அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனையான Celia Barquin Arozame (22) கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
Ames பகுதியிலுள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றில் விளையாட்டு சாதனங்கள் தனித்து விடப்பட்டிருப்பதைக் கண்ட விளையாட்டு வீரர்கள், அது யாருடையது என தேடி பார்க்கும்போது Celiaவின் உயிரற்ற உடல் கிடப்பதைக் கண்டனர்.
விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிய பொலிசார், Celia உயிரிழப்பதற்கு முன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Celia அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனைகளில் ஒருவர் என்பது மட்டுமின்றி பிரித்தானிய ஓப்பன் சாம்பியன்ஷிப்பையும் பெற்றிருந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக Collin Daniel Richards (22) என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோல்ஃப் விளையாட்டு பிரபலங்கள் Celiaவின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு தங்கள் அஞ்சலியையும் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்த 8 பேரில் 3 பெண்கள் சடலமாக மிதந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூர்யபிள்ளையார் குப்பம் என்ற ஊரில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் தடை பட்டுள்ளது.
இதனால் கிராமத்தில் இருக்கும் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 7 பெண்கள் குடங்களுடன் சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் எடுத்திக்கொண்டிருக்கும்போதே திடீரென சிமெண்ட் பலகை சரிந்துள்ளது.
இதில் அங்கிருந்த பெண்கள் 7 பேருமே கிணற்றுக்குள் விழுந்தனர். இதனை பார்த்த நாகப்பன் என்ற நபர் காப்பாற்ற சென்றபொழுது, அவரும் கிணற்றுக்கு தவறி விழுந்தார்.
கிணற்றுக்குள் இருந்து அலறல் சத்தம் வருவதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் மழையின் காரணாமாக பகுதி முழுவதும் சேதமடைந்திருந்ததால், 400 மீ தூரத்திலே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் நாகப்பன், மல்லிகா, சிவகாமி, அம்சா, நீலாவதி ஆகிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் கிணற்று சுற்றுப்பகுதி ஈரமாக இருந்த காரணத்தாலும், சிமென்ட் சிலாப் உடையும் தருவாயில் இருந்ததாலும், தீயணைப்பு துறையினரால் மற்ற மூவரையும் மீட்க முடியவில்லை. இதில் சடலங்களாக கிணற்றில் மிதந்த 3 பேரின் உடல்களை இரவு முழுவதும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டெடுத்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணநிதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சோனா அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.
சோனா அகர்வால் உடலை பரிசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டொலர்கள், தங்க நகைகள், மற்றும் பக்கத்து வீட்டு சாவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த அன்று பக்கத்து வீட்டில் இருந்து சோனா வெளியில் வந்ததாக அந்த வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவரின் மாமனார் கூறியுள்ளார். அதாவது, பிரசாத் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோதுதான் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்
விநாயகர் சதுர்த்தி பூஜையை ஒட்டி பிரசாத்தின் மனைவி சோனாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அக்கம்பக்கத்து பெண்களும் பிரசாத் வீட்டுக்கு சென்ற நிலையில் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்த நிலையில் சோனா மட்டும் பெட்ரூமில் உட்கார்ந்துள்ளார்.
அன்று மாலை முதல் பிரசாத்தின் வீட்டு சாவி காணாமல் போய்விட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரசாத் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் மொட்டை மாடியில் கெட்டுகெதர் செய்துள்ளனர்.
இதில் சோனா பங்கேற்காத நிலையில், பிரசாத்தின் மாமனார் கெட்டு கெதருக்கு நடுவே திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பிரசாத் வீட்டுக்குள் இருந்து சோனா அகர்வால் வெளியே வந்துள்ளார். இதை பிரதாத் மாமனார் பார்த்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, சோனா தான் விநாயகர் சதுர்த்தி அன்று பிரசாத் வீட்டு சாவியை திருடியிருக்க வேண்டும்.
பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளாடையில் வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது
இதை பிரசாத் மாமனார் பார்த்து விட்டதால் பயந்து ஓடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவமானத்தால் தற்கொலை செய்தாரா அல்லது கீழே தள்ளிவிட்டு கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவ்வாறான நில அதிர்வு எதுவும் பதுளையில் பதிவாகவில்லை என்று புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரமும் திருகோணமலையின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேச மக்களால் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னரே புவிச்சரிதவியல் திணைக்களம் அதை உறுதி செய்திருந்தது.
அதேபோல் இன்று பதுளையில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டபோதும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் இந்த தகவலை மறுத்துள்ளது.
