமதிப்பத்திரங்களைக் கோரி வருகின்றார்கள்.
நங்கள் வசித்துவரும் பகுதியில் நாட்டப்பட்ட தென்னைமரத்திற்குக்கூட அவர்களுக்கு பதில் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நாட்டப்பட்ட 14 தென்னை மரங்களையும் எங்களை வைத்து அகற்றியுள்ளனர்.
மலசலகூடம் அமைக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளதுடன் மூன்று குடும்பங்கள் இன்று வரையில் மலசலகூடம் அமைக்கப்படவில்லை. மறைப்புக்களை வைத்துக்கொண்டே பயன்படுத்தி வருகின்றோம். கிராம சேவையாளரிடமிருந்து எமக்கு எவ்வித வாழ்வாதர உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
எமக்கு காணி ஆவணம் பெற்றுக்கொள்வதற்கும் இன்று ஒரு முடிவினைப்பெற்றுக்கொள்ளவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று வருகை தந்திருக்கின்றோம். எமக்கு நிரந்தரமாக அக்காணியினை பெற்றுத்தரவேண்டும் வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும். குறித்த 10குடும்பங்களுக்கும் அக்காணியினைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுயிலுள்ள 10 குடும்பத்தினரையும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளரைச் சந்தித்தபோது, அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச் காணியினையே பெற்றுக்கொள்ள முடியும். இவர்கள் குடியிருக்கும் பகுதி தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு பாரப்படுத்தப்பட்ட காணி எனினும் பிரதேச சபையினரின் அனுமதியுடன் 20 பேர்ச் காணியினை பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு மாறாக நாங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. இவர்கள் அக்குடியிருப்புக்குள் விடப்பட்ட பொதுக்காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் என்றும் சொல்லாம். இவர்களுக்காக வேலையைச் செய்வதற்கு எங்கள் மட்டத்தில் எதனையும் செய்துகொள்ள முடியாது. தலைமை காரியாலயத்திலுள்ள சொத்து முகாமையாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடக்கு புனர்வாழ்வு மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் கே. காதர் மஸ்தானின் கவனத்திற்கு அப்பகுதியிலுள்ளவர்களினால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதி அமைச்சர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதுடன் இன்று கொழும்பிலுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபை, குறித்த 10 குடும்பங்கள், பிரதி அமைச்சர் ஆகிய முற்தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு இன்று இணக்கம் ஏற்பட்டுள்ளது.




















































