கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
இதை அடுத்து, வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று (25) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலைய பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார். அதற்கமைய, சந்தேக நபரான தம்பியை கைது செய்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்வத்த மீகஹா கோவில வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், தம்பி தனது கையால் மூத்த சகோதரனின் தலையில் அடித்ததாகவும், தாக்கப்பட்ட மூத்த சகோதரர் தரையில் விழுந்து தலை மோதியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் (Thailand) விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக்கள் செய்தி ளெியிட்டுள்ளன.
ஹுவா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே இன்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைக்கிங் டிஎச்சி – 6 டுவின் ஓட்டர் விமானம் ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பின்னர் கட்டுப்பாட்டை இழந்தது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்ததாகவும் விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுவதுடன் விமானம் இரண்டாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், விமானத்தில் ஆறு பொலிஸார் பயணித்துள்ள நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடன் “முழுமையான போர்” ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை ஒப்புக்கொள்கின்றேன் அமெரிக்காவிற்காக இந்த செயலை நாங்கள் செய்ய ஆரம்பித்தோம்.
நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவிற்காக இந்த வேலையைச் செய்து வருகிறோம்.
சோவியத் யூனியனுக்கு எதிரான போரிலும், பின்னர் நடந்த போரிலும் பாகிஸ்தானின் சாதனையை மறுக்க முடியாது” என கூறியுள்ளார். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுதல்,
பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா விலக்குத் திட்டத்தை (SVES) இடைநிறுத்துதல், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப 40 மணிநேரம் அவகாசம் அளித்தல் மற்றும் குறைத்தல் போன்ற பல இராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு அறிவித்தது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள், அதற்கு சதி செய்தவர்களுடன் சேர்ந்து, அவர்கள் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதத்தின் மீதமுள்ள கோட்டைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதக் குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளை, லக்கலை, ஹெட்டிப்பொல பிரதேசத்தில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து கடந்த புதன்கிழமை (23.04) காலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் காரானது தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் அநுராதபுரம் இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார்.
இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது.
பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.
இதன்போது ஒரு துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது.
காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த 33 வயதுடைய துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர். காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார்.
கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் தீர்வு தேட விரும்பினால் வரிகளை இரத்து செய்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி விதித்துள்ளது. பதிலடியாக, சீனாவும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு 125% வரி விதித்துள்ளது.
ட்ரம்ப் நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என கூறியிருந்தார். ஆனால், சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், இவை உண்மை அல்ல என்றும், எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவில் குறைக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதிலிருந்து, சீனாவுக்கு எதிரான வரி விவகாரத்தில் ட்ரம்ப் ஒரு மென்மையான அணுகுமுறையை நோக்கி திரும்பியிருப்பது தெரியவருகின்றது.
இந்நிலையில் சீனா, 80இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து, அமெரிக்க வரிகள், அவர்களின் முதலீடு மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷுக்கு வணிக பயணத்தில் இருந்தபோது குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பம் கோரியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக பதிலளித்த இலங்கை அதிகாரிகள், பங்களாதேஷ் அதிகாரிகளிடம் உதவி கோரினர்.
மேலும் விரைவான நடவடிக்கையின் காரணமாக மூன்று இலங்கையர்களையும் மீட்டுள்ளனர். ஏற்றுமதி வணிகம் தொடர்பான பணிக்காக வந்த அழைப்பைத் தொடர்ந்து அவர்கள் சமீபத்தில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தார்.
பங்களாதேஷ் சென்றவுடன், அவர்கள் கடத்தப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கடத்தல் செய்தி இலங்கைக்கு கிடைத்தவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுனில் சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, தேசிய புலனாய்வு இயக்குநர் ருவான் வணிகசூரிய உள்ளிட்ட குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்தப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதர் தர்மபால வீரக்கொடி முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதையடுத்து, பங்களாதேஷ் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மூன்று இலங்கையர்களை மீட்டனர்.
அவர்கள் தற்போது பங்களாதேஷ் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் இன்றைய தினம் இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாவத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.