வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று (27.04) நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை.

வவுனியா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடையாளம் காண உதவுமாறு கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த வயதை கிட்டிய நபர்கள் எங்காவது காணாமல் போயிருந்தால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தின் 0718592778 அல்லது 0242054286 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் விஞ்ஞானப் பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகமட் முபாரக் முகமட் பர்ஹத் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04.2025) வெளியாகின. அதில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகமட் முபாரக் முகமட் பர்ஹத் என்ற மாணவன் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

அவர், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 187ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் முதலிடம்!!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த,

வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A சித்திகளுடன் பாடசாலையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையில்லாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னின்றாலும் தனது முயற்சியில் சாதனை படைத்துள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி ச.பிதுர்சா வர்த்தக பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிதுர்சா சற்குணம் என்ற மாணவி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பிதுர்சா சற்குணம் என்ற மாணவி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி கலைப் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை!!

உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் கலைப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா என்ற மாணவி,

தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் கு.தனோஜன் கணிதப் பிரிவில் முதல் இடம்!!

உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவன் ஒருவன் முதலாம் இடத்தை பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மரண அறிவித்தல் : திரு. சின்னதுரை நாகராஜா!!

சங்கானையை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் ராஜன் இன்டஸ்ரிஸ், சின்பொன், வைற்ஸ்டோன் நிறுவனங்களின் ஸ்தாபகருமாகிய திரு. சின்னதுரை நாகராஜா அவர்கள் நேற்று (26.04.2025) சனிக்கிழமை வவுனியாவில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற சின்னத்துரை பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும் ஶ்ரீஸ்கந்தராஜன் (ராஜன்), கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம் பிரபாகரன் (லண்டன்), திருமதி அபிராமி அவர்களின் பாசமிகு மாமனாரும், கவின், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சங்கானையை சேர்ந்த கந்தசாமி மற்றும் காலம்சென்ற தேவதாஸ் (லண்டன்) ஆகியோரது பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரது இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் 29.04.2025 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணியளவில் நடை பெற்று தட்சணாங்குளம் இந்து. மயானத்தில் ஈமைக்கிரியைகள் இடம்பெறும் என்பதனை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் .
தொடர்புகளுக்கு
N.ராஜன் (மகன்) 0777562072
P.கல்பனா(மகள்) 0773838026

டொலர் மதிப்பின் அதிகரிப்பால் இலங்கைக்கு பெரும் சிக்கல்!!

கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பதும் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 289ரூபாயக காணப்பட்டது. மேலும் டொலரின் விற்பனை விலை 297ரூபாயக காணப்பட்டது.

இருப்பினும், நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் 23 ஆம் திகதி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய விற்பனை விலை 304 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களில் ரூபாயின் மதிப்பு சுமார் ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. இதன் பாதகமான தாக்கம் பெரும்பாலும் நமது வெளிநாட்டுக் கடனில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன், வெளிநாட்டுக் கடனின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் பல விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

தற்போதைய விகிதத்தில் டொலரின் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தால், வெளிநாட்டுக் கடன் அளவு 35 பில்லியன் ரூபாய் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமல்படுத்திய கடுமையான வரிக் கொள்கையைத் தளர்த்தாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள் : பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி!!

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின், ஊடகவியலாளர் ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரை பார்க்க வேண்டாம். சுவையை பாருங்கள் எனக் கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும். அது தான் உண்மை. ஆனால் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள்.

சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளை தானே வேண்டும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம்(24.04.2025) மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று(25) உயிரிழந்தார்.

சம்பவத்தில் போகஸ்வெவ பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுவிஸில் வாழ் இலங்கைத் தமிழர்கள் சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார். இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார்.

இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை : விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையைக் கருத்திற் கொண்டே இலங்கையில் தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் அனுமதி இல்லை. பொருளாதார பிரச்சினை காரணமாக எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விலையேற்றம் காரணமாக தங்க வியாபாரம் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் விடுமுறை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு மேலதிகமானது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை காலம் தீர்மானிக்கப்படும்.

இதன்படி, 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 முதல் 150 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட

தூரமாக இருந்தால் 11/2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு அதிகமாக இருப்பின் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை!!

கடன் அட்டையை பெறும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்திடம் இருந்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெற வேண்டும் என்று அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பிறகு 18 வயது பூர்த்தியடைபவர்களும் கட்டாயமாக வரி எண்ணைப் பெற வேண்டும்.

அதற்கமைய, வாகனத்தை பதிவு செய்தல், வாகனத்தை வேறொரு நபருக்கு மாற்றுதல், காணி பதிவு செய்தல், வணிகத்தை பதிவு செய்தல் மற்றும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுதல் ஆகியவற்றின் போது வரி எண் கட்டாயமாக இருக்கும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.

18 வயதை நிறைவு செய்த 10 மில்லியன் மக்களுக்கு வரி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 மில்லியன் பேர் வரி எண்களுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் வரி எண்களைப் பெறுவதற்கு இந்த நாட்களில் அதிகளவில் மக்கள் வருகைத்தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு : வட்டித் தொழிலால் ஏற்பட்ட விபரீதம்!!

கட்டுநாயக்க ஹீனட்டியன பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றினர். அதில் 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.

நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.