இவ்வாறு இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் நிலநடுக்கத்திற்கான காரணம் என்ன என்று இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை. காலநிலை மாற்றமா? அல்லது தொடர் வெப்பத்தினால் ஏற்படும் அதிர்வா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் மூன்று காரணங்களை முன்வைத்து இன்று (18.09.2018) மதியம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும்,
இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் தலமையிலான குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து நிற்பதற்கும் தற்காலிக தடை விதித்து அவ்விடத்தில் பொலிஸார் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பேரூந்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலதிகமாக வெளிமாவட்டங்களிலிருந்து பேரூந்துகளை பெற்று சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வடமாகாணத்திற்குரிய அனைத்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு பாரிய சிரமங்கள் எவையும் ஏற்படவில்லை.
ஹபரன – பலுகஸ்வெவ பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 5 யானைகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளன.
கொலன்னாவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே குறித்த யானைகள் உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் முன்னதாக 3 யானைகள் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்திருந்த 2 யானைகளும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு யானையின் வயிற்றில் குட்டி இருந்ததாகவும், இந்த விபத்தில் குறித்த குட்டி யானை வெளியில் வந்து இறந்து கிடந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விபத்தில் புகையிரதமும் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவை மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் விறகு எடுக்க காட்டிற்கு சென்றவர் கரடி தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் காயமடைந்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கந்தளாய், கோவில் கிராமம் பகுதியை சேர்ந்த என்.ஆனந்தராசா (வயது 49) என்பவரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார்சைக்கிளிலில் கந்தளாய் சீனிஆலை காட்டுப் பகுதிக்கு தனிமையில் சென்று விறகுகளை வெட்டிக் கொண்டிருக்கும் போதே கரடி தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மொறவெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ பேருந்து மற்றும் இராணுவ ட்ரக் என்பன பயணித்துக் கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இளைஞரின் மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் கந்தளாய், ரஜயல பகுதியை சேர்ந்த கே.எம்.பி.ஜி.ஈஸான் (22 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனை இராணுவ வீரர்களே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் குழாய் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. எனினும் வவுனியா பூந்தோட்டம் செல்லும் வீதியிலுள்ள சந்திப்பகுதிக்கு அண்மையில் திருத்தப்பணிக்காக மண் வெட்டப்பட்டு வீதியில் போடப்பட்டு கடந்த ஒருமாதகாலமாக மூடப்படவில்லை.
இதனால் அவ்வீதியில் பயணிப்பதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து பூந்தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றதுடன் அப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
எனினும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வவுனியா குடியிருப்பு பிரதான சந்திப்பகுதிக்கு அண்மையில் வெட்டப்பட்ட வீதியில் குழாய் பொருத்தப்பட்டுள்ளபோதிலும் அதை மூடிவிடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இன்று வரையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இரவு வேளையில் அவ்வீதியில் பயணம் மேற்கொள்ளும் போது பலர் விபத்துக்களை எதிர்நோக்கிவருகின்றனர். அப்பகுதியிலுள்ள குறித்த பகுதியை மூடி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் பலர் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முச்சக்கரவண்டிச்சாரதிகள், பயணிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறிய தந்தையின் உடலை பார்த்து கதறும் சிறுவனின் புகைப்படம் வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது.
டெல்லியின் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று கழிவு நீரை சுத்திகரிக்கும் வேலையில் 5 தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.
சுமார் 30 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போது அந்த 5 தொழிலாளர்களும் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் மரணம் அடைந்த ஐவரும் 28 முதல் 30 வயது உடையவர்கள். இந்த ஐவரும் மரணம் அடைந்ததிற்கு அவர்களிடம் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஐவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதில் மரணம் அடைந்த ஒருவரின் 7 வயது சிறுவன், தனது தந்தையின் உடலை பார்த்து அழும் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்ணிலும் கண்ணீரை வர வைத்துள்ளது.
வெறும் சடலமாக கிடக்கும் தனது தந்தையின் உடல் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறி இருப்பதை அறியாத அந்த சிறுவன், அவரின் முகத்தில் மூடப்பட்டு இருக்கும் துணியை எடுத்து பார்த்து அப்பா.. அப்பா என்று கதறுகிறான்.
இந்த காட்சிகள் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் உறைய வைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் கண்ணீருடன், கோபத்துடனும் பதிவிட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனய் என்ற 24 வயது இளைஞரின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
பிரனய் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
பெற்றோரை எதிர்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை அழைத்துக்கொண்டு பிரனய் மருத்துவமனைக்கு சென்றபோது, மாருதிராவ் ஏவிய கூலிப்படை நபர், பிரனயின் தலையில் தாக்கி கழுத்தில் வாள் போன்ற கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரனய்யை கொல்வதற்கு அம்ருதாவின் அப்பா 1 கோடி ரூபாய் கூலிப்படைக்கு தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அம்ருதாவின் சிசுவை அழிப்பதற்கு மருத்துவருக்கும் பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மிர்யலாகுடாவில் பிரனயின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாங்களாக முன்வந்து கலந்துகொண்டனர். ‘பிரனய் அமர் ரஹே’, பிரனயை அழிக்க முடியும், காதலை அழிக்க முடியாது (பிரனய் என்றால் இந்தியில் காதல் என்று பொருள்) என்ற பதாகைகளுடன் ‘ஜெய் பீம்’ முழக்கங்கள் மிர்யலாகுடா பகுதியின் மூலை முடுக்குகளிலும் ஒலித்தன.
