தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட உலக வாழ் அனைத்து தமிழர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு மட்பாண்டங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வவுனியா மக்களும் தைத்திருநாளுக்காக சிறப்பாக ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் வவுனியாவில் பானை, கரும்பு, அகப்பை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் உச்சம் கண்டுள்ளது.
அத்துடன் தைப்பொங்கள் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் வவுனியா களைகட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் குறித்த கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் நகரசபை வேட்பாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா நகரசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் இடத்தில் எதிர்வரும் நான்கு வருடங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதாரம் துறையில் திண்ம திரவ கழிவு முகாமைத்துவம், நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உற்பத்தியாகும் திண்ம திரவ கழிவுகளை அகற்றலும் முகாமைத்துவம் செய்தலும், உணவு பாதுகாப்பு தொடர்பில் உணவு உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தல்,
மருத்துவ சிகிச்சை நிலையங்களை பராமரித்தல், நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் சுதேசமருத்துவ சேவை வழங்குதல், மூலிகைத்தோட்டங்களை பராமரித்தல் மற்றும் மருத்துவம்சார் சுற்றுலாவை மேம்படுத்துதல், தாய்சேய் பராமரிப்பு நலப்பணிகளை முன்னெடுத்தல், நோய்கள் பரவாதிருக்க உரிய நடவடிக்கைகளை சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளல்,
பொது இடங்களிலுள்ள பாவனையிலுள்ள மலசலகூடங்களை நவீனமயப்படுத்துவதுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பொது மலசலகூடங்களை அமைத்தலும் சுகாதார முறைப்படி பராமரித்தலும், நவீன வசதிகளுடன்கூடிய பொது குளியலறைகளை அமைத்தலும் சுகாதார முறைப்படி பராமரித்தலும், இளைஞர்களுக்கான உடல்வலுவூட்டல் மையங்களை உருவாக்குதல் என்பனவும், விளையாட்டு தொடர்பில் நவீனவசதிகளுடனான, தேசிய தரத்திலான விளையாட்டு மைதானத்தை உருவாக்குதலும் பராமரித்தலும், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையமொன்றை உருவாக்குதல், நவீனவசதிகளுடனான உள்ளக விளையாட்டு மைதான வசதிகளை உருவாக்குதல்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் இயற்கை வளம் பேணல், வீதியோரங்களில் நிழல் மரங்களை நடுதலும் பராமரித்தலும், பொலித்தீன் மற்றும் உக்காத கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், நகரின் முக்கிய இடங்களில் வாகன ஒலிப்பான் பாவனையை தடை செய்தல்,
வீதி அபிவிருத்தி தொடர்பில் வீதி புனரமைப்பும் பராமரிப்பும், புதிய வீதிகள் அமைத்தல், பிரதான சந்திகளில் சுற்று வட்டங்கள் அமைத்தல், வடிகால்கள் அமைத்தல், வீதி விளக்குகள் பொருத்தல், வீதிகளுக்கான பெயர்ப்பலகை நாட்டுதல், சுற்றுவட்டங்களில் மின் ஒளிச்சமிஞ்சை பொருத்தல், பாடசாலை, வைத்தியசாலை மற்றும் முக்கிய இடங்களில் வீதி ஒழுங்கு சமிஞ்சைகளை பொருத்தலும் வேக கட்டுப்பாட்டு நடைமுறைகளை நடைமுறைப்படுத்தலும், பாடசாலை வீதிகள், உள்ளக வீதிகளில் பாரவூர்திகளை கட்டுப்படுத்தல், நகர வாகன தரிப்பிடம் அமைத்தல்,
முன்பள்ளி தொடர்பில் கற்றல் உபகரணங்களுடனான முன்பள்ளி அபிவிருத்தி செய்தலும், சந்தை தொடர்பில் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தலும் நவீனமயப்படுத்தலும், புதிய சந்தை தொகுதிகளை அமைத்தல், நடைபாதை வியாபாரத்தை ஒழுங்குபடுத்தலும் அவர்களுக்கான வியாபார இடத்தை ஒழுங்குபடுத்தலும், அத்துமீறி அபகரிக்கப்பட்ட நகர சபைக்கு சொந்தமான காணிகள், வீதிகள் தொடர்பில் கவனம் செலுத்தலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,
பொழுதுபோக்கு தொடர்பில் இயற்கையான பொழுதுபோக்கு மையங்களை உருவாக்குதல், பொதுப்பூங்காவை அபிவிருத்தி செய்தல், சிறுவர் பூங்காக்களை அபிவிருத்தி செய்தல், முதியோர்களுக்கான ஓய்வு நிலையங்கள் அமைத்தல் என்பனவும் நூலகம் தொடர்பில் சனசமூக நிலையங்களில் நூலகங்களை ஆரம்பித்தல், பொது நூலகத்தை நவீனமயப்படுத்தல், இலத்திரனியல் நூலக வசதிகளை உருவாக்குதல், பார்வை புலனற்றவர்களுக்கான வாசிப்பு பிரிவை ஏற்படுத்துதல்,
கலாசார அபிவிருத்தி தொடர்பில் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்ககூடிய கட்டிடக்கலையை அறிமுகப்படுத்தல், வீதிகளுக்கும் சதுக்கங்களுக்கும் மொழி, கலை, கலாசாரத்துடன் தொடர்புடைய நாமங்களை இடல், மாதாந்த முழுநிலா நிகழ்வுகள், சமய விழாக்கள், சமயப்பெரியார்களின் நினைவு தினங்கள் கொண்டாடுதல், மத ஸ்தாபனங்களில் அறநெறிப்பாடசலைகளை அமைத்தல் என்பனவும்,
