பணத்துக்காக பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்த மாணவனை இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு பல நாட்களாக அவர்கள் திட்டம் போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் நபா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அரோரா. இவர் மகன் ராஜட் (17). இவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் சடலமாக புதைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.
இது சம்மந்தமாக ராஜட்டின் முன்னாள் பள்ளி வகுப்பு தோழனான இந்திரஜித்தை பொலிசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திரஜித்தும், சுக்பிர் என்பவனும் நண்பர்களாவார்கள். இருவருமே ராஜட்டுடன் ஒரே பள்ளிக்கூடத்தின் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ராஜட்டின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க இருவரும் முடிவு செய்து ராஜட்டை கடத்தியுள்ளனர். பின்னர், பெற்றோரிடம் போனில் பேசி பணம் கேட்க கூறியுள்ளனர். ஆனால் இதற்கு ராஜட் மறுக்கவே அவனை இருவரும் கொலை செய்து காட்டு பகுதியில் புதைத்துள்ளனர்.
இந்த திட்டத்தை பல நாட்களாக இருவரும் போட்ட நிலையில் ராஜட்டை கொல்வதற்கு முன்னரே தயாராக காட்டில் குழி தோண்டி வைத்துள்ளனர்.
தற்போது இந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சுக்பிரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். ராஜட் வெகுளியாக யார் சொல்வதையும் நம்பக் கூடியவனாகவும், வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் குழந்தைதனமாக இருந்துள்ளான் எனவும் அவன் தந்தை சுரேஷ் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் ராஜட்டுக்கு அதில் 4000 நண்பர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

































