இலங்கை முழுவதும் நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முடியால் பறிபோன இரண்டு உயிர்கள் : விசாரணையில் வைத்தியர்கள் கொடுத்த அதிர்ச்சி!!

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல் வைத்தியர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் சவுரப் திரிபாதி- அனுஷ்கா திரிவேதி தம்பதியினர். இவர்கள் இருவரும் வைத்தியராக பணிப்புரிந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராவத்பூரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையால் தனது கணவர் வினித் தூபே உயிரிழந்ததாக ஜெயா திரிபாதி என்பவர் முதலமைச்சர் சேவை மையத்தில் ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

புகாரில், “கடந்த மார்ச் 13ஆம் திகதி என் கணவர் முடிமாற்று சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், அடுத்த நாளே அவரது முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாமல், மறுநாளே உயிரிழந்தார்,” என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த தம்பதியின் மீது மீண்டும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் குஷக்ரா கதியார் என்பவர் அளித்த புகாரில், “30 வயதான எனது சகோதரர் மயங்க், கடந்த ஆண்டு நவம்பரில் எம்பையர் கிளினிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

அதே நாளில் ஃபருக்காபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவர், சில மணி நேரத்திலேயே முக வீக்கம் மற்றும் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்,”என கூறியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி, பல் வைத்தியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும் அனுஷ்கா தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அனுஷ்கா நடத்திய வைத்தியசாலை அலுவகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அதன் பெயர்ப்பலகையும் அகற்றப்பட்டுவுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வைத்திய விதிமீறல்கள் தொடர்பாகவும் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 வயது இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு : சிக்கிய விமானப்படை சிப்பாய்!!

கல்கிஸையில் இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் மற்றும் அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மேலும் இருவரை கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9mm ரக தோட்டாக்கள் 15 மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கொட்டாவ விகாரை மாவத்தையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி விமானப்படையில் ஒன்றரை வருடம் கடமையாற்றிய விமானப்படை சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்காக துப்பாக்கிதாரி வருகைதந்த மோட்டார் சைக்கிள், கொட்டாவ மாபுல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்னால் பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், இரண்டு போலி எண் தகடுகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு நபர்கள் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ வலயத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராஹ்மனகேயின் நேரடி மேற்பார்வையின் கீழ் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓர்பன் பிளேஸைச் சேர்ந்த 19 வயதுடைய பிரவீன் நிசங்க என்ற இளைஞர் ஆவார். இவர் கல்கிஸ்ஸ நகர சபையில் துப்புரவுப் பணியாளராக செயற்பட்டு வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் சம்பவ தினத்தன்று கல்கிஸ்ஸயில் உள்ள சில்வெஸ்டர் வீதிப் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் தற்போது சிறையில் உள்ள தெஹிவளை சத்துரி என்ற போதைப்பொருள் கடத்தல்காரியின் மகன் என்றும், அந்தப் பெண்ணின் மகளும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள் : துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

சிறுவர்கள் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடியுள்ளனர்.

இதன்போது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சிறுவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து சிறுவர்கள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிறுவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சரிந்து வரும் தங்கம் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 259,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 239,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 29,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவெளை கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலங்கையில் கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலையானது இருபதாயிரம் ரூபாவை விட அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் சூறாவளி காற்று : முறிந்த மரங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று (17.05.2025) காலை ஏழு மணியளவில் கடும் சூறாவளிக்காற்று வீசியதுடன், மழையும் பொழிந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. குறிப்பாக மின்வடங்களுக்கு மேல் மரங்கள் வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடங்கல் ஏற்ப்பட்டுள்ளது.

தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16.05.2025) மதியம் இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று (16.05.2025) காலை வவுனியாவை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான குறித்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.

வவுனியாவில் நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து நகரவீதியூடாக தினச்சந்தையை அடைந்தது.

குறித்த ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

பல்கலை மாணவன் உயிரிழப்பு : 10 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாணவர்களும் இன்று (16.05) நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழிவை நெருங்கியுள்ள பூமி : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!

பூமி அழிவது குறித்து ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். இதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர்.

அதில், பூமியின் ஆக்சிஜன் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் காலியாகிவிடும் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறு ஆக்சிஜன் அனைத்தும் காலியானால் அதன் பிறகு உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாக மாறிவிடும்.

இது தொடர்பாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள டோஹோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கசுமி ஓசாகி கூறுகையில்,

“சூரியன் மற்றும் கார்பனேட்-சிலிகேட் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை வைத்தே பல ஆண்டுகளாக பூமியின் எதிர்காலம் குறித்து விவாதித்து வருகிறோம்.

அதில் நாம் முக்கியமாகக் கவனிப்பது வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவு தொடர்ந்து குறைவதும்.. பூமி தொடர்ச்சியாக வெப்ப மயமாவதும் ஆகும்.

அதிக வெப்பம் காரணமாக ஒளிச்சேர்க்கை (photosynthesis) பாதிக்கப்படும். அதேபோல வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறையும்.

இதனால் பூமியின் பயோஸ்பியர் 2 பில்லியன் ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவுகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

பூமியில் ஆக்சிஜன் அளவுக்குக் குறையும்போதும் உயிர்கள் வாழ முடியும் என்ற போதும் அதில் தற்போதைய நிலையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, பூமி ஒரு பில்லியன் ஆண்டுகளில் அழியும் எனக் கணித்துள்ளனர்.

மர்மான முறையில் வீட்டின் முன் கிடந்த சடலம் : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

பசறை பொலிஸ் பிரிவின் தும்மலதென்ன பகுதியில், வீட்டின் முன் உள்ள தாழ்வான பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக நேற்று (15) இரவு பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் அம்பதென்ன, பசறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதோடு, இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

500 ரூபாவுக்காக பல்கலை மாணவியின் நிர்வாண படத்தை பகிர்ந்த மாணவன்!!

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் அபராதம் விதித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவருக்கு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்கப்பட்டது.

சந்தேக நபர் மீது ஆபாச புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பல்கலைக்கழக மாணவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதங்களில், பிரதிவாதி விரைவில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று கூறினார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட புகைப்படத்தை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியதாகவும், சந்தேக நபரோ அல்லது புகார்தாரரோ குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்யப்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான செயல், குற்றம் சாட்டப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்த குற்றமாகும்.

வைத்தியசாலையில் நடந்த துயர சம்பவம் : பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!!

திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, ​​அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது.

பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது.

அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை!!

179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு, பேருவளை கடல் எல்லையில் மீன்பிடி படகில் ஹெரோயின் கடத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், மூவர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் நீதியரசர் ஆதித்யா படபெந்தி மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹெராயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து சந்தேகநபர்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிலோ கணக்கிலான தங்கத்துடன் சிக்கிய நபர்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்த 2 பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை வாகன உதிரி பாகங்களில் மறைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகப் பாதை வழியாக வெளியேற முயற்சித்த 2 பயணிகள் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் எனவும் மற்றவர் கண்டி ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும், வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் நேற்று காலை 8.30 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் இருந்த 6 கிலோகிராம் 700 கிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகன தாங்கி அமைப்புகளுக்குள் 21 தங்க பிஸ்கட்டுகளையும் வாகன குளிரூட்டும் அமைப்புடன் தொடர்புடைய நீர் பம்ப் பாகங்களுக்குள் உருக்கி அந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட பல தங்கக் கட்டிகளையும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரண்டு பயணிகளும் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த தங்கமும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.

வவுனியாவில் கிறிஸ்டி குகராஜாவின் 26வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்ரி குகராஜாவின்(குகன்) 26 வது நினைவுதினம் வவுனியாவில் இன்று (15.05.2025) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு அன்னாரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.