வியாபார ஸ்தாபனங்களுக்கான பெயர்ப்பலகை தொடர்பில் அரசகரும மொழி நடைமுறை, தமிழ் பெயர்களை பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகை என்பனவும் இடுகாடு, சுடுகாடு பராமரிப்பு தொடர்பில் பாதுகாப்பு வேலிகள், சுற்று மதில் அமைத்தல், அந்திம கிரிகை மண்டபங்கள் அமைத்தல், பெயர்ப்பலகை பொருத்ததல் என்பனவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து நகர சபையின் எல்லைக்குட்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயலணி அமைத்தல், அவசர நிலைக்கான அம்புலன்ஸ் வண்டி வசதி, தீயணைப்பு படைப்பிரிவை நவீனமயப்படுத்தலும் பயிற்றப்பட்ட ஆளணியை அதிகரித்தல்,
அடுக்குமாடி குடியிருப்பு அமைத்தல், இடநெருக்கடியை கருத்தில்கொண்டு நகருக்கு அருகில் அரச, தனியார் உத்தியோகத்தர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வாடகைக்கு விடுதல், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிட நிர்மாணங்களில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான அணுகும் வசதியை உறுதிப்படுத்தல் என்பன தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியில் இன்று (12.01.2017) காலை 8.30 மணியளவில் அன்னாரின் 155ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
வவுனியா ஹட்டன் நஷினல் வங்கியின் அனுசரணையில் தமிழ் விருட்சம் அமைப்பின் எற்பாட்டில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வில் சிறப்புச் செற்பொழிவினை தமிழ் மணி அகளங்கன் நிகழ்த்தினார். இதையடுத்து மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் நஷினல் வங்கியின் முகாமையாளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர், வவனியா வைசப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் விக்னா, என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி- முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலே ஒருவர் பலியாகியுள்ளார்.
மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னே சென்ற டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னே மணல் ஏற்றி சென்ற மற்றைய டிப்பர் பின்னால் மோதியுள்ளது.
இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றத்தினால் 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது மேற்கொண்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக சத்தத்தை வெளியேற்றும் சைலன்ஸர் பொருத்தியிருந்தமை, சத்தமாக இசை கருவியை பொருத்தியமை, காப்புறுதி இல்லாமை, பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராத தொகையை விதிப்பதற்கு மேலதிக நீதவான் லலித் கன்னங்கர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றம் விதித்த அதி கூடிய அபராத தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் Green Card இன் எண்ணிக்கையை 45 வீதமாக அதிகரிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயர் பதவிகளில் இருக்கு வெளிநாட்டவர்களுக்கு H1B1 விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, பணிபுரிய விரும்புபவர்களுக்கு அமெரிக்க அரசினால் Green Card வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கான அனுமதியாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், Green Card விநியோகம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 1.20 இலட்சம் Green Card வழங்கப்படுகின்றன. இதனை 45 வீதம் அதிகமாக 1.75 இலட்சமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கிய பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி கையெழுத்திடவுள்ளார்.
இலங்கையிலிருந்தும் Green Card கோரி பலரும் விண்ணப்பித்திருக்கும் நிலையில், குறித்த சட்டமூலம் சாதகமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க நலனில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `சீமத்துரை’ படத்தை தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `வேலைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் `சீமத்துரை’ படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிபடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடமும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தையும் 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால் இது பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்கூடம் கட்டி வருகின்றனர். இதற்கு இணையாக சீனா மட்டும் தனியாக ஒரு விண்வெளி ஆய்வகம் உருவாக்கியது.
இதற்கு ‘தியாங்காங்’ என பெயரிடப்பட்டது. இந்த ஆய்வகம் செயல் இழந்து விட்டது. எனவே இது பூமியை நோக்கி வருகிறது. பல்லாயிரம் டன் எடை கொண்ட இந்த விண்வெளி ஆய்வகம் பூமியின் மீது மோதி கடும் சேதத்தை விளைவிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை சீன விஞ்ஞானி மறுத்துள்ளார்.
