சுற்றுலா சென்ற இளம் ஜேர்மன் தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

ஜேர்மனியை சேர்ந்த இளம் தம்பதி நியூசிலாந்தில் சுற்றுலாவில் இருந்த போது நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஜேர்மனியின் Bad Sachsa நகரை சேர்ந்தவர் மார்க் டேம்போல்ட் (30), இவர் மனைவி மார்லினா பிச்சிட் (24).

இளம் தம்பதிகளான இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் உலக சுற்றுலாவை தொடங்கிய நிலையில் பல்வேறு நாடுகளை சுற்றி பார்த்து வந்தனர்.

சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள நார்த்லாண்டில் மார்க்கும், மார்லினாவும் சுற்றுலா சென்றனர்.

அப்போது காரில் இருவரும் சென்று கொண்டிருந்த போது எதிரில் வேகமாக வந்த டிரக் லொறி அவர்கள் கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டிரக் லொறி ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பொலிசார் அதிகாரி வெயின் ஈவர்ஸ் கூறுகையில், சாலையின் தவறான பாதையில் உயிரிழந்த தம்பதிகள் காரை ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது, இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

வவுனியா சிறுவர் பூங்காவில் நுளம்புத் தொல்லை, சரிந்து விழும் நிலையில் மரங்கள்!!

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவானது கடந்த வருடம் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டு வடமாகாண முதலமைச்சரினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.

இதன் பின்னர் நகரசபையினரால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கேள்விக் கோரல் மூலம் தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவர் பூங்காவானது பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

கேள்விக் கோரல் மூலம் பெற்றுக்கொண்டவர்களுக்கு பல தடவைகள் மாலை நேரத்தில் அங்கு நுளம்புத் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

நுளம்புத் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதால் நேரகாலத்துடன் சிறுவர்களை 5 மணியளவில் அழைத்துச் செல்லவேண்டிய நிலையும் பெற்றோர்களும் நுளம்புக்கடிக்குள் அகப்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது.

மாலை நேரங்களில் நுளம்புப் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் தெரிவித்து வந்த நிலையிலும் இன்று வரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் பூங்காவினுள் உள்ள மிகவும் பழமைவாய்ந்த மரங்கள் நீண்டு வளர்ந்து செல்கின்றன. இது சிலவேளைகளில் காற்று மழைகளினால் அப்பகுதிகளில் வீழ்ந்து சிறுவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதுடன் பாறி வீழ்ந்துவிடவும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறு பாரிய மரங்களில் கிளைகளை வெட்டி சிறுவர்கள் மீது வீழ்ந்துவிடாமலிருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் நுளம்புப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தி சிறுவர்களின் பொழுது போக்கிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளார்கள்.

வவுனியாவில் நிர்க்கதியான மாவீரர்களின் தந்தை முதியோர் காப்பகத்தில் ஒப்படைப்பு!!

வவுனியாவில் கடந்த நான்கு நாட்களாக மாவீரர்களின் தந்தை ஒருவர் நிர்க்கதியான நிலையில் இருந்து இன்று பிற்பகல் முதியோர் காப்பகத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரிடம் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சென்ற இரண்டு மாவீரர்களின் தந்தை ஒருவர் தனக்கு உதவியளிக்க யாருமற்ற நிலையில் யாசகம் செய்ய முடியாத நிலையை அடுத்து தன்னை முதியோர் காப்பகத்தில் தங்கவைக்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து முதியோர் காப்பகத்தில் நிர்வாக ரீதியிலான சில பிரச்சினைகளை அடுத்து முதியோர் காப்பகத்தில் இணைத்துக்கொள்வதில் நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று வவுனியாவிலுள்ள உயர் அதிகாரிகளின் சிபார்சினையடுத்து இன்று பிற்பகல் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் முதியோர் காப்பகம் ஒன்றில் மாவீர்களின் தந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த வயோதிபரை காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் பேஷ்புக்!!

பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்பதால், பிள்ளைகளை அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு யாழ். பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் நடந்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகளவான சம்பவங்கள் யாழ். மாவட்டத்திலேயே நடந்துள்ளன. இவற்றுக்கு சமூக வலைத்தள பயன்பாடு உதவியாக இருந்துள்ளது.

பிள்ளைகள் கல்வி கற்கும் காலத்தில் சமூக வலைத்தள வசதிகளுடன் கூடிய தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளம் புதல்விகள் உள்ள தாய்மார் தமது பிள்ளைகளின் தொலைபேசிகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அழைப்புகள் குறித்து மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

திருமணமான தாய்மார் தமது குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லவும் குடும்ப வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுமுதல் வட்ஸ்அப்பை பயன்படுத்தமுடியும்!!

வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிரிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபர் (Viber) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது. எனினும், பேஸ்புக் மீதான தடை நீக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தேவை இல்லை : பிரதமர்!!

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தேவை எவருக்கும் இல்லை எனவும் அடுத்த வாரம் அதனை கட்டுப்படுத்த சட்டம் உருவாக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு இசிப்பதனை கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முதலில் நானே இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினேன். 1993 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு உப ஜனாதிபதி எல்கோவுடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டேன்.

உலகத்துடன் இணைய வேண்டும் என்பதால், நாங்கள் இணையத்தளத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தினோம்.

பேஷ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகையை ஏற்படுத்தும் செய்திகள், இனவாதம், இனவாத மோதல்களை அதிகரிக்கும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஒரு அணி இப்படியான செய்திகளை வெளியிடும், மறுபுறம் பதில்கள் அதிகளவில் வருகின்றன.

கடந்த வாரம் திங்கட்கிழமை தெல்தெனிய, திகண ஆகிய பிரதேசங்களில் வன்செயல்கள் நடந்தன. சாதாரணமாக வன்செயல்கள் நடந்தால், முதல் நாளின் பின்னர் அதனை கட்டுப்படுத்த முடியும்.

எனினும் அன்றைய தினம் காலையிலேயே அதனை கட்டுப்படுத்தினோம். மாலையில் மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டன.

அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடிய போது புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.

பேஷ்புக் மூலமாக அனுப்பி வைக்கப்படும் பகையுணர்வுடன் கூடிய செய்திகள் சமூகத்தில் தீயை மூட்டுவதாக அவர்கள் கூறினர். அம்பாறையில் இந்த நிலைமையை காண முடிந்தது.

பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பொய்யான செய்திகளை பரப்பினர். இதனால் மக்கள் குழப்பமடைந்து பதற்றம் ஏற்பட்டது.

இதனால், குறுகிய காலத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினர் யோசனை முன்வைத்தனர். அதற்கான அனுமதி கிடைத்த பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

புதன்கிழமை காலைக்குள் பதற்றத்தை கட்டுப்படுத்த முடிந்தது என பாதுகாப்பு தரப்பினர் எமக்கு அறிவித்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

வவுனியாவில் மதுபோதையில் ஆண்களுடன் பெண்களும் அட்டகாசம்!!

வவுனியா குடியிருப்பு பகுதியிலுள்ள குளக்கட்டில் நேற்று(13.03.2018) இரவு ஆண்களுடன் பெண்களும் இணைந்து மது அருந்திய போது அங்கு சென்ற இளைஞர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து துரத்தியடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து மூன்று இளைஞர்களுடன் சேர்ந்திருந்து மூன்று பெண்களும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது அவ்வீதியூடாகச் சென்ற இளைஞர்கள் சிலர் இதனை அவதானித்துள்ளதுடன் அவர்களிடம் யார் நீங்கள் ஏன் இவ்வாறு ஆலயப்பகுதியில் சீர்கேடான முறையில் ஈடுபடுகின்றீர்கள் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுடன் இருந்த இளைஞர்கள் கேள்வி கேட்ட இளைஞர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இளைஞர்கள், பெண்களையும் அவ்விடத்திலிருந்து மது அருந்திய இளைஞர்களையும் விரட்டியடித்துள்ளனர்.

பேருந்து பள்ளத்தில் சரிந்து கோர விபத்து : 38 பேர் உயிரிழப்பு!!

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாகாணத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டெஸ்சி மற்றும் மெக்கானே சேலம் நகரங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சாலையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 28 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மலை தீ விபத்து : நேற்று முன்தினம் கணவன் நேற்று மனைவி : பலியான புதுமணத் தம்பதியர்!!

குரங்கணி மலை தீ விபத்தில் சிக்கி காதல் கணவர் உயிரிழந்தது தெரியாமலேயே அவரது மனைவி திவ்யா நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஞாயிறன்று குரங்கணி மலை பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

மதுரை மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் நேற்று நிஷாவும் இன்று திவ்யாவும் மரணமடைந்து விட்டனர்.

நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை விவேக் மரணமடைந்த நிலையில் நேற்று அவரது மனைவி திவ்யா உயிரிழந்துள்ளார்.

விவேக் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்திருக்கிறது.

விவேக் துபாயிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அவரின் மனைவியான திவ்யா எம்.பில் முடித்துவிட்டு பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் முடிந்த உடன் துபாய் சென்று விட்ட விவேக், தனது மனைவியை அழைத்து செல்வதற்காக ஈரோடு வந்துள்ளார்.

அடுத்த மாதம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணி பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தார். திருமணமான 100வது நாளை கொண்டாடி விட்டு கொழுக்குமலைக்கு பயணம் சென்றவர்களுக்கு அது இறுதி பயணமாக மாறிவிட்டது.

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு நேர்ந்துள்ளது.

முல்லைத்தீவில் இருந்து செம்மலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் , எதிரே வந்த உந்துருளி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேஸ்புக் தடையின் ஊடாக உலகிற்கு முன்மாதிரியாக மாறிய இலங்கை!!

சமூக வலைதளங்களை தடை செய்ததன் காரணமாக உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக இலங்கை மாறியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் முடக்கப்பட்டமையினால் கண்டியில் ஏற்பட்ட வன்முறைகள் குறைவடைந்தன. இவற்றிக்கான புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். பேஸ்புக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பினை தடை ஊடாக தடுக்க முடியும் என்பதற்கான உதாரணத்தை இலங்கை இன்று உலகத்திற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துகரையாடலின் போது கண்டி வன்முறை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது சமூக வலைத்தளம் தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.,

சமூக வலைத்தளம் முடக்கப்பட்டமையினால் அந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறைகள் குறைவடைந்தது. இவற்றிக்கான புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். பேஸ்புக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பினை தடை ஊடாக தடுக்க முடியும் என்பதற்கான உதாரணத்தை இலங்கை இன்று உலகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜேர்மன், பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் இவற்றிக்கு தடை விதித்துள்ளது. சீனாவிலும் பேஸ்புக் இல்லை. சீனா நமக்கு தொழில்நுட்ப ரீதியிலும் சட்ட ரீதியாகவும் ஆலோசனை வழங்க ஆயத்தமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் சிலர் இந்த சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். சிலர் சரியான முறையிலேயே பயன்படுத்துகின்றார்கள். ஒரு சிலரின் தவறு காரணமாக முழு நாடும் அதன் உரிமையை இழந்துள்ளதென அமைச்சர் நவின் திஸாநாயக்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்கள்!!

காலி நகருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்கள் இருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த இரண்டு வெளிநாட்டு பெண்களும், பாதசாரிகளுக்கான வெள்ளை பாதுகாப்பு கடவலையில் இருந்து தங்கள் கையடக்க தொலைபேசியை இயக்கியுள்ளனர்.

காலியிலுள்ள சடனல மைதானம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த சம்பம் பதிவாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுதான் சுற்றுலா சுதந்திரம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 1532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!!

2018 ஆம் ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் புறக்கணிப்பு முதலான சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கட்டாயக் கல்வி வழங்கப்படாமை தொடர்பில் 241 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன் : சுகன்யா விளக்கம்!!

தமிழ் பட உலகில் பிசியாக நடித்து வந்த சுகன்யா நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

நான் சிறந்த நாட்டியக் கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். முதல் படத்தில் நான், நெப்போலியன் உட்பட 8 பேர் புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் எனக்கு கிடைத்தது.

பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உட்பட பல படங்கள் எனக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் ‘பிசி’யாக இருந்தேன். அது எனது சினிமா வாழ்க்கையின் பொற்காலம்.

இப்போது வாரந்தோறும் புதிய தமிழ் படங்கள் வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். சில படங்கள் நல்ல கதை அம்சத்துடன் வருகின்றன. தொழில் நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. கருத்து சுதந்திரம் எங்கும் பரவலாகி இருக்கிறது. நடப்பதை கவனித்து வருகிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பெரும் பேச்சாக உள்ளது. அதுபற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க இருக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் அழுத்தமான வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். இதனால் நடிப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. மக்கள் என்னை எளிதில் மறக்கமாட்டார்கள். நானும் மறக்க முடியாது.
என குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ ஓநாய்!!

 
விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

65 சென்டிமீட்டர் நீளமும் 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினைப் போல முடியையும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.

காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.

விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருவதுடன், ஊளையிடவும் தொடங்கும். சூரிய ஆற்றல் பேட்டரிகள் மூலம் இது செயற்படும்.

இந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் இழப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப்பன்றிகளிடம் இழந்து வந்தனர்.

ஒரு மின் வேலியினை விட இந்த ரோபோ ஓநாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயக் கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை 4,840 டொலர்கள் ஆகும்.

ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் முறைப்பாடு!!

ஹன்சிகா மீது அவருடைய முகாமையாளர் நடிகர் சங்கத்தில் மறைப்பாடு செய்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றிலும் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரிடம் முகாமையாளராக பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியுள்ளார்.