காதலியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த காதலன் : நடந்தது என்ன!!

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்தக் கொலை நடந்துள்ளது.

வென்னப்புவ, பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசித்து வந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளம் பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயது சந்தேக நபருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார்.

எனினும் காதலை முறித்து உறவை முடிவுக்கு கொண்டு வருவதாக, காதலி தெரிவித்தமையினால் ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காதலுக்காக காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

கடலில் வீழ்ந்து நொருங்கிய விமானம் : 12 பேர் பலி!!

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் (Honduras) நடந்த விமான விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோண்டுராஸ் நாட்டில் ரோவாடன் தீவில் இருந்து லான்சா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் நேற்று முன்தினம் (17) புறப்பட்டபோது திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்துள்ளது.

இதனை பார்த்த கடற்றொழிலாளர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் முழு உயரத்திற்கு செல்ல முடியாமல், விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

WhatsApp இல் புதிய Update அறிமுகப்படுத்திய Meta நிறுவனம்!!

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp இல் இருந்தபடி இயக்கும் புது Update ஐ வெளியிட்டுள்ளது.

WhatsApp இல் பயனர்கள் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் Open Facebook, Instagram ,Threads என்று Optionனை Click செய்ய வேண்டும்.

Settings -இல் Profile க்குச் சென்று Link Option இனை Click செய்து இணைத்துக் கொள்ளலாம். இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் Edit செய்துகொள்ள முடியும். இந்தப் புதிய Update WhatsApp பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றில் அர்ச்சுனாவுக்கு தடை போட்ட சபாநாயகர்!!

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19.03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன் என சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், அர்ச்சுனா எதிர்வரும் மே மாதம் வரை நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உரையை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பயன்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அனைத்தையும் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இது நாடாளுமன்ற கெளரவத்தை அவமதிப்பதாகும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

தலைமறைவான தேசபந்து தென்னகோன் இன்று காலை சரண்!!

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர் இன்று காலை முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதலுதவி வசதி இல்லாததால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!!

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார்.

சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக ற்றுலா சங்கமொன்றின் செயலாளர் .பி. விஜேசிங்க தெரிவித்தார்.

சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபா ஆகும். ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான முதலுதவி வசதிகள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகளை வழங்குவது தொடர்பில் சுற்றுலாத் துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

அம்பாறை – மத்திய முகாம் நகரத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மத்திய முகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய மத்திய முகாம் 06 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டு்ள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் மருத்துவமனையில் : மக்களே அவதானம்!!

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே வைத்தியர் இதனை தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பில்,

இளைஞன் ஐரோப்பாவிற்குச் செல்வதாக முகவர்களினால் கடந்த வருடம் 2024 மார்கழி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் கொழும்பு, மும்பை, நைரோபி வழியாக சியாரா லியோன் என்ற மத்திய ஆபிரிக்க நாட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அவரது பயணம் தடைப்பட்டுளது.

அதோடு குறித்த இளைஞன் சுகவீனமுற்று இருந்தமையால் குடும்பத்தவர்களால் மீளவும் இலங்கைக்கு கடந்த 11ஆம் திகதி அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் இளைஞனை பாதித்த மலேரியாக் கிருமி பிளாஸ்மோடியம் ஃபல்சிபோறம் என கண்டறியப்பட்டது. அதேவேளை இலங்கையில் மலேரியா நோய் முற்றாக அழிக்கப்பட்டமையினால் மீண்டும் நுளம்பின் மூலம் தொற்றும் மலேரியா நோய் பரவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பதற்கு இவ்வாறு வெளிநாடு சென்று மீள்பவர்கள் விமான நிலையத்திலுள்ள வைத்திய அதிகாரியிடமோ அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ வைத்தியசாலையிலோ அணுகி உரிய மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மலேரியா நோய் தடுப்பு மருந்தும் பெறலும் அத்தியாவசியமாகும் என போதானாவின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே 400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 1100 ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை : இலங்கையருக்கு வெளியான புதிய கட்டுபாடு!!

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டும்.

எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் இன்று (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மற்றைய நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் : வெளியான காரணம்!!

பாகிஸ்தான்(Pakistan) வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் விளையாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஸான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் வானிலை ஆய்வு மையம் 40°C க்கும் அதிகமான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

அடிலெய்டு டர்ஃப் கிரிக்கெட் சங்கத்தின் துணை விதிகள், வெப்பநிலை 42°C ஐத் தாண்டினால் விளையாட்டுகளை இரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றன, இருப்பினும் 40°C வரையிலான வெப்பத்தில் மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில் போட்டிகள் தொடரலாம்.

ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் கானின் மறைவை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் மதிப்புமிக்க உறுப்பினரின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்,” என்று கிளப் தெரிவித்துள்ளது.

துணை மருத்துவர்களின் சிறந்த முயற்சிகளுக்குப் பிறகும், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எண்ணங்களும் மனமார்ந்த இரங்கல்களும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலிய மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் பாதிக்கும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது சிட்னி மற்றும் விக்டோரியாவில் வெப்பநிலை 40°C ஐ நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து!!

நேற்றிரவு யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியது. இந்நிலையில், நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றவிருந்த 20 மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி : பதறிய பெற்றோர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காமலிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கல்வி வலயத்திற்குப்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பொறுப்பில் இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் மாணவர்களுக்காக தேசிய அடையான அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்துள்ளது.

எனினும் மாணர்கள் நேற்றைய தினம் (17.03.2025) பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களின் கரங்களுக்கு தேசிய அடையாள அட்டை கிடைத்திருக்கவில்லை.

இதனையறித்த பெற்றோர் குறித்த பாடசாலை அதிபரையும், ஏனைய ஆசிரியர்களையும் தொடர்பு கொண்டதற்கிணங்க வெள்ளிக்கிழமையன்று குறித்த ஆசிரியரின் வீடு தேடிச் சென்ற அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பிறிதொரு ஆசிரியர் விடயங்களைக் கேடறிந்தபோது அவர் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்களை அவரது வீட்டிலேயே வைத்திருந்ததாக அதிர்சித் தகவல் வெளிவந்துள்ளது.

துரிதமாகச் செயற்பட்ட மற்றைய ஆசிரியர் அவரிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு அன்றையதினமே மாணவர்களுக்குரிய தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததற்கமைய மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எனினும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் நிரந்தர அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு செயற்படும் ஆசிரியர்கள் மத்தியில் இவ்வாறான ஆசிரியருக்கு கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் யானைக்குட்டி பரிதாப மரணம்!!

நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹயஸ் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளது.

குறித்த குட்டி யானை இன்று (18.03.2025) அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் சென்ற ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி யானை இறந்துள்ளது.

இருப்பினும், வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும், தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.

ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகவும் மிக அவதானத்தோடும் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.