கடன் அட்டை அல்லது டெபிட் அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அட்டை செலுத்தும் இயந்திரத்தை பெறும்போது வணிகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் அறிவிட முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக ஒரு வணிகர் வசூலித்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அட்டை வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அட்டை செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் முறைப்பாடுகளை அடுத்து மத்திய வங்கி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னர், விபத்து தொடர்பான அறிக்கை வெளியான போதும், அந்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் சிதைந்து போயிருந்த நிலையில், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எச்சங்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொல்லப்பட்ட பெண் ஒருவர் எனக்கூறி அவருடைய மகனுக்கு அனுப்பப்பட்ட எச்சங்கள் வேறு ஒருவருடையது என்று லண்டனில் வசிக்கும் ஒருவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில், தமது தந்தையும் தாயும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் என்று கூறப்படும் எச்சங்கள், குறித்த மகனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் அதில் தமது தாயின் சடல எச்சங்கள் வேறு ஒருவரின் எச்சங்கள் என்ற அவருடைய மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் எச்சங்களில் பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அனைத்து எச்சங்களும் மிகவும் தொழில்முறை கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது,
அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 22 ஆம் திகதி வழங்கப்பட்ட புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் ஏற்பட்ட அச்சு பிழை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் தேர்வுக்கு தோற்றும் அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 2,000 பேர் இந்த புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் பதிலளித்துள்ளனர்.
அனுராதபுரம் கல்வி வலய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் உரிய பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், அதிபர்கள் தங்கள் பாடசாலைகளில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வினாத்தாளை அச்சிட்டு விநியோகித்தனர்.
வினாத்தாளை மாணவர்களுக்கு விநியோகித்த ஆசிரியர்கள், வினாத்தாளைப் படித்த மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால்தான் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளதாக அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர்களின் தகவலின் பேரில், வலயக் கல்வி அலுவலகம் அச்சுப் பிழைகளை சரிசெய்து பாடசாலைக்கு புதிய வினாத்தாளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவியபோது, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து, தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கம்பளை – புசல்லாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த பெண், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை சந்திப்பதற்காக நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து கம்பளை பொலிஸார் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு தேவையான ஆடைகளை பெறுவதற்கு காதலனுடன் சென்ற போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலனை காப்பாற்ற காதலி விழுந்ததனை அங்கிருந்த உயிர் காப்பாளர்கள் பெரியளவில் அவதானிக்கவில்லை.
இளைஞனை காப்பாற்றியவர்களுக்கு எங்கள் மகள் குறித்து அவதானம் இருக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 18 மணி நேரத்தின் பின்னர் மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 3 மகன்கள் உள்ள குடும்பத்தில் ஒரே மகளான அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் கற்று வந்துள்ளார்.
அன்றைய தினம் பல்கலைகழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவிற்கான தகவல்களை வழங்கிவிட்டு அதற்கான ஆடைகளை பெற்றுக் கொண்டு திரும்பும் பொது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
காலி, அக்மீமன பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது சிறுமியை, அவரது அக்காவின் காதலன் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வலஹண்துவ பகுதியை சேர்ந்த 25 வயது சந்தேக நபர், தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிறுமியின் அக்காவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவம் நடந்த நாளில் காதலின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் அவருடன் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் கையடக்க தொலைபேசியின் சார்ஜரை காதலியின் வீட்டில் மறந்துவிட்டு வந்ததாக கூறி மீண்டும் வந்துள்ளார். இதன்போது வீட்டில் தனியாக இருந்த தங்கையை அவர் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை கராப்பிடிய போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த லுணுகலை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் ஒருவர் பசறை பொலிஸாரிடம் இன்று (23) ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பசறை பல்லேகம பகுதியில் இருந்து கடமைக்கு செல்லும் குறித்த ஆசிரியை தனது இரு பிள்ளைகளை பசறை இசில்பத்தன பாடசாலைக்கு விடுவதற்கு சென்ற வேலை பசறை பிபிலை வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் 170,000 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைப்பையை தவறவிட்டுள்ளார்.
ஆசியை பசறை மத்திய மாக வித்தியாலய பாடசாலைக்கு கடமைக்கு வந்து பார்க்கும் போது கைப்பை இருக்கவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியபோதும் கைப்பை கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடமை நிமிர்த்தம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இருந்து பதுளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகதர் ஆசியரின் கைப்பையை அவதானித்துள்ளார்.
அதனை எடுத்து பார்த்தபோது பணம் இருந்ததுள்ளது. உடனே குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் ஆசிரியருக்கு தன்னுடன் கடமை புரியும் மற்றொரு ஆசிரியையிடமிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அழைப்பில் நீங்கள் தவற விட்ட கைப்பை பசறை பொலிஸ் நிலையத்தில் உள்ளதாக தெரிவித்து உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தவற விட்ட கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மையான செயலுக்கு பாராட்டு குட்=விந்து வருகின்றது.
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாரவில , நாத்தாண்டிய பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிநைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுளை – ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தில் ஹாலிஎல, ஜெயகமபகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தி இருந்தனர்.
இதன்போது மறைத்து வைத்திருந்த 5,270 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் போதைபொருள் பாவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீட்டில் செய்யப்பட்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி – இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் முறையற்ற காதலன் கம்பளையில் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த பெண்ணை கூர்மையான ஆயுதத்தால் காயப்படுத்தி அந்த இடத்திற்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த பெண் நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில் அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ள நிலையில், அங்கு வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோஹாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பப்பட்டுள்ளது.
இதனை கெலிகட் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பட்ட விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IX 375 என்ற குறித்த விமானம், காலை 9.07 மணியளவில் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இருப்பினும், கெபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஹமதாபாத் ஏர் இந்திய விமான விபத்துக்கு பின்னர், ஏர் இந்திய நிறுவனத்தின் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மேலும் கடும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி நிகழவுள்ளது.
குறித்த கிரகணத்தின் போது ஸ்பெய்ன், எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முழுவதுமாக இருளில் மூழ்கும் என கூறப்படுகின்றது.
அத்துடன் வழக்கமாக நிகழும் கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில், இந்த கிரகணம் 6 நிமிடங்கள் வரை நிகழும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் உயிரை மாய்த்துள்ளார். பதியதலாவ, மரங்கல பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் இன்று அதிகாலை அவரது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரே அவரது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் 23 வயதுடைய சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் கொலையை செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவராகும். சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.
எனக்குத் தெரிந்தவரை, வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் அறிக்கையில் அத்தகைய மாற்றத்தைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.
இது ஒரு இரத்து என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது” என நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
14 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வரும் 24 மணி நேர காலத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, குறித்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதேவேளை, நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.