பிரனய் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பகுதியில் அம்ருத்தா அமர்ந்திருந்தது அனைவரது மனதையும் கலங்கவைத்தது.
இனி அம்ருதா எங்கள் மகள். அவளை எதற்காகவும் நாங்கள் விட்டுத்தரமாட்டோம். அம்ருதாவும் அவளின் குழந்தையும் இனி எங்களுடன் தான் இருப்பார்கள். அவளுடன் இருந்து பிரனய் கொலைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம் என பிரனயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அம்ருதா கூறியதாவது, பிரனய் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால் என் குழந்தைக்காகவும், சாதிய முறைமையை எதிர்த்துப் போராடவும் உயிர் வாழ்வேன். இந்த வேதனையை யாரும் அனுபவிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
தெலுங்கானாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா என் அப்பா கருவை கலைத்துவிடு என்று எண்ணிடம் அடிக்கடி கூறியதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பிரனாய் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் அம்ருதாவை கடந்த வெள்ளிக்கிழமை பிரனாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது கூலிப்படை நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கண் முன்னே கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், அம்ருதா இன்னும் அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் அம்ருதா அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டோம்.
இது என்னுடைய அப்பாவிற்கு பிடிக்கவில்லை, இதனால் நான் அவரிடம் அதிகமாக பேசுவதில்லை, அவருடம் என்னிடம் அதிகமாக பேசமாட்டார்.
எப்போதாவது தான் பேசிக் கொள்வோம். அவர் பேசும் போது எல்லாம் உடனடியாக வீட்டிற்கு வா, அல்லது கருவை கலைத்து விடு என்று கூறுவார்.
கணவனை கொலை செய்வதற்கு முன் கடைசியாக அதாவது புதன் கிழமை என்னிடம் பேசிய அவர் கருவை கலைக்கும் படி கூறினார்.
அதுமட்டுமின்றி அவர் மூன்று வருடங்கள் குழந்தை இல்லாமல் நீங்கள் வாழ்ந்து வந்தால், நான் உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஆனால் நான் என் குழந்தையை கொலை செய்யமாட்டேன் என்று கூறினேன். என் அப்பா நான் குழந்தை இல்லாமல் இருந்தால், பிரானாயை கொலை செய்துவிட்டு என்னை எளிதாக அழைத்துச் செல்ல திட்டம் தீட்டியிருக்கலாம், ஆனால் தற்போது பிரானாயை இழந்து தவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34). இவருக்குத் திருமணமாகி பரத் என்கிற மகன் உள்ளார்.
குழந்தை பரத் கண்பார்வை இல்லாமல் பிறந்ததால் மகனுக்குச் சிகிச்சை செய்தும் பார்வை வராத நிலையில் ஏற்பட்ட பிரச்சினையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பத்மாவை விட்டுப் பிரிந்து சென்றார் கணவர்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பத்மாவுக்கு பார்வையற்ற மகனைப் பராமரிக்கும் பணியும், குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் பணியும் ஒருசேரத் தலையில் விழுந்தது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் மகன் பரத்தை வளர்க்க வழி தெரியாமலும் தவித்துள்ளார் பத்மா. அடையாரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மகனைப் படிக்க வைத்துள்ளார்.
சில வேளைகளில் மகனுக்கு உணவு கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் பரிதாப நிலையைப் பார்த்தும் வறுமை நிலையை நினைத்தும் பத்மா விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என பத்மா முடிவு செய்துள்ளார்.
அஜித்தின் ஆசை பட பாணியில் மகனின் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் இவரும் தூக்கில் தொங்கியபோது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளது.
இதனால், தனது மனதை மாற்றிக்கொண்டு மகனையும் காப்பாற்றவிடலாம் என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கே பரிசோதித்த மருத்துவர் பரத் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பத்மாவை பொலிசார் கைது செய்து அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் மாலை புழல் சிறையில் அடைத்தனர்.
தாயை சிறையில் அடைத்த பின்பு மகன் பரத்தின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்னை எழுந்தது. அதன் பின்னர் போலீசார் அதே பகுதியில் வசித்து வந்த பரத்தின் தந்தை கோபிநாத்தை அழைத்து வந்து பரத்தின் உடலை ஒப்படைத்தனர்.
அவர் பரத்தின் உடலை இறுதி சடங்கு நடத்தி பரங்கிமலை நசரத்புரம் இடுகாட்டில் நேற்று காலை அடக்கம் செய்தார்.
மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார்.
முக்தாரின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து, அதற்கு வீரர்கள் பலியாகின்றனர், கடந்த மாதமும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது