காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் தகறாரில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிங்தொட்ட, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் ஆவார்.
போதைப்பொருள் பொதி ஒன்றுக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கைதான பிரித்தானிய விமானப் பணிப்பெண் சார்லோட் மே லீயை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
46 கிலோகிராம் 60 கிராம் மெத்தம்பேட்டமை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதான பிரித்தானிய பெண் நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் கடவுச்சீட்டு தொடர்பான அறிக்கை கோரப்பட்டதாகவும், இதுவரை அந்த அறிக்கையைப் பெற முடியவில்லை எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த பின்னர், ஜூலை 23ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்காக வழக்கறிஞர்கள் சம்பத் பெரேரா, கயான் கலட்டுவாவா, எஷான் சந்துங்கஹவத்தே மற்றும் மஹிஷ முதுகமுவ ஆகியோர் முன்னிலையானார்கள். அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை நாட்டிற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு லண்டனில் இருந்து வந்த 21 வயதான சார்லோட் மே லீ, சட்டவிரோதமாக நாட்டிற்கு போதைப்பொருள்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மே மாதம் 13ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் விமானப் பணிப்பெண்ணான இவர், தனது பொதிகளில் போதைப்பொருள் இருப்பதை அறிந்திருக்கவில்லை எனவும், அவற்றை யாரோ வைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது 60 நாள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சம்பத் பெரேரா, நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிணை மனு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாக கருதப்படும் பாதாள உலக தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கெஹல்பத்தர பத்மே, மொமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக மலேசிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்தபோது, கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார். புதுக்கடை நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டமையின் பிரதான சூத்திரதாரியாக கெஹல்பத்தர பத்மே செயற்பட்டதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள்
இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.
மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார். உயிரை மாய்க்க முயன்ற நிலையில் உடனடியாக மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை உட்பட வளர்முக நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கான இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகள் தொகுப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆடைகள், உணவுப் பொருட்கள், மின்னணுவியல் சாதனங்கள் போன்றவை இந்தச் சலுகையின் கீழ் வரும் பொருட்களின் பட்டியலில் அடங்கும்.
இதன் மூலம், அந்த நாடுகள் பிரித்தானியாவுக்கு சுங்க வரியின்றி அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பிரித்தானியாவுன்னான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா இறக்குமதி வரியை அறிவித்துள்ள நிலையில். பிரித்தானியாவில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை (10) மீட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு மீனவர்கள்
கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற கியோசனின் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பில் தனது அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார் கியோசன்.
நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக புதன்கிழமை (9) இரவு மன்னார்
கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளமை தெரிய வந்துள்ளது
மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் கியோசன் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில்,
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் 23 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் ஆங்கிலம் மொழி மூல பரீட்சையில் 11 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் என மொத்தமாக 34 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும் தமிழ் மொழி மூல பரீட்சையில் 17 மாணவர்கள் 8ஏ சித்திகளையும் ஆங்கிலம் மொழி மூல பரீட்சையில் 3 மாணவர்கள் 8ஏ சித்திகளையும், தமிழ் மொழி மூல பரீட்சையில் 14 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தினசரி பலர் குப்பைக்கழிவுகளை வீசிவருவதினால் அவ்விடத்தின் சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.
இந்நிலையில் நேற்று (10.07) அவ்விடத்தில் பட்டா ரக வாகனத்தில் வருகை தந்த நபரொருவர் வாகனத்திலிருந்த குப்பைகளை குறித்த வீதியில் வீசியுள்ளார். இதனை அவ்வீதியூடாக சென்ற இளைஞர்கள் அவதானித்து குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தமையுடன் வீசிய குப்பைகளை மீள எடுத்துச்செல்லுமாறும் பணித்திருந்தமையுடன் அவர் குப்பைகளை எடுத்துச்செல்லும் வரை அவ்விடத்தில் நின்றனர்.
எனவே குறித்த பகுதியில் வீதியோரமாக குப்பைகள் வீசப்படுவதனை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜெனால்ட் அன்ரனி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களின் சிரமதானமும், சூழலைப்பாதுகாப்போம் மற்றும் நாட்டை வளர்ப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமும் இடம்பெற்றது.
அத்துடன் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்களும், உணவுப்பாதுகாப்பும் எனும் தலைப்பில் பிரதேச சுகாதாரப் பரிசோதகரினால் செயலமர்வு இடம்பெற்றதுடன் இலைக்கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் இடம்பெற்றது.
இச் செயற்றிட்டம் செட்டிகுளம் பிரதேச சபை , செட்டிகுளம் பிரதேச செயலகம், செட்டிகுளம் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, செட்டிகுளம் பொலிஸ், இராணுவத்தினர், பெற்றோர், பழைய மாணவர் போன்றோர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நாடளாவீய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டம் வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று (09.07.2025) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் துப்பரவு செய்யப்பட்டமையுடன் வவுனியா மாநகர சபையின் ஒத்துழைப்புடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.
இச் செயற்றிட்டத்தில் மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தில் ஞாபகார்த்த மரத்தினை நாட்டி வைத்தமையுடன் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இச் செயற்றிட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
வவுனியா செட்டிக்குளம் மயில்முட்டையிட்ட குளப்பகுதியில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானையினை காப்பாற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த யானையின் கால் பகுதியில் வெடி பட்ட காயம் ஏற்பட்டுள்ளமையினால் யானையினால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு படுக்கையில் கிடந்தது.
யானை உணவின்றி எழும்பி நடக்க முடியாத நிலையில் அவதியுற்றமையினை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் யானையினை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யானைக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி தற்போது யானையின் நிலமை தேறிவருவதுடன் நாளையதினத்தினுள் யானை எழுந்து நடக்க கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம் பிடிக்க சென்ற போதே தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை மேற்கொண்டனர்.
இதேவேளை, இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று புதன்கிழமை (09) தேடிய நிலையில் பிற்பகல் சடலம் 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.
உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் அட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்விகற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை இன்று (09.07.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.