சீன விண்வெளி தொழில் நுட்ப அகாடமியின் மூத்த விஞ்ஞானி ஷு ஷாங்பெங் கூறும்போது, “செயல் இழந்த தியாங்காங் 1 விண்வெளி ஆய்வகம் பூமியில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
பூமியின் பரப்பில் நுழைந்தவுடன் அது எரிந்து விடும். மீதம் இருக்கும் உடைந்த பாகங்கள் பூமியின் பின்புறமாக பசிபிக் கடலில் விழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் என மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு சீன விஞ்ஞானி ஷுஷாங்பெங் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் வரும் 15ம் திகதி இராணுவ தினத்தையொட்டி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையொட்டி, டெல்லி அணிவகுப்பு மைதானத்தின் மீது இராணுவ வீரர்கள் ‘துருவ்’ ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றில் தொங்கியபோது அது அறுந்துவிட்டது. இதனால் 3 வீரர்கள் கீழே மைதானத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.
நேற்று தான் இது குறித்த தகவல்கள் கசிந்து உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. துருவ் ஹெலிகாப்டர், முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (வயது 36) பிரதீபன் கஜநிதன் (11) பவநிதன் (வயது 9) அருள்நிதன் (வயது 8) இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது 2) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
இவர்களைக் காணவில்லையென உறவினர்களால், கடந்த 09ம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப தகராற்றின் காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் மூன்று மாணவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்தே 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முயற்சியால் 15 ஆண்டுகளாகத் தம் வசம் வைத்திருந்த வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான கட்டடங்களை 3 அரசியல் கட்சிகள் மீளக் கையளித்துள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான ஊழியர் விடுதிக் கட்டடங்கள் மூன்று கடந்த 15 ஆண்டுகளாக 3 அரசியல் கட்சிகள் வசம் இருந்தன. அவற்றுக்கான கொடுப்பனவுகள் எதனையும் அவை வழங்கவில்லை. அந்தக் கட்டடங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவை மீளளிக்கப்படவில்லை.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர் இந்த விடயம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசியல் கட்சிகள் வசமுள்ள அரச கட்டடங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியது.
இந்த விடயத்தில் தொடர் அழுத்தங்களைக் கொடுத்தது.
ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் தம்வசமிருந்த அரச கட்டடங்களை மீள ஒப்படைத்தன.
திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய மோசடி பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.
இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அவரும் வருங்கால மனைவி தானே கேட்கிறார் என பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுருதி பாலமுருகன் தொடர்பிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலமுருகன் உணர்ந்தார். இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் சுருதி, வாடகை தாய் சித்ரா, தந்தை எனப்படும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே பாணியில் பல ஆண்களை சுருதி ஏமாற்றியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னர் நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வெளிநாடுகளிலுள்ள பிள்ளைகள் தமது சொந்த தாயை தேடி இலங்கை வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது 36 வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி, பிரித்தானியாவிலிருந்து மகன் ஒருவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
36 வயதான ரொஹான் வென்டர் ஹேவ் என்பவரே இவ்வாறு தனது தாயை தேடி இலங்கைக்கு வரவுள்ளார். பிரித்தானியாவின் பெல்பாஸ் பகுதியில் வசித்து வரும் ரொஹான், அங்கு புகைப்பட கலைஞரான பணி புரிந்து வருகின்றார்.
தனது இந்திய மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளுடன் அவர் தனது தாயை தேடி இலங்கை வருகின்றார். இலங்கையில் பிறந்த அவருக்கு தாயினால் ரோஹித என பெயரிடப்பட்டுள்ளது. 3 மாத குழந்தையாக இருக்கும் போது நெதர்லாந்து நாட்டு தம்பதியினரிடம் தத்துப் பிள்ளையாக கொடுக்கப்பட்டுள்ளார்.
ரோஹானிடம் உள்ள இலங்கை பிறப்பு சான்றிதழுக்கமைய அவரது பெயர் ரோஹித எனவும் அவர் வட கொழும்பு வைத்தியசாலையில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
அவரது தாயாரின் பெயர் சிங்கப்புலி கர்டி ரோஹினி எனவும் அவர் 1962ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பிறந்த இடம் மினுவாங்கொட எனவும், ரொஹான் பிறக்கும் போது தாயாரின் வயது 20 எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியாவில் பிரபலமான பெண்ணொருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று வருகைதந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட காரணத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றுக்கு வந்துள்ளார்.
இதன்போது தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி, வித்தியாசமான முறையில் தலைமுடியை அலங்கரித்து, நீதிமன்றுக்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்துள்ளார்.
திறந்த மன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது மன்றில் அசாதாரணமான முறையில் நடந்து கொண்டார்.
அதன் பின்னர் குறித்த நபரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அவர் விசாரணைக் கூண்டில் ஏறி நிற்கும் போதும் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார்.
அதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதியுமாறு நீதிமன்ற காவல்துறையினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.